என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.
- தி.மு.க. கூட்டணியில் கடந்த தேர்தலை விட குறைவான எம்.பி. தொகுதிகளே காங்கிரசுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை என தேர்தல் களம் களை கட்டியுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி முதல் கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில் தமிழக காங்கிரசில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடீர் அதிரடி மாற்றங்கள் புயலை கிளப்பியுள்ளன.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக 3 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த கே.எஸ்.அழகிரி தேர்தல் நேரத்தில் மாற்றப்பட மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அவரை மாற்றி விட்டு புதிய தலைவராக செல்வபெருந்தகையை நியமனம் செய்துள்ளது.
இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி, காங்கிரஸ் தலைமைக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியில் விஜயதாரணி சேரப்போவதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த செய்திகளை மறுக்காமல் டெல்லியிலேயே முகாமிட்டுள்ள அவர் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் சேர உள்ளார். அதற்கான காய்களை அவர் நகர்த்தி வருகிறார்.
இது தொடர்பாகவும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டது பற்றியும் விஜயதாரணி எம்.எல்.ஏ. இன்று மாலைமலர் நிருபருக்கு தொலைபேசி வழியாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விளவங்கோடு தொகுதியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளேன்.தொகுதி மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். குமரி மாவட்டத்தில் விளவங்கோடு தொகுதி முன் மாதிரியான தொகுதியாக விளங்கி வருகிறது.
தொகுதி மக்களுக்காக தொடர்ந்து நான் பாடுபட்டு வருகிறேன். காங்கிரஸ் கட்சிக்காக முழு மூச்சுடன் உழைத்துள்ளேன்.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் உழைப்புக்கு மரியாதை கிடைக்கவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற தொகுதி தலைவராக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் நியமனம் செய்யப்படும் போது எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் எம்.எல்.ஏ.க்களிடம் கேட்காமலேயே ஆலோசனை செய்யாமல் ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.
பெண் என்பதால் என்னை தொடர்ந்து புறக்க ணித்து வருகிறார்கள். நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக பேசப்பட்டு வருகிறது. எனது முடிவை விரைவில் முறைப்படி அறிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சட்டசபையில் 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் விஜயதாரணியை போன்று மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களும் விரைவில் கட்சி மாறலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் கடந்த தேர்தலை விட குறைவான எம்.பி. தொகுதிகளே காங்கிரசுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தற்போது எம்.பி.யாக உள்ள சிலர் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் எம்.பி.க்கள் சிலரும் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்ப தாகவும் தெரிகிறது.
எனவே தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை முடிந்து காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகும் போது எம்.பி.க்கள் சிலரும் பாரதிய ஜனதா பக்கம் சாயலாம் என்றும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாராளுமன்ற தேர்தல் களம் பரபரப்பான கட் டத்தை எட்டியிருக்கும் நிலையில் தமிழக காங்கிரசில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் புகைச்சல் கட்சியினர் மத்தியிலும் தேர்தல் களத்திலும் சூட்டை கிளப்பி இருக்கிறது.
- மறைந்த வி ஏ ஓ லூர்து மகன் மார்ஷல் ஏசுவடியான் தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் விதமாக சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
- உன்னை நீதிபதியாக பார்க்க வேண்டும் என என் தந்தை சொல்லிக்கொண்டே இருப்பார். அவரது ஆசையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தாண்டு மணல் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸின் மகன் மார்ஷல் ஏசுவடியான், சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வில் வென்று சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.
"உன்னை நீதிபதியாக பார்க்க வேண்டும் என என் தந்தை சொல்லிக்கொண்டே இருப்பார். அவரது ஆசையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றிக்கு எனது குடும்பம் மிகவும் உறுதுணையாக இருந்தது" என ஏசுவடியான் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ். இவருக்கு வயது 55. இவர் மணல் கொள்ளையை தடுப்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்ததால் கோபமடைந்த ஒரு கும்பல் அவரது அலுவலகத்திலேயே கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.
