என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம். தமிழ்நாட்டோட நலன் முக்கியம்.
    • நாட்டோட எதிர்காலம் தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் களத்தில் தமிழகம் இன்று காலை முதல் பரபரப்பின் உச்சத்தில் உள்ளது. முதலில் 16 பேர் கொண்ட அ.தி.மு.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்பிறகு புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

    அடுத்ததாக, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. தேர்தல் அறிக்கை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

    இதனை அடுத்து, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. அப்போது பேசிய மு.க.ஸ்டாலின்,

    * ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு குறைந்தாலும் மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பு அமைச்சர் தான் பொறுப்பு.

    * எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

    * தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம். தமிழ்நாட்டோட நலன் முக்கியம்.

    * நாட்டோட எதிர்காலம் தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும்.

    * வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அரவணைத்து அழைத்து சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்.

    * தேர்தலுக்குப் பிறகு ஒன்றிய- நகரம்- பகுதி- பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை எடுக்கப் போகிறேன் எனக் கூறினார்.

    • தூத்துக்குடி புதிய பஸ்நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரியவில்லை.
    • குழந்தையை தூத்துக்குடி குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    தூத்துக்குடி:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் சந்தியா (வயது34). இவர் தூத்துக்குடி பகுதியில் சுற்றித்திரிந்து யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். கடந்த 8-ந் தேதி இரவு சந்தியா தனது 4 மாத பெண் குழந்தையுடன் சாலையோரம் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அவரது குழந்தையை மர்மநபர்கள் கடத்தி சென்றனர்.

    இது தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் 150 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் குழந்தையை கடத்தியது ஆலங்குளம் அண்ணாநகர் தெருவை சேர்ந்த சாமி என்ற கருப்பசாமி (47), ஆலங்குளம் கரும்பனூரை சேர்ந்த ராஜன் என்ற ராஜா (53) என்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் சந்தியாவின் குழந்தை தவிர மேலும் 3 குழந்தைகளை கடத்தியது தெரியவந்தது. இவர்கள் ஆதரவற்ற நிலையில் சாலையோரம் மற்றும் திருவிழாவிற்கு வந்தவர்களை கண்டறிந்து அவர்களின் குழந்தைகளை கடத்தி, குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

    அதற்காக அவர்கள் முன்கூட்டியே ஆலங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் குழந்தைகள் இல்லாத தம்பதிகளை அடையாளம் கண்டறிந்துள்ளனர். பின்னர் குழந்தையை கடத்திச் சென்று, இந்த குழந்தை மலைப்பகுதியை சேர்ந்தவர்களின் குழந்தை. அவர்களால் குழந்தையை வளர்க்க முடியாததால், கொடுப்பதாக கூறி விற்பனை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து கடத்தப்பட்ட 4 குழந்தைகளையும் அவர்கள் மீட்டனர்.

    இதில் சந்தியாவின் குழந்தை மற்றும் திருச்செந்தூர் மற்றும் குலசேகரன்பட்டினத்தில் கடத்தப்பட்ட 3 குழந்தைகளை பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தூத்துக்குடி புதிய பஸ்நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரியவில்லை. அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்த குழந்தையை தூத்துக்குடி குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட 2 பேர் மீது சிறார் குற்ற தடுப்பு சட்டம் 80, 81, 84 மற்றும் இந்திய தண்டனை சட்டம் 363 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கருப்பசாமிக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்கள் பிரேம் ஆனந்த், ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு உள்ளிட்ட தனிப்படையினரை நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

    • தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்களுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
    • 86 மீனவர்களையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்து தூத்துக்குடி துறைமுக பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிகளில் கேரளாவை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மன்னார் வளைகுடா பகுதியில் தங்கி மீன்பிடித்து வருவதை கண்டித்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்களுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை தூத்துக்குடி ஆழ்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கேரளாவை சேர்ந்த ஒரு படகு மற்றும் குளச்சலை சேர்ந்த 5 படகு உட்பட 6 படகுகளையும், அதில் இருந்த 86 மீனவர்களையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறை பிடித்து தூத்துக்குடி துறைமுக பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

    மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் மற்றும் சிறைபிடிப்பு சம்பவத்தால் தூத்துக்குடியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • மத்திய மந்திரி ஷோபா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் வலியுறுத்தி இருந்தார்.
    • தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியது தொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுவை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள் என்று மத்திய மந்திரி ஷோபா பேசினார். பா.ஜனதா சார்பில் பெங்களூரில் நடந்த போராட்டத்தின் போது அவர் இந்த சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார்.

    அவரது இந்த கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மத்திய மந்திரி ஷோபா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் சமூக வலைதள பதிவில் வலியுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் இன்று தி.மு.க. புகார் அளித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியது தொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளார்.

    • அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
    • குடியுரிமைத் திருத்தச் சட்டம்' (CAA-2019) ரத்து செய்யப்படும்.

    திமுக மக்களை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. இதில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள மக்களின் பேராதரவுடன் மத்தியத்தில் 'இந்தியா' கூட்டணி அரசு நிறுவப்பட்டபின் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் என தலைப்பில் கீழ்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.

    1. இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கிகளில் பெற்றிருக்கும் கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்படும்.

    3. அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.

    4. மாநில முதலமைச்சர்களை கொண்ட மாநில வளர்ச்சிக்குழு அமைக்கப்படும்.

    5. பா.ஜ.க அரசால்கலைக்கப்பட்ட மத்திய திட்டக்குழு மீண்டும் அமைக்கப்பட்டு நாடு முழுமையிலும், மாநில அரசுகளின் கோரிக்கையின் அடிப்படையில் திட்டங்கள் வகுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போதுள்ள நிதி ஆயோக் கலைக்கப்படும்.

    6. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

    7. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

    8. தொழில் மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள் கான்கிரீட் சாலைகளாக விரிவுபடுத்தப்பட்டு, போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்.

    9. பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் நியமனத்தை, இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கமே மேற்கொள்ளும்வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

    10. குடியுரிமைத் திருத்தச் சட்டம்' (CAA-2019) ரத்து செய்யப்படும்.

    11. கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு ஜி.பி. அளவில் கட்டணமற்ற 'இலவச சிம் கார்டு' வழங்கப்படும்.

    12. மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்.

    13. வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.

    14. மத்திய திட்டக் குழுவைப்போல, மத்திய நிதிக் குழுவும் நிரந்தர குழுவாக அமைக்கப்படும்.

    15. வசூலிக்கப்படும் கூடுதல் வரி செலவிடப்படும் முறை வெளிப்படைத் தன்மையுடன் இருப்பது உறுதி செய்யப்படும்.

    16. கண்காணிப்பு அமைப்புகளின் நியமனங்கள் ஒரு நியமனக் குழுவால் நியமிக்கப்படுவர். இக்குழுவில் 50 சதவிகித உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.

    17. அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மத்திய அரசால் நிறுவப்பட்டு, தரமான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும்.

    18. அந்நிய ஆக்கிரமிப்புத் தாவரங்களைக் களையெடுக்க நிதியுதவி செய்ய மத்திய அளவில் நிதியம் ஒன்று உருவாக்கப்படும்.

    20. இந்தியாவில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும்.

    21. இந்தியாவில் உள்ள முக்கிய புனிதத் தலங்களுக்குப் பயணிகள் வர வசதியாக அந்தந்த ஊர்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    22. இந்தியாவில் ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell) மொழி ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும்.

    23. மேல் வரியை (CESS) மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப் பரிந்துரைக்கப்படும். மாநில அரசிடமிருந்து பெறப்படும் நிதியில் 42% முதல் 50% வரிப் பங்கீடு மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்க நிதிக் குழுமம் மூலம் பரிந்துரைக்கப்படும்.

