என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
    • தமிழகத்தில் தற்போது கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. ஈரோடு பகுதியில் மிக அதிகமாக வெப்பத்தின் தாக்கம் பதிவாகி வந்தது.

    இந்த நிலையில் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் வெப்ப நிலை அதிகரித்தது.

    10-க்கும் மேற்பட்ட நகரங்களில் சராசரியாக 106 டிகிரி வரை வெயில் அடித்தது. கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. நேற்று ஈரோட்டில் அதிகப்பட்சமாக 102.92 டிகிரி வெப்பம் பதிவானது.

    இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு அதாவது நாளை (செவ்வாய்க்கிழமை), முதல் வியாழக்கிழமை வரை வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு நிறுவனம் கூறி உள்ளது. இந்த 3 நாட்களும் கூடுதலாக 5 டிகிரி வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

    எனவே அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக வெயிலில் சென்று விட்டு உடனடியாக குளிர்பானம் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 24 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. இந்த 24 நாட்களும் அதிகபட்ச வெயில் தாக்கம் இருக்கும். எனவே அதற்கு ஏற்ப வெளியூர் பயணங்களை அமைப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கோடை மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது. நேற்று தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் கோடை மழை பெய்தது. வடதமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பரவலாக கோடை மழை காணப்பட்டது.

    விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளம் பகுதியில் நேற்று அதிகபட்சமாக 40 மி.மீ. கோடை மழை பெய்து இருந்தது. வருகிற 20-ந்தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான அளவுக்கு ஆங்காங்கே கோடை மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • தாளூர் தேவாலயத்திற்கு வந்த ராகுல் காந்தி தேவாலயத்தில் இருந்த கூட்டரங்கில் சுமார் 5 நிமிடங்கள் உரையாற்றினார்.
    • ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    தாளூர்:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நீலகிரி மாவட்டம் தாளூர் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

    தாளூர் தேவாலயத்திற்கு வந்த ராகுல் காந்தி தேவாலயத்தில் இருந்த கூட்டரங்கில் சுமார் 5 நிமிடங்கள் உரையாற்றினார்.


     வயநாடு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள செல்லும் வழியில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி வந்தடைந்தார். அவர் வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    • தபால் வாக்குகளை பதிவு செய்வதற்காக 61 ஆயிரத்து 135 போலீசாா் விண்ணப்பித்துள்ளனா்.
    • நாட்டின் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரா்கள் 71 ஆயிரம் போ், ஆன்லைன் மூலம் தபால் வாக்குகளை செலுத்த விண்ணப்பித்துள்ளனா்.

    சென்னை:

    தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாராளுமன்ற தோ்தலை அமைதியாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இன்றியும் நடத்த வசதியாக 190 கம்பெனிகளைச் சோ்ந்த துணை ராணுவப் படையினா் வந்துள்ளனா். மேலும், 10 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்பி வைக்க வேண்டுமெனக் கோரி, இந்திய தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தோ்தல் ஆணையம் முடிவெடுக்கும். கூடுதல் பாதுகாப்பு தேவைக்கு அண்டை மாநிலங்களில் உள்ள போலீசாரை அவா்களுக்குரிய செலவினங்களை ஏற்று, பயன்படுத்திக் கொள்வதற்கு அனைத்து மாநில காவல் துறை இயக்குநா்களுக்கும் தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

    தபால் வாக்குகளை பதிவு செய்வதற்காக 61 ஆயிரத்து 135 போலீசாா் விண்ணப்பித்துள்ளனா். அவா்களில் 26 ஆயிரத்து 247 போ் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனா். தபால் வாக்குகள் 100 சதவீதம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் தோ்தல் ஆணையம் தெளிவாக உள்ளது. யாருக்கெல்லாம் தபால் வாக்குகள் வந்து சேரவில்லையோ அவா்களுக்கு தபால் வாக்குகள் விரைந்து கிடைக்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி வரை தபால் வாக்குகளை தங்க க்கு பணி ஒதுக்கப்பட்டு உள்ள மையங்களில் பதிவு செய்யலாம். 17-ந்தேதி (புதன்கிழமை) அந்தந்த மையங்களில் இருந்து, பிற தொகுதிகளுக்கு உரிய தபால் வாக்குகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சியில் உள்ள ஒருங்கிணைந்த தபால் வாக்கு மையத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

