என் மலர்tooltip icon

    சமையல்

    • பன்னீரை கடையில் வாங்காமல், வீட்டில் நாமே செய்தால் கலாகண்ட் நன்றாக வரும்.
    • 1947-ல் பாபா தாக்கூர் தாஸ் என்பவரால் கலாகண்ட் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்!

    தீபாவளிக்கு முறுக்கு, அதிரசம், குலாப் ஜாமூன், லட்டு என எண்ணெய் பலகாரங்கள் நிறைய செய்திருப்போம், சாப்பிடிருப்போம். ஆனால் பலரும் இந்தியாவின் பிரபலமான இந்த இனிப்பை மறந்திருப்போம். அப்படி தீபாவளிக்கு கலாகண்ட் செய்ய மறந்தவர்களுக்கான பதிவுதான் இது. சுவையான கலாகண்ட் செய்வது எப்படி என பார்ப்போம். கலாகண்ட் செய்வதற்கு பால், பன்னீர், நெய், சர்க்கரை, ஏலக்காய் உள்ளிட்டவை அவசியம். இதில் பன்னீரை கடையில் வாங்கமல், வீட்டில் இருக்கும் பாலை வைத்து நாமே செய்தால் கலாகண்ட் நன்றாக வரும்.

    தேவையான பொருட்கள்...

    பால் - 1 லிட்டர்

    நெய் - 1/2 கப்

    சர்க்கரை - 1 கப்

    குங்குமப்பூ - (வேண்டுமென்றால்)

    ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்

    பிஸ்தா - (வேண்டுமென்றால்)

    பாதாம் - (வேண்டுமென்றால்)

    எலுமிச்சை பழச்சாறு - 1 பழம்


    ருசிக்க தயாராக கலாகண்ட் இனிப்பு 

    செய்முறை

    முதலில் பன்னீர் செய்வது எப்படி என பார்ப்போம். பன்னீர் செய்வதற்கு 500மிலி பால் எடுத்துக்கொள்வோம். பாலை நன்கு காய்ச்சவேண்டும். பால் நன்கு கொதித்தபின்பு, அதில் ஒரு எலுமிச்சைப்பழத்தை பிழிந்து விடவேண்டும். பால் முழுவதுமாக திரிந்து வரும்வரையில் அடுப்பை நிறுத்தவேண்டாம். பின்னர் தண்ணீர் தனியாக பிரிந்த உடன், அதனை எடுத்து வடிகட்டி கொள்ளலாம். பின்னர் பன்னீர் மீது தண்ணீர் ஊற்றவேண்டும். அப்போதுதான் பன்னீரில் எலுமிச்சைப் பழத்தின் புளிப்பு தெரியாது.

    பின்னர் ஒரு லிட்டர் பால் எடுத்துக்கொண்டு, அதனை நன்கு கொதிக்கவிடவேண்டும். கொதிக்கும்போது கிண்டிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் பாத்திரத்தில் அடிபிடிக்காது. பால் நன்கு வற்றி, க்ரீம் பதத்திற்கு வரும்வரை கிண்டவேண்டும். இந்தப்பதம் வரும்போதே பாலில், செய்துவைத்த பன்னீரை எடுத்துக்கொட்டி கிண்டுங்கள். தொடர்ந்து கிண்டியபிறகு பாலில் உள்ள ஈரம் வற்றியபிறகு, அதில் அரை கப் நெய் ஊற்றவேண்டும். நெய் ஊற்றி 5 நிமிடம் நன்றாக கிண்டியபின், 1 கப் வெள்ளை சர்க்கரையை சேர்க்கவேண்டும். இனிப்பு கூடுதலாக வேண்டுமென்றால், கூடுதல் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.

    கடைசியில் ஏலக்காய்தூள் போட்டு கிண்டவேண்டும். பின்னர் கலாகண்ட் நன்கு கெட்டி பதத்திற்கு வந்தபின் இறக்கிக்கொள்ளலாம். நன்கு நிறம்வேண்டும் என்பவர்கள் கூடுதல் நேரம்வைத்து கிண்டலாம். பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய்தடவி, கலாகண்ட் கலவை சூடாக இருக்கும்போதே அதனை கொட்டி அழுத்திவிடவேண்டும். வேண்டுமானால் அதன்மேல் முந்திரி, பாதாம், என உங்களுக்கு பிடித்த பருப்பு வகைகளை சேர்த்துக்கொள்ளலாம். ஒரு இரண்டுமணிநேரம் கழித்து கலாகண்ட் கலவையை எடுத்துப்பார்த்தால் நன்கு ஆறி, கெட்டியாக இருக்கும். அருமையான கலாகண்ட் இனிப்பு தயார்.

    • சீன, மேற்கத்திய சமையல் முறைகளின் கலவையில் பிறந்த உணவுதான் 'பட்டர் கார்லிக் பிரான்'!
    • இறாலை நீண்ட நேரம் வேகவைத்தால் ரப்பர் போன்று இறுகிவிடும் என்பதால் கவனமாக சமையுங்கள்!

    சமையல் என்பது ஒரு கலை. அதுவும் புதுப்புது உணவு கலவைகளை உருவாக்கி, சுவைகளில் புரட்சி செய்வதென்பது ஒரு அசாத்தியமான திறன். அப்படி, சீன, மேற்கத்திய சமையல் முறைகளின் கலவையில் பிறந்த ஒரு உணவுதான் 'பட்டர் கார்லிக் பிரான்' (Butter Garlic Prawn). உணவகங்களில் மட்டுமே கிடைத்துவந்த இந்த சுவையான இறாலை, வீட்டிலேயே எளிதாகவும், குழந்தைகள் விரும்பும் வகையிலும் எப்படிச் செய்வது என்பதை ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் தியாகு செய்து காட்டுகிறார்.