லூர்து பிரான்சிசை வெட்டி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு (41) மற்றும் மாரிமுத்து (31) ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அதோடு இருவருக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், மறைந்த வி.ஏ.ஓ லூர்து மகன் மார்ஷல் ஏசுவடியான் தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் விதமாக சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- புறப்பட்ட 30 நிமிடங்களில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது
- விமானத்தில் ராஷ்மிகாவுடன் ஷ்ரத்தா தாசும் உடன் பயணித்தார்
இந்தியாவின் முன்னணி தொழில்துறை குழுமமான பிரபல டாடா குழுமம் இயக்கி வரும் விமான போக்குவரத்து சேவை நிறுவனம், விஸ்டாரா (Vistara).
விஸ்டாராவிற்கு சொந்தமான விமானம் ஒன்று பயணிகளுடன் மும்பையிலிருந்து ஐதராபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஆனால், புறப்பட்ட 30 நிமிடங்களில் அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
விமானி உடனடியாக அந்த விமானத்தை மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி வந்து தரையிறக்கினார்.
இந்த விமானத்தில் பிரபல திரைப்பட நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) பயணம் செய்தார்.
தனக்கு நேர்ந்த அனுபவத்தை ராஷ்மிகா மந்தனா, சமூக வலைதள கணக்கில் "மரணத்தில் இருந்து இப்படித்தான் தப்பினோம்" என தலைப்பிட்டு பகிர்ந்து கொண்டார்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ராஷ்மிகா, கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
விபத்து நேரிடாமல் அதிர்ஷ்டவசமாக ராஷ்மிகா உயிர் தப்பியதால், அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.
இதே விமானத்தில் ராஷ்மிகாவுடன், நடிகை ஷ்ரத்தா தாசும் (Shraddha Das) பயணித்தது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தில் கோளாறு உடனடியாக சரி செய்யப்படாததால், மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
- 1 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
- அடையாள விபரங்கள் சரி பார்க்கப்பட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் மையக் கணினியிலிருந்து சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்படும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ஈரோடு மற்றும் தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் கோபிச்செட்டிப் பாளையம், சத்தியமங்கலம், துறையூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடங்கள், 3 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் அரகண்டநல்லூர் மற்றும் சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இதில் ஈரோடு மாநில வரிக் கோட்டத்திற்குட்பட்ட இணை ஆணையர் வரி விதிப்பு மற்றும் நுண்ணறிவு கோட்ட அலுவலகம், சேவை மற்றும் சரக்கு வரி மேல் முறையீட்டு அலுவலகம், உதவி ஆணையர், திண்டல், பெருந்துறை மற்றும் சென்னிமலை வரிவிதிப்பு வட்ட அலுவலகங்கள் என மொத்தம் 6 அலுவலகங் களுக்கு ஈரோட்டில் அலுவலகக் கட்டிடம், சத்தியமங்கலம், கோபிச் செட்டிபாளையத்தில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், துறையூர், புதுக்கோட்டையில் வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், துணை ஆணையர், தூத்துக்குடி சரக அலுவலகம், உதவி ஆணையர், தூத்துக்குடி-1, 2 மற்றும் 3 ஆகிய வரிவிதிப்பு வட்ட அலுவலகங்கள் என மொத்தம் 4 அலுவலகங்களுக்கு தூத்துக்குடியில் 4 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள் என மொத்தம் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வரித்துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அரகண்டநல்லூரில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவிலும், பழனி பதிவு மாவட்டத்தில், சத்திரப்பட்டி யில், 1 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
சார்பதிவாளர் அலுவலகங்களில் 1865-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 10 கோடி ஆவணங்களின் சான்றிட்ட நகலை இணைய வழியாக பெறும் சேவையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பதிவுத்துறை தொடங்கப்பட்டதிலிருந்து பதிவு செய்யப்பட்ட 10 கோடி ஆவணங்கள் தற்போது ஒளிவருடல் செய்யப்பட்டு மையக் கணினியில் சேமிக்கப்பட்டுள்ளன. சொத்து தொடர்பான (உயில், டிரஸ்ட், இதர ஆவணங்களை தவிர்த்து) எந்த ஆவணத்திற்கும் இணைய வழியில் விண்ணப்பிக்கவும், தேவையான கட்டணங்களை இணையவழியிலேயே செலுத்தி பொதுமக்கள் பெற்றிட வசதி செய்யப்பட்டுள்ளது.
