என் மலர்
இந்தியா
- தி.மு.க. அரசு தோல்வி பயத்தில் நடுநடுங்கி போய் உள்ளது.
- 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு அவசியமே இல்லை.
நெல்லை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பிரசார பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வரவேற்பு எங்கள் கூட்டணியின் வெற்றிக்கான அறிகுறி ஆகும்.
கள்ளக்குறிச்சி பகுதியில் ஒரு கிராமத்தில் சுற்றுப் பயணம் சென்றபோது அங்கு மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. ஆரம்ப சுகாதார நிலைய வசதி கூட இல்லை. வீடுகளில் தீபம் ஏற்றுவது போலவே கார்த்திகை நாளன்று கோவில்களிலும் தீபம் ஏற்றப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்றுவதில் யாருக்கு என்ன பிரச்சனை இருக்கிறது? முதலில் அந்த மலைக்கு பிரச்சனை செய்தார்கள். ஆனால் குன்றம் குமரனுக்கு என தீர்ப்பு வந்தது .
முதலமைச்சரின் காவல்துறை எந்த வேலையும் செய்யவில்லை. கோவில்களுக்கு எதிரான வேலை என்றால் முதல் ஆளாக வந்து விடுகிறார்கள். நேற்று திருப்பரங்குன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அறநிலையத்துறை சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்துமேல் முறையீடு செய்துள்ளார்கள். பிரச்சனையை உருவாக்க வேண்டும். கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறது.
வாக்கு வங்கியை குறிவைத்து இது போன்ற நடவடிக்கையை தி.மு.க அரசு மேற்கொள்கிறது. தி.மு.க. அரசு ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றினால் கலவரம் வரும் என்று பேசுகிறார். அதற்கான வாய்ப்பே இல்லை.
தீபம் ஏற்றுவதற்கு இஸ்லாமியர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு 2 மதத்தினரும் ஒன்றாகவே இருக்கின்றனர். முதலமைச்சரின் பிரித்தாலும் சூழ்ச்சியினாலேயே தற்போது இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானத்தை வேரறுப்போம் என்று கூறியுள்ளார். அதனை முருகன் பார்த்துக் கொள்வார். இன்று 3 மணி வரை நேரம் இருக்கிறது. நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பரணி தீபத்தை மலை மீது ஏற்றுவோம். இந்த தீர்ப்புக்கு அறநிலையத்துறை தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தி.மு.க. அரசு தோல்வி பயத்தில் நடுநடுங்கி போய் உள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு அவசியமே இல்லை. அவ்வாறு பிறப்பித்தாலும் 3 பேர் வரை செல்வதற்கு அனுமதி உள்ளது.
ஓ.பி.எஸ். டெல்லிக்கு சென்று வந்தது தெரியும். ஆனால் எதற்காக சென்று வந்தார் என்பது எனக்கு தெரியாது. தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும். அதனை வரவேற்கும் கட்சிகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நமது கொடி பறக்கும். இனி யாருடனும் ரகசிய சந்திப்புகள் என்பது கிடையாது. நேரடி சந்திப்பு தான் இருக்கும். தமிழக வெற்றிக் கழகத்தில் தி.மு.க. அமைச்சர்கள் சேருவார்கள் என்று ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். அதே போல் பா.ஜ.க.விற்கும் வருவார்களா? என்று கேட்கிறீர்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
- மதுரை ஐகோர்ட் வளாகத்திற்கு மட்டும் தான் மத்திய படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
- தனி நீதிபதியின் உத்தரவால் மத பிரச்சனை ஏற்படும் நிலை உள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அதிகாரிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேற்று பிற்பகலில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் வக்கீல் அருண் சுவாமிநாதன் உள்ளிட்டோர் முறையிட்டனர்.
அதன் பேரில் நேற்று மாலை இந்த வழக்கு அவசர மனுவாக விசாரிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் ராம ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். அவர்களுக்கு மதுரை ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள மத்திய பாதுகாப்பு படையினர் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோவில் செயல் அலுவலர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நேற்று மதுரை ஐகோர்ட் நிர்வாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக முறையிடப்பட்டது.
