search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijayatharani"

    • காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.
    • தி.மு.க. கூட்டணியில் கடந்த தேர்தலை விட குறைவான எம்.பி. தொகுதிகளே காங்கிரசுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை என தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி முதல் கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில் தமிழக காங்கிரசில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடீர் அதிரடி மாற்றங்கள் புயலை கிளப்பியுள்ளன.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக 3 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த கே.எஸ்.அழகிரி தேர்தல் நேரத்தில் மாற்றப்பட மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அவரை மாற்றி விட்டு புதிய தலைவராக செல்வபெருந்தகையை நியமனம் செய்துள்ளது.

    இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி, காங்கிரஸ் தலைமைக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார்.

    பாரதிய ஜனதா கட்சியில் விஜயதாரணி சேரப்போவதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த செய்திகளை மறுக்காமல் டெல்லியிலேயே முகாமிட்டுள்ள அவர் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் சேர உள்ளார். அதற்கான காய்களை அவர் நகர்த்தி வருகிறார்.

    இது தொடர்பாகவும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டது பற்றியும் விஜயதாரணி எம்.எல்.ஏ. இன்று மாலைமலர் நிருபருக்கு தொலைபேசி வழியாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விளவங்கோடு தொகுதியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளேன்.தொகுதி மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். குமரி மாவட்டத்தில் விளவங்கோடு தொகுதி முன் மாதிரியான தொகுதியாக விளங்கி வருகிறது.

    தொகுதி மக்களுக்காக தொடர்ந்து நான் பாடுபட்டு வருகிறேன். காங்கிரஸ் கட்சிக்காக முழு மூச்சுடன் உழைத்துள்ளேன்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியில் உழைப்புக்கு மரியாதை கிடைக்கவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற தொகுதி தலைவராக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் நியமனம் செய்யப்படும் போது எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

    ஆனால் எம்.எல்.ஏ.க்களிடம் கேட்காமலேயே ஆலோசனை செய்யாமல் ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.

    பெண் என்பதால் என்னை தொடர்ந்து புறக்க ணித்து வருகிறார்கள். நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக பேசப்பட்டு வருகிறது. எனது முடிவை விரைவில் முறைப்படி அறிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக சட்டசபையில் 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் விஜயதாரணியை போன்று மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களும் விரைவில் கட்சி மாறலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் கடந்த தேர்தலை விட குறைவான எம்.பி. தொகுதிகளே காங்கிரசுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தற்போது எம்.பி.யாக உள்ள சிலர் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் எம்.பி.க்கள் சிலரும் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்ப தாகவும் தெரிகிறது.

    எனவே தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை முடிந்து காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகும் போது எம்.பி.க்கள் சிலரும் பாரதிய ஜனதா பக்கம் சாயலாம் என்றும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பாராளுமன்ற தேர்தல் களம் பரபரப்பான கட் டத்தை எட்டியிருக்கும் நிலையில் தமிழக காங்கிரசில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் புகைச்சல் கட்சியினர் மத்தியிலும் தேர்தல் களத்திலும் சூட்டை கிளப்பி இருக்கிறது.

    ×