    நாட்டின் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரா்கள் 71 ஆயிரம் போ், ஆன்லைன் மூலம் தபால் வாக்குகளை செலுத்த விண்ணப்பித்துள்ளனா். அவா்கள் மட்டுமே ஜூன் 4-ந்தேதி காலை 8 மணிக்கு (வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரம்) முன்பு வரை தபால் வாக்குகளை அனுப்ப அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோடியை தவிர மற்றவர்கள் பிரதமராக வந்தால் இந்த நாட்டை சின்னபின்னமாக்கி விடுவார்கள்.
    • பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதியை பா.ஜ.க வெளியிட்டுள்ளது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை இன்று பல்லடம் ரங்கநாதபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-

    இது மிகப்பெரிய தேர்தல். ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கும் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது. இந்தியாவில் உள்ள 98 கோடி மக்களும் இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகாலம் யாருடைய ஆட்சி நடைபெற வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றனர்.

    நம்மிடத்தில் நரேந்திர மோடி என்ற ஒரு தலைவர் இருக்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு 5 ஆண்டு காலம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்தியா கூட்டணி தலைவர்கள் இல்லாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது. 10 செம்மறி ஆடுகள் கூட ஒரு வாரத்தில் தங்கள் தலைவனையோ, தலைவியையோ தேர்ந்தெடுத்து விட்டு தான் அடுத்த வேலையை செய்யும்.

    ஆனால் இந்தியா கூட்டணியில் இதுவரை யார் பிரதமர் வேட்பாளர், யார் தலைவர் என்றே தெரியாமல் தத்தளிக்கும் நிலை தான் காணப்படுகிறது.

    இந்த தேர்தல் பிரதமருக்கான தேர்தல். அவர் எப்படிப்பட்ட மனிதராக இருக்க வேண்டும். அவர் எப்படி இந்தியாவை வழிநடத்த வேண்டும் என்பதற்காக தான் நாம் வாக்களிக்கிறோம்.

    மோடியை தவிர அந்த நாற்காலியில் வேறு யாராவது பிரதமராக வந்து அமர்ந்தால் நாடு என்னவாகும் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மோடியை தவிர மற்றவர்கள் பிரதமராக வந்தால் இந்த நாட்டை சின்னபின்னமாக்கி விடுவார்கள். எனவே நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.


    பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதியை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. அதுவும் பிரதமர் மோடியே வெளியிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 4 கோடி மோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் 3 கோடி மோடி வீடுகளை கட்டி கொடுப்போம் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோக்கியமான, வளர்ச்சியான அரசியலை கொடுப்பது பா.ஜ.க மட்டும் தான்.

    100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நாள் சம்பளமாக கடந்த 10 ஆண்டுக்கு முன்பு வரை ரூ.174 தான் இருந்தது. கடந்த வாரம் வரை ரூ.284 சம்பளமாக வழங்கப்பட்டது. அதனை தற்போது ரூ.319 ஆக உயர்த்தி வழங்கி வருகிறோம். 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு தான் முழு பணத்தையும் கொடுக்கிறது. மாநில அரசு கொடுக்கவில்லை. ஸ்டாலின் கொடுக்க வில்லை.

    ஆனால் அவர்கள் வெறும் வாயில் ஒற்றை வரியில் பா.ஜ.க.வை உள்ளே விட்டு விடாதீர்கள். அவர்கள் வந்து விடக்கூடாது என்கிறார்கள். அதனை விளக்கும் வகையில் நாங்கள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளோம்.

    அந்த வீடியோவில் ஒரு கணவனும், மனைவியும் மோட்டார் சைக்கிளில் செல்கிறார்கள். அப்போது பின்னால் அமர்ந்து இருக்கும் மனைவி, தனது கணவரிடம் ஏதோ சொல்ல வருகிறார். ஆனால் கணவர் அதனை கண்டு கொள்ளாமல் நீ பேசாமல் வா என்கிறார்.

    இருந்தாலும் மனைவி மீண்டு பேச முற்படும் போது, கணவர், வேகமாக நீ வாக்கை மாத்தி போட்டு விடாதே. பா.ஜ.க உள்ளே வந்து விட போகிறது என்கிறார். அவர்கள் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறார்கள்.

