என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அரசுப் பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
    • கல்வி அலுவலர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    தமிழக அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு வரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்!" எனும் பேருண்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    அரசுப் பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ள திட்டங்களின் துணை கொண்டு கல்வியில் வெற்றியடைய வாழ்த்துகள்.

    மிகுந்த உற்சாகத்தோடு மாணவர் சேர்க்கையை மேற்கொண்டு வரும் கல்வி அலுவலர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கூழ் தொழிற்சாலைகள் தென்மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
    • முதலமைச்சர் ஸ்டாலின் 'விவசாயி' வேடமிட்டு போலியாக திரிவதைக் கண்டு உண்மையான விவசாயிகள் கொதிப்படைந்து போயுள்ளனர்.

    தென் மாவட்ட 'மா' பயிரிடும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளின் துயரத்தை துச்சமென நினைக்கும் விடியா திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து, அதிமுக ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் ஜூன் 20ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நத்தம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழக தென் மாவட்டங்களில், குறிப்பாக திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 'மா' விவசாயிகள் பயன்பெறும் வகையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாம்பழக் கூழ் தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 150 முதல் 250 வாரி வரை, அதாவது 1500 மெட்ரிக் டன் முதல் 2000 மெட்ரிக் டன் வரை மாம்பழக் கூழ் தயாரிக்கப்படுகிறது.

    இப்பகுதியில் அமைந்துள்ள கூழ் தொழிற்சாலைகள் தென்மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

    'மா' உற்பத்தி ரகங்களான காதர் (அல்போன்சார், செந்தூரம், கல்லாமை (ஜோத்தாபுரி), கான, மங்கனப்பள்ளி, கிரேப் மல்கோவா, இமாம்சந்த் காணாப்பாடி குமேனியா, சேலம் குண்டு, நாட்டுக்காய் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கடந்த 4 ஆண்டுகால நிர்வாகத் திறனற்ற திமுக ஸ்டாலின் மாடல் அரசால், தமிழகத்தின் அனைத்து விவசாயிகளும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருவதும், நெல்லானாலும், கரும்பானாலும், பயிர் வகைகளானாலும், மஞ்சள் ஆனாலும் உரிய விலை கிடைக்காமல் பெரும் நஷ்டத்தையே அடைந்து வருகின்றனர்.

    பயிர்க் காப்பீடு முதல் வறட்சி மற்றும் வெள்ள காலங்களில் உரிய நிவாரணம் அளிப்பது வரை, எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல் இந்த அரசு விவசாயிகளை வாட்டி வதைத்து வருகின்றது.

    உழவன் கணக்குப் பார்த்தால். உழக்குக்கூட மிஞ்சாது என்பதையும், 'விவசாயி சேற்றில் கால் வைக்கவில்லை என்றால், நாம் சோற்றில் கை வைக்க முடியாது' என்பதையும் மறந்துவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் 'விவசாயி' வேடமிட்டு போலியாக திரிவதைக் கண்டு உண்மையான விவசாயிகள் கொதிப்படைந்து போயுள்ளனர்.

    தென் மாவட்ட "மா" விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 15-ஐ நிர்ணயித்து, விவசாயிகளிடம் இருந்து மாம்பழங்களை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும்; தனியார் மாம்பழக் கூழ் தொழிற்சாலைகள் கிலோ ஒன்றுக்கு ரூ. 15-க்கு மேல் கொள்முதல் செய்த நிலையில், தற்போது 1 கிலோ மாம்பழத்திற்கு ரூ. 5 மட்டுமே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கிறார்கள் என்றும், எனவே, 'மா' விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 25,000 முதல் 30,000 வரை மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த அரசிடம் வைத்தும், இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை என்று விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    எனவே, தென் மாவட்ட 'மா' விவசாயிகளின் நியாமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க, விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில், 20.6.2025 வெள்ளிக் கிழமை காலை 9.30 மணி அளவில், நத்தம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழகப் பொருளாளகும். திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னான் அமைச்சருமான திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A. அவர்கள் தலைமையிலும்; கழக துணைப் பொதுச் செயலாளரும், திண்டுக்கள் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. நத்தம் இரா. விசுவநாதன், M.LA.அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக அமைப்புச் செயலாளரும், திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயருமான திரு. V. மருதராஜ், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் V.P.B. பரமசிவம், Ex. M.L.A., திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர் திருமதி S. தேன்மொழி, MLA., கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் திரு. R.V.N. கண்ணன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகர, பேரூராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், 'மா விவசாயிகள்', வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் 17,985, குறைந்தபட்சமாக நீலகிரியில் 1,327 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
    • ஆங்கில வழிக் கல்வியில் சுமார் 52 ஆயிரம் பேரும் இணைந்துள்ளனர்.

