என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மீனவக்குடும்பங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
- 5 விசைப்படகுகளை ஒப்படைக்க வலியுறுத்த வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்று வழக்கம்போல் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 32 பேரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவக்குடும்பங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். காரணம் வருமானம் ஈட்ட முடியாமல், வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
எனவே மத்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 32 பேரை விடுவிக்கவும், அவர்களின் 5 விசைப்படகுகளை ஒப்படைக்கவும் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விபத்தில் காரின் சக்கரத்தில் சிக்கிய சரஸ்வதி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
- மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது60). இன்று காலை அவர் வீட்டு முன்பு கோல மிட்டார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஒருவர் தனது தந்தை பயன்படுத்தும் காரை ஓட்டினார்.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் தாறுமாறாக ஓடி வீட்டு முன்பு கோலம் போட்டுக்கொண்டு இருந்த சரஸ்வதி மீது மோதியது. மேலும் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் காரின் சக்கரத்தில் சிக்கிய சரஸ்வதி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிவகாஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டடது. போலீசார் விரைந்து வந்து காரை ஒட்டிய மாணவரை பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் பலியான சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவனின் தந்தை வீட்டில் முறுக்கு, அதிரசம் போன்ற தின்பண்டங்களை தயார் செய்து கார் மூலமாக அப்பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருகிறார். அந்த காரை இன்று காலை மாணவன் ஓட்டியபோதுதான் தறி கெட்டு ஓடி வீட்டு முன்பு கோலமிட்ட மூதாட்டியின் உயிரை பறித்து விட்டது.
அந்த நேரத்தில் அவ்வழியே மற்றவர்கள் வராததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தண்ணீரில் மிதந்தபடி சூரிய நமஸ்காரம், ஜல யோகா மற்றும் பல்வேறு ஆசனங்களை சண்முக சுந்தரம் செய்தார்.
- தற்போது யோகா, சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை இலவசமாக கற்று கொடுத்து வருகிறேன்.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்த 72 வயது முதியவரான சண்முகசுந்தரம் என்பவர் தலைமை ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற பின்னர், அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக யோகா, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்று கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தியும் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தியும் தாமிரபரணி ஆற்றில் மிதந்தபடி ஜல யோக சூரிய நமஸ்காரம் செய்து தாமிரபரணி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் சிறுவயது முதலே குழந்தைகள் தற்காப்பு கலைகளுடன் நீச்சலும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் மிதந்து யோகாசனம் செய்வதற்கான பயிற்சியை சண்முக சுந்தரம் தனது 72-வது வயதில் செய்து வருகிறார்.
தண்ணீரில் மிதந்தபடி சூரிய நமஸ்காரம், ஜல யோகா மற்றும் பல்வேறு ஆசனங்களை அவர் செய்தார். 72 வயதிலும் அவர் தண்ணீரில் மிதந்தப்படி யோகா செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சண்முக சுந்தரம் கூறுகையில், தற்போது யோகா, சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை இலவசமாக கற்று கொடுத்து வருகிறேன். தற்போதைய காலகட்டத்தில் நீச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முந்தைய காலங்களில் ஆற்றில் ஓடும் தண்ணீரில் குளித்து கொண்டு இருந்தோம். இப்போது குளியறையில் குளித்து வரும் நிலையில் குழந்தைகளுக்கு நீச்சலே தெரிவதில்லை. அந்த குழந்தைகள் மழை காலங்களில் தண்ணீர் இருக்கும் இடங்களுக்கு வரும் போது நீச்சல் தெரியாமல் கஷ்டப்படுகின்றனர்.
இந்த தவறு நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆற்றில் யோகா செய்தேன். குழந்தைகள் நீச்சல் கற்றுக் கொள்ளும்போது தன்னம்பிக்கை ஏற்படுகிறது. பள்ளிக்கூடங்களில் நீச்சல் பயிற்சிகள் எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 3 ஆயிரம் பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
- மாவட்ட செயலாளர்கள் மூலம் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் நுழைவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.
சென்னை:
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தொடங்கினார்.
அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து முதலாம் ஆண்டு முடிந்து 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள சொகுசு விடுதியில் வருகிற 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பு கட்சியின் 2-ம் ஆண்டு விழாவை பிரமாண்டமாக நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டது. இதையடுத்து பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) கட்சியின் 2-ம் ஆண்டு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்ளூயன்ஸ் அரங்கில் வருகிற 26-ந்தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 3 ஆயிரம் பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர அளவிலான நிர்வாகிகள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.
26-ந்தேதி காலை 10 மணிக்கு ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. விழாவில் கட்சித்தலைவர் விஜய் சிறப்புரை நிகழ்த்துகிறார். அப்போது விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளார். மேலும் பொதுக்குழு கூட்டம் எப்போது நடத்தப்படும் என்கிற தேதியையும் அவர் அறிவிக்க உள்ளார்.
இந்த ஆண்டு விழாவில் பங்கேற்பவர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது. நுழைவுச்சீட்டு இருப்பவர்கள் மட்டுமே அரங்கத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் நுழைவுச்சீட்டு வழங்கும் பணி நடந்து வருகிறது.
கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் இந்த நுழைவுச்சீட்டுகளை வழங்கினார். மாவட்ட செயலாளர்கள் மூலம் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் நுழைவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.
2-ம் ஆண்டு விழாவில் பேசும் விஜய், கட்சி சம்பந்தமாகவும், 2026 சட்டசபை தேர்தலை சந்திப்பது தொடர்பாகவும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் விஜய் நிர்வாகிகள் மத்தியில் பேச இருக்கிறார். எனவே விழாவில் விஜய் என்ன பேச இருக்கிறார்? என்னென்ன அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார் என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரமே பரபரப்பாக எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ஆண்டுவிழாவின் முடிவில் அதில் பங்கேற்பவர்களுக்கு 18 வகையான உணவு வகைகளை கொண்ட அறுசுவை விருந்து வழங்கப்படுகிறது. ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சித்தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சிறப்பாக செய்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு 121 மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டது. ஏற்கனவே 5 கட்டங்களாக இதுவரை 95 மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரும், பெரிய தொகுதி என்றால் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்ததுடன் அவர்களை தனித்தனியே அழைத்தும் பேசினார். கட்சியில் எப்படி செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 'நீங்கள் அனைவரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைவது போல, நானும் அதைப்பார்த்து மகிழ்ச்சி அடைவேன். மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க பெரிய பெரிய பணக்காரர்கள் வந்து மோதினார்கள். ஆனால் உங்களை நம்பி, நீங்கள் உழைத்த உழைப்பை நம்பி, மாவட்ட செயலாளர் பதவி தந்துள்ளேன். எனவே மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டும் இந்த பதவியை பயன்படுத்த வேண்டும்' என்று அவர்களிடம் விஜய் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகளை தீவிரப்படுத்துவதற்காக கட்சியில் 3 லட்சம் பேருக்கு முக்கிய பதவிகளை வழங்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான அறிவிப்பையும் ஆண்டு விழாவில் விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் ஏற்கனவே 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மாவட்ட செயலாளர்களும் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். விஜய் கட்சியில் மொத்தம் 28 அணிகள் உள்ளன. அதில் குழந்தைகள் அணி, திருநங்கைகள் அணி ஆகியவையும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதுவரை வேறு எந்த கட்சியிலும் இதுபோன்ற அணிகள் கிடையாது. விஜய் கட்சியில் மட்டுமே இந்த அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து அணிகளுக்கும் சேர்த்து தமிழகம் முழுவதும் மொத்தம் 3 லட்சம் பேருக்கு பதவிகள் வழங்கப்பட உள்ளன. ஆண்டுவிழா முடிந்ததும் கட்சி நிர்வாகிகளுக்கு இந்த பதவிகள் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் நடிகர் விஜய்யின் அதிரடி விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம், வெற்றி பெறுவதற்காக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தேர்தல் வியூகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு மாவட்டம் வாரியாக இதுவரை என்னென்ன மக்கள் பணிகள் செய்யப்பட்டுள்ளது இனி என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என வியூகம் வகுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் தொடர்பான பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளன. இந்த பணிகள் நிறைவு பெற்றதும், விரைவில் விஜய் முழு வேகத்தில் அரசியலில் ஈடுபட இருக்கிறார். அடுத்த கட்டமாக கட்சியை வலுப்படுத்துவதுடன் மக்களையும் நேரடியாக சந்திக்க தயாராகி வருகிறார். இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று விஜய் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத்துறையின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
- பாஜக அரசு நீதித்துறையின் சுதந்திரத்தை முறையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி வருகிறது.
வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதா 2025 சட்டத்துறையின் சுயாட்சியின் மீதான நேரடி தாக்குதல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
"சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு" – பேரறிஞர் அண்ணா!
வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத்துறையின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
2014ம் ஆண்டு முதல், பாஜக அரசு நீதித்துறையின் சுதந்திரத்தை முறையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி வருகிறது.
முதலில் NJAC மூலம் நீதித்துறை நியமனங்களை அபகரிக்க முயற்சிப்பதன் மூலமும், பின்னர் நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களுக்கான கொலீஜியத்தின் பரிந்துரைகளைப் புறக்கணிப்பதன் மூலமும். இப்போது, பார் கவுன்சில்கள் மீது கட்டுப்பாட்டைக் கோருவதன் மூலம், சட்டத்துறையின் சுயாட்சியை அரிப்பதன் மூலம் நீதித்துறை சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.
"தமிழ்" மீதான பாஜகவின் வெறுப்பு இந்த மசோதாவில் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் அது தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலை மெட்ராஸ் பார் கவுன்சில் என்று மறுபெயரிட விரும்புகிறது. தமிழ்நாடு என்பது வெறும் பெயர் அல்ல; அது எங்கள் அடையாளம்!
தன்னிச்சையான போராட்டங்களும் வரைவு மசோதாவுக்கு எதிரான கடுமையான எதிர்ப்பும் மத்திய அரசை அதை திரும்பப் பெற கட்டாயப்படுத்தினாலும், அது மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் செயல்படுத்தப்படும் என்ற கூற்று கண்டிக்கத்தக்கது.
இந்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும், சட்டத்துறையின் சுயாட்சியை மதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் திமுக வலியுறுத்துகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவான 24 அடியை நெருங்கி உள்ளது.
- 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 23.25 அடியாக பதிவானது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்ததால் பூண்டி முழுவதுமாக நிரம்பியது.
இதைத்தொடர்ந்து கடந்த 5-ம் தேதி முதல் இணைப்பு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
ஏற்கனவே பருவமழையினால் செம்பரம்பாக்கம் ஏரியிலும் நீர் இருப்பு முழு கொள்ளை எட்டும் நிலையில் இருந்தது. தற்போது பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவான 24 அடியை நெருங்கி உள்ளது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.2 31 டி.எம்.சி.தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நீர்மட்டம் 34.12 அடியாகவும் தண்ணீர் இருப்பு 2.861 டி.எம்.சி.யாகவும உள்ளது.
இதே போல் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 23.25 அடியாக பதிவானது. மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி.யில் 3.443 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பள்ளி நிர்வாகம் தரப்பில் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
- பள்ளி நிர்வாகம் ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன் பள்ளியில் இந்தி ஆசிரியை ஒருவர் அதே பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் இந்தியில் கவிதை சொல்லுமாறு கூறியுள்ளார்.
ஆனால் மாணவனுக்கு இந்தி மொழியில் கவிதை சொல்ல தெரியவில்லை. இதைத் தொடர்ந்து இந்தி ஆசிரியை மாணவனை பலமுறை தாக்கியுள்ளார். அப்போது மாணவனின் சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக்கிய அவர் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாணவன் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்து உள்ளார். இதற்கும் ஆசிரியை மாணவனை அடித்துள்ளார்.
