என் மலர்
சமையல் - Page 3
- மாலை நேர ஸ்நாக்ஸ்களில் பஜ்ஜிகளுக்கு என தனி இடம் உண்டு.
- இன்று பீட்ரூட்டில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1 கப்,
பீட்ரூட் – 2 பெரியது
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்,
காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்,
பேக்கிங் சோடா – 1/4 ஸ்பூன்,
பெருங்காயம் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவிற்கு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டிகொள்ளவும்.
பிறகு, பீட்ரூட்டை வில்லைகளாக நறுக்கி தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சிறிது நேரம் போட்டு எடுக்கவும். பீட்ரூட் ஈரப்பதம் இல்லாமல் இருந்தால்தான்
பஜ்ஜி எண்ணெய் குடிக்காது என்பதை மனதில் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய்த்தூள், பேக்கிங் சோடா, பெருங்காயம், உப்பு போன்றவற்றை சேர்த்து
நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் அவற்றுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பீட்ரூட் வில்லைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பாத்த டேஸ்டியான பீட்ரூட் பஜ்ஜி தாயார்.
இந்த பஜ்ஜிக்கு தேங்காய், கார சட்னி அல்லது சாம்பார் சேர்த்து ருசிக்கலாம்.
- காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு வெஜிடபிள் இட்லி செய்து கொடுக்கலாம்.
- காய்கறிகளில் உள்ள அனைத்து சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
புளிக்காத இட்லி மாவு - 2 கப்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கேரட் - 100 கிராம்,
பீன்ஸ் - 50 கிராம்,
பீட்ரூட் - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
வேகவைத்து மசித்த பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது.
செய்முறை
புளிக்காத இட்லி மாவில் கேரட், பீன்ஸ், கொத்தமல்லித்தழை, பீட்ரூட், மசித்த பட்டாணி, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்கு கரைத்துக் கொள்ளவும்.
இட்லி பானையில் தண்ணீர் சேர்த்து, கரைத்த மாவை இட்லி தட்டில் உள்ள குழியில் ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் வெஜிடபிள் இட்லி ரெடி.
இந்த இட்லியுடன் தக்காளி சட்னி அல்லது வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு: கீரையைப் பொடியாக நறுக்கி இட்லி மாவில் சேர்த்து கீரை இட்லி செய்யலாம்.
- கேரட் பஜ்ஜி தனித்துவமான சுவையுடன் அற்புதமாக இருக்கும்.
- இந்த பஜ்ஜி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கேரட் - கால் கிலோ
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
ஓமம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, அதை மெல்லிய வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, ஓமம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின் மெதுவாக நீரை ஊற்றி கட்டிகளின்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அதில் பேக்கிங் சோடா மற்றும் பஜ்ஜி மொறுமொறுப்புடன் இருக்க சிறிது சூடான எண்ணெய் ஊற்றி 15 நிமிடம் அப்படியே விட்டு, பின் கிளறி விட வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கேரட்டை பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கேரட் பஜ்ஜி தயார்.
- அன்றாடம் ஒரு கேரட் சாப்பிடும்போது புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
- பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
உதிரியாக வடித்த சாதம் - 1½ கப்,
கேரட்- 2
பீட்ரூட் - 1 பெரியது
பெரிய வெங்காயம் - 1.
பச்சை மிளகாய் - 2,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
சீரகம் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
செய்முறை
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
பீட்ரூட்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர், வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், பச்சைமிளகாய், உப்பு, கேரட், பீட்ரூட்டைச் சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடிபோட்டு வேக வைக்கவும்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும் உதிராக வடித்த சாதத்தைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
கடைசியாக கொத்தமல்லித்தழையை தூவி சூடாக பரிமாறவும்.
இப்போது சூப்பரான கேரட் பீட்ரூட் மிக்ஸ்டு ரைஸ் ரெடி.
- தினமும் கீரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- கீரையில் குழம்பு, பொரியல் செய்து சாப்பிடுவதை போல் வடையும் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
கீரை - 1 கட்டு
உளுந்து - 200 கிராம்
கடலை பருப்பு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை :
ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் இல்லாமல் அரைக்க வேண்டும். மாவு கையில் ஒட்டக் கூடாது.
கீரையை நன்றாக சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைத்த மாவில் பச்சை மிளகாய், சீரகம், உப்பு, இஞ்சி, கீரை சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.
பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை எலுமிச்சை அளவு மாவு எடுத்து ஓட்டவடை அளவுக்கு வட்டமாக தட்டி நடுவே ஒரு ஓட்டை போட வேண்டும். பின் லாவகமாக எண்ணெயில் உடையாமல் போடுங்கள்.
பொன்னிறமாக பொரிந்ததும் வெளியே எடுத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் கீரை வடை தயார்.
இந்த வடைக்கு அரை கீரை, சிறு கீரை, பசலை கீரை, முருங்கைக்கீரை என எந்த கீரையும் போடலாம். எதுவாக இருந்தாலும் பொடியாக நறுக்க வேண்டும்.
- மாலை வேளையில் டீ, காபியுடன் மொறுமொறுப்பான பக்கோடாவை சாப்பிடலாம்.
- இன்று காலிஃப்ளவர் பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு -1 கப்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
காலிஃப்ளவர் - 1
வெங்காயம் - 2 (வட்டமாக நறுக்கவும்)
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
காலிஃப்ளவரை நன்றாக கழுவி பூக்களை சிறிதாக உதிர்த்துக்கொள்ளவும்.
கடலை மாவுடன் பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு, போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
அதனுடன் வெங்காயம் மற்றும் காலிஃப்ளவரை கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் பக்கோடாவாக உருட்டி கொஞ்சம் கொஞ்சமாக கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.
இப்போது சூப்பரான காலிஃப்ளவர் பக்கோடா ரெடி.
- ‘ஷவர்மா’ என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.
- இன்று அசத்தலான ருசியில் ‘வெஜ் ஷவர்மா’ செய்யலாம் வாங்க..
'ஷவர்மா' என்றதும் கோழிக்கறி கொண்டு தயார் செய்யப்படும் 'சிக்கன் ஷவர்மா' ஞாபகம் வருகிறதா? அதன் அசைவ சுவைக்கு ஈடு கொடுக்கும் வகையில் பல வித மசாலா பொருட்கள் சேர்த்து, அசத்தலான ருசியில் 'வெஜ் ஷவர்மா' எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 300 கிராம்
தயிர் - 6 தேக்கரண்டி
மோர் - 5 தேக்கரண்டி
தண்ணீர் - தேவைக்கேற்ப
ஆலிவ் எண்ணெய் - தேவைக்கேற்ப
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர்- 1 தேக்கரண்டி
பன்னீர் - 200 கிராம்
சீரகப்பொடி - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
புதினா இலைகள் - சிறிதளவு
கடலை மாவு - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
கறிமசாலாப்பொடி - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
சாட் மசாலா - 2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி
மயோன்னஸ் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
நீளவாக்கில் வெட்டிய கேரட்,
முட்டைகோஸ், வெள்ளரி - 100 கிராம்
மீல் மேக்கர் - 50 கிராம்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தயிர் 3 தேக்கரண்டி, நறுக்கிய புதினா இலைகள், சீரகப்பொடி, தனியாத்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், சோம்புத்தூள், கறிமசாலாப்பொடி, கடலைமாவு, மிளகுத்தூள், சாட் மசாலா, மஞ்சள் தூள், சிறிது பெருங்காயத்தூள், 4 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
இந்தக் கலவையில் சிறிது தனியாக எடுத்து, அதில் வெந்நீரில் ஊறவைத்து பிழிந்தெடுத்த சோயாவை சேர்த்து நன்றாகக் கலந்து ஊறவைக்கவும். பின்பு, மீதமுள்ள கலவையில் நீளவாக்கில் வெட்டி வைத்த பன்னீரை போட்டு கலந்து ஊற வைக்க வேண்டும்.
வேறொரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, ஆலிவ் எண்ணெய், 3 தேக்கரண்டி தயிர், 5 தேக்கரண்டி மோர் சேர்த்து நன்றாகக் கலந்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும். பின்பு அந்த மாவை எண்ணெய் விடாமல் 'நாண் ரொட்டிகளாக' தயார் செய்து கொள்ளவும். அடுத்து ஊறவைத்த பன்னீர் மற்றும் சோயாவை தனித்தனியாக சிறிது எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்.
சட்னி:
கொத்தமல்லித்தழையுடன் சிறிது புதினா, 2 தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு, உப்பு, ¼ தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து அரைக்கவும். அதனுடன் சிறிது மயோன்னஸ், சிறிது தயிர் மற்றும் சிறிது வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஷவர்மா:
கேரட், முட்டைகோஸ் மற்றும் வெள்ளரியுடன், பொரித்தெடுத்த பன்னீர் மற்றும் சோயா மசாலா சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின்பு நாண் ரொட்டியின் மேற்பகுதியில் கிரீன் சட்னியை பரவலாகத் தடவி, அதன் மேல் காய்கறி கலவையை நீளவாக்கில் வைத்துச் சுருட்டவும்.