    செய்முறை

    * முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடாக்கவும்.

    * வாணலி சூடானதும், வெண்ணெயைச் சேர்த்து உருக விடவும். வெண்ணெய் அதிகம் சேர்த்தால் சுவை இன்னும் சிறப்பாக இருக்கும்.

    * வெண்ணெய் உருகியதும், பொடியாக நறுக்கிய பூண்டுத் துண்டுகளைச் சேர்க்கவும். வெண்ணெய் மற்றும் பூண்டின் கலவை சேர்ந்து சமைக்கும்போது, சுவை பல மடங்கு அதிகரிக்கும்.

    * பூண்டு பொன்னிறமாக வந்தவுடன், முழு சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய குடைமிளகாயைச் சேர்த்து வதக்க வேண்டும். வெண்ணெயில் சமைக்கும்போது அடுப்பின் தீயைக் குறைத்துக்கொள்வது முக்கியம், இல்லையென்றால் வெண்ணெய் கருகிவிடும்.

    * இப்போது சுத்தம் செய்து வைத்திருக்கும் இறால்களைச் சேர்க்கவும். இறால்களைச் சேர்த்த உடனேயே, தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளறவும். உப்பு சேர்த்த பின்னர்தான் இறால், சுவையை நன்கு உறிஞ்சும்.

    * காரத்துக்கு மிளகாய் தூளைச் சேர்க்கவும். இந்த உணவு தயாராக 5 முதல் 10 நிமிடங்களே ஆகும். இறாலை நீண்ட நேரம் சமைத்தால் ரப்பர் போன்று இறுகிவிடும் என்பதால் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * இப்போது சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அதனுடன் சோயா சாஸ் மற்றும் கூடுதல் காரத்துக்குத் தேவையான மிளகாய் தூளையும் சேர்க்கவும். வெண்ணெய் மற்றும் பூண்டுடன் சேர்ந்து சோயா சாஸ் ஒரு அற்புதமான குழம்புப் பக்குவத்தைக் கொடுக்கும்.

    * இறுதியாக, பொடியாக நறுக்கிய வெங்காயத் தாளைத் தூவி அடுப்பை அணைக்கவும். இது உணவின் சுவையை மேலும் அதிகரிக்கும்.

    இந்த உணவில் உள்ள நன்மைகள்

    * இறாலில் புரதம் அதிக அளவில் உள்ளது. இது உடலின் திசுக்கள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு அவசியமானது. மேலும், இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது இதய நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

    * பூண்டு ஒரு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவு. இதில் உள்ள அல்லிசின் என்ற கலவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இது செரிமானத்திற்கும் துணைபுரிகிறது.

    * வெங்காயத்தில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதில் உள்ள குவெர்செடின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

    இப்படி ஆரோக்கியமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் 'பட்டர் கார்லிக் பிரான்', சுவையுடன் சேர்த்து உங்கள் உடலுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. அதோடு இன்றைய வேகமான உலகில், வெளியில் கிடைக்கும் ஆரோக்கியமற்ற உணவுகளை தேடிச் செல்வதற்குப் பதிலாக, உணவகங்களில் சாப்பிடும் அதே சுவையை வீட்டிலேயே அனுபவிக்க இந்த ரெசிபி சிறந்த தேர்வாக இருக்கும். இது குடும்பத்தினருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும் பிடித்தமான ஒரு உணவாக நிச்சயம் அமையும். இதை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து சுவைத்து மகிழுங்கள்.

    • ஆரோக்கியத்தையும், சுவையையும் விரும்பும் அசைவப் பிரியர்களுக்கான ஸ்பெஷல் டிஷ்!
    • கறிவேப்பிலைப் பொடியை, சிக்கன் முழுமையாக வெந்த பிறகு கடைசியில் சேர்க்க வேண்டும்.

    சிக்கன் பிரியர்களுக்காகவே தனித்துவமான சுவையுடன், ஆரோக்கியம் நிறைந்த ஓர் உணவுதான் ''கறிவேப்பிலை சிக்கன் ரோஸ்ட்''. கலப்படமற்ற, இயற்கையான சுவையுடன் கூடிய உணவுகளை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு. வழக்கமான சிக்கன் உணவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இதன் தனித்துவமான மணமும், கறிவேப்பிலையின் ஆரோக்கியமும் இணைந்து ஒரு புதுமையான சுவையை வழங்குகிறது. ஆரோக்கியத்தையும், சுவையையும் விரும்பும் அசைவப் பிரியர்களுக்கென்றே பிரத்யேகமான இந்த உணவை, செயற்கை நிறமூட்டிகள் இல்லாமல், முற்றிலும் இயற்கையான முறையில் ஃபெரோஸ் ஹோட்டலின் செஃப் சாந்தம் செய்து காட்டுகிறார்.

    கறிவேப்பிலை கோழி ரோஸ்ட் செய்முறை

    * முதலில் கறிவேப்பிலை மசாலாவைத் தயார் செய்ய வேண்டும். ஒரு வாணலியில் சிறிது உளுந்தை வறுக்கவும். பின்னர், அதே வாணலியில் கறிவேப்பிலையைச் சேர்த்து, அதன் நிறம் மாறாமல் மொறுமொறுப்பாகும்வரை வறுத்து எடுக்கவும். அதனை ஆறவைத்த பிறகு, மிக்ஸியில் போட்டுப் பொடி செய்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

    * அடுத்து சமைக்கத் தொடங்குவோம். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சோம்பு மற்றும் வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்.

