என் மலர்
உள்ளூர் செய்திகள்
- புதுத்திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக எண்ணெய் குழாய்களை பதித்து வருகின்றனர்.
- விவசாயிகள் போராட்டம் நடத்தாததின் விளைவு மீண்டும் விளைநிலத்திலேயே குழாய் பதிப்பது என்பது அதிகாரிகளின் திட்டமிட்ட சதியாகும் என்றனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம், கோடங்கி பாளையம் கிராமங்களில் ஐ.டி.பி.எல். எரிவாயு குழாய் திட்டத்தை விவசாய நிலங்களில் அமைக்காமல் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் 36-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த 1999-ம் ஆண்டு பெட்ரோ நெட் சி.சி.கே. திட்டத்திற்கு அனுபவ உரிமை எடுப்பு செய்ததை குறிப்பிட்டு தற்போது ஐ.டி.பி.எல். திட்டத்தின் கீழ் அதே இடத்தில் எண்ணெய் குழாய்களை பாரத் பெட்ரோலிய நிறுவனம் பதித்து வருகிறது. அதாவது பழைய திட்டத்திற்கு பெறப்பட்ட அனுமதியை வைத்து கொண்டு புதுத்திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக எண்ணெய் குழாய்களை பதித்து வருகின்றனர்.
அனைத்து வகையான எரிவாயு மற்றும் பெட்ரோலிய குழாய் பதிப்பு என்பது சாலையோரமாக மட்டுமே அமைக்க வேண்டும் என மத்திய அரசின் கொள்கை முடிவாக இருக்கும்போது, எப்படி ஏற்கனவே 25 ஆண்டுகளுக்கு முன் கோவை முதல் கரூர் வரை பதிக்கப்பட்ட குழாயின் அருகிலேயே மீண்டும் 70 கிலோமீட்டர் அளவிற்கு மற்றொரு பெட்ரோலிய குழாய் அமைக்க வேலை செய்து வருகின்றனர்.
கோவை முதல் கர்நாடகாவின் தேவன கொந்தி வரை பெட்ரோலிய குழாய் கொண்டு செல்லும் திட்டத்தில் பெருமளவில் சாலையோரமாக பதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆனால் கோவையில் இருந்து முத்தூர் வரை உள்ள 70 கிலோமீட்டர் ஏற்கனவே குழாய் பதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களின் வழியே மீண்டும் பதிக்க திட்டமிட்டு செயல்படுகின்றனர். அன்றே விவசாயிகள் போராட்டம் நடத்தாததின் விளைவு மீண்டும் விளைநிலத்திலேயே குழாய் பதிப்பது என்பது அதிகாரிகளின் திட்டமிட்ட சதியாகும் என்றனர்.
- பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன.
- ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கோபி:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் அந்த நபர் பாலியல் பலாத்காரத்தை தனது செல்போனில் படம் பிடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரிய வந்துள்ளது.
எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன. யார் அந்த சார் என்ற வாசகம் சமூக வலை தளங்களில் வைரலானது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மட்டும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அ.தி.மு.க புறநகர் மேற்கு மாவட்டம், தகவல் தொழில்நுட்பம் பிரிவு சார்பில் பரபரப்பான போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிரு ந்தன.
அந்த போஸ்டரில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார்? என்ற வாசகம் கேள்விக்குறியுடன் இடம் பெற்றிருந்தது. மேலும் அதில் சேவ் அவர் டக்டர்ஸ் (நமது குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்) என்ற வாசகத்துடன் எடப்பாடி பழனிச்சாமி படமும் அந்த போஸ்டரில் ஒட்டப்பட்டி ருந்தது.
இதைப்போல் கவுந்தப்பாடி, பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு நிலவியது.
- கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
- குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் ஆனந்தத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு கடந்த 1 வாரமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் இருந்தது. தற்போது கொடைக்கானலில் விட்டு விட்டு சாரல் மழை மற்றும் உறை பனி நிலவி வருகிறது. அரையாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக இன்று காலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர்.