ஒளிவருடல் செய்யப் பட்ட ஆவணங்களை சேமிப்பதற்கும், அதிவிரைவாக மின்னணு கையொப்பமிட்ட சான்றிட்ட நகல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் ஏதுவாக, அதிவிரைவு சேமிப்பு கலன்கள் 31 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டு ஆவண நகல்கள் சேமிக்கப்பட்டுள்ளன.
மின்னணு கையொப்பமிட்ட சான்றிட்ட நகல்களை பொதுமக்கள் https://tnreginet.gov.in என்ற இணையவழியாக பெறும் சேவையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
உயில், டிரஸ்ட் ஆவணங்களின் நகல்கள் சரியான நபருக்கு அவரின் அடையாள விபரங்கள் சரி பார்க்கப்பட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் மையக் கணினியிலிருந்து சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்படும்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், பொதுமக்கள் சொத்து தொடர்பான எந்த ஒரு சான்றிட்ட நகலுக்காகவும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. 1865-ம் ஆண்டு முதல் பதிவுசெய்யப்பட்ட 10 கோடி ஆவணங்களின் நகல்கள் உலகின் எந்த மூலையில் உள்ள பொது மக்களுக்கும் கிடைக்கும் வண்ணம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பதிவுத்துறையின் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தற்போதுள்ள மூன்று இணையநெறிமுறை புகைப்படக்கருவிகளுடன், 6 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் சார்பதிவகங்களில் உள்ள பதிவறைகளில் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ள இரண்டு இணைய நெறி முறை புகைப்படக் கருவிகளின் பயன்பாட்டினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, வணிக வரி ஆணையர் முனைவர் டி.ஜகந்நாதன், பதிவுத் துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கருணை அடிப்படையில் அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
- தமிழகத்தின் வளர்ச்சியை கிராமம் முதல் நகரம் வரை சீராக திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு பகுதியில் இயங்கி வந்த பஸ் நிலையத்தை இடித்து புதிய நவீன பஸ் நிலையமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டும் பணி 2018-ம் ஆண்டு தொடங்கியது.
நீதிமன்ற வழக்குகள், கொரோனா காலக்கட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டுமான பணிகள் தாமதமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பஸ் நிலைய பணிகள் ரூ.85½ கோடியில் முழுமையாக முடிந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது.
மேலும் நெல்லை மாவட் டத்தில் ரூ.436 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
விழாவில் தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.85½ கோடியில் கட்டி முடிக்கப்பட்ட சந்திப்பு பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
பின்னர் பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் கருணை அடிப்படையில் அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து ரூ.572 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரையாற்றினார். கலெக்டர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு திட்ட விளக்கவுரையாற்றினார்.
விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ. 85.56 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நமது ஆட்சியில் விளையாட்டுத்துறை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து உள்ளது. தற்போது விளையாட்டு துறை சார்பில் டார்லிங் நகரில் ரூ.6.50 கோடியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சியை கிராமம் முதல் நகரம் வரை சீராக திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளம் நெல்லையை புரட்டி போட்டது. மழை வெள்ளத்தால் இந்த பஸ் நிலையம் பாதிக்கப்பட்டது. இரவோடு இரவாக மழை வெள்ள பாதிப்புகளை மேற்கொள்ள அனைத்து அரசு அதிகாரிகளையும் முதல்வர் முடுக்கிவிட்டார்.
சேலம் மாநாட்டை ரத்து செய்து இங்கேயே அமைச்சர்களும் நானும் 3 நாட்களாக தங்கி இருந்து மீட்பு பணியில் ஈடுபட்டோம்.