இது தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதன் பேரில் பள்ளி நிர்வாகம் தரப்பில் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்தி ஆசிரியையை அழைத்து பள்ளி நிர்வாகம் சார்பில் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது ஆசிரியை தனது தவறை உணர்ந்து பெற்றோரிடம் மன்னிப்பு கேட்பதற்கு தயாராக இருப்பதாகவும், மன்னிப்பு கடிதம் எழுதி கொடுப்பதாகவும் கூறி உள்ளார். ஆனால் மாணவனின் பெற்றோரோ ஆசிரியையை சந்திக்க விரும்பவில்லை என்றும், கல்வியாண்டு முடியும் வரையில் அவர் பணியில் தொடரக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தி ஆசிரியையை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- முதல்வர் மருந்தகங்களில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில்முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் திறக்கப்படுகின்றன.
- மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என ஒவ்வொரு மாவட்டத்திலும் மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன.
சென்னை:
நாடு முழுவதும் தற்போது பிரதமர் மக்கள் மருந்தகம் என்ற பெயரில் மருந்தகங்கள் செயல்படுகின்றன. மற்ற தனியார் மருந்தகங்களுடன் ஒப்பிடும்போது இங்கே மருந்து மாத்திரைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
அதே போல் இப்போது தமிழ்நாட்டில் 1000 இடங்களில் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் கிடைக்கும் வகையில் 'முதல்வர் மருந்தகங்கள்' நாளை திறக்கப்பட உள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாண்டிபஜாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை நாளை காலை 10 மணியளவில் திறந்து வைத்து மருந்து விற்பனையை தொடங்கி வைக்கிறார்.
அதன் பிறகு கோட்டூர்புரம் கலைஞர் நூற்றாண்டு நூல கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரிய கருப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியில் செயல்படுத்தப்படும் முதல்வர் மருந்தகங்களில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில்முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் திறக்கப்படுகின்றன.
இதில் சென்னையில் மட்டும் 33 இடங்களில் மருந்தகங்கள் அமைக்கப்படுகின்றன. மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என ஒவ்வொரு மாவட்டத்திலும் மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன.
முதல்வர் மருந்தகங்களில் 'ஜெனரிக் மருந்துகள்', 'சர்ஜிக்கல்ஸ்' 'சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் பிற மருந்துகள்' குறைந்த விலையில் கிடைக்கும்.
இவைகளுக்கு மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து மருந்துகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பயன் அடையும் வகையில் வெளிச்சந்தையைவிட 75 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் இங்கு மருந்து மாத்திரைகள் கிடைக்கும்.
- தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்கள்.
- உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் அவர்களுக்குள் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்கிறார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மயிலாப்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் விளையாட்டு துறையை ஊக்கப்படுத்துவதற்கு எதுவுமே செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் விளையாட்டு துறைக்கு என்ன செய்தோம், தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று விவாதம் வைக்கலாம். அது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன்.
தி.மு.க.வினர் 'மோடி கெட்அவுட்', பா.ஜ.க.வினர் 'ஸ்டாலின் கெட்அவுட்' என 2 தரப்பினரும் மாறி மாறி கெட்அவுட் போட்டு டிரெண்டாக்கி வருகிறார்கள். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. தினமும் கொலை நடக்கிறது. மக்கள் வாழ்வதற்கே அச்சப்படும் சூழ்நிலையில் இதைப்பற்றி பேச வேண்டும். ஆனால் இதைப்பற்றி பேசுவதில்லை.
விலைவாசி உயர்ந்து விட்டது. அதைப்பற்றி பேசுவதில்லை. பாலியல் வன்முறை, போதை கலாசாரம் எல்லாமே அதிகமாக இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசாமல், இரு தரப்பினரும் மாற்றி மாற்றி கெட்அவுட் என்றால் அவர்கள் ஒருவருக்கொருவர் மறைமுக உறவுடன் பிரச்சனையை திசை திருப்புகிறார்கள் என்கிற சந்தேகம் இருக்கிறது.