இதையடுத்து அவர் இன்று இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்து இருந்தார். அதன் பேரில் இன்று நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு இந்த வழக்கு காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபத்தை தனி நபர்கள் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. மேலும் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தவருக்கு பாதுகாப்பாக மத்திய படை சி.ஐ. எஸ்.எப். செல்ல வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல.
மதுரை ஐகோர்ட் வளாகத்திற்கு மட்டும் தான் மத்திய படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வேறு பணிகளுக்கு அவர்களை அமர்த்த அதிகாரம் கிடையாது. மேலும் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சம்பந்தமாக ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த மலையில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக தனி நீதிபதி எந்த உத்தரவையும் பிறப்பிக்க அதிகாரம் இல்லை. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவு என்பது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவால் மத பிரச்சனை ஏற்படும் நிலை உள்ளது.
இதனால் அரசின் அச்சம் உண்மையாகி விட்டது. நேற்று திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டு காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தனி நீதிபதியின் உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. சட்டத்தை மீறி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கலாம், விளக்கம் கேட்கலாம். ஆனால் வேறு உத்தரவுகளை பிறப்பிக்க இயலாது. திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படும் என்பதால் தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக 30 நாட்கள் அவகாசம் இருந்தும் தனி நீதிபதி அவசரம் காட்டுவது ஏன்.
இவ்வாறு அரசு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது.
தொடர்ந்து மனுதாரர் தரப்பில் கூறுகையில், திருப்பரங்குன்றத்தில் பிரிட்டிஷ் காலத்தின்போது தீபத்தூணில் தீபம் ஏற்றுவது நிறுத்தப்பட்டது. அதனை நாம் ஏன் பின்பற்ற வேண்டும். தீபம் ஏற்றுவது என்பது தமிழர்களின் மரபு கலாச்சாரம், பழக்கம், பண்பாடு ஆகும்.
ஐகோர்ட் உத்தரவின்படி தீபம் ஏற்ற செல்லும்போது போலீசார் பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவித்தனர். இதன் காரணமாக தனி நீதிபதியிடம் முறையிட்ட பின் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் சென்றோம். ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாததால் தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தோம் என்றனர்.
பின்னர் நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கின் உத்தரவு நகல் கொடுத்த பின் 13 மணி நேரத்திற்கு பின் மேல்முறையீடு தாக்கல் செய்தது ஏன்? நேற்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு வந்தபோதும் கோவில் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டாமா? ஒரு மதத்தின் நம்பிக்கையை தடுப்பது எப்படி சமூக நல்லிணக்கம் ஆகும்.
திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன்? எப்போது பிறப்பிக்கப்பட்டது? அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூண் கோவிலை விட பழைமையானதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பு தீபத்தூண் பழையானது தான். ஆனால் கோவிலை விட பழைமையானது தான் என தெரியவில்லை.
தொடர்ந்து நீதிபதிகள் திருப்பரங்குன்றம் மலையில் யாருக்கும் பாதிப்பில்லாமல் தீபம் ஏற்றுவதை ஒரு தரப்பினர் ஏன் தடுக்க வேண்டும்.
மத நல்லிணக்கம் என்பது ஒருவரை, மற்றொருவர் எதுவும் செய்யவிடாமல் தடுப்பதில் அல்ல. இருதரப்பும் இணைந்து தங்களுக்கானவற்றை செய்து கொள்வதிலும், செய்ய அனுமதிப்பிதிலும் தான் உள்ளது. இந்த வழக்கின் உத்தரவு இன்றே பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
- கோவில்களில் பாதுகாப்பு-கூட்டத்தை கட்டப்படுத்துவது காவல்துறை மற்றும் தேவசம்போர்டின் பொறுப்பு.