    தமிழக அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு வரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விவரங்களை அரசு தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை (3,12,881) கடந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 17,985, குறைந்தபட்சமாக நீலகிரியில் 1,327 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

    கேஜி வகுப்புகளில் சுமார் 22 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு தமிழ் வழிக் கல்வியில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரும் ஆங்கில வழிக் கல்வியில் சுமார் 52 ஆயிரம் பேரும் இணைந்துள்ளனர்.

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை குறைந்த அளவில் சேர்க்கை நடைபெற்றுள்ள மாவட்டங்களில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அறிவிக்கப்படாதது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
    • கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பணிகள் தடைபட்டன.

    மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பா.ம.க. நிறுவனர்-தலைவர் மருத்துவர் ச.இராமதாசு அறிக்கை 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்!

    உலகின் மக்கள் தொகையில் 150 கோடியை நோக்கி முதல் இடத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், முன்பு அறிவித்திருந்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்ற அறிவிப்பு என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பதற்கான அறிவிப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அறிவிக்கப்படாதது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நடைமுறை, ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலம் முதல் அமலில் உள்ளது. முதல் கணக்கெடுப்பானது 1872 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுதந்திரம் அடைந்தது முதல், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 ன் கீழ் இந்தியாவிற்கு எதிரான போர்கள் நடைபெற்ற காலங்களில் கூட இடைவிடாது தொடர்ந்து நடத்தப் பட்ட நிலையில் கடைசியாக, 2011ல் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    ஆனால் 2021ல் கணக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பணிகள் தடைபட்டன. இதனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு 2026-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்படும் என்றும் அது ஜாதி வாரி மக்கள் தொகையாக கணக்கெடுக்கப்படும் என்றும் முன்பு அறிவித்திருந்த மத்திய அரசின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு தற்போதைய அறிவிப்பின் மூலம் ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லை என்பது போல் காணப்படுகின்றது எனவே உடனடியாக மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று இதன் மூலம் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அவரும் அரசியல் பேசவில்லை. நானும் அரசியல் பேசவில்லை.
    • அவர் ஏன் அப்படி கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. அதற்கு அவர்தான் விளக்கம் சொல்ல வேண்டும்.

    திருமாவளவனை சந்தித்தது தொடர்பாக கேட்ட கேள்விக்கு "திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துள்ளது. தற்போது இதை மட்டும்தான் தெரிவிக்க முடியும்" என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் பின்வருமாறு:-

    நட்பின் அடிப்படையிலேயே சந்தித்தேன். வி.ஐ.டி. வேந்தர் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பங்கேற்றோம். அப்போதுதான் வைகைச் செல்வனுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. திருச்சியில் மதச்சார்பின்மை பேரணி நடத்தினோம். அதற்காக திருச்சி சென்று தனியார் விடுதியில் தங்கியிருந்தோம்.

    நான் தங்கிய அறையின் அருகில் அவர் தங்கியிருந்தார். எனக்கு ஒரு புத்தகத்தை பரிசு அளித்தார். விடுதலை போரில் சீர்காழி என்ற புத்தகத்தை வழங்கினார். பலரின் முன்னிலையில் நடந்த சந்திப்பு. அரசியல் ஏதும் பேசாமல் நடந்த சந்திப்பு. அவர் இலக்கிய தளத்தில் என்ன செய்து வருகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த கொண்ட ஒரு தருணம். அவ்வளவுதான்.