    24. பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் இணைய 2 ஆண்டுகள் காத்திருப்புக் காலமாக அறிவித்து புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.

    25. இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்கள் குடியுரிமை பெற வழிவகுக்கப்படும்.

    26. கச்சத்தீவு மீட்பு: கச்சத்தீவில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில், குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைந்திருப்பதால், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் மீனவர்களின் நலன் காக்கப்படவும், கச்சத்தீவை மீட்க வழிவகை செய்யப்படும்.

    27. இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும். அந்த மாநில சட்டமன்றத்திற்கு உடனடியாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படும். மேலும், காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

    28. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இந்திய அரசின் திட்டம் கைவிடப்படும். மேலும், மக்களவை தொகுதி உறுப்பினர் எண்ணிக்கையில் தற்போதைய நடைமுறையே (1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு) பின்தொடர ஆவன செய்யப்படும்.

    29. இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரையில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற தன்மை நிலைநாட்டப்பட பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாமல் கடுமையாகத் தடுக்கப்படும்.

    30. யுபிஎஸ்சி தேர்வு கமிட்டியில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் குழு அமைக்கப்படும்.

    31. இந்தியாவில் எமர்ஜென்ஸி காலகட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரம் மாநில பட்டியலில் இருந்து, பொதுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப்பட்டன. அவை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்படும்.

    32 கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களும் இந்தியா கூட்டணி அரசு பொறுப்பேற்ற உடன் மறுபரிசீலனை செய்யப்படும்.

    33. மாநிலக் கல்வி நிறுவனங்களின் மீது திணிக்கப்படும் மத்திய அரசின் அனைத்துப் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படும்.

    34. புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 முற்றிலும் அகற்றப்படும்.

    35. நிதிக்குழுவின் அமைப்பு, ஆய்வு விதிகள் ஆகியன மாநிலங்களுக்கான மன்றத்தில் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.

    36. FRBM Act - நிதியியல் பொறுப்பு -வரவு செலவு மேலாண்மை சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய நிபந்தனைகளை நிராகரிக்க வழிவகை செய்யப்படும்.

    37. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் 33% மகளிர் இட ஒதுக்கீடு உடனடியாகச் செயல்படுத்தப்படும்.

    38. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சமூக நீதி அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்படும்.

    39. வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள்/இளைஞர்களுக்குத் தேவையான திறன் மேம்பாடு, மொழி அறிவு, உள்ளூர்ப் பிரச்சனைகளைச் சமாளிக்கும் வழிகாட்டல் ஆகியவற்றை மத்திய அரசே அளிக்கும். நாடு திரும்பும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்குத் தேவையான கடனுதவிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

    40. MSME-க்கான வருமான வரிச் சட்டம் 43(h) பிரிவு நீக்கப்படும்.

    41. மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு நிதி இரட்டிப்பாக்கப்படும்.

    42. பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அரசாங்கம் பங்குகளை விலக்கிக் கொள்வது முற்றிலுமாக நிறுத்தப்படும்.

    43. மாணவ- மாணவிகள் நலன் கருதி இந்தியா முழுவதும் நான் முதல்வன்- புதுமைப் பெண் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

    44. தேசிய அளவில் ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்டம் கொண்டுவரப்படும்.

    45. அதிக மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு திட்டம் உருவாக்கப்படும்.

    46. தமிழ்நாட்டில் மத்தியப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.

    47. பெட்ரோல் ரூபாய் 75 க்கும் - டீசல் ரூபாய் 65 க்கும்- கேஸ் ரூபாய் 500 க்கும் வழங்கப்படும்.

    • வருகிற 22-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
    • 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இடம்பெறவில்லை.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டு இருந்தார். மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்து ஆனது.

