என் மலர்tooltip icon

    இந்தியா

    • கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்திற்கான தங்களது வீட்டின் ஒரு பகுதியில் தேநீர்க்கடை, பெட்டிக்கடை ஆகியவற்றை அமைத்திருப்பார்கள்.
    • உரிமத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ’பாட்டிகளின் வடை கடைகள்’ வரலாற்றில் மட்டுமே இருக்கும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் இட்லிக்கடை, தேநீர்க்கடை உள்ளிட்ட 48 வகையான உற்பத்தித் தொழில்கள் செய்வதற்கும், தையல் தொழில், சலவைக்கடைகள் போன்ற 119 வகையான சேவைத் தொழில் செய்வதற்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கிராமப்புற பொருளாதாரத்தையும், கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை ஆகும்.

    கிராமப்புற கடைகளுக்கு ரூ.250 முதல் ரூ.50 ஆயிரம் வரை உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக வருவாயும், இலாபமும்

    தரக்கூடிய கடைகளுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்குவதில் தவறு இல்லை. ஆனால், வாழ்வாதாரத்திற்காக செய்யப்படும் தொழில் - வணிகத்திற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.

    கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்திற்கான தங்களது வீட்டின் ஒரு பகுதியில் தேநீர்க்கடை, பெட்டிக்கடை ஆகியவற்றை அமைத்திருப்பார்கள். அதேபோல், ஆதரவற்ற மூதாட்டிகள், பிறரை எதிர்பார்த்திருக்கக் கூடாது என்ற சுயமரியாதை உணர்வுடன் இடலி சுட்டு விற்பது, மாலையில் வடை சுட்டு விற்பது போன்ற தொழில்களை செய்வார்கள். இதற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது பெரும் அநீதி. இது அவர்களின் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக அழித்து விடும்.

    கிராமப்புற கடைகள் உரிமம் பெறுவதுடன் மற்றும் இந்த நடவடிக்கை நின்று விடப் போவதில்லை. உரிமம் பெற்ற கடைகளுக்கு தமிழக அரசின் சார்பில் எந்த உதவியும் செய்யப்படாது. அதே நேரத்தில் உரிமம் வைத்திருப்பவர்களைத் தேடித் தேடி தொழில் வரி வசூலிக்கும் நடவடிக்கைகளில் உள்ளாட்சிகள் ஈடுபடும். வீடுகளில் சிறிய அளவில் நடத்தப்படும் பெட்டிக்கடை, இட்லிக்கடை ஆகியவற்றுக்கு உரிமம் பெறப்பட்டால், அதையே காரணம் காட்டி, அந்த வீட்டுக்கான மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்ற மின்வாரியம் முயலும்.

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியையும், அதிகாரத்தையும் வழங்காமல் தன்னிடம் வைத்துக் கொள்ளும் திமுக அரசு, உள்ளாட்சிகளின் வருவாயைப் பெருக்குவதற்காக இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருப்பது குரூரமான நகைச்சுவை ஆகும். இந்த உரிமத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் 'பாட்டிகளின் வடை கடைகள்' வரலாற்றில் மட்டுமே இருக்கும்; நடைமுறையில் இருக்காது. எனவே, கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய சிறிய கடைகளுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிரதமர் மோடியிடம் மனு அளித்ததும் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ளது. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

    திருச்சி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சிபில் ஸ்கோர் பிரச்சனையால் விவசாய கடன்கள் பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக பிரதமர் மோடியிடம் மனு அளித்தேன்.

    * பிரதமர் மோடியிடம் மனு அளித்ததும் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    * பயிர்க்கடன் வழங்குவதில் பழைய நடைமுறையையே கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    * எங்கள் கூட்டணியில் பா.ஜ.க. உள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் யார் சேருவார்கள் என அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

    * தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ளது. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

    * காங்கிரஸ் தலைமையில் த.வெ.க. கூட்டணியா? - எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பூஞ்ச் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ராகுல் கந்து ஏற்றுள்ளார்.
    • குழந்தைகள் பட்டம் பெறும் வரை இந்த உதவித் தொகை தொடரும்

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டிய இந்தியா, இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்தது. அதன்படி முப்படைகளும் இணைந்து கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு 1.05 மணி முதல் 2.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் துல்லியமாக தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவித்தது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் கோபம் அடைந்த பாகிஸ்தான், இந்தியா- பாகி்ஸ்தான் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

    இந்த தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர்.70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள பூஞ்ச், ஸ்ரீநகர், ரஜோரி எல்லையில் வாழும் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களுடைய வீடுகள் சேதமடைந்தன.