    100 மீட்டர் தூரம் சென்றதும், ஒரு பூக்கடையில் கணவனும், மனைவியும் சண்டை போடுகிறார்கள். அந்த கணவன், பூக்கடையில் இருக்கும் பணத்தை எடுத்து டாஸ்மாக் கடைக்கு செல்கிறேன் என்கிறார். இன்னும் சில அடி தூரத்தில் செவிலியர்கள், அரசு பஸ் ஊழியர்கள் போராடுகின்றனர். இன்னும் சில 100 மீட்டர் தூரத்தில் காவல்துறை போதை பொருள் கடத்தலில் தொடர்புடையதாக ஆளுங்கட்சி பிரமுகரை கைது செய்து செல்கிறது.

    இதனை எல்லாம் மோட்டார் சைக்கிளில் செல்லும் கணவன், மனைவி பார்த்தபடியே செல்கின்றனர். அப்போது கணவர் சொல்கிறார். தமிழகத்தில் பா.ஜ.க வருவதற்கான நேரம் வந்து விட்டது என்று.

    உண்மையிலேயே தமிழகத்தில் பா.ஜ.க, தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளே வர வேண்டிய நேரம் வந்து விட்டது.இது மாற்றத்திற்கான நேரம். நிச்சயமாக ஒரு கட்சி நேர்மையான ஆட்சி கொடுக்கும் என்றால் அது பா.ஜ.கவால் மட்டும் தான் முடியும்.

    தமிழகத்தில் 33 மாத காலமாக ஆட்சியில் உள்ளனர். அவர்களிடம் அதிகாரம், ஆள்பலம் இருக்கிறது. இருந்தாலும் பணத்தை கொடுத்து தான் தேர்தலை சந்திக்க வேண்டிய அவல நிலை உள்ளது. அதுவும் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை மின் தடை செய்து விட்டு வீடு, வீடாக சென்று ஒரு ஓட்டுக்கு ரூ.500, ரூ.1000 கொடுத்து வருகிறார்கள்.

    50 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகளால் நேரடியாக தேர்தலை சந்திக்க முடியவில்லை. பணத்தை கொடுத்து தான் வாக்குகளை பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.

    நாம் ஏதாவது கேட்டால் பணத்தை வாங்கி கொண்டு தானே வாக்களித்தீர்கள். உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என சொல்கிறார்கள். 50 ஆண்டுகாலமாக நாம் ஏழையாக, வளர்ச்சியடையாமல் இருக்கிறோம். தமிழகத்தை திராவிட கட்சிகள் பின்னோக்கி கொண்டு சென்று விட்டனர்.

    நான் கோவைக்கு என்று 100 வாக்குறுதிகள் கொடுத்துள்ளேன். 500 நாட்களில் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். தி.மு.கவினர் போன்று 500-க்கும் அதிகமான வாக்குறுதிகளை கொடுத்து விட்டு, அதனை நிறைவேற்ற முடியாமல் பயந்து, பயந்து வர வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை. ஏனென்றால் நாங்கள் 100 வாக்குறுதியை 500 நாளில் நிறைவேற்றுவோம். வாக்குறுதியை நிறைவேற்றி விட்டு கம்பீரமாக வருவேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அரசு டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான கூடங்களை அகற்றக்கோரி உடுமலை-தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, அறிவிப்பு பதாகை, நாற்காலி, தண்ணீர் கேன், மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை யு.எஸ்.எஸ்., காலனி பகுதிக்கு உடுமலை-தாராபுரம் சாலையிலிருந்து 2 இணைப்பு சாலைகள் பிரிவு செல்கிறது. இந்த சாலைகளை மையமாகக்கொண்டு அரசு டாஸ்மாக் கடை மற்றும் 2 தனியார் மதுபான விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகிறது.

    இங்கு வருகின்ற போதை ஆசாமிகள் அந்தப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான விற்பனை கூடங்களை அகற்றக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தனியார் மதுபான கூடத்திற்கு வந்த ஆசாமி போதையில் குடியிருப்பு பகுதிக்குள் சென்று அசுத்தம் செய்ய முற்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனியார் மதுபான விற்பனை கூட மேலாளரை அணுகி விவரத்தை கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது தனியார் மதுபான விற்பனை கூடத்தில் பணிபுரியும் நபர்கள் அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மதுபான கூடம் முன்பு குவிந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்களை மதுபான கூட ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, அறிவிப்பு பதாகை, நாற்காலி, தண்ணீர் கேன், மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினார்கள்.

