search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் மது விற்பனை கூடத்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்- உடுமலை அருகே பரபரப்பு
    X

    தனியார் மது விற்பனை கூடத்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்- உடுமலை அருகே பரபரப்பு

    • அரசு டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான கூடங்களை அகற்றக்கோரி உடுமலை-தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, அறிவிப்பு பதாகை, நாற்காலி, தண்ணீர் கேன், மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை யு.எஸ்.எஸ்., காலனி பகுதிக்கு உடுமலை-தாராபுரம் சாலையிலிருந்து 2 இணைப்பு சாலைகள் பிரிவு செல்கிறது. இந்த சாலைகளை மையமாகக்கொண்டு அரசு டாஸ்மாக் கடை மற்றும் 2 தனியார் மதுபான விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகிறது.

    இங்கு வருகின்ற போதை ஆசாமிகள் அந்தப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான விற்பனை கூடங்களை அகற்றக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தனியார் மதுபான கூடத்திற்கு வந்த ஆசாமி போதையில் குடியிருப்பு பகுதிக்குள் சென்று அசுத்தம் செய்ய முற்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனியார் மதுபான விற்பனை கூட மேலாளரை அணுகி விவரத்தை கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது தனியார் மதுபான விற்பனை கூடத்தில் பணிபுரியும் நபர்கள் அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மதுபான கூடம் முன்பு குவிந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்களை மதுபான கூட ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, அறிவிப்பு பதாகை, நாற்காலி, தண்ணீர் கேன், மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினார்கள்.

    அத்துடன் அரசு டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான கூடங்களை அகற்றக்கோரி உடுமலை-தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு வருகை தந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×