    இதனையடுத்து பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா, "இந்திய - பாகிஸ்தான் சண்டையில் பூஞ்ச் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ராகுல் கந்து ஏற்றுள்ளார். இந்த உதவித் தொகைக்கான முதல் தவணை நாளை வழங்கப்படும். குழந்தைகள் பட்டம் பெறும் வரை இந்த உதவித் தொகை தொடரும்" என்று தெரிவித்தார். 

    • மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
    • ராமேசுவரத்தில் இருந்து டேவிட் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 9 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.

    ராமேசுவரம்:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. அத்துடன் மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

    இதனால் தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. அத்துடன் இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன், வலை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் செல்வதும் தொடர்கதையாக உள்ளது.

    ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 45 நாட்களில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதுடன் அவர்களின் பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த சில தினங்களாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பாக்ஜலசந்தி கடல் பகுதி கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டது. பாம்பனில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்ட நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான மீனவர்களே கடலுக்கு சென்றனர்.

    இந்தநிலையில் நேற்று காலை ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து மீன்துறை அலுவலக அனுமதியுடன் 350 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதில் பெரும்பாலான மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடைப்பட்ட பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    இன்று அதிகாலையில் அந்த பகுதிக்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டி படகில் போட்டுக்கொண்டு அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார்கள். அனைத்து படகுகளும் சென்றுவிட்டபோதும், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜஸ்டின் (வயது 51) என்பவருக்கு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

    அந்த படகில் தாவிக்குதித்த வீரர்கள், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலையுயர்ந்த மீன்களை அபகரித்துக்கொண்டனர். இது எங்கள் நாட்டு எல்லை என்று கூறிய அவர்கள், அந்த படகில் இருந்த உரிமையாளர் ஜஸ்டின், டெனிசன் (39), மோபின் (24), சைமன் (55), சேகர் (55) ஆகிய 5 மீனவர்களையும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.

    மேலும் அவர்களுக்கு சொந்தமான விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். முதல்கட்ட விசாரணைக்கு பிறகு அவர்கள் 5 பேரும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும்.

    இதற்கிடையே இன்று காலை ராமேசுவரத்தில் இருந்து டேவிட் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 9 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களின் படகை இன்று அதிகாலையில் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அதிலிருந்த 9 பேரையும் கைது செய்தனர்.

    இதற்கிடையே ஒரே நாளில் 14 பேர் கைது செய்யப்பட்ட தகவல் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இயற்கை சீற்றம், இலங்கை கடற்படையினர் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி தொழில் நாளுக்கு நாள் நசிந்துவரும் நிலையில் தொடர்ந்து மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது அதிர்ச்சி அளிப்பதாகவும், தாங்கள் வேறு தொழிலுக்கு செல்ல எண்ணுவதாகவும் தெரிவித்தனர்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழக மீனவர்களின் நலன் குறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை விசைப்படகுகளை குறிவைத்து மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் தற்போது நாட்டுப்படகையும் பறிமுதல் செய்ய தொடங்கியுள்ளனர்.

    எல்லை தாண்டியதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி தமிழக மீனவர்களை சிறைபிடிப்பு என்ற பெயரில் நடுக்கடலில் கடத்தி செல்லும் இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்ற மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.
    • தண்டோரா மூலம் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கி பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

    இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், கபினி அணையும் நிரம்பி விட்டன.

    நேற்று இரவு 8 மணிக்கு கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1 லட்சத்து 23 ஆயிரத்து 794 கன அடியாக அதிகரித்தது.