    * தாளித்ததும், காய்ந்த மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும். பிறகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    * இஞ்சி பூண்டு விழுது மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும், சுத்தம் செய்து வைத்திருக்கும் எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும்.

    * சிக்கன் துண்டுகளை நன்றாக வதக்கி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் முழுமையாக வெந்த பிறகு, தண்ணீர் வற்றி, எண்ணெய் தனியாகப் பிரியும்.

    * இந்த சமயத்தில், நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் கறிவேப்பிலை பொடியைச் சேர்த்து, சிக்கனுடன் நன்றாகக் கலக்கவும். பொடியை சேர்த்தவுடன் அதிக நேரம் வேகவிட வேண்டாம். வெகு நேரம் வேகவிட்டால், கறிவேப்பிலையின் நிறம் மாறி கருப்பாகிவிடும்.

    * கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும்.

    சிறப்பு குறிப்பு: கறிவேப்பிலைப் பொடியை, சிக்கன் முழுமையாக வெந்த பிறகு கடைசியில்தான் சேர்க்க வேண்டும். முதலில் சேர்த்தால், சமைக்கும்போது கறிவேப்பிலையின் நிறம் மாறிவிடும்.

    • வழக்கமான மீன் வறுவலை விட முற்றிலும் மாறுபட்ட மீன் சமையல்!
    • செட்டிநாடு உணவுக்கு சின்ன வெங்காயம் தனிச்சுவை தரும்.

    செட்டிநாடு சமையல் தனித்துவமான நறுமணமும், காரசாரமான சுவையும் கொண்ட உணவுகளுக்குப் பெயர் போனது. அந்த சிறப்பு மிக்க பட்டியலில், செட்டிநாடு ஸ்டைல் மீன் பூண்டு வறுவல் ஒரு தனி இடத்தைப் பிடிக்கிறது. இது வழக்கமான மீன் வறுவலை விட முற்றிலும் மாறுபட்டு, பூண்டின் தனித்துவமான சுவையையும், அற்புதமான வாசனையையும் தாங்கி நிற்பதால், இதனைச் சுவைப்பவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும். சாதத்துக்குத் துணையாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ பரிமாற ஏற்ற இந்த உணவு, சுவை மிகுந்தது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும்கூட. இந்த ரெசிபியை நமக்கு செய்துகாட்டுகிறார் ஃபெரோஸ் ஹோட்டலின் செஃப் சதீஷ் தாமு.


    செய்முறை

    * முள் இல்லாத மீனை 65 மசாலா சேர்த்து நன்றாக ஊற வைத்து பொரித்து எடுத்து வைக்கவும். (பொரித்த மீனை கையால் லேசாக மசிக்கவும்.)

    * ஒரு கனமான கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

    * எண்ணெய் சூடானதும், முதலில் சோம்பு சேர்த்து பொரிய விடவும். சோம்பு நல்ல மணம் வந்ததும், கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.

    * பிறகு, குண்டு வரமிளகாயை சேர்த்து வறுக்கவும்.

    * அடுத்ததாக, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். செட்டிநாடு உணவுக்கு சின்ன வெங்காயம் தனிச்சுவை தரும். வெங்காயம் நல்ல பொன்னிறமாக வரும்வரை வதக்க வேண்டும்.

    * வெங்காயம் வதங்கியதும், நசுக்கி வைத்த பூண்டை போட்டு, அதன் பச்சை வாசனை போகும்வரை நன்றாக வறுக்கவும். இந்த டிஷ்ஷுக்கு பூண்டின் சுவை மிக முக்கியம். நல்ல பிரவுன் கலராகும்வரை பூண்டை வறுக்க வேண்டும்.

    * வதக்கிய பூண்டு மற்றும் வெங்காய கலவையில், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    * அடுப்பை குறைத்து வைத்து, மிளகாய் தூள், சீரகத் தூள், தனியா தூள், சோம்புத் தூள், சுவைக்காக செட்டிநாடு மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும்.

    * இந்த மசாலாக்கள் எண்ணெயிலேயே ஸ்லோ குக் (மெதுவாக வறுக்கப்படுவது) ஆகி, நல்ல மணம் வரும் வரை கிளறவும்.

    * சிறிது உப்பு சேர்த்து கிளறவும்.

    * மசாலா வேக, சிறிதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். மசாலா பச்சை வாசனை நீங்கி, நன்கு குக் ஆனதும் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.

    * மசாலா தயாரானதும், முன்னரே பொரித்து, மசித்து வைத்த மீன் துண்டுகளை அதில் சேர்த்து, மசாலா, மீன் துண்டுகளுடன் நன்றாகக் கலக்கும்படி மெதுவாக புரட்டவும்.

    * இறுதியில், தேங்காய்த் தூளைச் சிறிதளவு தூவி, மீண்டும் ஒருமுறை கிளறி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் மீன் பூண்டு வறுவல் தயார்.

    * கொத்தமல்லித் தழை, வறுத்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் குண்டு மிளகாய் ஆகியவற்றால் அலங்கரித்துப் பரிமாறவும்.


    ப்ளேட்டிங் செய்யப்பட்டுள்ள மீன் பூண்டு வறுவல்

    ஆரோக்கிய நன்மைகள்

    1. மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகின்றன.

    2. மீனில் உள்ள வைட்டமின் D மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன.