- பவுன்சர்களை நியமிப்பது தவறான நடைமுறை என்று மனுதாரர் வாதிட்டார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திரிபுனித்துராவில் பூர்ணத்ரயீசர்கோவில் இருக்கிறது. மிகவும் பழமையான விஷ்ணு கோவிலான இங்கு பெரிய தீபம் ஏற்றும் விழாவில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் பவுன்சர்கள் நியமிக்கப்பட்டதற்கு எதிராக மராடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் எனபவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு ஐகோர்ட்டு நீதிபதிகள் ராஜா, விஜயராகவன், ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மற்றும் தேவசம்போர்டு தரப்பில் ஆஜரானவர்கள் வாதிட்டனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்தும் பவுன்சர்கள் கருப்பு ஆடைகள், பேண்ட் மற்றும் காவி சால்வைகள் அணிந்திருந்தனர். அவர்கள் அணிந்திருந்த டி-சர்ட்டில் பவுன்சர் என்று எழுதப்பட்டிருந்தது. கோவில்களில் பாதுகாப்பு-கூட்டத்தை கட்டப்படுத்துவது காவல்துறை மற்றும் தேவசம்போர்டின் பொறுப்பு. அதற்காக பவுன்சர்களை நியமிப்பது தவறான நடைமுறை என்று மனுதாரர் வாதிட்டார்.
அதே நேரத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பவுன்சர்கள் அனுப்பப்பட்டனர் என்று தேவசம்போர்டு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், கோவில்களில் பாதுகாப்புக்காக மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பவுன்சர்களை நியமிக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் பவுன்சர் என்று எடிதப்பட்டிருக்கும் டிசர்ட் அணிந்தும், பொருத்தமற்ற உடைகளை அணிந்தும் பணியாளர்கள் மற்றும் பவுன்சர்களை கோவில்களில் பாதுகாப்பு பணியில் நியமிக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு தெளிவுபடுத்தியது.
- சிறுமி கடைசியாக ஒரு பெண்ணுடன் மாடிப்படி ஏறி சென்றது தெரியவந்தது.
- எதுவும் நடக்காதது போல கதவை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அரியானா மாநிலம் பானிபட் அருகிலுள்ள நவுலதா கிராமத்தில் ஒரு வீட்டில் திருமண விழா நடந்தது. விழா கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்த நிலையில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை திடீரென காணவில்லை.
சிறுமியின் உறவினர்கள் அவளை தேடினர். திருமண மண்டபத்தில் பல பகுதிகளில் சிறுமியை தேடியும் அவளை காணவில்லை. இதனால் திருமண வீட்டில் பரபரப்பு உண்டானது. சிறுமியை காணாததால் பெற்றோர், உறவினர்கள் கவலை அடைந்தனர்.
இதனிடையே மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள தண்ணீர் நிரம்பிய பெரிய வாளியில் சிறுமி தலை நீரில் மூழ்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பளிச் என்று உடை அணிந்து அங்கும் இங்கும் விளையாடி திரிந்த சிறுமி அலங்கோலமாக இறந்து கிடப்பதை பார்த்து உறவினர்கள் கதறினர்.
உடனடியாக என்.சி. மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி குழந்தையின் தாத்தா பால் சிங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வந்து விசாரணை நடத்தியபோது அந்த சிறுமி நீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். சிறுமி திருமண வீட்டில் விளையாடியது, அவர் யார் யாருடன் பேசினார் என வீடியோ பதிவுகளை வைத்து விசாரித்தனர்.
அப்போது சிறுமி கடைசியாக ஒரு பெண்ணுடன் மாடிப்படி ஏறி சென்றது தெரியவந்தது. அந்த பெண் திருமண வீட்டினரின் அத்தை பூனம் (வயது 34) என்றும் தெரியவந்தது. உடனே பூனத்தை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. பூனம் தன்னைவிட யாரும் அழகாக இருக்கக் கூடாது என்ற பொறாமையில் சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. திருமண வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியின் அழகு கொலையாளி பூனத்துக்கு பொறாமையை ஏற்படுத்தியது.
தனது குடும்பத்தில் இப்படி ஒரு அழகான சிறுமியா என்று அவளிடம் பேச்சு கொடுத்த பூனம் பின்னர் அவளை ஏமாற்றி மாடிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியிடம் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவருமாறு கூறியுள்ளார்.
