என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அ.தி.மு.க. ஆட்சியில் சிங்கம்போல இருந்த காவல்துறை இன்றைக்கு மக்கள் நம்பிக்கை இழந்து போய் விட்டது.
    • நீங்கள் மன்னராட்சிக்கு மகுடம் சூட்ட களைகளை எடுக்க தயங்கிறீர்கள்.

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நடைபெற்று வரும் ஸ்டாலின் தி.மு.க. ஆட்சியில் எங்கே போகிறது தமிழ்நாடு, இன்றைக்கு தாய் தமிழ்நாடு தலைகுனிந்து இருக்கிறது என்ற வேதனையில் தமிழக மக்கள் உள்ளார்கள்.

    திருவண்ணாமலை சேர்ந்த காவலர்கள் இருவர் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண்ணை, பெற்ற தாயின் முன் பாலியல் சம்பவம் செய்திருப்பது இந்தியாவே பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. மக்களுக்கு காவல் அரணாக இருக்க வேண்டிய காவல்துறையை இன்றைக்கு பெண்களுக்கு எதிரான குற்றசெயலில் ஈடுபட்டுள்ளது.

    காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு கூட பாலியல் துன்புறுத்தல் என்ற செய்தி வெளிவருவது மிகவும் வேதனைக்குரியது.

    பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் காவல்துறை ஈடுபட்டால் இரட்டிப்பு தண்டனை வழங்கப்படும் என்று கடந்த 2025 சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் கொண்டு வந்த பின்பு இது போன்ற பெண்களுக்கு எதிரான அநீதிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    சட்ட திருத்தத்திற்கு பின் அதை செயல்படுத்த அரசு தவறி விட்டதா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்?

    அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவம் தொடர்ந்து தற்போது திருவண்ணாமலை சம்பவம் வரை பாலியல் சம்பவங்கள் நீண்டு கொண்டு தான் போகிறது. இன்றைக்கு குழந்தைகள், தாய்மார்கள், பெரியவர்கள் என அனைத்து பெண்களும் வீட்டில் மற்றும் பொதுவெளியில் செல்ல பாதுகாப்பை உறுதி செய்வதை அரசு தவறிவிட்டது.

    இதுகுறித்து எடப்பாடியார் ஆதாரத்துடன் சட்டமன்றத்தில் பதிவு செய்தார், மக்கள் மன்றத்தின் பதிவு செய்தார், ஊடகங்களில் அறிக்கை வாயிலாக உரிமைக்குரல் எழுப்பி வருகிறார். ஆனால் அரசு இதை செவிடன் காதில் ஊதிய சங்கு போல அக்கறை கொள்ளவில்லை .

    மக்களுக்கு பாதுகாப்பான அரணாக நிற்க வேண்டிய அரசு அதை உறுதி செய்ய வேண்டும். எடப்பாடியார் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கூறவில்லை மக்களுக்கு பாதுகாப்புடன் அரசு இருக்க வேண்டும் என்று தான் கூறுகிறார்.

    புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் காலங்களில் தமிழக காவல்துறை இங்கிலாந்து ஸ்காட்லாந்து நிகராக இருந்தது.

    கருணாநிதி காவல்துறை ஈரல் கெட்டு விட்டது என்று கூறினார் அவர் சொன்ன வார்த்தை இன்றைக்கு அவரது மகன் ஸ்டாலின் ஆட்சியில் காவல்துறை ஈரல் கெட்டு தான் போய்விட்டது காவல்துறையில் களைகளை எடுக்க ஸ்டாலின் தயங்குவது ஏன்?

    அ.தி.மு.க. ஆட்சியில் சிங்கம்போல இருந்த காவல்துறை இன்றைக்கு மக்கள் நம்பிக்கை இழந்து போய் விட்டது. மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார் அப்போது நீங்கள் செய்ய தவறியதை சரி செய்து காவல்துறையில் களைகளை புடுங்கி எறிந்து காவல்துறைக்கு இழந்த பெருமையை மீட்டுத் தருவார்.