    3. இந்த உணவில் பூண்டு அதிக அளவில் சேர்க்கப்படுவதால், செரிமானத்தை மேம்படுத்துவதுடன், பூண்டில் உள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றன.

    4. செட்டிநாடு சமையலில் பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன், உணவுக்கு நல்ல சுவையையும் தரும்.

    • பாகு சூடாக இருக்கும்வரை லட்டு பிடிக்கக்கூடாது.
    • 10 - 15 நாட்கள்வரை ரவா லட்டுவை வைத்து சாப்பிடலாம்.

    அரைமணி நேரத்தில் ஈஸியாக செய்யக்கூடிய தீபாவளி பலகாரம் குறித்துதான் பார்க்கப் போகிறோம். அது வேறு ஒன்றும் இல்லை, ரவா லட்டுதான். பலரும் ரவா லட்டு செய்ய ஜவ்வரிசி, கடலை, பால் பயன்படுத்துவார்கள். ஆனால் இவை எதுவும் இல்லாமல், அரைமணி நேரத்தில் எளிமையான, இரண்டு வாரத்திற்கு வைத்து சாப்பிடக்கூடிய ரவா லட்டு செய்வது எப்படி என பார்ப்போம். 



    முதலில் கடாயில் நெய்யை ஊற்றி, அது லேசாக சூடானவுடன் முந்திரி மற்றும் திராட்சையை சேர்க்கவேண்டும். முந்திரி, திராட்சை பொரிந்தவுடன் அதனை தனியாக எடுத்து வைக்காமல், அதிலேயே ரவையை கொட்டி வறுக்கவேண்டும். நீண்டநேரம் ரவையை வறுக்கக்கூடாது. பொன் நிறம் வந்தவுடன் எடுத்துவிடவேண்டும். அதன்பிறகு சர்க்கரை பாகு காய்ச்ச வேண்டும். அரைகிலோ சர்க்கரை என்றால் அதில் முக்கால் பங்கு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ரவா லட்டுக்கு பாகு கெட்டியாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். ஒருவேளை சர்க்கரையில் அழுக்கு இருந்தால் பாகு கொதிக்கும்போது அதில் கொஞ்சம் பால்சேர்த்து கொள்ளுங்கள். அப்போது அழுக்கு முழுவதும் மேலே வந்துவிடும். அதனை நாம் எடுத்துவிட்டால் பாகு சுத்தமாகிவிடும். பின்னர் குலாப் ஜாமுனுக்கு எப்படி பாகு பதம் எடுப்போமோ, அதைவிட கொஞ்சம் கெட்டியாக வரும்வரை பாகை கொதிக்கவைக்க வேண்டும். பாகு, பதத்திற்கு வந்தபின் அதனை இறக்கி, வறுத்து வைத்துள்ள ரவையில் ஊற்றி கிளறிவிட வேண்டும். பாகை முழுவதும் ஊற்றியபின் அதில் ஏலக்காய் தூளை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த கலவையை லட்டு வடிவத்தில் பிடிக்கவேண்டும். பாகு சூடாக இருக்கும்வரை லட்டு பிடிக்கக்கூடாது. சூடாக லட்டு பிடித்தால், ஆறியவுடன் அது கடினமாகிவிடும். அதற்காக மிகவும் ஆறவிட்டும் லட்டு பிடிக்கக்கூடாது. மிதமான சூட்டில் ரவை லட்டுவை பிடிக்கவேண்டும். அவ்வளவுதான் எளிமையான ரவா லட்டு ரெடி. இதனை தாராளமாக 10 - 15 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

    • எத்தனை இனிப்பு வகைகள் இருந்தாலும் கடித்துக்கொள்ள முறுக்கு வேண்டும்!
    • நல்ல எண்ணெயில் சுட்டால் முறுக்கை 2 மாதத்திற்குக் கூட வைத்து சாப்பிடலாம்.

    தீபாவளி நெருங்கிவிட்டது. அனைவரது வீட்டிலும் அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் சுடும் வாசம் வீசத்தொடங்கியிருக்கும். நாம் எத்தனை இனிப்பு வகைகள் சாப்பிட்டிருந்தாலும், அத்துடன் கடித்துக்கொள்ள முறுக்கு வேண்டும் என நாவின் சவை அரும்புகள் கேட்கும். அப்படிப்பட்ட முறுக்கில் பலவகைகள் உள்ளன. வெவ்வேறு பொருட்களை பயன்படுத்தி முறுக்கு சுடலாம். அந்தவகையில் பாசிப்பருப்பு முறுக்கு எப்படி சுடலாம் என பார்ப்போம்.


    செய்முறை

    பாசிப்பருப்பு முறுக்கு சுடுவதற்கு அரை கப் வெள்ளை உளுந்து, கால் கப் பாசிப்பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள். இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கழுவ வேண்டும். பின்னர் இவை இரண்டையும் பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்ததும், சிறிதுநேரம் ஆறவிடவேண்டும். பின்னர் தண்ணீர் இல்லாமல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கூடவே 4 கப் அரிசிமாவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் அரைத்த பாசிப்பருப்பு கலவை, கருப்பு எள் அல்லது வெள்ளை எள், கொஞ்சமாக உப்பு மற்றும் மிதமான சூட்டில் 2 கரண்டி எண்ணெய் சேர்க்கவேண்டும். எந்த எண்ணெய் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். அப்படி எண்ணெய் வேண்டாம் என நினைப்பவர்கள் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் பெருங்காயத்தூளையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