    இதனிடையே விருதுநகர், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, மத்திய சென்னை ஆகிய 5 தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்து ஆகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகிறது. வருகிற 22-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. அன்றே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக வெளியிடப்பட்ட 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இடம்பெறவில்லை. அதனால் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நத்தம் வேம்பரளியில் தேர்தல் பறக்கும்படை சார்பில் இன்று சோதனை நடத்தப்பட்டு வந்தது.
    • மதுரையில் இருந்து நத்தம் நோக்கி காரில் வந்த ஒரு நபரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    நத்தம்:

    திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு தேர்தல் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் கொண்டு வருபவர்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நத்தம் வேம்பரளியில் தேர்தல் பறக்கும்படை சார்பில் இன்று சோதனை நடத்தப்பட்டு வந்தது. அப்போது மதுரையில் இருந்து நத்தம் நோக்கி காரில் வந்த ஒரு நபரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அந்த காரில் ரூ.1,27,780 பணம் இருந்தது. அந்த பணத்துக்கான ஆவணங்கள் இல்லை. மதுரை கடச்சநேந்தலைச் சேர்ந்த மாரிமுத்து என்ற அந்த நபர்தான் ஒரு காய்கறி வியாபாரி என்றும் மொத்தமாக மதுரையில் இருந்து காய்கறிகள் வாங்கி விற்று வருவதாகவும் தெரிவித்தார். இருந்தபோதும் அதனை ஏற்க மறுத்த அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுச் செல்லுமாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தேசிய காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனைக்கு பிறகு இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியிடப்படும்.
    • ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் பெயரை பரிந்துரை செய்துள்ளோம்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழக காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

    இந்நிலையில், தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியிடப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    மேலும் செல்வப்பெருந்தகை கூறியதாவது:- தேசிய காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனைக்கு பிறகு இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியிடப்படும். ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் பெயரை பரிந்துரை செய்துள்ளோம் என்றார்.

    • பா.ஜனதா கட்சியின் தலைவராக இருந்து பின்னர் கவர்னராக மாறி தற்போது தொண்டராக இங்கு வந்துள்ளேன்.
    • நான் நான்கரை ஆண்டுகளில் 4 முதலமைச்சர்களோடு இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.

    சென்னை:

    தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் பதவியை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் முழுநேர அரசியலுக்கு திரும்பி இருக்கிறார்.

    பாராளுமன்றத் தேர்தலில் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கான பூர்வாங்க வேலைகளை டாக்டர் தமிழிசை தொடங்கிவிட்டார்.

    கவர்னர் ஆவதற்கு முன்பு பா.ஜனதா கட்சியில் இருந்து விலகினார். மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டுமென்றால் கட்சியில் இணைந்து அடிப்படை உறுப்பினர் ஆக வேண்டும். அதற்காக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தி.நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்துக்கு சென்றார்.அங்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரிகள் கிஷன்ரெட்டி, எல்.முருகன் மற்றும் மூத்த நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.

    பின்னர் கட்சியில் இணைவதற்கான உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை அண்ணாமலை வழங்கினார்.

    பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜனதா கட்சியின் தலைவராக இருந்து பின்னர் கவர்னராக மாறி தற்போது தொண்டராக இங்கு வந்துள்ளேன். இன்று ஒரு மகிழ்ச்சியான நாள். கஷ்டமாக ஒரு முடிவை எடுத்திருக்கிறேன் என்று அண்ணாமலை சொன்னார். கஷ்டமான முடிவை இஷ்டமான முடிவாக எடுத்திருக்கிறேன். பா.ஜனதாவில் 400 பாராளுமன்ற உறுப்பினர்களோடு நானும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்று இணைந்திருக்கிறேன். எனது உணர்வு முழுவதும் கமலாலயத்தில் தான் இருக்கிறது. ராஜ பவனங்களை விட்டு மக்கள் பவனமான கமலாலயத்தில் நுழைந்த நிகழ்வுக்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். ஆண்டவர் எனக்கு ஆசீர்வதித்தார். ஆண்டு கொண்டிருப்பவர் எனக்கு அனுமதி கொடுத்தார். எனவே இந்த கமலாலயத்துக்கு வந்திருக்கிறேன். மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற வார்த்தையை 7 ஆண்டுகளுக்கு முன்பு மாநாட்டுக்கு பிரதமர்மோடி வந்தபோது நான் சொன்னேன். இப்போது வேண்டும் மோடி, மீண்டும் மீண்டும் மீண்டும் மோடி என்ற வாசகத்தோடு இங்கு இணைந்திருக்கிறேன்.