    அவரும் அரசியல் பேசவில்லை. நானும் அரசியல் பேசவில்லை. அவர் ஏன் அப்படி கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. அதற்கு அவர்தான் விளக்கம் சொல்ல வேண்டும். 2026-ல் ஆட்சியில் பங்கு என்ற கேள்விக்கான சூழ்நிலை எழவில்லை இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    • எங்கள் அணியிலிருக்கும் ஒருவருக்கு “சாகித்ய பால புரஸ்கார் 2025” விருது அறிவிப்பு.
    • மாத இதழ்களின் வெற்றிக்கு பங்களித்து வருபவர்தான் எழுத்தாளர் சரவணன்.

    எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025ம் ஆண்டுக்கான 'பால சாகித்ய புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவர் எழுதிய 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலுக்காக ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையுடன் விழும் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    எங்கள் அணியிலிருக்கும் ஒருவருக்கு "சாகித்ய பால புரஸ்கார் 2025" விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    "ஒற்றைச் சிறகு ஓவியா" என்ற சிறார் நாவலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் இவ்விருது பெறவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திராவிட மாடல் அரசு அமைந்தது முதல் நமது பள்ளிக் கல்வித்துறையால் மாணவர்களுக்காக வெளியிடப்படும் தேன்சிட்டு, ஊஞ்சல் ஆகிய மாத இதழ்களின் வெற்றிக்கு பங்களித்து வருபவர்தான் எழுத்தாளர் திரு.விஷ்ணுபுரம் சரவணன்.

    அறிவியல் - முற்போக்கு சிந்தனைகளை குழந்தைகளிடம் விதைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். குழந்தைகளுக்கான அவரது எழுத்துப்பணி உயிர்ப்போடு தொடரட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திருச்செந்தூர் கோவிலில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • இதற்கான திருப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன.

    கும்பாபிஷேக விழாவிற்காக ராஜகோபுரம் கீழ்ப்பகுதியில் பிரமாண்ட யாக சாலை அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. 8,000 சதுர அடியில் யாக சாலையும், 2,000 சதுர அடியில் பக்தர்கள் அமர்ந்து யாகசாலை பூஜையை காணும் வகையில் கேலரியும் அமைக்கப்படுகிறது. யாகசாலையில் 76 யாக குண்டங்கள் அமைக்கப்படுகின்றன. ஜூலை 1-ம் தேதி யாகசாலை பூஜை தொடங்குகிறது.

    இதற்கிடையே, திருச்செந்தூர் கோவிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை தமிழில் நடத்தவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். யாக பூஜையில் தமிழில் மந்திரம் சொல்லாவிட்டால் கும்பாபிஷேகத் தினத்தன்று முற்றுகை போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர்.

    இந்நிலையில், யாகசாலையில் 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தர் அனுபூதி ஆகியவை தமிழில் முற்றோதுதல் நடக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, கோவில் நிர்வாகம் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜூலை 7-ம் தேதி காலை 6:15 மணிமுதல் 6:50 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடக்க உள்ளது. இதற்காக 8,000 சதுரடியில் 76 யாக குண்டங்களுடன் பிரமாண்ட வேள்வி சாலை அமைக்கப்படுகிறது.

    வேள்வி சாலை வழிபாடு நாட்களில் வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், நாதஸ்வர இன்னிசை நடக்கும்.

    காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருச்சியில் திருமாவளவனை வைகைச் செல்வன் சந்தித்து பேசியுள்ளார்.
    • சந்திப்பு குறித்து கேள்விக்கு திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துள்ளது என பதில் அளித்தார்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியின் குடிநீர், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து இன்று காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வைகைச் செல்வனிடம், திருமாவளவன் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வைகைச் செல்வன், "திமுக கூட்டணியில் தற்போது ஓட்டை விழுந்துள்ளதாகவும் இதற்கான பதில் விரைவில் கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.