    அனைத்தையும் ஒன்றாக கலந்து பிசைந்துக்கொள்ள வேண்டும். மாவு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிகமாக ஊற்றிவிடக்கூடாது. மாவு கெட்டியாக இல்லாமல் நல்ல மென்மையான பதத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் முறுக்கு நன்றாக வரும். மொறுமொறுவெனவும் இருக்கும். அந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முறுக்கு உரலில் நிரப்பவேண்டும். பின்னர் வாழை இலை அல்லது தட்டு எடுத்து, அதில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய்தடவி அதன்மீது உங்களுக்கு என்ன வடிவத்தில் வேண்டுமோ அதற்கேற்றவாறு பிழிந்து கொள்ளலாம். அதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவேண்டும். வெள்ளை நிறத்திலேயே வேண்டும் என்றால் கொஞ்ச நேரத்திலேயே எடுத்துவிடவேண்டும். நன்கு சிவப்பான நிறத்தில் வேண்டும் என்றால் கொஞ்சநேரம் எண்ணெயில் விட்டு எடுக்கவேண்டும். முறுக்கு நன்கு ஆறியபின் காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளவும். 

    • தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது முறுக்கும், அதிரசமும்தான்.
    • கடைகளில் பலகாரம் வாங்குவதைவிட வீட்டில் செய்வதுதான் ஸ்பெஷல்!

    "தீபாவளி வந்துடுச்சி.. ட்ரெஸ் வாங்கியாச்சா? பலகாரம் எல்லாம் சுட்டாச்சா"? என்ற கேள்விகளிலேயே பாதி தீபாவளி பிறந்துவிட்டது. ட்ரெஸ் வாங்குகிறோமோ இல்லையோ, பலகாரம் இல்லாமல் தீபாவளி ஓடாது. காரணம் எல்லாரும் சாப்பிடுவாங்க. பிள்ளைங்க, யாரையும் வேடிக்கை பார்த்து ஏங்கக்கூடாது என, இருக்கும் பொருட்களில் எதையாவது செய்வாள் அம்மா. அந்த வகையில் தீபாவளி என்றாலே நமக்கு பெரும்பாலும் நினைவுக்கு வருவது முறுக்கும், அதிரசமும்தான். தீபாவளிக்கு அம்மா சுடும் முறுக்கையும், அதிரசத்தையும் ஒரு மாதத்திற்கு மேலும் வைத்து சாப்பிடுவோம். முறுக்கு சற்று நமத்தாலும், அதிரசம் அப்படியே இருக்கும். அப்படிப்பட்ட அதிரசத்தை சுவையாக, எளிதாக செய்வது எப்படி? என பார்ப்போம். 


    அதிரசம் செய்முறை

    1 கிலோ பச்சரிசியை கழுவி, அரிசியில் இருக்கும் ஈரம் போகும்வரை காயவைக்க வேண்டும். பின்னர் அதனை லேசாக கொரகொர பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். அரைக்கும்போது வாசனை கொடுக்கும் அளவிற்கு ஏலக்காயை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கிலோ அரிசிக்கு ஏற்ப, சுவைக்கு தகுந்தவாறு 600 அல்லது 750 கிராம் வெல்லம் எடுத்துக்கொள்ளலாம். அந்த வெல்லத்தை தண்ணீரில் கொதிக்கவைத்து பாகு காய்ச்ச வேண்டும். பாகு பதம் பற்றி கவலைப்படாதீர்கள். வெல்லம் தண்ணீர் நன்றாக கொதிக்கும்போது, விரல்களில் தொட்டு பார்க்கும்போது, அது நூல்போல வரவேண்டும். அவ்வளவுதான்...

    அந்தப் பதம் வந்த பிறகு, பாகை இறக்கி, அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் ஊற்றி, இரண்டையும் நன்றாக கலந்துவிடவேண்டும். அப்போது கொஞ்சம் சுக்குப்பொடியும் சேர்த்துக்கொள்ளலாம். மொத்தமாக சேர்த்து பிசைந்த மாவை 2, 3 நாட்கள் ஊறவைக்க வேண்டும். பின்னர் மாவை எடுத்து பார்த்தால் நன்றாக பதம் பெற்றிருக்கும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து, அதனை வாழை இலையில் வைத்து தட்டி, சூடான கடலை எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான அதிரசம் ரெடி. இதில் வேறு எந்தப் பொருளும் சேர்க்கத் தேவையில்லை.

    • அலாதியான சுவையைக் கொண்டது கோழி நெய் ரோஸ்ட்!
    • கர்நாடகாவின் கடற்கரைப் பகுதியான மங்களூருவின் பிரபல உணவு!

    சமையல் உலகில் எப்போதும் புதுமைகளும், பாரம்பரிய சுவைகளும் சந்திக்கும் தருணங்கள் உண்டு. அப்படியான ஒரு அலாதி சுவையைத் தன்னகத்தே கொண்டதுதான் கோழி நெய் ரோஸ்ட். கர்நாடகாவின் கடற்கரைப் பகுதியான மங்களூரைச் சேர்ந்த இந்த உணவு, அதன் தனித்துவமான சிவப்பு நிறத்திற்காகவும், வாயில் கரையும் சுவைக்காகவும் மிகவும் புகழ் பெற்றது. இந்த சுவையான சிக்கன் ரெசிபியை சமையல் கலைஞர் கதிரவன் நமக்காக செய்து காட்டியுள்ளார். 


    செய்முறை விளக்கம்

    காஷ்மீரி மிளகாய் விழுது தயாரித்தல் :

    * முதலில் ¼ கிலோ காஷ்மீரி மிளகாயை நன்கு கழுவி, தண்ணீரில் வேகவைக்க வேண்டும்.