இன்று பல்வேறு நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு தமிழகம் ரூ. 6 லட்சம் கோடியை கொடுத்த நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு 1.5 லட்சம் கோடியை மட்டுமே தந்துள்ளது.
ஒரு ரூபாய்க்கு மத்திய அரசு 28 பைசா மட்டுமே திருப்பி தருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தராத நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.
நிகழ் காலத்தில் மட்டு மல்ல எதிர்காலத்திற்கு தேவையான அனைத்தையும் தொலைநோக்கு திட்டத் தோடு முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
சென்னையில் இருப்பது நெல்லையிலும் இருக்க வேண்டும்,நெல்லையில் இருப்பது தென்காசியில் கிடைக்கவேண்டும்.

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். தி.மு.க. அரசு நெல்லையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் நன்றி கூறினார்.
பஸ் நிலையம் திறப்பு விழாவையொட்டி சுற்றிலும் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டிருந்தது. நுழைவு வாயில்களில் வாழை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.
நெல்லை நகர மக்கள் நீண்ட நாட்களாக எதிர் பார்த்து இருந்த சந்திப்பு பஸ் நிலையம் இன்று திறக்கப்பட்டதால் வியாபாரிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்த னர்.
பஸ் நிலைய நடை பாதைகள் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள நமது நெல்லை செல்பி பாயிண்ட் முன்பு நின்று பொதுமக்கள் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
- 3 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.
- பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் அவர் கலந்து ஆலோசிக்கிறார்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. கூட்டணியில் எந்த தொகுதியை கமல்ஹாசனுக்கு ஒதுக்கி கொடுப்பது என்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.
தென் சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஒரு தொகுதி கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் கூட்டணியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களை குறைந்தது, 3 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.
தற்போது வெளிநாட்டில் உள்ள கமல்ஹாசன் இன்று இரவு சென்னை திரும்புகிறார். வருகிற 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. அன்று கட்சி அலுவலகத்துக்கு சென்று கமல்ஹாசன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் அவர் கலந்து ஆலோசிக்கிறார்.
கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரான அருணாச்சலம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'மக்கள் நலன் ஒன்றே தனது கொள்கை, அதுவே நாளைய உலகின் நவீன சித்தாந்தம்' என்று முழங்கி நம்மவர் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய நாள் பிப்ரவரி 21.
வரும் பிப்ரவரி 21-ந் தேதி நமது மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு துவக்க நாளாகும். அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் அன்று நம்மவர் காலை 10 மணியளவில், நமது தலைமை நிலையத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார்.
அந்த சீர்மிகு நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகி கள், உறுப்பினர்கள், நம்ம வர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தாய்மொழி தினத்தில் (பிப்ரவரி 21) பிறந்த மக்கள் நீதி மய்யம் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வெல்லும்! வரலாறு அதைச் சொல்லும்!!
வாருங்கள்! ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம். நாடாளுமன்றத்தில் நம்மவர்
இவ்வாறு அதில் கூறப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'டார்ச்' லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளில் ஒன்றே கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே கமல்ஹாசன் கை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
- மழைவெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலம் கடந்த 2016, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சேதமடைந்தது.
- தரைப்பாலம் ஒவ்வொரு முறை சேதம் அடையும் போது தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே– கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சத்தரை ஊராட்சி. இப்பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
இந்த பாலத்தை பயன்படுத்தி கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், தண்டலம், அரக்கோணம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்துக்கு முக்கிய தரைப்பாலமாகவும் உள்ளது.
மழைவெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலம் கடந்த 2016, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சேதமடைந்தது. பின்னர் தரைப்பாலம் சீரமைக்கப்பட்டது.
ஒவ்வொரு முறை தரைப்பாலம் சேதம் அடையும் போதும் அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தரைப்பாலம் தற்காலிகமாக மட்டுமே சீரமைக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் போதும் கூவம் ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் 4-வது முறையாக சேதமடைந்தது. இதனால் இவ்வழியே அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றி உள்ள கிராமஙகளைச் சேர்ந்தவர்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.
ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிய மேம்பாலம் கட்ட ரூ. 20 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு அனுப்பப்பட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் இதில் இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இதனால் கூவம் ஆற்றின் குறுக்கே எந்த திட்டத்தில் பாலப்பணிகள் தொடங்கு வது என்ற குழப்பத்தில் சீரமைக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் பொது மக்களின் வேண்டுகோளின்படி அவசர தேவை பயன்பாட்டுக்காக கூவம் ஆற்றில் தற்போது 4 -வது முறையாக சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து தற்காலிக பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, தரைப்பாலம் ஒவ்வொரு முறை சேதம் அடையும் போது தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது.
அந்த இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- ஆவடி ரெயில் நிலையத்தில் இன்று காலையில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பஸ்களில் ஏறி பயணம் செய்தனர்.
ஆவடி:
சென்னை ஆவடி ரெயில் நிலையத்தில் பழைய நடைபாதை மேம்பாலம் உள்ளது. இந்த நடை மேம்பாலத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணிகள் நேற்று இரவு நடந்தது. இந்த பணிகள் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 4.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக சென்னை சென்ட்ரல், திருவள்ளூர், அரக்கோணம் இடையே இரவு நேரத்தில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆவடி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு நடைபாதை மேம்பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியது. இதையடுத்து நேற்று இரவில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ஆனால் இன்று அதிகாலை 4.30 மணிக்கு முடிய வேண்டிய பணிகளில் திடீரென்று காலதாமதம் ஏற்பட்டது. இதனால் காலை 6.30 மணி வரை பணிகள் நடந்தன. இதையடுத்து இன்று காலை 6.30 மணி வரை ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக காலை நேரத்தில் ரெயில் நிலையங்களுக்கு வந்த பயணிகள் தவித்தனர். குறிப்பாக ஆவடி ரெயில் நிலையத்தில் இன்று காலை யில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
காலை 6.30 மணிக்கு பிறகு அரக்கோணம் மற்றும் திரு வள்ளூரில் இருந்த சென்ட்ர லுக்கு வரும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் பாதை யில் இயக்கப்பட்டதால் பட்டாபிராமில் இருந்து பட்டரவாக்கம் வரை இடை யில் உள்ள எந்த ரெயில் நிலையங்களிலும் ரெயில்கள் நிறுத்தப்படவில்லை.
இதன் காரணமாக இந்த ரெயில் நிலையங்களில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த மார்க்கத்தில் வந்த ரெயில்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்குள் வர அனுமதிக்கப்பட்டன. இதனால் சென்ட்ரலில் இருந்து திரு வள்ளூர் மார்க்கத்தில் இன்று காலையில் செல்லும் 4 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்ட்ரலில் இருந்து இன்று அதிகாலை 5.20 மணிக்கு நெல்லூர் செல்லும் ரெயில், 5.40 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரெயில், 6.15 மற்றும் 6.20 மணிக்கு பட்டாபிராம் செல்லும் ரெயில்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும் இன்று காலையில் பயணிகள் தவித்தனர்.
ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பஸ்களில் ஏறி பயணம் செய்தனர். அதன் பிறகு ரெயில் போக்குவரத்து தொடங்கினாலும் பயணிகள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது. காலை 8 மணிக்கு பிறகு நிலைமை சீரடைந்தது. இதற்கிடையே ஆவடி ரெயில் நிலையத்தில் நடை பாதை மேம்பாலத்தை இடித்து அப்புறப்படுத்துவதில் மீதமுள்ள பணிகள் இன்று இரவு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதாக கருதிய ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
- இருவேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை நேற்று முன்தினம் ஊருக்குள் புகுந்து தேர்பேட்டை டி.ஜி தொட்டி பகுதியில் குடியிருப்பு தெருக்களில் வழியாக உலா வந்தது.
இதை பார்த்த மக்கள் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஒளிந்து கொண்டனர். இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே தேன்கனிக்கோட்டை வன ஊழியர்கள் விரைந்து வந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானையை பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் அதிக ஒலி எழுப்பியும் காட்டுப் பகுதிக்கு விரட்டியடித்தனர்.