    அந்த ஓட்டைக்காகத்தான் திருமாவளவனை சந்தித்தீர்களா? என்ற கேள்விக்கு, "இப்போது என்னால் இவ்வளவுதான் கூற முடியும். உங்களுக்கு நான் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறேன்" என பதில் அளித்தார்.

    மதச்சார்பின்மை காப்போம் என்ற பேரணி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. அப்போது வைகைச் செல்வன் திருமாவளவனை சந்தித்து பேசியுள்ளார்.

    • சென்னை வட்டாரத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத்.
    • கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்ட அகழாய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

    கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2014ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளத் தொடங்கியது.

    2014இல் கீழடியில் அகழாய்வு செய்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினார். அகழாய்வில் கிடைக்கப் பெற்ற பொருட்களைக் கொண்டு, அங்கு நகர நாகரிகம் இருந்ததற்கான முடிவுக்கு வந்தனர்.

    இந்த அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அமர்நாத் திடீர் என அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்.

    அதன் பிறகு, மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள திரு. ஸ்ரீராமன் என்பவரை இந்தியத் தொல்லியல் துறை நியமனம் செய்தது.

    மூன்றாம் கட்ட அகழாய்வு நிறைவுறும் தறுவாயில், கீழடியில் மேற்கொண்டு அகழாய்வு செய்வதற்கு ஒன்றுமில்லை எனவும், கிடைத்த பொருட்களே மீண்டும் கிடைப்பதாகக் கூறி ஆய்வினைத் திரு. ஸ்ரீராமன் நிறைவு செய்தார்.

    அதன் பிறகு, கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணணி தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட்டது. தற்போது 10ஆம் கட்ட அகழாய்வுப் பணி, தமிழகத் தொல்லியல் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்ட அகழாய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், தொல்லியல் ஆய்வுலகில் இந்த ஆய்வறிக்கை குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அசாமைத் தொடர்ந்து கோவா, பிறகு, மறுபடியும் சென்னை வட்டாரத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத். கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறையிடம் (ஏஎஸ்ஐ) சமர்ப்பித்தார்.

    இதில் கீழடியில் நிலவிய கலாசாரம். அங்கு விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள், விலங்குகள். நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை உள்ளிட்டவை குறித்தும், 5.765 தொல்லியல் பொருட்கள் பற்றியும் 982 பக்கம் கொண்ட அறிக்கையில் அவர் தெளிவாக விளக்கியுள்ளார். அது மட்டுமன்றி கீழடி நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்.

    அதன் பின்னர், 2 ஆண்டுகள் ஆகியும் கீழடி அறிக்கையை வெளியிடாமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தியது. ASI இயக்குநர் திரு. நாயக், இரண்டு நிபுணர்கள் அளித்த பரிந்துரைகளை மேற்கோள் காட்டி, தேவையான திருத்தங்களைச் சேர்த்து, கீழடி அறிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு திரு அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் கேட்டுக்கொண்டார்.

    அறிக்கையில் வழங்கப்பட்ட இறுதி முடிவுகள், விரிவான தொல்லியல் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், விரிவான அறிவியல் சோதனை முடிவு ஆவணங்களால் ஆதரிக்கப்படுகின்றன என்றும் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா தனது பதிலில் விளக்கினார்.

    இந்தச் சூழலில், கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணாவை நொய்டாவுக்குப் பணியிட மாற்றம் செய்து மத்தியத் தொல்லியல் துறை (ஜூன் 17) உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பும் இதேபோல இந்த ஆய்வில் இருந்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மக்கள் காதுகளில் பூச்சுற்றுவதற்காகப் பா.ஜ.க சொல்லும் புராணக் கதைகள் அல்ல, கீழடி ஆய்வு முடிவுகள். அது. அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை.

    இத்தகைய கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை வெளிவந்தால், பா.ஜ.க. காலகாலமாகச் சொல்லும் கட்டுக் கதைகள் உடைபடும்.

    சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது வைகை நாகரிகம் என்பதும் வெளிவரும். இதனால் திட்டமிட்டு, இந்த ஆய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது.

    ஈடு இணையற்ற பேரரும் பெருமை வாய்ந்த எங்கள் தமிழ் மண்ணை, நாகரிகத்தை, கலாசாரத்தை, இந்தி, சமஸ்கிருதப் புழுதி கொண்டு மூடி மறைத்துவிட, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது. யுகம் யுகமாக, காலகாலமாக நீடித்து நிலைத்து நிற்கும் தமிழ் மண். சாதாரணமானது அன்று ஒரு பெரும் கலாசார எரிமலை.

    அதைத் தொட நினைத்தால், வினைவு என்னவாகும் என்பதைச் சிறுகுழந்தையும் அறியும். ஆனால், ஒன்றிய பா.ஐ. மட்டும் அதை உணராமல் எங்கள் உணர்வுடன் விளையாடுகிறது. பின்விளைவுகளை அனுபவித்துத்தான் புரிந்துகொள்வோம் என்று அவர்கள் எண்ணினால். அந்த அறியாமையைக் கண்டு நகைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

    ஒன்றிய அரசில் இருக்கும் இவர்கள்தான் இப்படி என்றால். இங்கு இருக்கும் தற்போதைய ஆட்சியாளர்களான கபட நாடகத் தி.மு.க. போடும் நாடகம் இன்னும் மோசமாக இருக்கிறது. தங்கள் ஆட்சிக்கு எதிராகவோ, ஆட்சியாளரின் குடும்பத்திற்கு எதிராகவோ ஊழல் புகார்களும் கெட்ட பெயர்களும் எழுகிற போதெல்லாம், தமிழ், தமிழர் என்ற முகமூடியை அணிந்து கம்பு சுற்றும் தி.மு.க.வின் கபட நாடக அரசியலைத் தமிழக மக்களும் கவனித்துக்கொண்டுதான் உள்ளனர்.

    கீழடியின் பெருமையை மறைக்க உள்ளடி வேலை செய்யும் ஒன்றிய பா.ஜ.க.வுடன். வெளியே மட்டும் எதிர்ப்பு வேடம் போட்டுக்கொண்டு. குடும்ப நிதியைக் காப்பதற்காக ஒரே போர்வைக்குள் ஒளிந்துகொண்டு, மறைமுகமாக ஒத்து ஊதும் தி.மு.க.விற்கும் சேர்த்துச் சொல்லிக்கொள்கிறோம்: தமிழ், தமிழர் நாகரிக வானத்தை எந்தப் புழுதிப் போர்வையையும் போர்த்தி அழுக்காக்கிவிட இயலாது.

    அத்தகைய முயற்சி செய்வோருடன் எவ்விதத்திலும் மறைமுகமாகவோ நேரடியாகவோ துணைபோகும் சக்திகளும் மக்கள் மத்தியில் அம்பலமாவது நிச்சயம் என்பதை எங்கள் வெற்றித் தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2025ம் ஆண்டுக்கான 'பால சாகித்ய புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மென்மேலும் பல விருதுகளை வெல்ல, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025ம் ஆண்டுக்கான 'பால சாகித்ய புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவர் எழுதிய 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலுக்காக ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையுடன் விழும் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    2025 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதினை வென்றுள்ள எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒற்றைச் சிறகு ஓவியா என்ற சிறுவர் நாவலுக்காக இந்த உயரிய விருதை வென்றுள்ள திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள், கவிஞர், கட்டுரையாளர், கதை சொல்லி, சிறார் எழுத்தாளர், இதழாசிரியர் என, பல தளங்களில் முத்திரை பதித்தவர்.

    திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள், இலக்கியத்தில் தொடர்ந்து பல படைப்புகளை மேற்கொண்டு, மென்மேலும் பல விருதுகளை வெல்ல, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 300 வீடுகளை அதிகாரிகள் இடித்தனர்.
    • அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை.