    இந்த தண்ணீர், கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

    நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி ஆற்றில் இருக்கரை யும் தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 1 லட்சத்து 05 ஆயிரம் கனஅடி வந்தது. பின்னர் படிபடியாக நீர்வரத்து உயர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.

    நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரில் முழ்கின. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 4-வது நாளாக மாவட்ட கலெக்டர் சதீஸ் தடை விதித்துள்ளார்.

    இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு கேட்டு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் காவிரி ஆற்றின் அழகை ரசிக்க மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். நீர்வரத்து அதிகரித்ததால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார் கொட்டாய், நாக மரை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து சென்று கண் காணித்து வருகின்றனர். மேலும் தண்டோரா மூலம் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மேலும் கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகளவு திறக்கப்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

    • கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தற்போது தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியரின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது.
    • சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கான 2,151 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்தல், மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல், அனைத்து குழந்தைகளுக்கும் சம வாய்ப்பினை வழங்குதல், சமூக மற்றும் பாலின இடைவெளிகளைக் குறைத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சமக்ரா சிக்ஷா திட்டம் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் பங்கு அறுபது விழுக்காடு எனவும், மாநில அரசின் பங்கு நாற்பது விழுக்காடு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சமக்ரா சிக்ஷா நிதி குறித்து அண்மையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, தமிழ்நாடு அரசு முன்மொழிக் கொள்கையை பின்பற்றாததன் காரணமாக 2024-2025 ஆம் ஆண்டு சம்கரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 2,151 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதியை நம்பி கிட்டத்தட்ட 65 லட்சம் மாணவ, மாணவியர் தனியார் பள்ளிகளில் கல்வி பெற்று வருவதோடு, 6 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பயனடைந்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தின்கீழான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப் பணி உள்ளிட்ட பல பணிகள் முடங்கிப் போயுள்ளன.

    மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த ஆண்டு 25 விழுக்காடு மாணவ, மாணவியரை தனியார் பள்ளிகளில் சேர்க்க இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தற்போது தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியரின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய அரசின் நிபந்தனைகளை மாநில அரசு ஏற்காதது என்பது மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்சனை. இந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி நிதியை விடுவிக்காமல் இருப்பது அப்பாவி ஏழை எளிய மாணவ, மாணவியரின் கல்வியையும், ஆசிரியர்களையும் பாதிக்கும் செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கல்வி உரிமைச் சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.

    சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் நிதியை விடுவிக்காதது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் ஏழையெளிய மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் ஆசிரியர்களை பாதிக்கும் செயல் என்பதைக் கருத்தில் கொண்டு, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கான 2,151 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று மத்திய அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையானது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.

    வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,160-க்கும், ஒரு சவரன் ரூ.73,280-க்கு விற்பனையாகிறது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    27-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    26-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    25-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680

    24-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-07-2025- ஒரு கிராம் ரூ.126

    27-07-2025- ஒரு கிராம் ரூ.126

    26-07-2025- ஒரு கிராம் ரூ.126

    25-07-2025- ஒரு கிராம் ரூ.128

    24-07-2025- ஒரு கிராம் ரூ.128

    • இயல்பான அளவான 418.9 மி.மீ.யை விட அதிகமாக 447.8 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
    • அருணாசல பிரதேசம், அசாம், பீகார், டெல்லி, மகாராஷ்டிரா, லட்சத்தீவுகள் போன்றவை 20 முதல் 59 சதவீதம் வரை குறைவான மழைப்பொழிவை பெற்று இருக்கின்றன.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த பருவமழை இதுவரை இயல்பை விட 7 சதவீதம் அதிகம் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    அந்தவகையில் இயல்பான அளவான 418.9 மி.மீ.யை விட அதிகமாக 447.8 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

    அதேநேரம் இது பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையே மிகப்பெரிய மாறுபாடுகளை கொண்டுள்ளது.