    கவர்னர் பதவியை விட்டு விட்டு வந்து விட்டேனே என்று 1 சதவீதம் கூட தோன்றவில்லை. அந்த பதவியை விட பா.ஜனதா கட்சியின் சாமானிய உறுப்பினர் என்ற பதவியை தான் நான் மிகப் பெரிய பதவியாக கருதுகிறேன். நான் நான்கரை ஆண்டுகளில் 4 முதலமைச்சர்களோடு இணைந்து பணியாற்றி இருக்கிறேன். 2 பொதுத்தேர்தல்களை சந்தித்திருக்கிறேன். ஆளுனர் ஆட்சியை புதுச்சேரியில் நடத்தி இருக்கிறேன். இது பா.ஜனதா கட்சி எனக்கு கொடுத்த அனுபவங்கள். எனவே மீண்டும் உங்கள் சகோதரியாக, உங்கள் அக்காவாக இங்கு வந்திருக்கிறேன். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
    • விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செல்லும் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. அதிவேகம் காரணமாக சில சமயங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கேரளாவை சேர்ந்த வாலிபர் மற்றும் இளம்பெண் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இன்று அதிகாலை சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது ஈரோடு மாவட்டம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக, சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர்களை தாண்டி, கோவை நோக்கி செல்லும் சாலையின் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதி நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரும், இளம்பெண்ணும் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் கேரளா மாநிலம் கோத்தப்பாளையம் பகுதியை சேர்ந்த மஞ்சு மனியப்பன் (26) மற்றும் ஹனிசேவியர் (25) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    தூக்க கலக்கத்தில் எதிர்திசையில் உள்ள சாலையின் நடுவே சென்றதால், விபத்து ஏற்பட்டு உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்தவர்களின் முழுவிபரங்கள் குறித்தும், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பள்ளி சீருடையில் மாணவ-மாணவிகளும் நின்று மோடியை வரவேற்றனர்.
    • பள்ளி அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.

    கோவை:

    பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் கோவையில் ரோடு ஷோ மூலம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதில் ஏராளமான பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.

    அவர்களுக்கு மத்தியில் பள்ளி சீருடையில் மாணவ-மாணவிகளும் நின்று மோடியை வரவேற்றனர். இதற்கு தி.மு.க., கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அதனையும் மீறி பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்கச் செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்திலும் புகார்கள் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார்பாடி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    விசாரணையில் பேரணியில் பங்கேற்றது சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் என்பது தெரியவந்தது. கோவை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி புனித அந்தோணியம்மாள் அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் விசாரணை அறிக்கையை அவர் கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.

    இதற்கிடையே குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி அதிகாரிகள் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தனர். அதன்பேரில் தனியார் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்தநிலையில் கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களும் பிரதமர் மோடி நடை பயணத்தில் பங்கேற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்த பள்ளி மாணவர்கள், பள்ளி வேனிலேயே அழைத்துச் செல்லப்பட்டு பேரணியின் போது கலைநிகழ்ச்சி நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்கும் படி மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது. பள்ளி அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.

    • முதல் நாளான நேற்று விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து விருப்ப மனுக்களை வணங்கி விட்டு கட்சியினரிடம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.
    • அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல் நாளான நேற்று விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து விருப்ப மனுக்களை வணங்கி விட்டு கட்சியினரிடம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். விருப்ப மனுவை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் விஜய பிரபாகரன் வழங்கினார்.

    முன்னதாக, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×