தன் உயிரையே பறிக்கத்தான் தண்ணீர் கொண்டுவர பூனம் சொல்கிறார் என்பதை அறியாத சிறுமி வாளியில் தண்ணீரை மாடிக்கு கொண்டு சென்றார். ஒரு அறைக்குள் சிறுமியை அழைத்து சென்ற பூனம் வாளியில் உள்ள தண்ணீருக்குள் சிறுமியின் தலையை அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் எதுவும் நடக்காதது போல கதவை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் பூனம் இதுபோன்று 3 குழந்தைகளை கொலை செய்தது தெரியவந்தது. பூனத்துக்கு 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது. இயல்பாகவே பூனத்துக்கு தன்னைவிட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்ற கர்வம் இருந்தது. 2023-ம் ஆண்டில் அவரது மைத்துனியின் 9 வயது சிறுமி இஷிகாவை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றார். இதை அவரது 3 வயது மகன் சுபத் பார்த்து விட்டான்.
அவன் இஷிகா கொலையை வெளியில் சொல்லிவிடுவான் என பயந்து சுபத்தையும் கொலை செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது தாய் வீட்டில் உறவினரின் 6 வயது மகள் ஜியாவை நீரில் மூழ்கடித்து கொன்றார். அடுத்தடுத்த இந்த கொலைகளை உறவினர்கள் தற்செயலாக நடந்த விபத்து என்று நம்பப்பட்ட நிலையில் சிறுமி கொலை தொடர்பாகப் பூனத்திடம் போலீசார் விசாரித்த போது, பொறாமையின் காரணமாகத் தான் இந்த கொலைகளைச் செய்ததாக ஒப்புக் கொண்டார். இந்த கொடூர சம்பவம் அரியானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
- உயிரிழந்த சரவணனின் உடல் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
- ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சரவணனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
வயது மூப்பின் காரணமாக இன்று காலை உயிரிழந்த சரவணனின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- கருமேகங்கள் திரண்டு வானம் இருண்டு கனமழை கொட்டி தீர்த்தது.
- சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தாலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை கடந்த 30-ந்தேதி முதல் வட தமிழகத்தில் பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மட்டுமின்றி ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 3 நாட்கள் பலத்த மழை பெய்தது.
30-ந் தேதி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 1-ந் தேதி முதல் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கியது. பகலும் இரவாக காட்சிஅளித்தது. கருமேகங்கள் திரண்டு வானம் இருண்டு கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் சென்னை வாசிகள் வீடுகளில் முடங்கினர். டிட்வா புயல் சென்னை அருகே மையம் கொண்டதால் விட்டு விட்டு கனமழை பெய்தது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இன்று காலை 7 மணி வரை மழை தூறிக் கொண்டே இருந்தது. சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தாலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி நின்றதாலும், ஒரு சில பகுதிகளில் மழைநீர் வடியாததாலும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று மழை நின்றதால் சூரிய பிரவேசம் இருந்தது. சென்னை மக்கள் வெயிலை இன்று பார்த்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். தினமும் பயன்படுத்திய துணிமணிகள் எல்லாம் வீடுகளில் உலர வைக்க முடியாமல் இருந்தனர்.
வெயில் இன்று தலைகாட்டியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். பயன்படுத்திய உடைகளையெல்லாம் துவைத்து வெயிலில் காய வைத்தனர்.
மழையால் சாலையோர கடைகள் காணாமல் போனது. காய்கறி, பழங்கள் விற்கும் சிறு வியாபாரிகள் இன்று மீண்டும் விற்பனையை தொடங்கினர். சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் கனமழை மற்றும் குளிரால் வெயிலை தேடும் நிலை ஏற்பட்டது.
- PM SHRI நிதி விடுவிப்பு தொடர்பாக கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார்.
- சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய தொடர்ந்து மறுத்தது. இதனால் மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.
இந்தத் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழக அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதே நடைமுறையை கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பின்பற்றியது.
இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதம் தெரிவித்து பின்னர் எழுந்த எதிர்ப்பினால் பின்வாங்கியது.