    * வேகவைத்த இந்த மிளகாயைத் தண்ணீர் வடித்துவிட்டு, பசை போல அரைத்து எடுக்கவும்.

    * காஷ்மீரி மிளகாய் காரம் குறைவாக இருந்தாலும், அற்புதமான சிவப்பு நிறத்தை அளிக்கும். மேலும், இந்த விழுதை எண்ணெயில் வதக்கி வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்! இந்த விழுதுதான் நாம் தயாரிக்க உள்ள கோழி நெய் ரோஸ்டிற்கான அடிப்படைச் சுவையாகும்.

    கோழி நெய் ரோஸ்ட் செய்முறை :

    * ஒரு வாணலியை எடுத்து, அதில் 2 கரண்டி நெய் சேர்க்கவும்.

    * நெய் சூடானதும், 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு வதக்கவும்.

    * பச்சை வாசனை நீங்கியவுடன், நாம் தயாரித்து வைத்திருக்கும் காஷ்மீரி மிளகாய் விழுதில் 2 தேக்கரண்டியை வாணலியில் சேர்க்கவும்.

    * இந்த மிளகாய் விழுதை நன்கு வதக்க வேண்டும். சமைக்கும்போது விழுதிலிருந்து நெய் தனியாகப் பிரிந்து வரும். இதுதான் சரியான பதம்!

    * இப்போது, மிளகுப் பொடி (¼ தேக்கரண்டி), மஞ்சள் தூள் (½ தேக்கரண்டி), சீரகப் பொடி (½ தேக்கரண்டி) ஆகியவற்றைச் சேர்த்து உடனடியாகக் கிளறவும்.

    * மசாலாக்களைக் கலந்த உடனே, வெட்டி வைத்திருக்கும் கோழியை வாணலியில் சேர்க்கவும். இந்தக் கலவையில், நாம் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை; நெய்யே பச்சை வாசனையை நீக்கிச் சரியாகச் சமைத்துவிடும்.

    * கோழியை மசாலாவுடன் நன்கு கிளறிய பின், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    * சிறிதளவு தண்ணீரை மட்டும் தெளித்து மீண்டும் கிளறி, வாணலியை ஒரு மூடியால் மூடவும்.

    * மூடி போட்டு வேகவைக்கும் போது, அடுப்பை அப்படியே குறைந்த தீயில் (Low Flame) வைக்கவும்.

    * சிறிது நேரம் கழித்துத் திறந்து பார்த்தால், சுவையான கோழி நெய் ரோஸ்ட் தயாராகியிருக்கும்! இந்த ரெசிபி, மிளகாயை வேகவைத்து செய்வதால், அதிக காரம் இல்லாமலேயே அற்புதமான நிறத்தையும் மணத்தையும் தரும்.

    கோழி நெய் ரோஸ்ட்டின் பலன்கள்

    * கோழி இறைச்சி புரதத்தின் சிறந்த ஆதாரமாக உள்ளது. இது தசைகளின் வளர்ச்சிக்கும், எலும்புகளை வலுப்படுத்தவும் அத்தியாவசியமானது.

    * இதில் சேர்க்கப்படும் நெய் (Ghee) ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், ஆற்றல் மூலமாகவும் செயல்படக்கூடியது.

    * காஷ்மீரி மிளகாயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.

    * இஞ்சியும், சீரகமும் செரிமான ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய பாரம்பரிய மூலிகைகள் ஆகும்.

    இந்த விரைவான மற்றும் சுவையான கோழி நெய் ரோஸ்ட், உங்கள் சமையல் அட்டவணையில் நிச்சயம் இடம்பெற வேண்டிய ஒரு ஸ்பெஷல் உணவாகும். இது சிறந்த ஸ்டார்ட்டர் ஆகவோ, அல்லது சப்பாத்தி போன்றவற்றுடன் மெயின் கோர்ஸாகவோ சேர்த்து உண்ண ஏற்ற ரெசிபியாகும். இதைச் செய்து பார்த்து, மங்களூரின் மணக்கும் சுவையை உங்கள் வீட்டிற்கு கொண்டு வாருங்கள்!

    • மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது.
    • சர்க்கரை பாகும், கடலை மாவும் சேர்ந்து நல்ல பதத்திற்கு வந்தவுடன் நெய் சேர்த்தால் மைசூர் பாக் ரெடி!

    தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை வரிசையில் பலகாரத்திற்கும் முக்கிய இடம் உண்டு. தீபாவளி நோம்பு இருப்பவர்கள், அதிரசம், முறுக்கு போன்றவற்றை செய்து சாமிக்கு படைத்து கொண்டாடுவார்கள். நோம்பு இல்லாதவர்கள், பெரும்பாலும் குலாப் ஜாமுன் செய்வார்கள். சிலர் கடைகளில் இனிப்புகளை வாங்கி நண்பர்களுக்கு கொடுப்பார்கள். கடை இனிப்புகளில் முக்கியமானது மைசூர் பாக். அதிலும் வாயில் போட்டவுடன் கரையும் மைசூர் பாக்குக்கு நிறைய பேர் அடிமை என்றே சொல்லலாம். அந்த மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது. ஆனால் மைசூர் பாக்கை வீட்டிலேயே ஈசியாக செய்யலாம். வாங்க... 


    மைசூர் பாக் செய்முறை

    * மைசூர் பாக் செய்வதற்கு முதலில் கடலை மாவை நன்கு சலித்துக்கொள்ள வேண்டும்.