    அந்தவகையில் ராஜஸ்தான், லடாக், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் சிக்கிம் மாநிலங்கள் மிக அதிக மழை பெற்றுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் 384.7 மி.மீ. (இயல்பான அளவு 200.4 மி.மீ.) மழை பெய்திருக்கிறது. இதைப்போல லடாக் 30 மி.மீ. மழை (10.7 மி.மீ.) பெற்றிருக்கிறது.

    மேலும் மத்திய பிரதேசம், குஜராத், தாத்ரா-நாகர் ஹவேலி, டையூ-டாமன், ஜார்கண்ட் மற்றும் அசாம் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 20 முதல் 59 சதவீதம் வரை அதிக மழை பெற்றுள்ளன.

    உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இயல்பான மழை அளவை 19 சதவீத சராசரியில் பெற்றிருக்கின்றன.

    அதேநேரம் அருணாசல பிரதேசம், அசாம், பீகார், டெல்லி, மகாராஷ்டிரா, லட்சத்தீவுகள் போன்றவை 20 முதல் 59 சதவீதம் வரை குறைவான மழைப்பொழிவை பெற்று இருக்கின்றன.

    இந்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.

    • சிறுவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றுள்ளனர்.
    • சிறுவர்கள் 2 பேரும் அந்த வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி திறக்க முயன்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் மீது பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இவர்கள் சமீபத்தில் சாதி மோதலை உண்டாக்கும் வகையிலான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதாக 2 சிறுவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் அதன்பின்னர் ஜாமினில் வெளியே வந்து வெளியூருக்கு சென்றுவிட்டனர்.

    அவர்களை சிறிது காலம் வெளியூரில் இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் 2 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு ஊருக்கு வந்துள்ளனர்.

    அப்போது முக்கூடலில் பானி பூரி கடை நடத்தி வரும் பாப்பாக்குடி சமத்துவபுரம் இந்திரா காலனியை சேர்ந்த சக்திகுமார்(வயது 22) என்பவரிடம் பானிபூரி வாங்கிவிட்டு சென்றுள்ளனர்.

    இதனிடையே அவர்கள் வீட்டுக்குள் செல்வதற்குள் போலீசார் அங்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பானிபூரி கடைக்காரரான சக்திகுமார் தான் தங்கள் வருகையை போலீசாருக்கு தெரிவித்துள்ளார் என்று 2 சிறுவர்களும் கருதி உள்ளனர். இதனால் நேற்று இரவு முக்கூடல் அருகே உள்ள ரஸ்தாவூருக்கு 2 சிறுவர்களும் மதுபோதையில் சென்று உள்ளனர்.

    சமீபகாலமாக ரஸ்தாவூரில் வசித்து வரும் சக்திகுமாரிடம் சென்று பேச வேண்டும் என்று கூறி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள குளத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து தங்களை போலீசில் எப்படி மாட்டிவிடலாம் என்று கூறி சக்திகுமாரை காலில் வெட்டியுள்ளனர். காயம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடி வரவே அப்போது இரவு நேர ரோந்து போலீசார் அங்கு வந்து உள்ளனர்.

    தகவல் அறிந்து 2 சிறுவர்களையும் பிடிக்க முயன்றனர். அப்போது சிறுவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றுள்ளனர். இதனால் 2 போலீசாரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கவே, அதில் ரஞ்சித் என்ற காவலருக்கு காலில் காயம் ஏற்பட்டது. தகவல் கிடைக்கப்பெற்று துப்பாக்கியுடன் பாப்பாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அங்கு விரைந்து சென்றார்.

    அவர் 2 சிறுவர்களையும் பிடிக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த சிறுவர்கள் அரிவாளால் வெட்ட முயன்றனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அங்கிருந்து தப்பி ஓடி அருகில் இருந்த ஒரு பெண்ணின் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

    ஆனாலும் அந்த சிறுவர்கள் 2 பேரும் அந்த வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி திறக்க முயன்றனர். இதனால் அசாதாரண சூழல் அங்கு நிலவியதால் தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கியால் அந்த சிறுவர்களை நோக்கி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சுட்டார். அதில் ஒரு சிறுவனுக்கு நெஞ்சு பகுதி வழியாக குண்டு துளைத்து சென்றது. மற்றொரு சிறுவன் துப்பாக்கி குண்டு படாமல் தப்பித்து விட்டான்.