ஒரு குழந்தை பக்கத்து வீட்டுக்கு போய் அங்குள்ள அம்மாவை பார்த்து அம்மா என்று கூப்பிட்டால் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள். அதுவே ஒரு குழந்தை பக்கத்து வீட்டில் உள்ள பெண்ணின் கணவரை அப்பா என்று கூப்பிட்டால் அந்த குழந்தையின் தாய் சும்மா விடுவாரா? இது வீணான வில்லங்கம். எனது பிள்ளைக்கு நான் தான் அப்பா. எனது பிள்ளைக்கு வேறு யாரும் அப்பா கிடையாது.
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் எதையும் செய்யாமல், சொல்லாததையும் செய்தேன் என்று சொன்னால் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 2026 சட்டசபை தேர்தலில் திருப்பி அடிப்பார்கள்.
அரசு பள்ளிக்கூடங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக இருக்கத்தான் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி லாயக்கு. அவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்க லாயக்கே கிடையாது. பள்ளிக்கல்வித்துறை பூஜ்ய அளவில் தான் இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை நன்றாக வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று சர்வதேச அமைப்பு ஏதாவது ஆய்வு செய்து கூறி இருக்கிறதா?
ஒரு அமைச்சரை, முதலமைச்சர் பாராட்டுவது எப்படி சான்றிதழ் ஆகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் அவர்களுக்குள் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்கிறார்கள்.
நாங்கள் இருமொழி கொள்கையில் தீவிரமாக இருக்கிறோம். ஆனால் 3-வது மொழி கற்க விரும்புபவர்களின் விருப்பத்தை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் இவர்கள் ஒரு தமிழினத்தையே அழித்தவர்கள். ஒன்றரை லட்சம் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் அழித்தவர்கள். தமிழினத்தை பற்றி பேச தகுதியற்றவர்கள். இவர்கள் தமிழுக்கும் எதுவும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனைவரும் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும்.
- அ.தி.மு.க. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணைவீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆட்சியில் தொடர 4½ ஆண்டுகள் ஒத்துழைப்புதந்தேன். அப்போது பிரதமர் மோடி என்னிடம் நீங்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறவேண்டும் என கூறினார். அதனை ஏற்று நான் துணை முதல்வராக பதவியேற்றேன். 50 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உழைத்து உருவாக்கிய அ.தி.மு.க. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் தொண்டர்கள் வேதனையில் உள்ளனர்.
அனைவரும் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும். இதில் எந்த நிபந்தனையும் இல்லை என ஏற்கனவே கூறியுள்ளேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா ஒன்றிணைந்து அ.தி.மு.க.வை காப்பாற்றும். அவர்கள் வரிசையில் நானும் முதலமைச்சராக இருந்துள்ளேன். எனவே தொடர்ந்து வெற்றிக்காக பாடுபடுவேன் என பேசினார்.
- அரசு ஊழியர்கள் சங்கங்கள் நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
- குழுவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கயன்விழி செல்வராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்கள் சங்கங்கள் நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவெடுக்கும் வகையில் அமைச்சர்கள் குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
குழுவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கயன்விழி செல்வராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நாளை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
- அமித்ஷா வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
- போலீஸ் அதிகாரிகள் விழா நடைபெறும் இடங்களை ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.
வடவள்ளி:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 25-ந் தேதி 2 நாள் பயணமாக கோவை வருகிறார். அன்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். இரவில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஓய்வெடுக்கிறார்.
பின்னர் மறுநாள் 26-ந் தேதி காலை பீளமேடு அருகே எல்லைத்தோட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள பா.ஜ.க. அலுவலகத்தை அமித்ஷா திறந்து வைக்கிறார். மாலையில் ஈஷா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் அமித்ஷா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.
அமித்ஷா வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கோவை விமான நிலையம், புதிய பா.ஜ.க. அலுவலகம், ஈஷா யோகா மையம் உள்பட அவர் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விழா நடைபெறும் இடங்களை ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் ஈஷா யோகா மையத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். விழா நடைபெறும் ஆதியோகி சிவன் சிலை முன்பு பிரமாண்ட நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்க இருக்கிறார். அது திறந்தவெளி மைதானம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசித்தார்.
அவருடன் கோவை சரக டி.ஐ.ஜி. சசிமோகன், போலீஸ் அதிகாரி கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.