    அத்துடன் அரசு டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான கூடங்களை அகற்றக்கோரி உடுமலை-தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு வருகை தந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • வெளிநாட்டு பிரஜை என்பதால் குடியுரிமை மற்றும் வாக்குரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
    • நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னரே இந்த உரிமை அவருக்கு கிடைத்துள்ளது.

    திருச்சி:

    இலங்கை சிங்கள ராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட உச்சகட்ட போரின் காரணமாக லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். அந்த வகையில் சொத்து உடைமைகளை விட்டு உயிரைக் காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு வந்த இலங்கை அகதிகள் ஆங்காங்கே சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு அவர்கள் தங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு ரேஷன் பொருட்கள், தமிழக அரசின் மகளிர் உரிமை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.

    ஆனால் வெளிநாட்டு பிரஜை என்பதால் குடியுரிமை மற்றும் வாக்குரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்கியுள்ள நளினி கிருபாகரன் என்ற 38 வயது பெண்மணி நடை பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளார்.

    நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னரே இந்த உரிமை அவருக்கு கிடைத்துள்ளது. இவர் கடந்த 1986-ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் முகாமில் பிறந்தார். பின்னர் திருச்சி கொட்டப்பட்டு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டார். இந்த வாக்கு உரிமைக்கான அவரது பயணம் 2021 ல் தொடங்கியது. முதலில் இந்திய பாஸ் போர்ட்டுக்காக அவர் விண்ணப்பித்த போது பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நீதிமன்றத்தை நாடினார்.

    2022 ஆகஸ்ட் 12ஆம் தேதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் தலைமையிலான சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், நளினியின் மண்டபத்திலிருந்து பிறந்த சான்றிதழைக் காட்டி, அவருக்கு இந்திய பாஸ்போர்ட்டை வழங்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. 1950 ஜனவரி 26 மற்றும் ஜூலை 1, 1987 க்கு இடையில் இந்தியாவில் பிறந்த ஒருவர் குடியுரிமைச் சட்டம், 1995 ன் பிரிவு 3 சட்டத்தின் படி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

    பின்னர் அந்த பாஸ்போர்ட்டைப் பாதுகாத்தார். பின்னர் ஒரு வழியாக சட்ட போராட்டம் நடத்தி இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையை நளினி பெற்றார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது, இந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க போகிறேன் நான் ஒரு இந்தியன் என்பதை உறுதிப்படுத்துகிறேன். இந்த வாய்ப்பை பெறுவதற்கு பல ஆண்டுகளாக கனவு கண்டேன். முகாமில் உள்ள அனைத்து அகதிகளும் இந்த உரிமைகளை அனுபவிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமையை உறுதி செய்யும் கட்சிக்கு நான் வாக்களிப்பேன் மேலும் இந்தியாவில் பிறந்த எனது 2 குழந்தைகளுக்கு குடியுரிமையைப் பெறுவதற்கான சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். திருச்சி கொட்டப்பட்டு சிறப்பு முகாமில் வசிக்கும் இன்னொரு பெண்மணி கூறும் போது,

    மகளிர் உரிமைத்தொகை உள்பட மாநில அரசின் திட்டங்களால் நாங்கள் பயனடைந்து வருகிறோம் என்றாலும் நான் இந்த பகுதியை சேர்ந்தவள் என கூறும்போது மகிழ்ச்சி கிடைக்கிறது. இந்த வாக்களிக்கும் உரிமை துன்புறுத்தப்பட்ட சமூகத்தின் உறுப்பினர்களுக்கு நீதியை வழங்குவதாக இருக்கும். அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றார். சென்னை கிறிஸ்டியன் கல்லூரியின் பேராசிரியர் ஆஷிக் போனோஃபர் கூறுகையில், மாநிலம் முழுவதும் இதேபோன்ற முகாம்களில் 58,457 அகதிகள் வாழ்கின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு புதிய அரசிற்கு அரசியல் விருப்பம் இருக்க வேண்டும் என்றார். நளினியின் வழக்கை உயர்நீதிமன்றத்தில் எதிர்த்துப் போராடிய வழக்கறிஞர் ரோமியோ ராய் கூறும்போது, நளினி போன்று முகாமில் உள்ள மற்ற அகதிகள் அனைவரும் விரலில் மை பூசுவதை உறுதி செய்யும் பணி தொடரும் என்றார்.

    • கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றேன்.
    • கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன்.

    சிவகாசி:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் விஜயகாந்த் மகனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    உங்கள் அண்ணன் மகனுக்கு நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளிக்க வேண்டும். 32 வயதில் படித்து முடித்துவிட்டு எத்தனையோ கனவுகள் இருந்தாலும் அதை தூக்கி எறிந்து விட்டு தந்தையின் வழியில் மக்கள் சேவை செய்ய இந்த தொகுதியில் அவர் போட்டியிடுகின்றார். உங்கள் எல்லாருக்கும் தெரியும் தம்பிக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. இந்த விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் இந்த தொகுதி மக்களின் தலைமையில் தான் அவருக்கு திருமணம் நடக்கும்.

    கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றேன். எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாகவும் அனைத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. இந்த தொகுதியில் தே. மு.தி.க. வெற்றி பெற்றவுடன் அவர் பல நல்ல திட்டங்களை இந்த தொகுதியில் அறிவித்து செயல்படுத்த உள்ளார். அதில் சிலவற்றை என்னிடம் கூறினார். அதை நான் உங்களிடம் கூறுகின்றேன்.

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கேப்டன் பிறந்தநாள் அன்று 60 பெண்களை தேர்வு செய்து பெண்கள் நாட்டின் கண்கள் திட்டத்தின் மூலம் எங்களது சொந்த நிதியிலிருந்து அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க உள்ளார். ஆண்டுதோறும் 6 லட்சம் வீதம் 5 வருடத்தில் ரூ.30 லட்சம் வரை பெண்களுக்கு நிதி உதவி வழங்க உள்ளார்.

    தொகுதி முழுவதிலும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் தொடங்கப்படும். இலவச தையல் பள்ளிகள், இலவச நீட் கோச்சிங் சென்டர், படித்த படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு இலவச தையல் மிஷின்கள் வாங்கி கொடுத்து அவர்கள் வாழ்வாதாரம் உயர நடவடிக்கை, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்தவும் கூலித் தொகையை ரூ.500 ஆக அதிகரிக்கவும் பாராளுமன் றத்தில் கோரிக்கை வைப்பார்.

    நமது வேட்பாளர் வயதில் சின்னவர் என்று நினைக்காதீர்கள். அவர் நல்ல அறிவாளி, உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளார். பல்வேறு மொழிகளை பேசும் திறமை கொண்டவர். பாராளுமன்றத்தில் உங்கள் பிரச்சனைகளை எழுப்பி அதற்கு தீர்வு காணும் வல்லமை அவரிடம் உள்ளது. குணத்திலும், பழகுவதிலும் கேப்டனின் மறு உருவம். 34 வருடம் கேப்டனுக்கு மனைவியாக வாழ்ந்தும், அவருக்கு தாயாக இருந்தும் சேவை செய்திருக்கிறேன். கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன்.

    இவர் அவர் பேசினார்.

    • வழிபாடு நடத்தி விவசாய பணிகளை தொடங்குவதே இந்த விழா.
    • நாட்டார்கள் கூடி வெற்றிலைப்பிரி விழா கொண்டாடுவது வழக்கம்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தை தலைமையாக கொண்டு சுற்றி உள்ள 58 கிராமங்கள் இணைந்து வெள்ளலூர் நாடு என பல நூறு ஆண்டுகளாக அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளலூர்நாடு வெள்ளலூர், அம்பலகாரன்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, மலம்பட்டி என 5 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

    இப்பகுதியில் மூண்டவாசி, வேங்கைப்புலி, சமட்டி, நைக்கான், சாவடைதாங்கி, வெக்காளி, சலிப்புளி, திருமான், செம்புலி, நண்டன்கோப்பன், பூலான் மலவராயன் என 11 கரைகளாக மக்கள் வாழ்கின்றனர்.

    ஆண்டுதோறும் இங்கு தமிழ்ப்புத்தாண்டான சித்திரை 1-ந்தேதி வெள்ளலூர் கருங்கல் மந்தையில் நாட்டார்கள் அனைவரும் கூடி வெற்றிலைப்பிரி விழா கொண்டாடுவது வழக்கம். அதாவது வீடுதோறும் வெற்றிலைகளை வழங்கி அதை வைத்து வழிபாடு நடத்தி விவசாய பணிகளை தொடங்குவதே இந்த விழாவாகும்.