மலையடிவாரப் பகுதியான காமக்காபட்டியில் இ-பாஸ் சோதனை பின்பற்றப்படும் நிலையில் வெள்ளி நீர்வீழ்ச்சியில் இருந்து அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், செவன்ரோடு, சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் 2 கி.மீ தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதுமான போலீசார் இல்லாத நிலையில் மாற்று நடவடிக்கைகளை கையாண்டும் முடியாத நிலை ஏற்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசலால் மலை கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் தங்களது டிரிப்பை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பயணிகள் அதிகரிக்கும் சமயங்களில் கூடுதல் போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
தற்போது கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு வரை இங்கேயே தங்கி புத்தாண்டை கொண்டாட விடுதிகளில் புக்கிங் செய்துள்ளனர். இதனால் அனைத்து விடுதிகளும் நிரம்பியுள்ளன. பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, குணா குகை, மோயர் பாயிண்ட் பில்லர் ராக், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட இடங்களை அவர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். ஏரியில் நீரூற்றின் அருகே பன்னீர் தெளிப்பது போன்ற உணர்வை அனுபவித்து படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் ஆனந்தத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர். காலையில் கடும் மேக மூட்டத்துடன் வானம் காணப்பட்ட நிலையில் நேரம் செல்ல செல்ல சற்று இதமான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் அதனை உற்சாகமாக ரசித்து வருகின்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சூர்யாவை தேடி வந்தனர்.
- கைதி சிறையில் இருந்து தப்பிய சம்பவம் தொடர்பாக, சிறையில் பணியில் இருந்த 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகே ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் மாவட்ட கிளை சிறை உள்ளது. நல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்து முன்னணி பிரமுகரை தாக்கி சங்கிலி வழிப்பறி செய்த சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த சூர்யா (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி திருப்பூர் மாவட்ட சிறையில் சூர்யாவை அடைத்தனர்.
இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி மாலை, சிறையில் விசாரணை கைதியாக இருந்த சூர்யா சிறையில் இருந்து தப்பினார். மின்தடையை பயன்படுத்தி அவர் தப்பியது தெரியவந்தது. இது குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சூர்யாவை தேடி வந்தனர். சிறைத்துறை அதிகாரிகள் தலைமையில் தனிப்படை அமைத்தும் தேடி வந்தனர்.
சம்பவம் பற்றி அறிந்ததும் கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் திருப்பூர் வந்து மாவட்ட சிறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணை கைதி சிறையில் இருந்து தப்பிய சம்பவம் தொடர்பாக, சிறையில் பணியில் இருந்த 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனிடையே சிறைத்துறை தனிப்படையினர், சூர்யாவின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு சென்று முகாமிட்டு தேடி வந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த சூர்யாவை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை திருப்பூர் அழைத்து வந்த போலீசார், திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- வருகிற ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.
- நறுமணம் நிறைந்த பூக்கள், தூபதீபம், மஞ்சள், சந்தனம் புனிதநீர் தெளித்து பூஜை செய்யப்படும்.
கூடலூர்:
சபரிமலையில் கடந்த மாதம் 16ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கடந்த 26ம் தேதி வரை மண்டல காலத்திற்கான தொடர் வழிபாடுகள் நடைபெற்றன. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். கடந்த 26ம் தேதி மண்டல பூஜையுடன் கோவில் நடை சாத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து வருகிற ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக நாளை (30ம் தேதி) மாலை நடை திறக்கப்படும். இந்நிலையில் மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ள தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக அப்பாச்சிமேடு முதல் சன்னிதானம் வரை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. பெரியநடை பந்தல், 18ம் படி வளாகம், மாளிகைபுரத்து அம்மன் கோவில், சன்னிதானம், இரும்பு நடைபாலம், அன்னதான மண்டபம், ஆயுர்வேத மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன.