இந்நிலையில், மக்களவையில், PM SHRI நிதி விடுவிப்பு தொடர்பாக கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "மத்திய அரசின் கல்வி நிதியைப் பெற சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நிபந்தனைகளை ஏற்கும் பட்சத்தில், நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்று தெரிவித்தார்.
- டேர்ம் காப்பீடு என்பது தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆயுள் காப்பீட்டு வடிவமாக மாறியுள்ளது.
- முக்கியமாக இணையத்தின் மூலம் காப்பீடு வாங்கும்போது பல நன்மைகள் கிடைக்கின்றன.
இன்றைய வேகமான வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் எப்போது நேரும் என்பதை யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது. குடும்பத்தின் நிதி பாதுகாப்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை தூண்களில் ஒன்று.
அந்தப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று கால காப்பீட்டுத் திட்டம் ஆகும். குறிப்பாக, குறைந்த பிரீமியத்தில் அதிக பாதுகாப்பு வழங்கும் தன்மை காரணமாக, டேர்ம் காப்பீடு (Term Insurance) என்பது தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆயுள் காப்பீட்டு வடிவமாக மாறியுள்ளது.
அதோடு, ஆன்லைன் காப்பீட்டு தளங்களின் வளர்ச்சியால், பலரும் சில நிமிடங்களில் ACKO Term Insurance போன்ற திட்டங்களை ஒப்பிட்டு வாங்க முடிகிறது.
கால அடிப்படையிலான காப்பீடு என்றால் என்ன?
காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு வழங்கும் வாழ்க்கை காப்பீட்டை கால காப்பீடு என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை பாதுகாப்பு அளிக்கும் ஒப்பந்தமாகும். அந்தக் காலத்திற்குள் காப்பீடு வாங்கிய நபர் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு முன்னதாக ஒப்புக்கொண்ட தொகை வழங்கப்படும்.
இது ஒரு முதலீட்டு திட்டம் இல்லாததால், முழுக்க முழுக்க பாதுகாப்பையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அதனால் பிரீமியம் குறைவாகவும் பாதுகாப்பு அதிகமாகவும் இருக்கும். குடும்பத்திற்கு நிதிச் சுமை ஏற்படாமல் காக்கும் மிக வலுவான ஓர் ஆதாரமாக இது செயல்படுகிறது.
ஏன் டேர்ம் காப்பீடு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது?
குறைந்த செலவில் அதிக பாதுகாப்பு
மற்ற வாழ்க்கை காப்பீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது, கால காப்பீட்டுத் திட்டங்களில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை மிகவும் குறைவு. காப்பீட்டு நிறுவனத்துக்கு முதலீட்டு சுமை இல்லாததால், முழு பாதுகாப்பையும் சிறிய பிரீமியத்தில் வழங்க முடிகிறது.
உதாரணமாக, மாதம் சில நூறு ரூபாய்களில் கூட ஒரு குடும்பம் கோடிக்கணக்கான பாதுகாப்பை பெற முடியும். இதுவே இந்த திட்டத்தை சாதாரண வருமானம் உள்ளவர்கள் முதல் நடுத்தர குடும்பங்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாக மாற்றுகிறது.
குடும்பத்திற்கான நிதி பாதுகாப்பு
ஒரு குடும்பத்தின் வருமானம் வழங்கும் நபர் திடீரென இல்லாமல் போனால், அது ஒரு பெரிய உணர்ச்சி இழப்பாக மட்டுமல்லாமல் நிதி ரீதியாகவும் பெரும் சுமையாகிவிடும்.
கால காப்பீடு இருப்பதால் குடும்பம்:
●தினசரி வாழ்க்கைச் செலவு
●வீட்டுக் கடன் தொகை
●குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி செலவுகள்
●அவசர மருத்துவச் செலவுகள்
●நெருக்கடி நேர நிதித் தேவைகள்
இவற்றை சமாளிக்க தேவையான பாதுகாப்பு பெறும்.
அத்தகைய பாதுகாப்பு இல்லாத குடும்பங்கள் மிகப்பெரிய சிரமங்களை சந்திக்க நேரிடும்.