    * நெய் மற்றும் எண்ணெய்யை ஒன்றாக சேர்த்து லேசாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். 

    * ஒரு பாத்திரத்தில் கடலை மாவை கொட்டி, அதில் காய்ச்சிய நெய் கலவையை பாதி அளவு ஊற்றி, கெட்டி ஆகாமல் மாவை பிசைந்துக்கொள்ள வேண்டும். (மீதி நெய் கலவையை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்) 

    * அடுப்பை பற்றவைத்து, கனமான கடாயில் சர்க்கரையை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கம்பி பதத்திற்கு பாகு எடுக்க வேண்டும். பாகு எடுக்க தெரியாது என்பவர்கள், தண்ணீர் நன்கு கொதித்து வெள்ளை நுரைபோல பொங்கும் பதத்தை, பாகு பதமாக எடுத்துக்கொள்ளலாம்.

    * சர்க்கரை பாகில், கடலை மாவு கலவையைக் கொட்டி, கெட்டி இல்லாமல் கலக்கிவிட வேண்டும். 

    * ஸ்டவ்வை, மீடியம் அல்லது லோ ஃப்ளேமில் மாறி மாறி வைத்துக்கொள்ளலாம். ஹை ஃப்ளேமில் வைக்கக்கூடாது. 

    * சர்க்கரை பாகுடன் கடலை மாவு கலவை நன்கு சேர்ந்தவுடன், மீதி உள்ள நெய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக அதில் சேர்த்து கிளற வேண்டும். 

    * கடாயில், மைசூர் பாக் கலவை நன்கு திரண்டு உருண்டு வரும்போது அடுப்பை ஆஃப் செய்துவிடலாம். 

    * ட்ரே ஒன்றில் சுடான மைசூர் பாக் கலவையை ஊற்றி, 5 முதல் 6 மணி நேரங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும்.  

    * மேலும் ட்ரேவில் ஊற்றிய மைசூர் பாக் கலவையை அதிகமாக அழுத்திவிடக் கூடாது. 

    * 6 மணி நேரங்களுக்கு பிறகு, கத்தி ஒன்றை எடுத்து, நமக்கு பிடித்த ஷேப்பில் மைசூர் பாக்கை வெட்டிக்கொள்ளலாம். 

    * அந்த மைசூர் பாக்கை எடுத்து வாயில் வைத்தால் நிச்சயம் அப்படியே கரைந்து தொண்டைக் குழிக்குள் இறங்கும். 

    • இது டயட் இருப்பவர்களுக்கும், கொழுப்பைக் குறைக்க விரும்புவோருக்கும் மிகவும் நல்லது.
    • ஸ்டீமர் முறையில் சமைக்கும்போது எண்ணெய் ஒரு துளி கூட பயன்படுத்தப்படுவது இல்லை.

    பாரம்பரிய பார்சி உணவு வகைகளில் ஒன்றாகத் திகழும் பத்ராணி மச்சி, அதன் அலாதியான சுவை மற்றும் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளால் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் பெரும் புகழ் பெற்று விளங்குகிறது. இது, மீனை எண்ணெயில் பொரித்தோ அல்லது குழம்பாக வைத்தோ சமைக்கப்படும் வழக்கமான முறை கிடையாது. மாறாக, மீன் துண்டுகளில் காரசாரமான பச்சை சட்னியைப் பூசி, அவற்றை வாழை இலையில் நேர்த்தியாகச் சுருட்டி, பின்னர் ஆவியில் வேக வைத்து தயாரிக்கப்படுகிறது. இந்த வித்தியாசமான மீன் ரெசிபியை சமையல் கலைஞர் செஃப் கதிரவன் நமக்காக செய்து காட்டியுள்ளார். 

    செய்முறை

    * மீன் துண்டுகளை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அதில் சிறிதளவு உப்பு மற்றும் அரை லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி ஊற வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடாக்கி, அது லேசாக கொதிக்க ஆரம்பித்தவுடன், சுத்தம் செய்து வைத்துள்ள கொத்தமல்லி மற்றும் புதினா தழைகளைப் போட்டு 2 நிமிடங்கள் வைத்து எடுத்து, ஆற வைக்கவும்.

    * ஆறிய தழைகளுடன், நீளமாக நறுக்கிய 4 பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, 10 பல் பூண்டு மற்றும் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பாதியாக அரைக்கவும். பிறகு, துருவி வைத்துள்ள ஒரு கப் தேங்காயையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

    * அரைத்த மசாலாவில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், புளிப்புக்கு ஏற்ற அளவில் லெமன் ஜூஸ் ஆகியவற்றைச் சேர்த்து கையால் நன்கு கிளறவும்.

    * இந்தக் காரசாரமான மசாலாவை, ஏற்கனவே உப்பு மற்றும் லெமன் சேர்த்து ஊற வைத்துள்ள மீன் துண்டுகளுடன் நன்கு கலக்கவும்.

    * ஒரு சுத்தமான வாழை இலையின் நடுவில் மசாலா தடவிய மீன் துண்டை வைத்து, அதை நான்கு பக்கங்களிலும் மடித்து, ஒரு பார்சல் போல சுற்றவும்.

    * சுற்றப்பட்ட வாழை இலை பார்சல்களை ஸ்டீமரில் (ஆவியில் வேக வைக்கும் பாத்திரம்) வைத்து, மீன் நன்கு வேகும் வரை சுமார் 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைக்கவும்.

    * வேகவைத்த மீனை ஸ்டீமரில் இருந்து எடுத்து, வாழை இலையை கவனமாகப் பிரித்து, ஒரு பரிமாறும் தட்டில் மாற்றி, உடனடியாகப் பரிமாறவும்.

    சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள மீன் துண்டுகள் 

    பத்ராணி மச்சியின் சிறப்புகள்

    * ஸ்டீமர் முறையில் சமைக்கும் போது எண்ணெய் ஒரு துளி கூட பயன்படுத்தப்படுவது இல்லை. ஆவியில் வேக வைப்பதால், இது டயட் (உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள்) இருப்பவர்களுக்கும், கொழுப்பைக் குறைக்க விரும்புவோருக்கும் மிகவும் நல்லது.

    * வாழை இலையில் சுற்றி சமைக்கப்படும்போது, இலையின் அலாதியான சுவை மற்றும் மணம் உணவுடன் கலந்து, வேறு எந்த சமையல் முறையிலும் கிடைக்காத ஒரு தனித்துவமான அனுபவத்தை அளிக்கிறது.

    * இதில் பயன்படுத்தப்படும் பச்சை சட்னிதான் இந்த உணவின் மற்றொரு சிறப்பம்சம். பூண்டு, பச்சை மிளகாயின் காரம், புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளின் கூட்டுச் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த மூலிகைகளின் சத்துக்கள் மீனுடன் சேர்ந்து ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன.

    * இந்த சமையல் முறையை மீன்களில் மட்டுமல்லாமல், பன்னீர் மற்றும் கறித் துண்டுகளிலும் கூட முயற்சி செய்யலாம்.

    ப்ளேட்டிங் செய்யப்பட்டுள்ள பத்ராணி மச்சி

    இந்த அற்புதமான பத்ராணி மச்சி உணவை தோசை, சப்பாத்தி, ரொட்டி அல்லது சாதம் மற்றும் காய்கறி தன்சக் (Vegetable Dhansak) உடன் சேர்த்து சைடிஷ்ஷாக சாப்பிடும் பொழுது, அதன் சுவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். ஆரோக்கியம் மற்றும் பாரம்பரியம் இணைந்த இந்த பார்சி உணவை நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள்!

    • உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.
    • கொள்ளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் நிறைவாக உணர வைக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கொள்ளு - 1 கப்

    கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

    காய்ந்த மிளகாய் - 3

    பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி

    உளுந்து - 1 தேக்கரண்டி

    தேங்காய்த் துண்டுகள் - 1 கப்

    புளி - 10 கிராம்

    கடுகு - 2 தேக்கரண்டி

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வாணலியில் கொள்ளை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

    அதே வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, சிறிதளவு உளுந்து, காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும்.

    வறுத்து வைத்திருக்கும் கலவையை மிக்ஸியில் போட்டு அத்துடன் தேங்காய்த் துண்டுகள், புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும்.

    கடைசியாக கடுகு, கறிவேப்பிலையை தாளித்துக் கொட்டி சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட சுவை அமோகமாக இருக்கும்.




    நீங்கள் உண்ணும் உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.

    உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைவதால் எடை இழப்பு ஏற்படும்.

    கொள்ளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் நிறைவாக உணர வைக்கும். இதனால் நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் குறையும்.

    கொள்ளு துவையலாக மட்டுமில்லாமல், கொள்ளை வேகவைத்து சுண்டலாகவும், கொள்ளு தோசை, கொள்ளு சூப், கொள்ளு ரசம் முதலானவற்றை செய்து சாப்பிடலாம்.

    • ஈரலைச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கழுவிப் பிழிந்து கொள்ளுங்கள்.
    • ஈரல் துண்டுகளை அதிக நேரம் வேக வைக்கக்கூடாது.

    தேவையான பொருட்கள்:

    கோழி ஈரல் - அரைக் கிலோ

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    பூண்டு - 8 பல்

    பட்டை - 2

    இஞ்சி - 1 துண்டு

    தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி

    கிராம்பு - 4

    சோம்பு - 1 தேக்கரண்டி

    எலுமிச்சம் பழச்சாறு - 1 மேசைக்கரண்டி

    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

    மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

    தனியா தூள்- 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி

    கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    * இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக்கொண்டு, தேங்காய்த் துருவலுடன் கிராம்பு, சோம்பு, பட்டை ஆகியவற்றைச் சேர்த்து நீர் தெளித்து அரைத்துக் கொள்ளுங்கள்.

    * ஈரலைச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கழுவிப் பிழிந்து கொள்ளுங்கள்.

    * அந்த துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு இஞ்சி விழுது, பூண்டு விழுது, மஞ்சள் தூள், எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைச் சேர்த்துப் பக்குவமாகப் புரட்டிவிட்டு ஊற வையுங்கள்.

    * வெங்காயத்தைத் தோலுரித்துக்கொள்ள வேண்டும்.

    * அடுப்பில் இருப்புச் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், வெங்காயத்தைத் தட்டிப் போட்டு வதக்குங்கள்

    * பிறகு ஈரல் துண்டுகளை மசாலாவுடன் கொட்டி, அரைத்து வைத்திருக்கும் தேங்காய்க் கலவையைப் போட்டு உப்பு சேர்க்கவும். அரை கப் நீர் ஊற்றி, ஒரு தட்டால் மூடி வைத்து வேகவிடுங்கள்.

    * ஈரல் துண்டுகளை அதிக நேரம் வேக வைக்கக்கூடாது. ஆகையால் அவை வெந்ததும் உடனே அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும்.

    சுவையான ஈரல் வறுவல் ரெடி!

    ×