search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கமல்ஹாசன் 21-ந் தேதி முக்கிய ஆலோசனை: கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்பு
    X

    கமல்ஹாசன் 21-ந் தேதி முக்கிய ஆலோசனை: கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்பு

    • 3 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.
    • பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் அவர் கலந்து ஆலோசிக்கிறார்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. கூட்டணியில் எந்த தொகுதியை கமல்ஹாசனுக்கு ஒதுக்கி கொடுப்பது என்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

    தென் சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஒரு தொகுதி கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் கூட்டணியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களை குறைந்தது, 3 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.

    தற்போது வெளிநாட்டில் உள்ள கமல்ஹாசன் இன்று இரவு சென்னை திரும்புகிறார். வருகிற 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. அன்று கட்சி அலுவலகத்துக்கு சென்று கமல்ஹாசன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் அவர் கலந்து ஆலோசிக்கிறார்.

    கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரான அருணாச்சலம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    'மக்கள் நலன் ஒன்றே தனது கொள்கை, அதுவே நாளைய உலகின் நவீன சித்தாந்தம்' என்று முழங்கி நம்மவர் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய நாள் பிப்ரவரி 21.

    வரும் பிப்ரவரி 21-ந் தேதி நமது மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு துவக்க நாளாகும். அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் அன்று நம்மவர் காலை 10 மணியளவில், நமது தலைமை நிலையத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார்.

    அந்த சீர்மிகு நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகி கள், உறுப்பினர்கள், நம்ம வர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    தாய்மொழி தினத்தில் (பிப்ரவரி 21) பிறந்த மக்கள் நீதி மய்யம் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வெல்லும்! வரலாறு அதைச் சொல்லும்!!

    வாருங்கள்! ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம். நாடாளுமன்றத்தில் நம்மவர்

    இவ்வாறு அதில் கூறப்படுகிறது.

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'டார்ச்' லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளில் ஒன்றே கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே கமல்ஹாசன் கை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×