search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை: கிராம மக்களுடன் கலெக்டர் பேச்சுவார்த்தை
    X

    பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை: கிராம மக்களுடன் கலெக்டர் பேச்சுவார்த்தை

    அரூர் அருகே பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிராம மக்களுடன் கலெக்டர் மலர்விழி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். #DharmapuriGirlStudent #GirlMolested

    கம்பைநல்லூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த மாணவி சவுமியா கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத கோட்டப்பட்ட போலீசாரை கண்டித்து சிட்லிங் கிராமத்தில் இன்று 2-வது நாளாக மலைவாழ் மக்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்கள். சிட்லிங் மட்டும் அல்லாமல் இதர மலை கிராமங்களை சேர்ந்த மக்களும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் அந்த கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது. போலீசார் மற்றும் அதிகாரிகளை உள்ளே விடாமல் கிராமத்துக்கு வரும் சாலையில் மரத்தை வெட்டி போட்டு இருந்தனர். மண்களையும் குவியலாக கொட்டி இருந்தனர்.

    இந்த நிலையில் கிராம மக்களுடன் பேச்சு நடத்த தருமபுரி கலெக்டர் மலர்விழி தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பொறுப்பு வகிக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மகேஸ்குமார் ஆகியோர் அந்த கிராமத்துக்கு விரைந்தனர். அவர்கள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    மாணவி சவுமியா இறந்த விவகாரத்தில் ஒருவாரமாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்ட கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சஸ்பெண்டு செய்ய வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு ரூ 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அவரது சகோதரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும். சிறப்பு மருத்துவ குழுவை அமைத்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதுவும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது. வேறு மருத்துவமனையில் தான் அந்த பிரேத பரிசோதனையை செய்ய வேண்டும். அதை வீடியோ எடுக்க வேண்டும். தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #DharmapuriGirlStudent #GirlMolested 

    Next Story
    ×