அதன்பின் தண்ணீரை பீய்ச்சி அடித்து குறுமணல், தூசிகள் முழுவதும் அகற்றப்பட்டன. இதில் பல்வேறு துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். சன்னிதான சிறப்பு காவல் அதிகாரி கிருஷ்ணகுமார் தலைமையில் இப்பணி நடைபெற்று வருகிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் இதுகுறித்து தெரிவிக்கையில்,
மண்டல பூஜை நிறைவடைந்துள்ள நிலையில் சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் எதிர்மறையாற்றல், அசுத்தம் மற்றும் தோஷத்தை அகற்ற சுத்திகரன் என்னும் வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நறுமணம் நிறைந்த பூக்கள், தூபதீபம், மஞ்சள், சந்தனம் புனிதநீர் தெளித்து பூஜை செய்யப்படும். இப்பணிகள் அனைத்தும் இன்று (29ம் தேதி) மாலைக்குள் நிறைவு செய்யப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு வந்து தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்கள் வரும் நாட்களில் நடைபெறாமல் இருக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சக்திவேல் குள்ளனூர் ஏரிக்கரையில் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு தலையின் பின்புறம் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.
- பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48) விவசாயி. இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்யும் தொழிலும் செய்து வந்தார்.
இவருக்கு லதா (45) என்ற மனைவியும், சுகாசினி (22), சுலேச்சனா (20), என்ற 2 மகள்களும், கலை (17) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை சக்திவேல் மகன் கலையை போச்சம்பள்ளியில் இருந்து அழைத்து வர இருசக்கர வாகனத்தில் சென்றார்.
இந்த நிலையில் சக்திவேல் குள்ளனூர் ஏரிக்கரையில் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு தலையின் பின்புறம் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்,
உடனே உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே உறவினர்கள் சக்திவேலின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சக்திவேல் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் டி.எஸ்.பி. முத்துகிருஷ்ணன் சக்திவேலின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சக்திவேலை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
சக்திவேலுக்கும் அவரது உறவினர்களுக்கிடையே நிலம் சம்பந்தாமாக பிரச்சனை இருப்பதால் யாராவது அவரை வெட்டி கொலை செய்தனரா? அல்லது வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தாமாக யாராவது வெட்டி கொன்றனரா? என்ற பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சக்திவேலின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பா.ம.க. நிறுவனர் ராமதாசை பா.ம.க. தலைவர் அன்புமணி இன்று சந்தித்து பேச உள்ளார்.
- தனக்கு பொறுப்பு வழங்கப்பட்டது கட்சியினரிடையே வரவேற்பு இல்லை.
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நேற்று நடைபெற்ற பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார். இவர் டாக்டர் ராமதாசின் மகள் வழி பேரன் ஆவார்.
இளைஞர் அணி தலைவராக முகுந்தனை முன்மொழிந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அன்புமணி இடைமறித்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
உடனே குறுக்கிட்ட டாக்டர் ராமதாஸ், ''இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள். மீண்டும் சொல்கிறேன். விருப்பம் இல்லாவிட்டால் செல்லலாம். இங்கு நான் சொல்வதைத்தான் கேட்கணும்'' என்றார்.
இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையில் ஜி.கே.மணியிடம் இருந்து மைக்கை வாங்கி, 'நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்' என்று ஆவேசமாக கூறினார்.
தொடர்ந்து அந்த மைக்கை தூக்கி வீசிவிட்டு கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாசை பா.ம.க. தலைவர் அன்புமணி இன்று சந்தித்து பேச உள்ளார்.
இந்நிலையில் பா.ம.க. இளைஞரணி தலைவர் பொறுப்பிலிருந்து ஒதுங்கிக்கொள்ள முகுந்தன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனது தாத்தாவும் பா.ம.க. நிறுவனருமான ராமதாசை சந்தித்து தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ராமதாஸ் மேடையில் அறிவித்தபோதும் கைத்தட்டல்கள் பலமாக இல்லை. எதிர்ப்புக்கு மத்தியில் பொறுப்புக்கு வந்தால் செயல்பட முடியாது. தனக்கு பொறுப்பு வழங்கப்பட்டது கட்சியினரிடையே வரவேற்பு இல்லை என முகுந்தன் தரப்பில் எண்ணுவதாக தெரிய வந்துள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் கட்சியில் இருந்து விலகினர்
- கட்சியின் பொறுப்பாளர்களை ஒரு பொருட்டாகவே சீமான் எடுத்துக் கொள்வதில்லை.
நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பெரியகுளம் ராமச்சந்திரன் உள்பட 4 நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகினர். இதேபோல், சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ் கட்சியில் இருந்து விலகினார்.
அதேபோல் நா.த.க. நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் வினோத்குமார் உட்பட 50 பேர், அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகினர்.

இதுகுறித்து வினோத் குமார் கூறுகையில், கட்சிக்காகப் பல லட்சங்களைச் செலவு செய்துள்ளோம். ஆனால், நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. கட்சிக் கொள்கைக்கு எதிராகவும், மதவாதத்தை ஆதரித்தும் சீமான் பேசி வருகிறார் என்று கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் பெரியகுளம் ராமச்சந்திரன். இவர் தான் வகித்து வந்த, மாவட்ட செயலாளர் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவருடன் கோவை வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் அபிராமி, வணிகர் பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்குமார், கோவை வடக்கு மாவட்ட தொழிற்சங்க பேரவை செயலாளர் ஏழுமலை ஆகியோரும் கட்சியில் இருந்து விலகினர்.

கட்சியில் இருந்து விலகியது குறித்து நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரன் கூறுகையில்,
கடந்த 10 வருடமாக நாங்கள் நாம் தமிழர் கட்சியில் பயணித்தோம். சீமான் முதலமைச்சர் ஆவார். அதற்கான வெற்றி இலக்கை அடைவார் என்ற நோக்கிலேயே நாங்கள் தீவிரமாக களப்பணியாற்றி வந்தோம்.
ஆனால் சமீப காலமாக சீமான் தனது கொள்கைகளில் இருந்து விலகி முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகிறார். செயல்பட்டு வருகிறார். கொங்கு மண்டலத்தில் அருந்தியர் சமூகத்தின் பங்கு என்பது மிகப்பெரியது.
அப்படிப்பட்டவர்களை பார்த்து சீமான் வந்தேறிகள் என்று பேசியது பெரிய பிரச்சனையாக மாறியது. மேலும் எங்களது உறவினர்கள் ஏராளமானோர் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வில் உள்ளனர்.
இதற்கு பிறகு அவர்களும் எங்களது வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தனர். சீட் தராததால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறுவது முற்றிலும் தவறானது.
சீமான் கொள்கைளில் முரண்பட்டு செயல்பட்டதாலேயே நாங்கள் கட்சியில் இருந்து விலகுகிறோம். எங்களை தொடர்ந்து இன்னும் கோவை வடக்கு மாவட்டத்தில் உள்ள நாம்தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒட்டுமொத்தமாக கட்சியில் இருந்து விலகுவார்கள் என்று கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் கரு.பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர், கடந்த அக்டோபர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகினர்.
நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் கூறுகையில்,
நாம் தமிழரில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. என்னுடைய இஷ்டப்படித்தான் நான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என சீமான் என்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் கட்சியில் இருந்து விலகினர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் நாதக நிர்வாகிகள் கூறுகையில்,
கொடி நட்டு, மேடை அமைப்பதில் இருந்து கட்சிக்காக அனைத்து வேலைகளையும் செய்கிற எங்களை எச்சில் என்கிறார் அண்ணன் சீமான். புதிதாக வருபவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்கள் 20 பேர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறோம் என்று கூறினர்.

இவர்களைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் விலகினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் விலகியது, நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார், தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது, எங்களிடம் கலந்து ஆலோசிப்பதில்லை. இதுகுறித்து கேட்டால், கட்சியில் இருந்து வெளியேறுமாறு கூறினார் என்று சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினர்.