வெளிப்படையான ஒப்பந்தம்
இந்த திட்டம் முழுக்க பாதுகாப்பைக் மட்டுமே வழங்குவதால், இதில் மறைமுக நிபந்தனைகள் இல்லை. எந்த சூழ்நிலையில் எவ்வளவு பாதுகாப்பு கிடைக்கும், claim செய்யும்போது என்ன செய்ய வேண்டும், எத்தகைய ஆவணங்கள் வேண்டும் ஆகிய தகவல்கள் தெளிவாக இருக்கும்.
இதனால் குழப்பமும் தவறான புரிதலும் இல்லாமல், வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் தேர்வு செய்ய முடிகிறது.
கிளைம் வழங்கும் விகிதம் உயர்வு
இன்றைய காப்பீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் கிளைம் வழங்கும் விகிதத்தில் மிக உயர்ந்த நிலையைப் பெற்று வருகின்றன.
இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கின்றது. குடும்பம் claim செய்யும்போது தாமதம் இல்லாமல் நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகாலமானவர்களை இந்த காப்பீடு வாங்க தூண்டும் முக்கிய காரணமாக உள்ளது.
சரியான கால காப்பீட்டு திட்டத்தைத் தேர்வு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை
காப்பீட்டு தொகை
இது திட்டத்தின் மைய அம்சம். குடும்பத்தின் எதிர்கால நிதி தேவைகளைப் பாதுகாக்கும் அளவிற்கான பாதுகாப்பு தொகையைத் தேர்வு செய்ய வேண்டும். வருட வருமானத்தின் குறைந்தது பத்து முதல் பதினைந்து மடங்கு வரை பாதுகாப்பு வைத்துக்கொள்வது நல்லது.
காப்பீட்டு காலம்
உங்கள் வயது மற்றும் நிதி பொறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு காலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இளம் வயதில் வாங்கினால் பிரீமியம் மிகவும் குறைவாக இருக்கும். வயது அதிகரிக்கும்போது பிரீமியம் அதிகரிக்கும்.
பிரீமியம் தொகை
உங்கள் குடும்ப வருமானத்திற்கும் மாதாந்திர செலவுகளுக்கும் பொருந்தும் அளவில் பிரீமியத்தைச் செலுத்தக்கூடிய திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பலர் பிரீமியம் அதிகம் என தவறாக நினைக்கும் போதிலும், உண்மையில் இந்த திட்டம் மிகவும் ஏற்றது.
கூடுதல் பாதுகாப்பு (ரெய்டர்) சேர்த்தல்
தீவிர நோய் பாதுகாப்பு, விபத்து மரண பாதுகாப்பு, வருமான மாற்று பாதுகாப்பு போன்றவை சேர்த்தால் குடும்பத்திற்கு கூடுதல் நன்மை கிடைக்கும்.
கிளைம் வழங்கும் விகிதம்
உயர்ந்த கிளைம் விகிதம் கொண்ட நிறுவனத்தைத் தேர்வு செய்வது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.
நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் சேவை
காப்பீட்டு நிறுவனம் எவ்வளவு விசுவாசத்துடன் செயல்படுகிறது, வாடிக்கையாளர் சேவை எப்படி உள்ளது, claim செய்யும் போது ஆதரவு கிடைக்குமா என்பதைப் பாருங்கள்.
ஏன் பலரும் இணையத்தின் மூலம் டேர்ம் காப்பீடு வாங்குகின்றனர்?
நவீன காலத்தில் பெரும்பாலானவர்கள் life insurance online வாங்குவதையே விரும்புகிறார்கள், ஏனெனில் அதில் வேகமும் வசதியும் அதிகம், செலவும் குறைவு. இதற்கு முக்கிய காரணம், டிஜிட்டல் வழியில் கிடைக்கும் வசதியும் வெளிப்படைத்தன்மையும். முன்னொரு காலத்தில் காப்பீடு வாங்குவதற்கு முகவரை சந்திக்க வேண்டும், பல ஆவணங்களை உடன் கொண்டு செல்ல வேண்டும், பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று அது சில நிமிடங்களுக்குள் முடியும் தன்மைக்கு மாறியுள்ளது.