    இந்த சம்பவங்கள் குறித்து அறிந்த கூடுதல் காவல் படையினர் அங்கு காயத்துடன் இருந்த சக்திகுமார், மார்பு பகுதியல் குண்டு பாய்ந்து காயமடைந்த சிறுவன், காயம் அடைந்த காவலர் ரஞ்சித் உள்ளிட்டோரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதில் குண்டு காயம் பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவன் மீது பெட்ரோல் குண்டு வீசியது உள்பட 4 வழக்குகளும், தப்பி ஓடிய சிறுவன் மீது கொலை, பெட்ரோல் குண்டு வீசியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.

    இதையடுத்து தப்பி ஓடிய சிறுவனை இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் இருக்கும் வார்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த பகுதியிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில், டி.எஸ்.பி.க்கள் சதீஸ்குமார், சத்தியராஜ் ஆகியோர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கொடூர ஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்த சுபாசினியின் பெற்றோர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
    • ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இந்திய சட்ட ஆணையம் வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகமங்கலத்தை சார்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் அவர்கள் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    வெவ்வேறு சமூகங்களைச் சார்ந்த கவினும் சுபாசினி என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் இதனையறிந்த சுபாசினியின் பெற்றோர் கவின்குமாரையும் அவரது பெற்றோரையும் எச்சரித்துள்ளனர். அதனால் கவின்குமாரின் பெற்றோர் கவின்குமாரை கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கவின் விபத்தில் சிக்கி திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாத்தாவை பார்ப்பதற்காக ஊருக்கு சென்றுள்ளார். அப்போது திருநெல்வேலியில் சித்த மருத்துவராக தான் பணியாற்றும் தனியார் சிகிச்சை மையத்தில் கவினின் தாத்தாவிற்கு சிகிச்சை அளிக்கலாம் என சுபாஷினி தெரிவித்ததன் அடிப்படையில் சுபாஷினியிடம் ஆலோசனை பெறுவதற்கு கவின் அவரது அம்மா மற்றும் மாமா ஆகிய மூவரும் சிகிச்சை மையத்திற்கு சென்றுள்ளனர்.

    சிகிச்சை மையத்தின் உள்ளே சுபாஷினியிடம் கவினின் அம்மாவும் மாமாவும் பேசிக் கொண்டிருந்தபோது வெளியே நின்று கொண்டிருந்த கவினை சுபாஷினியின் தம்பி சுர்ஜித் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று தனது வீட்டு வாசலில் வைத்து கவினை வெட்டி படுகொலை செய்துள்ளான்.

    பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்ததாக தெரியவருகிறது.

    இந்த கொடூர ஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்த சுபாசினியின் பெற்றோர் இன்னும் கைது செய்யப்படவில்லை. காவல்துறையில் பணியாற்றும் அவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், அவர்களை காவல்துறை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். மேலும் அவர்கள் காவல்துறையில் பணியாற்றுவதால் இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் ஆதிக்க சாதி வெறிக் கொலைகள், சாதிவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவது வேதனையளிக்கிறது. ஆதிக்க சாதிவெறியாட்டத்தைத் தடுப்பதற்கு காவல்துறையில் ஒரு தனி நுண்ணறிவுப் பிரிவை உருவாக்க வேண்டும் என்னும் கோரிக்கையை மீண்டும் மீண்டும் முன்வைக்கிறோம்.

    ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இந்திய சட்ட ஆணையம் வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

    ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    கவின் செல்வகணேஷை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மனம்விரும்பி வாழ்க்கையைத் தொடங்கும் இணையர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யவும் வேண்டியது ஆளும் அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும்.
    • சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டுமெனவும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின்குமார் அவர்கள் பட்டப்பகலில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஆற்ற முடியாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பியின் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

    நவீனமும், அறிவியல் தொழில்நுட்பமும் உச்சப்பட்ச வளர்ச்சி பெற்றிருக்கும் தற்காலத்தில் நடந்தேறும் இத்தகைய ஆணவப் படுகொலைகள் நாகரீகச் சமுதாயத்தையே முற்றுமுழுதாகக் கேள்விக்குள்ளாக்குகின்றன. தமிழினத்தின் ஓர்மையைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சாதிய வன்முறை வெறியாட்டங்களும், கொடுங்கோல் செயல்பாடுகளும் ஒருநாளும் ஏற்புடையதல்ல. சக மனிதரின் உயிரைப் பறிக்கும் கொடுஞ்செயல்கள் மனிதத்தன்மையே அற்றவை என்பதைத் தாண்டி, சாதியின் பெயரால் அவை நிகழ்த்தப்படுவது ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்கின்றன.

    ஒரு ஆணும், பெண்ணும் மனமொத்து விரும்பி, வாழ்க்கையைத் தொடங்குவதற்கு எதிராக சாதியை நிறுத்துவதும், அந்த சாதிக்காகப் பச்சைப்படுகொலைகளை செய்வதும் மிருகத்தனத்தின் உச்சமாகும். சமத்துவத்திற்கும், சமூக அமைதிக்கும் எதிரான இத்தகைய சாதிய ஆணவப் படுகொலைகள் நம்மைக் கற்காலத்திற்கு இழுத்துச் செல்கின்றன. ஆகவே, சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகளும், ஆணவக்கொலைகளும் முற்றாக நிறுத்தப்பட ஆளும் ஆட்சியாளர்கள் கடும் நடவடிக்கைகளையும், முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டியது பேரவசியமாகிறது. அந்தவகையில், சாதிய ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றவும், மனம்விரும்பி வாழ்க்கையைத் தொடங்கும் இணையர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யவும் வேண்டியது ஆளும் அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும்.

    ஆகவே, தம்பி கவின்குமார் அவர்கள் ஆணவப் படுகொலையில் தொடர்புடைய கொலையாளி சுர்ஜித், அதற்குத் துணைபோன பெற்றோரையும் சிறைப்படுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும், சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டுமெனவும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேசிய பாதுகாப்பு விஷயங்களில் இவ்வளவு திறமையற்ற ஒரு பிரதமரை இந்த நாடு ஒருபோதும் பார்த்ததில்லை.
    • ட்ரம்ப் முன்பு நின்றதும் பிரதமர் மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்கி விடுகிறது.

    பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் இன்று முதல் விவாதத்தை தொடங்க இருப்பதாக ஆளும் கட்சி தெரிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டன.

    அதன்படி மக்களவையில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

    இந்நிலையில், நேற்று ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, "பஹல்காம் படுகொலைக்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். 4 பயங்கரவாதிகள் இந்தியாவில் நுழைந்து, துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் கொன்றுவிட்டு எவ்வித பயமும் இல்லாமல் அங்கிருந்து வெளியேறினர். அப்போது CISF, PSF மற்றும் நமது நாட்டின் பாதுகாப்பு எந்திரம் எங்கே இருந்தது?

    தேசிய பாதுகாப்பு விஷயங்களில் இவ்வளவு திறமையற்ற ஒரு பிரதமரை இந்த நாடு ஒருபோதும் பார்த்ததில்லை. இப்போது, தனது தோல்வியை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, அவர் தன்னைப் புகழ்ந்து பேசுவதில் மும்முரமாக இருக்கிறார்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய மக்கள் அனைவரும் உங்களுடன் ஒற்றுமையுடன் நின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இறுதியாக மீட்கப்படும் என்றும் நாங்கள் நம்பினோம். ஆனால், நீங்கள் பாதியிலேயே சண்டையை நிறுத்திவிட்டீர்கள்.

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னது தவறான தகவல் என்று X தளத்தில் பதிவிடக்கூட பிரதமர் மோடியால் ஏன் முடியவில்லை?

    ட்ரம்ப் முன்பு நின்றதும் பிரதமர் மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்கி விடுகிறது. உயரம் 5 அடியாக குறைந்து விடுகிறது. ஏன் இவ்வளவு பயம்?" என்று தெரிவித்தார்.

    ×