இதனால் ஒற்றை யானை வனப்பகுதிக்கு சென்றதாக நினைத்து கொண்ட தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் பொதுமக்கள் வழக்கம் போல் காலையில் எழுந்து தோட்ட வேலையில் ஈடுபட்டு வந்தனர்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி வசந்தம்மா (வயது33) கூலித்தொழிலாளியான இவர் இன்று அதிகாலை தோட்ட வேலைக்கு செல்வதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தார்.
அப்போது அங்கு வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதாக கருதிய ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
இதனை கண்ட வசந்தம்மா அங்கிருந்து தப்பி ஒட முயன்றார். இதனை கண்ட அந்த ஒற்றை யானை வசந்தம்மா தூக்கி வீசி தாக்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் வசந்தம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த யானையை விரட்டியடித்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த ஒற்றை யானை அங்கிருந்து புறப்பட்டு தளி அருகே உள்ள தாசர்பள்ளி அருகே சென்றது. அங்கு அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வந்தம்மா என்ற கூலித் தொழிலாளி இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டை வெளியே வந்தார். அப்போது அவரை யானை தாக்கியது. இதில் அஸ்வந்தம்மாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேன்கனிக்கோட்டையில் ஒற்றை யானை அடுத்தடுத்து 2 பெண்களை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீப் போல் பரவியது.
வசந்தம்மாவின் உறவினர்கள் மற்றும் அன்னி யாளம் கிராம பொதுமக்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சோதனை சாவடி முன்பும், தாசர்பள்ளி கிராம மக்கள் அதே பகுதியிலும் திடீரென்று திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இருவேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் வனத்துறையினர் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடவேண்டும் என்றும், யானை தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும் என்பன கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்து அந்தந்த பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று மறியலில் ஈடுபட்டு வருபவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதன்காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.
- நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சி குறித்த அறிவிப்பை கடந்த 2-ம் தேதி அறிவித்தார்.
- தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்றார்.
சென்னை:
நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2-ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, கட்சி பெயரில், 'க்' விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக்காட்டிய நிலையில், கட்சியின் பெயரில் 'க்' சேர்த்து 'தமிழக வெற்றிக் கழகம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024, திங்கட்கிழமை) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. நமது கழகத்தின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கால்நடை மருத்துவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
- காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, அண்டா, கட்டில், தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டி ஏழை காத்த அம்மன், வல்லடிகார சுவாமி கோவில் திருவிழாவையொட்டி வருடம் தோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது.
இணையதளம் வழியாக தேனி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், சேலம், கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதியில் இருந்து 4500 காளைகள், 2100 மாடு பிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். தகுதி அடிப்படையில் காளைகள் மற்றும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி 720 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதே போல் கால்நடை மருத்துவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
பின்னர் ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளையை யாரும் பிடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்தன.
இதனை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் போக்கு காட்டியது. அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, அண்டா, கட்டில், தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
இதே போல் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர். முன்னதாக உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரி சின்னமனூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
- வைத்தீஸ்வரன்கோயிலில் பிரசித்திப்பெற்ற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது.
- சுவாமி சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு செய்து எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பிரசித்திப்பெற்ற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் செல்வ முத்துக்குமாரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி சித்தர் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.
சிறப்பு பெற்ற இக்கோயிலுக்கு முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை புரிந்தார்.
முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் கட்டளை தந்திரம் ஸ்ரீமத் திருநாவுக்கரசு சுவாமிகள், சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து கற்பக விநாயகர், வைத்தியநாதர்சுவாமி, செல்வ முத்துக்குமார சுவாமி, தையல்நாயகி அம்மன், அங்காரகன் ஆகிய சுவாமி சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு செய்து எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல். ஏ, அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ்மற்றும் ஏராளமான அதிமுகவினர்கள் உடன் இருந்தனர்.