முக்கியமாக இணையத்தின் மூலம் காப்பீடு வாங்கும்போது பல நன்மைகள் கிடைக்கின்றன:
திட்டங்களை ஒரே இடத்தில் ஒப்பிடும் வசதி
ஒரே இணையப் பக்கத்தில் பல நிறுவனங்களின் கால காப்பீட்டு திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கலாம். பாதுகாப்பு தொகை, பிரீமியம், காலம், நிபந்தனைகள், கூடுதல் பாதுகாப்புகள் போன்றவற்றை ஒரே பார்வையில் அறிந்து கொண்டு முடிவு எடுக்க இயலும். இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பொருத்தமானதாகவும், பட்ஜெட்டுக்கு ஏற்றதாகவும் உள்ள திட்டத்தை எளிதில் தேர்வு செய்ய முடிகிறது.
ஆவணங்களை எளிதில் பதிவேற்றும் சுலபம்
இணையத்தின் மூலம் ஆவணங்களை சில நொடிகளில் பதிவேற்ற முடியும். அடையாள அட்டை, முகவரி சான்று, புகைப்படம் போன்றவை தனித்தனி அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே சமர்ப்பிக்கலாம். இதனால் நேரம் மிச்சமாகும்.
முழு செயல்முறை வெளிப்படையானது நிபந்தனைகள், வரம்புகள், விலக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெளிவாக இணையத்தில் காண்பிக்கப்படுவதால் குழப்பம் ஏற்படாது. முகவர் கூறும் தகவலையே மட்டும் நம்ப வேண்டிய நிலை இல்லாமல், ஒவ்வொரு தகவலையும் நேரடியாக புரிந்து கொண்டு முடிவு செய்யலாம்.
இந்த வெளிப்படைத்தன்மை பலரையும் இணைய வழியை விரும்ப வைக்கிறது.
நடுவண் முகவர் கட்டணம் இல்லாததால் செலவு குறைவு
இணையத்தின் மூலம் நேரடியாக நிறுவனம் இருந்து திட்டத்தை வாங்கும் போது நடுவண் முகவர் கமிஷன் இருக்காது. இதனால் பிரீமியம் தொகை மேலும் குறைவாக இருக்கும். குறைந்த செலவில் அதிக பாதுகாப்பு கிடைப்பது பெரிய நன்மையாகும்.
விரைவான அங்கீகாரம்
முன்னொரு காலத்தில் காப்பீடு அங்கீகரிப்பதற்கு பல நாட்களோ வாரங்களோ எடுத்துக்கொள்ளும். இப்போது e-KYC செயல்முறை மூலம் சில மணிநேரங்களில் அல்லது சில சமயங்களில் சில நிமிடங்களிலேயே அங்கீகாரம் கிடைக்கிறது. இதனால் பாதுகாப்பு அவசியம் உள்ளவர்கள் உடனடியாக திட்டத்தைப் பெறலாம்.
முழுநேர வாடிக்கையாளர் சேவை
வரிகள், நிபந்தனைகள், claim செயல்முறை போன்றவற்றை பற்றி சந்தேகம் எழும்போது 24 மணி நேரமும் உதவி கிடைக்கிறது. வாடிக்கையாளர் சேவை எப்போதும் கிடைப்பதால் நம்பிக்கை அதிகரிக்கிறது.
அணுகுவதற்கும் மேலாண்மை செய்வதற்கும் சுலபம்
இணையத்தில் வாங்கிய காப்பீட்டுகளை:
●புதுப்பிக்க
●பிரீமியம் செலுத்த
●ஆவணங்களைப் பதிவிறக்க
●மாற்றங்களைச் செய்ய
●claim நிலையைச் சரிபார்க்க
எல்லாம் மொபைல் கைப்பேசியில் இருந்து கூட செய்ய முடியும். இதனால் நேரில் அலுவலகத்தில் சென்று உட்கார வேண்டிய அவசியம் இல்லாமல் விடுகிறது.