    நீங்கள் மன்னராட்சிக்கு மகுடம் சூட்ட களைகளை எடுக்க தயங்கிறீர்கள், நிச்சயம் இந்த மன்னராட்சிக்கு முடிவு கட்டி 2026 இல் எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சி மலரும், அப்போது தமிழக காவல்துறை இங்கிலாந்து ஸ்காட்லாந்து நிகராக உயர்த்தி காட்டுவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமாவளவன் வந்த கார் தனது பைக் மீது மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • இதை பார்த்த விசிகவினர் அந்த பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.பி.கவாய் மீது சனாதன ஆதரவு வழக்கறிஞர் காலணி வீசி தாக்குதல் நடத்திய முயற்சியை கண்டித்து நேற்று விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காருக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த தனது பைக் மீது திருமாவளவன் வந்த கார் மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதை பார்த்த விசிகவினர் அந்த பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    போலீசார் விசாரணையில், பைக்கில் வந்தவர் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த ஐகோர்ட்டு வக்கீலான ராஜீவ் காந்தி என்பது தெரியவந்தது. இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "எனது வண்டியின் முன்னாள் இருசக்கர வண்டியின் ஒரு இளைஞர் போய் கொண்டிருந்தார். அந்த இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் எனது வண்டியை கவனித்து திடீரென வாகனத்தை நிறுத்தி விட்டு எனது வாகனத்தை நோக்கி வந்து சத்தம் போட்டார்.

    நான் நமது வையை நிறுத்தாமல் செல்லுங்கள் என்று கூறினேன். ஆனால் வாகனம் செல்லமுடியாதபடி அந்த இளைஞர் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார்.

    இதை அறிந்து எனது பாதுகாப்பிற்காக வந்த போலீசார் அந்த இளைஞரை தள்ளிபோகுமாறு கூறினர். ஆனால் நான் காருக்குள் இருக்கிறேன் என்று தெரிந்துகொண்டே அந்த இளைஞர் சத்தம் போட்டு பேசிக்கொண்டே இருந்தார்.

    நமது கட்சியை சேர்ந்த தோழர்கள் அவரிடம் தள்ளிபோகுமாறு கூறியுள்ளனர். அனால் அவர்களிடமும் அவர் முறைத்து பேசியிருக்கிறார். அப்போது அந்த இளைஞருக்கும் கட்சி தோழர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவப்பட்ட கட்சி தோழர்கள் அந்த இளைஞரை அடிக்க முயன்றனர். அதற்குள் போலீசார் அந்த இளைஞரை கூட்டி கொண்டு சென்றனர். இது தான் நடந்தது.

    பிரச்னை செய்தது அந்தத் தம்பிதான். இருசக்கர வாகனம் மீது எனது கார் மோதியதாக வெளியான தகவல் தவறு. ஆனால் ஊடகங்கள் இதை பெருக்கி, நாம் திட்டமிட்டே அந்த இளைஞரை அடித்தது போல அவதூறு செய்திகளை பரப்பி கொண்டு இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    திருமாவளவன் சென்ற கார் வழக்கறிஞரின் பைக் மீது மோதவில்லை என்பதற்கான வீடியோ ஆதாரங்களை விசிக தியூனை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    • 26 ஆயிரம் குழந்தைகள் பாலஸ்தீனத்தில் பெற்றோரை இழந்திருக்கிறார்கள்.
    • காசாவில் இரக்கமற்ற படுகொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை:

    காசா மீது இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், இஸ்ரேல் அரசுடன், இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும், பாலஸ்தீன ஒருமைப்பாட்டை முன்னிறுத்தியும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    * காசாவில் நடைபெறும் இனப்படுகொலை மனதை உலுக்கிறது.