    அதன்படி நேற்று வெற்றிலைப்பிரி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கருங்கல் மந்தை முன்பு நாட்டார்கள் வழிபாடு செய்தனர். பின் அருகில் உள்ள சுனை பாறையில் தமிழ் எழுத்து ப வடிவில் அம்பலகாரர்களும், இளங்கச்சிகளும், பொதுமக்களும் அமர்ந்தனர்.

    குவித்து வைக்கப்பட்ட வெற்றிலை கட்டுகளை பிரித்து முதலில் விவசாய பணிகளில் முக்கிய உதவிகள் செய்பவர்களுக்கு வெற்றிலைகள் வழங்கப்பட்டன. பின்னர் பாரம்பரிய வழக்கப்படி 11 கரையினருக்கும், 5 மாகாணத்திற்கும் வெற்றிலை கட்டுகள் வழங்கப்பட்டு அந்த வெற்றிலைகள் ஆங்காங்கே தனித்தனியாக 56 கிராமத்தினர்களும் வெற்றிலைகளை வாங்கி சென்றனர்.

    ஒவ்வொரு குடும்பத்தினரும் அந்த வெற்றிலைகளை தங்களுடைய வீட்டின் பூஜை அறையில் வைத்து வணங்கி கலப்பை, மண்வெட்டி, நெல் அளக்க பயன்படும் மரக்கால், கடப்பாரை ஆகியவற்றின் முன்பு வைத்து வழிபட்டனர். பின்னர் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்ட இயற்கை உரங்களை எடுத்து அவரவர்களின் வயல்களில் கொட்டி நிலத்தை உழுது விவசாய பணிகளை தொடங்கினர். இவ்வாறு செய்வதால் ஆண்டுதோறும் மழை பெய்து, செல்வம் செழித்து விவசாயம் நன்றாக நடைபெறும் என்பது இப்பகுதி மக்களின் பாரம்பரிய நம்பிக்கை ஆகும்.

    • இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் தெரிவித்தார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த் மாவட்டம் முழுவதும் சென்று மக்களிடம் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று அகஸ்தீஸ்வரம், காமராஜ் நகர், ராமன்புதூர், சந்தையடி, இலந்தையடிவிளை, சாமிதோப்பு, செட்டிவிளை, பொற்றையடி, வைகுண்டபதி, கொட்டாரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்.

    பிரசாரத்தின் போது விஜய்வசந்த் பேசியதாவது:-

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு தந்த அம்பேத்கரின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன். மேலும் இன்று (அதாவது நேற்று) எனது வாழ்வில் மிகவும் முக்கியமான நாள். எனது அன்பு தந்தை எச்.வசந்தகுமார் பிறந்த நாள் ஆகும்.

    எனது தந்தை விட்டுச் சென்ற மக்கள் பணியை தொடர்வதற்கு அவர் மேல் வைத்திருக்கும் பாசத்தால் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    குமரி மாவட்டத்தை வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற என் தந்தையின் கனவை நிறைவேற்ற உங்களுக்காக இன்னும் பல பணிகள் செய்ய வேண்டும். இதற்காக நான் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறேன். மாவட்டத்தில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாராளுமன்ற உறுப்பினராக நான் வாங்கிய அனைத்து சம்பளப் பணத்தையும் கொடுத்துள்ளேன்.

    குமரி மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை நிறைவேற்றும் வகையில் எனது தந்தை தொடங்கி வைத்த வேலைவாய்ப்பு முகாமை தொடர்ந்து நடத்தி சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளேன். குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். எனக்கு நீங்கள் அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மாநகர மேயர் மகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. எச்.வசந்தகுமாரின் 74- வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் குமரி மாவட்ட மக்களுடன் உரையாடுவது போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையில்) தயாரிக்கப்பட்ட காணொலியை தமிழ்ச்செல்வி வசந்தகுமார் வெளியிட்டார். நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., சகோதரர் வினோத் குமார், காமராஜ், எச்.வசந்தகுமாரின் தங்கை வசந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 25-ந்தேதி சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது.

    திருவையாறு:

    திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை 9.45 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. இதில் தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    தேரோட்டம்

    விழாவில் வருகிற 18-ந்தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடைபெறுகிறது. அன்று 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது.