பாதுகாப்பான பண பரிமாற்றம்
எல்லா நிறுவனங்களும் உயர் பாதுகாப்பு முறைமை, குறியாக்கம் மற்றும் ஒருமுறை கடவுச்சொல் சரிபார்ப்புகளை பயன்படுத்துவதால், பண பரிமாற்றம் பாதுகாப்பாக இருக்கும். இதனால் இணையத்தில் காப்பீடு வாங்குவதில் பயம் அல்லது சந்தேகத்திற்கான இடம் இருப்பதில்லை.
முடிவுரை
டேர்ம் காப்பீடு என்பது குறைந்த செலவில் அதிக பாதுகாப்பை வழங்கும் மிக நம்பகமான வாழ்க்கை காப்பீட்டு திட்டமாகும். குடும்பத்தின் எதிர்பாராத நிதிச் சுமைகளை சமாளிக்க இது உறுதியான பாதுகாப்பு வலையமைப்பாக செயல்படுகிறது.
வெளிப்படையான நிபந்தனைகள், எளிய ஆன்லைன் செயல்முறை, குறைந்த பிரீமியம் மற்றும் விரைவான அங்கீகாரம் ஆகிய காரணங்களால், இது இன்று பெரும்பாலான குடும்பங்களின் முதன்மையான தேர்வாக மாறியுள்ளது. குடும்பத்தின் எதிர்கால நன்மைக்காக, உங்களுக்கு ஏற்ற கால காப்பீட்டு திட்டத்தை இன்றே தேர்வு செய்வது ஒரு பொறுப்பான முடிவாகும்.
- ஏ.வி.எம். சரவணன் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
- ஏ.வி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு.
சென்னை:
ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க ஏ.வி.எம். நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏ.வி.எம். சரவணன் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ் திரையுலகின் பாதையை தீர்மானித்து உருவாக்கியதில் ஏ.வி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு ஏ.வி.எம். நிறுவனத்தின் பாதையை தீர்மானித்ததில் சரவணன் பங்கும் அளப்பரியது.
புதல்வராகவும், திரைத்துறை ஆளுமையாகவும் "அப்பச்சி" என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை ஏ.வி.எம்-க்குப் புகழ் சேர்த்தவர் சரவணன். பேரறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு", தலைவர் கலைஞரின் "பராசக்தி", முரசொலி மாறனின் "குலதெய்வம்" என ஏ.வி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏ.வி.எம்.சரவணன்.
கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் ஏ.வி.எம்-ன் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏ.வி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் 'தமிழ்த் திரை உலகில் பல புதுமைகளை புகுத்துவதற்கு காரணமாக இருந்த ஏ.வி.எம்.சரவணன் ஏராளமான கலைஞர்கள் தமிழ்த் திரை உலகில் நுழைவதற்கு காரணமாக இருந்தவர் என்று புகழாரம் சூட்டி உள்ளார்.
- கடந்த திங்கட்கிழமை தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560 ஆயிரத்துக்கு விற்பனையானது.
- நேற்று அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது. கடந்த வாரமும் இதே நிலை நீடித்தாலும், வார இறுதிநாளான கடந்த 29-ந்தேதி ஒரு சவரன் 95 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதன் பின்னர் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,020-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96,160 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
நேற்று அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 200 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
03-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,480
02-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
01-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,560
30-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,840
29-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
03-12-2025- ஒரு கிராம் ரூ.201
02-12-2025- ஒரு கிராம் ரூ.196
01-12-2025- ஒரு கிராம் ரூ.196
30-11-2025- ஒரு கிராம் ரூ.192
29-11-2025- ஒரு கிராம் ரூ.192
- கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.
- நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
சென்னை:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சிலநாட்களாக மழை பெய்து வந்தது. இதனிடையே, தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, ஈரோடு, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 தினங்களாக கன முதல் மிதமான மழை பெய்து வந்தது. இதனால் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் சற்று ஓய்ந்திருந்த மழையானது தற்போது பெய்து வருகிறது. மணலி, ராயபுரம், புதுவண்ணாரப்பேட்டை, எழும்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர்.