    * 11 ஆயிரம் பெண்கள், 17 ஆயிரம் குழந்தைகள், 175 பத்திரிகையாளர்கள், 125 ஐ.நா. ஊழியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    * 26 ஆயிரம் குழந்தைகள் பாலஸ்தீனத்தில் பெற்றோரை இழந்திருக்கிறார்கள்.

    * உணவுப்பொருள் ஏற்றி வரும் லாரியை எதிர்பார்த்து காத்திருந்தபோது 45 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    * உணவு பொருட்கள், மருந்துகள், பால் பவுடர் எடுத்து சென்ற தன்னார்வலர்களை இஸ்ரேல் கைது செய்தது.

    * காசா மீதான தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    * காசாவில் இரக்கமற்ற படுகொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    * காசா மீதான தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    * 14-ந்தேதி நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும்.

    * மனிதாபிமானம் உள்ள யாரும் இதை பிறநாட்டு விவகாரம் என்று பார்க்கக்கூடாது.

    * காசாவை மறுகட்டமைப்பு செய்து மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    சென்னை:

    காசா மீது இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், இஸ்ரேல் அரசுடன், இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும், பாலஸ்தீன ஒருமைப்பாட்டை முன்னிறுத்தியும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஐ.யு.எம்.எல். பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி துணை பொதுச்செயலாளர் நித்யானந்தன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நிவாரண நிதிக்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது.
    • முதற்கட்டமாக 45 நபர்களுக்கு நிதியை செந்தில் பாலாஜி வழங்கினார்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    இந்த சம்பவத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்து இருந்தது.

    பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நிவாரண நிதிக்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிதியுதவி வழங்கினார். முதற்கட்டமாக 45 நபர்களுக்கு நிதியை அவர் வழங்கினார்.

    பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் லேசான காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிதியையும் வீடு வீடாக சென்று செந்தில் பாலாஜி வழங்கினார்.

    • அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர் ராமதாஸ் நேற்று மாலை ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.
    • ராமதாஸ் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் ராமதாசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் சேரன் உள்ளிட்டோர் நேற்றுமுன்தினம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் நேற்று நேரில் சென்று உடல்நலம் விசாரித்தனர். இதற்கிடையில் டாக்டர் ராமதாஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தகவல், இமயமலையில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ரஜினிகாந்திடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த் உடனடியாக டாக்டர் ராமதாசை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

    இதனை தொடர்ந்து, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர் ராமதாஸ் நேற்று மாலை 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். அப்போது அவரிடம் நிருபர்கள், வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு ராமதாஸ், "எனக்கு எப்போதும் ஓய்வே கிடையாது" என கூறிவிட்டு சென்றார்.

    இந்த நிலையில், டாக்டர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார். 

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    தருமபுரி:

    கர்நாடகா காவிரி கரை யோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 6,500 கனஅடியாக வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • பிரதமர் மோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • நேர்மையுடன் தேசத்திற்கு சேவை செய்வதற்கும் உள்ள உறுதியான அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது.

    சென்னை:

    பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரியாக பதவி வகித்து, பின்னர் பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    25 ஆண்டுகளாக அரசியலமைப்புச் சட்டத் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்ததற்காக, மாண்புமிகு பிரதமர் மோடிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

    இந்த இணையற்ற மைல்கல், உங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், நேர்மையுடன் தேசத்திற்கு சேவை செய்வதற்கும் உள்ள உறுதியான அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது என்று கூறியுள்ளார். 



    • கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் த.வெ.க. தலைவர் விஜய் பேசினார்.
    • நேற்று மெயில் மூலம் மனு அளித்த நிலையில் இன்று நேரில் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் ஆறுதல் கூறாமல் இருந்து வந்தார்.

    இதுகுறித்து சமூக வலைதளங்களில் விஜய் மீது கடும் கண்டனங்கள் எழுந்து வந்தன.

    இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களை 'வீடியோ கால்' மூலம் தொடர்பு கொண்டு நேற்று முன்தினமும், நேற்றும் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.

    கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் த.வெ.க. தலைவர் விஜய் பேசினார்.

    அப்போது, இது ஈடு செய்ய முடியாத இழப்பு. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக வெற்றிக்கழகம் செய்து தரும். நான் விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன் என கூறினார்.

    இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் விரைவில் கரூர் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து நேரில் ஆறுதல் கூற த.வெ.க. தலைவர் விஜய் செல்ல உள்ளார். கரூர் செல்லும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் த.வெ.க.வினர் இன்று மனு அளிக்க உள்ளதாக கட்சியின் கொ.ப.செ. அருண்ராஜ் தகவல் தெரிவித்து உள்ளார்.

    ஏற்கனவே நேற்று மெயில் மூலம் மனு அளித்த நிலையில் இன்று நேரில் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    அமெரிக்க அதிபர் டிரம்பின் அடாவடி முடிவுகளால் உலக நாடுகள் வர்த்தகப் போரை சந்தித்து வருகின்றன. இதனால், பெரும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

    தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் ரூ.89 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 125-ல் இருந்து ரூ.75 உயர்ந்து கிராம் ரூ.11 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ.90 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    07-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,600

    06-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,000

    05-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

    04-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

    03-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    07-10-2025- ஒரு கிராம் ரூ.167

    06-10-2025- ஒரு கிராம் ரூ.167

    05-10-2025- ஒரு கிராம் ரூ.165

    04-10-2025- ஒரு கிராம் ரூ.165

    03-10-2025- ஒரு கிராம் ரூ.162

    • நேற்று மதுரை தெற்கு மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
    • அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    சென்னை:

    தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதையொட்டி 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் தி.மு.க. நிர்வாகிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின் போது முக்கிய ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கி வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று மதுரை தெற்கு மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

    அப்போது அவர், தொகுதி வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என கேட்டறிந்தார். பின்னர், தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    இந்த நிலையில், 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் இன்று விளாத்திகுளம் மற்றும் தென்காசி தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்க உள்ளார். 

    • ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • விதிமீறல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    சென்னை:

    நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் எளிதான பயணத்திற்காக சில விதிகளை ரெயில்வே வாரியம் விதித்துள்ளது. குறிப்பாக, ரெயில்களில் விபத்து ஏற்படுத்தும் வகையிலான பொருட்களை கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

    அந்தவகையில், ரெயில்களில் எளிதில் தீப்பற்றும் பொருட்களான அடுப்புகள், எரியக்கூடிய ரசாயனங்கள், பட்டாசுகள், கழிப்பறை சுத்தம் செய்யும் அமிலம், டீசல், பெட்ரோல், சிகரெட் போன்றவற்றை எடுத்துச் செல்ல தடை உள்ளது. இந்த தடை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. ஆனால், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் வியாபாரிகள் மற்றும் பயணிகள் பட்டாசு உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    ரெயில்களில் ஆபத்தான பொருட்களை எடுத்துச்செல்வது தண்டனைக்குரிய குற்றம் எனவும், எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கக்கூடிய பொருட்களை ரெயிலில் எடுத்து செல்லாமல் பயணிக்க வேண்டும் எனவும் தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, பண்டிகை காலங்களில் இந்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுவதால், ஒவ்வொரு ஆண்டும் முன்னதாகவே ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'ரெயில்களில் பட்டாசு உள்பட தீ விபத்து ஏற்படுத்தும் பொருட்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. இதுகுறித்து பெரும்பாலான பயணிகளுக்கு விழிப்புணர்வு இருப்பதால் ரெயில்களில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் எடுத்து செல்வதில்லை. சிலர் பண்டிகை காலங்களில் விதிமுறைகளை மீறி பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து வருகின்றனர். இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிறது.

    எனவே, தடையை மீறி பட்டாசு கொண்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சென்று, முதல் முறையாக பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து, விதிமீறல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்' என்றார்கள்.

    ×