    தெற்கு டெல்லியின் கல்காஜி விரிவாக்கத்தில் உள்ள பூமிஹீன் முகாமில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் மூன்று நாட்களுக்குள் தாமாக முன்வந்து காலி செய்ய வேண்டும் என்று டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) அறிவித்திருந்தது.

    கடந்த ஜூன் 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்களுக்குள் குடியிருப்பாளர்கள் காலி செய்ய வேண்டும் என்றும், தவறினால் குடியிருப்புகளுக்குள் உள்ள பொருட்களுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும், திட்டமிட்டபடி இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

    இதனால், டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, குடியிருப்புவாசிகள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இருப்பினும், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இன்று புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளன. பூமைதின் பகுதியில் குஹி-ஹொப்ரி என்ற பகுதியில் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 300 வீடுகளை அதிகாரிகள் இடித்தனர்.

    இதையடுத்து, டெல்லி மதராஸி கேம்ப்பில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட 370 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி அறிவித்தார்.

    பாதிக்கப்பட்ட 370 குடும்பங்களுக்கும் ஒரு முறை நிதியுதவியாக தலா ரூ.8 ஆயிரம் வழங்கவும், ரூ.4 ஆயிரம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்தார்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள மதராசி கேம்ப் குடியிருப்பு பகுதியில் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட 360 தமிழர் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.8000 நிவாரணத் தொகை செலுத்தப்பட்டது.

    மேலும் ரூ.4000 மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை முதற்கட்டமாக 150 குடும்பங்களுக்கு அமைச்சர் ஆவடி நாசர் வழங்கினார்.

    • குனியமுத்தூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • கஞ்சா மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து தேவைப்படுபவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

    கோவை:

    கோவை மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை மருந்துகள் விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    போலீசார் அடிக்கடி சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா, போதை மருந்து விற்பவர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து சிலர் கோவைக்கு வந்து போதை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனால் அதுபோன்று வருபவர்களையும், அவர்கள் தங்கி இருக்கும் இடங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், குனியமுத்தூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.

    கஞ்சா மற்றும் போதை மாத்திரையுடன் சிக்கியவர் திண்டுக்கல் மாவட்டம் துப்பச்சம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது37) என்பது தெரியவந்தது. இவர் அங்கு நிதி நிறுவனம் வைத்து தொழில் செய்து வந்தார்.

    அப்போது போதைப்பொருள் விற்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்பதை அறிந்த சதீஷ்குமார், அதன்பிறகு கஞ்சா மற்றும் போதை மாத்திரை மற்றும் போதைப்பொருட்களை வாங்கியும் விற்பனை செய்து வந்துள்ளார்.

    கோவையில் இவருக்கு உறவினர்கள் இருந்துள்ளனர். இதனால் அடிக்கடி இங்கு அவர்களை பார்க்க வருவது போல வந்து, கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை விற்று வந்ததும் தெரியவந்தது.

    பின்னர் கோவைப்புதூரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அங்கு கஞ்சா மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து தேவைப்படுபவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

    மெத்தபெட்டமைன் எனப்படும் உயர்ரக போதைப்பொருள் ஒரு கிராம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் விற்பனையாவதால், அதனையும் வாங்கி சதீஷ்குமார் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் போதைப்பொருள் விற்ற பணத்தை கொண்டு சதீஷ்குமார் பிரெஸ்லெட், மோதிரங்கள் என தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சதீஷ்குமார் தங்கி இருந்த கோவைப்புதூர் பகுதியில் உள்ள அறைக்கு சென்று சோதனை நடத்தி அங்கிருந்த 525 கிராம் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் என்ற உயர் ரக போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து நகைகள் மற்றும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    நிதிநிறுவன அதிபர் என கூறிக்கொண்டு, போதைப்பொருள் விற்று, அதில் சம்பாதித்த பணத்தில் நகைகளை அணிந்து கொண்டு காரில் வலம் வந்த சதீஷ்குமார், போலீசாரின் சோதனையில் சிக்கி கொண்டார்.

    ×