என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விளையாட்டு துறைக்கு அதிகம் செய்தது யார்?: உதயநிதியுடன் விவாதம் நடத்த தயார்- ஜெயக்குமார்
    X

    விளையாட்டு துறைக்கு அதிகம் செய்தது யார்?: உதயநிதியுடன் விவாதம் நடத்த தயார்- ஜெயக்குமார்

    • தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்கள்.
    • உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் அவர்களுக்குள் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மயிலாப்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் விளையாட்டு துறையை ஊக்கப்படுத்துவதற்கு எதுவுமே செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் விளையாட்டு துறைக்கு என்ன செய்தோம், தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று விவாதம் வைக்கலாம். அது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன்.

    தி.மு.க.வினர் 'மோடி கெட்அவுட்', பா.ஜ.க.வினர் 'ஸ்டாலின் கெட்அவுட்' என 2 தரப்பினரும் மாறி மாறி கெட்அவுட் போட்டு டிரெண்டாக்கி வருகிறார்கள். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. தினமும் கொலை நடக்கிறது. மக்கள் வாழ்வதற்கே அச்சப்படும் சூழ்நிலையில் இதைப்பற்றி பேச வேண்டும். ஆனால் இதைப்பற்றி பேசுவதில்லை.

    விலைவாசி உயர்ந்து விட்டது. அதைப்பற்றி பேசுவதில்லை. பாலியல் வன்முறை, போதை கலாசாரம் எல்லாமே அதிகமாக இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசாமல், இரு தரப்பினரும் மாற்றி மாற்றி கெட்அவுட் என்றால் அவர்கள் ஒருவருக்கொருவர் மறைமுக உறவுடன் பிரச்சனையை திசை திருப்புகிறார்கள் என்கிற சந்தேகம் இருக்கிறது.

    ஒரு குழந்தை பக்கத்து வீட்டுக்கு போய் அங்குள்ள அம்மாவை பார்த்து அம்மா என்று கூப்பிட்டால் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள். அதுவே ஒரு குழந்தை பக்கத்து வீட்டில் உள்ள பெண்ணின் கணவரை அப்பா என்று கூப்பிட்டால் அந்த குழந்தையின் தாய் சும்மா விடுவாரா? இது வீணான வில்லங்கம். எனது பிள்ளைக்கு நான் தான் அப்பா. எனது பிள்ளைக்கு வேறு யாரும் அப்பா கிடையாது.

    தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் எதையும் செய்யாமல், சொல்லாததையும் செய்தேன் என்று சொன்னால் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 2026 சட்டசபை தேர்தலில் திருப்பி அடிப்பார்கள்.

    அரசு பள்ளிக்கூடங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக இருக்கத்தான் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி லாயக்கு. அவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்க லாயக்கே கிடையாது. பள்ளிக்கல்வித்துறை பூஜ்ய அளவில் தான் இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை நன்றாக வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று சர்வதேச அமைப்பு ஏதாவது ஆய்வு செய்து கூறி இருக்கிறதா?

    ஒரு அமைச்சரை, முதலமைச்சர் பாராட்டுவது எப்படி சான்றிதழ் ஆகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் அவர்களுக்குள் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்கிறார்கள்.

    நாங்கள் இருமொழி கொள்கையில் தீவிரமாக இருக்கிறோம். ஆனால் 3-வது மொழி கற்க விரும்புபவர்களின் விருப்பத்தை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் இவர்கள் ஒரு தமிழினத்தையே அழித்தவர்கள். ஒன்றரை லட்சம் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் அழித்தவர்கள். தமிழினத்தை பற்றி பேச தகுதியற்றவர்கள். இவர்கள் தமிழுக்கும் எதுவும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×