    22-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேர்வீதி உலா வருகிறது. அப்போது பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீர்மோர், அன்னதானம் வழங்கப்படுகிறது.

    விழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தேர் நான்கு வீதி வந்து நிலையடி வந்தவுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    சப்தஸ்தான பெருவிழா

    விழாவில் 25-ந்தேதி முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெறுகிறது.

    பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி

    26-ந்தேதி தில்லைஸ்தானம் பல்லக்குகளுடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும்.

    விழா ஏற்பாடுகளை 27-வது தருமபுரம் ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • முட்புதரில் பெட்டி, பெட்டியாக ஆங்கில மருத்து கொட்டப்பட்டுள்ளது.
    • தனியார் மருந்து விநியோக நிறுவனம் சார்பில் இப்படி கொட்டப்பட்டதா என தெரியவில்லை.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், ஈங்கூர் ஊராட்சி, சிப்காட் பொது சுத்திரிப்பு நிலையம் அருகே குட்டப் பாளையத்தில் இருந்து குமாரபாளையம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் முட்புதரில் பெட்டி, பெட்டியாக ஆங்கில மருத்து கொட்டப்பட்டுள்ளது.

    இது ஒரே இடத்தில் இல்லாமல் விட்டு, விட்டு 4 இடங்களில் கொண்டப்பட்டுள்ளது. இதில் பாதி மருந்துகள் காலவதியானது. மீதி மருந்துகள் இன்னும் காலாவதி தேதி உள்ளது. இது அரசு மருத்துவனைக்கு வழங்கப்பட்டதா அல்லது ஈ.எஸ்.ஐ. மருத்துவ மனைக்கு அரசால் வழங்கப்பட்டதா அல்லது தனியார் மருந்து விநியோக நிறுவனம் சார்பில் இப்படி கொட்டப்பட்டதா என தெரியவில்லை.

    இதை இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர். பள்ளி விடுமுறை தினமாக உள்ளதால் அப்பகுதி சிறுவர்கள் இந்த மருந்து பற்றி அறியாமல் எடுத்து விளையாடி வருகின்றனர்.

    இந்த மருந்துகள் எதற்காக இங்கு கொட்டப்பட்டது. இதை யார் கொண்டு வந்து கொட்டியது என அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

    மேலும் இந்த பகுதியில் சாய ஆலை கழிவு நீரால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதி, இங்கு எதற்காக கொட்டப்பட்டது என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

    • தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்த பிரதமர் மோடி தி.மு.க. அழிந்து விடும் என பேசுகிறார்.
    • நாடு சர்வாதிகார நாடாகி ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.

    கோவை:

    கோவையில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், ஆவாரம்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் இரண்டு நபர்களுக்கு இடையே நடக்க கூடிய தேர்தல் அல்ல. இந்த தேர்தல் மூலமாகத்தான் நாம் நாட்டை காக்கப் போகிறோமா, கைவிடப் போகிறோமா என்பதை முடிவு செய்யப் போகிறோம்.

    இந்த தேர்தலில் மோடி மீண்டும் வென்றால் இந்தியாவில் இனி தேர்தல்களே நடக்காது. நாடு சர்வாதிகார நாடாகி ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.

    தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்த பிரதமர் மோடி தி.மு.க. அழிந்து விடும் என பேசுகிறார். இந்த தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, அ.தி.மு.க. என்ற கட்சி அழிந்து விடும் என்று பேசுகிறார். அப்படி என்றால் தேர்தலுக்கு பிறகு இந்த இரண்டு கட்சிகளையும் இவர்கள் அழித்து விடுவார்களா, அவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத சர்வாதிகாரிகள் போல் பேசுகிறார்கள்.


    இந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனாவால் பிரச்சனை இல்லை. பாரதிய ஜனதாவால் தான் பிரச்சனை. அதனால் இந்த தேர்தலில் இவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.

    மோடி கியாரண்டி என்ற தலைப்பில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் வரும் 5 ஆண்டுகளில் என்ன செய்வோம் என்பதை பட்டியலிட்டுள்ளனர். ஏற்கனவே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சொல்லியதை எல்லாம் செய்து விட்டீர்களா என்று கேட்டால் பதில் இல்லை. தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வராத மோடி, நிதி கொடுக்காத மோடி, இப்போது தமிழக மக்களிடம் ஓட்டுக் கேட்க மட்டும் அடிக்கடி வருகிறார். இதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×