கட்சியின் பொறுப்பாளர்களை ஒரு பொருட்டாகவே சீமான் எடுத்துக் கொள்வதில்லை. கட்சிக்காக பண விரயம் செய்ய வேண்டும். ஆனால், கேள்வி கேட்டால் பதில் கிடைப்பதில்லை என்று கூறினார்.
மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த டாக்டர் இளவஞ்சியும் அக்கட்சியில் இருந்து விலகினார்.

இது தொடர்பாக இளவஞ்சி கூறுகையில், நாம் தமிழர் கட்சியில் சேர்ந்த முதல் மருத்துவர் நான்தான். 14 வருடங்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் என்ற சாதாரண பதவியில் இருக்கிறேன். இதே அணியில் எனக்குப் பின்பு வந்தவர்களுக்கு தலைவர், துணைத் தலைவர் எனப் பதவி கொடுத்தார் சீமான். என்னை செயல்படவே விடவில்லை" என்று கூறினார்.
அதேநேரம், நாம் தமிழர் நிர்வாகிகள் குறித்து சீமான் பேசிய சில உரையாடல்கள் ஆடியோ வடிவில் பொதுவெளியில் பரவியதும் நிர்வாகிகள் விலகலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகல் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்டபோது,
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுபவர்கள் எங்களின் ஸ்லீப்பர் செல். நாம் தமிழர் கட்சியினர் யாரும் விலகவில்லை, நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம். மற்ற கட்சிகளில் உளவு பார்ப்பதற்காக நாங்கள் தான் எங்கள் கட்சியினரை அனுப்பி வைக்கிறோம் என்று சிரித்துக்கொண்டே அவர் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.
- முன்விரோதத்தில் தான் மோகனை கத்தியால் குத்தி ஷாஜி கொலை செய்துள்ளார்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி ஒழுகினசேரி கன்னிமார் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 54), சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மதியம் வடசேரி எம்.எஸ்.ரோடு பகுதியில் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு லோடுமேன் நாவல்காடு ஷாஜி (28) அங்கு வந்தார். அவர், மோகனிடம் ஏதோ பேச அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஷாஜி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோகனின் வயிறு, மார்பு, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த பலரும் அலறியடித்து ஓடினர். இதற்கிடையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்த மோகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு லலித்குமார், வடசேரி இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.
அவர்கள் மோகன் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையில் கொலை செயலில் ஈடுபட்டு விட்டு தப்பி ஓடிய ஷாஜி, நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்ததாக குறிப்பிட்டார்.
ஆனால் அவரது பதிலில் சந்தேகம் அடைந்த போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு துருவித் துருவி விசாரணை நடத்தினர். இதில் பெண் விவகாரத்தில் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவ தாவது:-
கொலை செய்யப்பட்ட மோகனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்றில் இறந்து விட்டார். மகள், நெல்லையில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மகன் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதனால் மகனுடன் வசித்து வந்த மோகனுக்கு, அதே பகுதியை சேர்ந்த பர்னிச்சர் கடையில் வேலை பார்க்கும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அந்தப் பெண்ணிற்கு மோகன், பல்வேறு உதவிகளும் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பர்னிச்சர் கடையின் அருகே உள்ள இரும்புக் கடையில் லோடு மேனாக வேலை செய்த ஷாஜியுடன் அந்தப் பெண்ணிற்கு தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனை மோகன் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண் ஷாஜியிடம் தெரிவித்துள்ளார். அவர் மோகனிடம் சென்று பேசியதில் இருவருக்கும் விரோதம் ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் தான் நேற்று மோகனை கத்தியால் குத்தி ஷாஜி கொலை செய்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது தூண்டுதலின் பேரில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அண்ணாமலையின் இந்த நூதன போராட்டம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் தெரிவித்தனர்.
- முட்டைகளை உடைக்கும் போதும் அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஈடுபட்டார்.
