என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
    • இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    சென்னை:

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணையின் போது இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து மனு மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணை நிறைவு பெற்ற நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது. 

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் 23-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். 

    • சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.
    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வருகிற 13-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற புதிய கட்சியை அறிவித்தார்.
    • புதிய கட்சியின் கொடியிலும் யானை படம் இருப்பதாக த.வெ.க. சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நினைவேந்தல் சங்கமமாக நடந்தது. தென்னிந்திய புத்தவிகார் தலைவரும் ஆம்ஸ்ட்ராங் மனைவியுமான பொற்கொடி தலைமையில் அமைதிப் பேரணி காலையில் நடந்தது.

    அதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் சிலை திறப்பு விழா நடந்தது. நினைவேந்தல் மலரும் வெளியிடப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    பின்னர், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற புதிய கட்சியை அறிவித்தார். கட்சி பெயர், கொடியை அறிமுகம் செய்த பொற்கொடி 32 அடி உயர கம்பத்தில் கொடியேற்றினார்.

    யானை தனது துதிக்கையில் பேனாவை பிடித்து எடுத்து செல்வதுபோல் உள்ள நீலம், வெண்மை நிறத்திலான கொடியை அறிமுகப்படுத்தினார்.

    இந்த நிலையில், த.வெ.க. கொடியில் யானை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணை இன்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று நடந்த நிலையில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கிய கட்சியின் கொடியிலும் யானை படம் இருப்பதாக த.வெ.க. சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    அதற்கு எதிராகவும் வழக்கு தொடரப்படும் என பகுஜன் சமாஜ் தரப்பு பதில் அளித்தது.

    இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    • ரிதன்யா மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு சமூக நல அமைப்புகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.
    • ரிதன்யாவின் பெற்றோர் சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அவரது மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு சமூக நல அமைப்புகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.

    அவரது மரணம் தொடர்பாக நாள்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனு மீதான விசாரணை கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதில், கவின்குமார் தரப்பில் கால அவகாசம் கேட்டதால் ஜாமின் மீதான விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு நீதிபதி குண சேகரன் ஒத்திவைத்தார்.

    இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    அப்போது, ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சுற்றுப்பயணத்தின் போது மக்களின் வரவேற்பை ஏற்று அவர்களின் குறைகளை கேட்டிருந்தோம்.
    • மக்களின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டோம்.

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் நேற்றும், இன்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

    குறும்பனை முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடற்கரை கிராமங்களில் மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கண்டறியவும், தேவைகளை கண்டறியவும் மற்றும் அளித்த வெற்றிக்கு நன்றி கூறவும் பிரச்சார பயணம் இன்று நடைபெற்றது. 

    இன்றைய சுற்றுப்பயணத்தின் போது மக்களின் வரவேற்பை ஏற்று அவர்களின் குறைகளை கேட்டிருந்தோம். மக்களின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டோம்.

     மயிலாடி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டேன்.

    புதூர் அருள்மிகு தேவி ஸ்ரீ ஈஸ்வரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக மற்றும் கொடை விழா நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டேன்.

    நேற்று கடற்கையோர கிராமங்களின் சுற்று பயணத்தின் போது ஊர் ஆலயங்களில் உள்ள பங்கு தந்தையரை சந்தித்து ஊர் மக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று கொண்டோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு அறிவிப்பாகத் தகவல்களைக் கேட்டுச் சரிபார்த்தேன்.
    • ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள் வியப்பளித்தன.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான்கு மணி நேரம் நீடித்த 10 அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு அறிவிப்பாகத் தகவல்களைக் கேட்டுச் சரிபார்த்தேன்.

    ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள் வியப்பளித்தன. நடைபெற்று வரும் பணிகளையும் மக்கள் மெச்சிட, குறித்த காலத்தில் முடித்திட அறிவுறுத்தல்களை வழங்கினேன்.

    அறிவித்தால் ஆணையாக வேண்டும்! அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்! "அதுதான் #DravidianModel" என அனைவர் மனதிலும் பதிய வேண்டும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இபிஎஸ் மீது மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
    • மத்தியில் 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்று பாஜக நிலையான கட்சியாக உள்ளது.

    'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் மேட்டுப்பாளையத்தில் பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.

    அப்போது, இபிஎஸ் மீது மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

    கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் அதிமுக தேர்தல் பரப்புரையில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் இந்த ரோடு ஷோவை பார்த்தவுடன் சிலருக்கு ஜூரம் வந்துவிடும்.

    மத்தியில் 10 ஆண்டு காங்கிரஸ் அரசில் இருந்தபோது திமுக எதையும் செய்யவில்லை. கொள்ளை அடிப்பதே திமுகவின் நோக்கமாக இருக்கிறது.

    2026 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமோக வெற்றி பெரும். 2001 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது பாஜக கட்சி நல்ல கட்சி, நாங்கள் வைத்தால் மதவாத கட்சியா?

    மத்தியில் 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்று பாஜக நிலையான கட்சியாக உள்ளது.

    மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே கொடுக்கவில்லை, எதுவுமே தமிழ் செய்யவில்லை என கீரல் விழுந்த ரெக்கார்டு போல் பேசுகின்றனர்.

    16 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்துக்கு என்ன செய்தது?

    திமுக மக்களை பற்றி சிந்தித்ததா?, நிதி கொண்டுவந்ததா? இனியும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.

    தமிழ்நாட்டில் வரும் தேர்தலோடு திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்.

    வரும் தேர்தலில் தீயசக்தியான திமுக-வின் ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மேட்டுப்பாளையத்தில் பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.
    • இபிஎஸ் மீது மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

    'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் மேட்டுப்பாளையத்தில் பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.

    பிரச்சார பயணத்தின்போது, இபிஎஸ் மீது மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் இணைந்தார்.

    இந்நிலையில், தேர்தல் சுற்றுப் பயணத்தின் முதல்நாளில் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார்.

    அப்போது அவர்," நாளைய தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி" என்றார்.

    • சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரி உத்தரவு.
    • ஆவண படத்தின் மூலம் ஈட்டிய லாபக் கணக்கை சமர்ப்பிக்க உத்தரவு.

    நடிகை நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதி இன்றி 'சந்திரமுகி' பட காட்சிகளை பயன்படுத்த தடை கோரி பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

    சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரியும், 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    மேலும், ஆவண படத்தின் மூலம் ஈட்டிய லாபக் கணக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.

    இவ்வழக்கு தொடர்பாக ஆவண பட தயாரிப்பு நிறுவனம், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
    • சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கிறார்.

    சட்டசபை தொகுதி வாரியாக ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி இன்று கோவை மாவட்டத்தில் தொடங்கினார்.

    அதன்படி, மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டி வன பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய நிலையில், தனது சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.

    வேளாண் மக்களின் உறுதுணையோடு தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று மாலை பிரச்சார பயணத்திற்கு பிரத்யேக பேருந்தில் இபிஎஸ் புறப்பட்டார். இதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் பங்கேற்றுள்ளார்.

    • ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பாமகவை அமைச்சர் விமர்சித்து பேசினார்.
    • பாமகவை விமர்சித்து அமைச்சர் எம்.ஆர்.பன்னீர் செல்வம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மேடையில் பேசினார். அப்போது, ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பாமகவை அமைச்சர் விமர்சித்து பேசினார்.

    "ஒரே கல்லில் 2 மாங்காய், தற்போது மாங்காயே இரண்டு" என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

    ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரனை வைத்துக் கொண்டு பாமகவை கிண்டல் செய்யும் வகையில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை பசுமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சூரிய காந்தி தெரு, விநாயகர் மேற்கு ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    மதுரை:

    மதுரை பசுமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் நாளை 8-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தியாக ராஜர்காலனி, பசுமலை ஜி.எஸ்.டி. சாலை, ஜோன்ஸ் புரம், கிருஷ்ணா புரம், செமினெரிலைன், ஜோன்ஸ் கார்டன், கம்பர் தெரு, விநாயகநகர், மூட்டா தோட்டம், மூட்டா காலனி, நிலா நகர், கோபால்சாமி நகர், ஜக்காதேவி தெரு, சூரிய காந்தி தெரு, விநாயகர் மேற்கு ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை அரசரடி மின் செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

    ×