அய்யம்பேட்டை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க கோரியும், தமிழக அரசை கண்டித்தும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அண்ணாமலையின் இந்த நூதன போராட்டம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் தெரிவித்தனர். மேலும், இந்த போராட்டத்திற்கு சமூக வலைதளத்தில் கேலி, கிண்டல்கலும் எழுந்தன.
இந்த நிலையில், அண்ணாமலையை கண்டித்து தி.மு.க. கவுன்சிலரின் கணவர் ஒருவர் அதைவிட நூதன போராட்டத்தில் ஈடுபட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். அதன் விபரம் வருமாறு:-
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சியில் 3-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் பாண்டியம்மாள். இவரது கணவர் ராம் பிரகாஷ். தி.மு.க.வை சேர்ந்தவர். இவர் அண்ணாமலை தனக்குத்தானே சாட்டையால் அடித்து கொண்ட சம்பவம் வீரத்திற்கு புகழ்பெற்ற தமிழகத்தை இழிவுபடுத்தும் செயல் எனக்கூறி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதன்படி, இவர் அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். பின்னர், தான் எடுத்துவந்த சுமார் 150 முட்டைகளை எடுத்து, அதனை தனக்குத்தானே தலையில் அடித்து உடைக்கத் தொடங்கினார். முட்டைகளை உடைக்கும் போதும் அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஈடுபட்டார்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் போராட்டம் நடைபெற்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கரும்புகள் அதிக அளவில் லாரிகளில் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
- யானை ஒன்று காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இந்த சாலை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே வாகன போக்கு வரத்து நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக தாளவாடியில் கொள்முதல் செய்யப்படும் கரும்புகள் அதிக அளவில் லாரிகளில் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வரும் வாகனங்களை வழிமறித்து கரும்பு துண்டுகளை சாப்பிடு வதை வழக்கமாக வைத்துள்ளது. இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது.
அந்த வழியாக வந்த கார், அரசு பஸ், லாரிகளை வழி மறித்து கரும்பு கட்டு உள்ளதா என பார்த்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து அந்த யானை சாலையோரம் நடமாடிக் கொண்டிருந்தது. இதனால் அந்தப் பகுதியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வாகனங்களை சற்று தொலைவிலேயே நிறுத்தினர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே போக்குவரத்து சீரானது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு கட்டுகளுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் வாகனங்களை தற்போது வழிமறித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் வனப்பகுதி சாலையில் வாகனத்தை மிக வேகத்தில் இயக்க வேண்டும் அதிக ஒலி எழுப்பும் ஏர்கா ரன்களை ஒழிக்க கூடாது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.
- பெரியார், கலைஞருக்கு கிடைக்காத பாக்கியம் ஐயா நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது.
- இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதர் நல்லகண்ணு
சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. நல்லகண்ணுக்கு பழ.நெடுமாறன் நடத்தும் பாராட்டு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்லகண்ணுக்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கி சிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* ஐயா நல்லகண்ணுவிடம் வாழ்த்து பெறுவதற்காக வந்துள்ளோம்.
* தோழர் நல்லகண்ணுவின் வாழ்த்தை விட மிகப்பெரிய வாழ்த்து இல்லை.
* பெரியார், கலைஞருக்கு கிடைக்காத பாக்கியம் ஐயா நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது.
* பொதுவுடைமை, திராவிடம், தமிழ் தேசிய சிந்தனையாளர்கள் நிறைந்த மேடை இது.
* தோழர் நல்லகண்ணுவின் வாழ்த்தை விட மிகப்பெரிய ஊக்கம் எதுவும் இல்லை.
* 100 வயதை கடந்தும் அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார் நல்லகண்ணு.
* கட்சிக்காகவே உழைத்தார். உழைத்த பணத்தை எல்லாம் கட்சிக்காகவே கொடுத்தார். இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதர் நல்லகண்ணு
* கலைஞர் இவருக்கு அம்பேத்கர் விருது வழங்கினார். நான் இவருக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கினேன். நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கியதே எனக்கு கிடைத்த பெருமை என்று கூறினார்.