இப்போது சுவையான வெஜ் ஷவர்மா பரிமாறுவதற்குத் தயார்!
- சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பாஸ்தா என்றால் சாப்பிட அழைக்காமலேயே சாப்பிடுவதற்கு அமர்ந்து விடுவார்கள்.
- பாஸ்தாவில் இன்று சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரிப்பன் வடிவில் இருக்கும் மேக்ரோனி - ½கப்
மூக்கடலை அல்லது ராஜ்மா (நம் விருப்பத்திகேற்ப) - ½கப்
வெங்காயம் (விருப்பமிருந்தால்) - சிறியது 1
தக்காளி சிறியது - 1
தேங்காய் துருவியது - சிறிதளவு
தாளிக்க கடுகு, உளுந்து, - சிறிதளவு
மிளகாய் (ஃப்ளோக்ஸ்) - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு.
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மூக்கடலை அல்லது ராஜ்மாவை முதல்நாள் இரவே ஊறவைத்து விடவேண்டும். அடுத்தநாள் குக்கரில் சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்.
மேக்ரோனியை அகலமான அடி கனமான பாத்திரத்தில் உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறிவிட்டு வேகவைத்து அதில் உள்ள நீரை வடித்து விட்டு உடனே குளிர்ந்த நீரில் இரண்டுமுறை அலசினால் அவை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.
இப்பொழுது வானலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும், உ.பருப்பு, கறிவேப்பிலை போட்டு அத்துடன் பெருங்காயத்தூளையும் தூவி சிறிது உ.பருப்பு கலர் மாறியவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதுடன் தக்காளியையும் சேர்த்து, அதற்கு தேவையான உப்பையும் சேர்த்து வதக்கவும்.
பின்பு, வேக வைத்த மூக்கடலை அல்லது ராஜ்மாவையும் அத்துடன் மிளகாய் ஃப்ளோக்ஸ் சேர்த்து வதக்கவும்.
கடைசியாக மேக்ரோனியை கலந்து மிகவும் லேசாக கிளறி கொத்தமல்லி தூவி இறக்கலாம்.
கடைசியில் தேங்காய் துருவலையும் சேர்த்து பரிமாறலாம்.
இந்த மேக்ரோனி சுண்டலைக் கட்டாயம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மிளகாய் சேர்க்க விரும்பாதவர்கள் மிளகு தூள் சேர்த்தும் சுண்டல் செய்யலாம்.
- பிஷ் ஃபிங்கர்ஸ் ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.
- இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
வஞ்சரம் (அ) வவ்வால் மீன் - அரை கிலோ
எலுமிச்சை பழம் - இரண்டு (சாறு எடுக்கவும்)
ரொட்டித்தூள் - 1௦௦ கிராம்
காஷ்மீரி மிளகாய் தூள் - அரை தேக்கரணடி
முட்டை - மூன்று
வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - தேவைகேற்ப
செய்முறை
முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
மீனை சுத்தம் செய்து எலும்பு, தோல் நீக்கவும்.
பின்னர் மீனை விரல் நீள, அகலத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.
மிளகு தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், எலுமிச்சைபழம் சாறு இவற்றைக் கலந்து மீனில் புரட்டி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்ததும், அடித்த முட்டையில் மீனை முக்கி, ரொட்டித்தூளில் புரட்டி, எண்ணெயில் போடவும்.
மீன் வெந்ததும், திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்.
இப்போது சூப்பரான பிஷ் ஃபிங்கர்ஸ் ரெடி.
- உப்புமாவில் காய்கறிகளை சேர்த்து செய்வதால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்
- உப்புமாவில் சேமியா உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.
- காலையில் சமைத்து சாப்பிட சேமியா உப்புமா தான் சிறந்தது.
தேவையான பொருட்கள்:
சேமியா - 1 பாக்கெட்
வெங்காயம் - 1
பச்சை பட்டாணி - 1/2 கப்
கேரட் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
வரமிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கேரட், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்த பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அத்துடன் மஞ்சள் தூள், கேரட், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால், சேமியா வெஜிடபிள் உப்புமா ரெடி!!!
- பாப்கார்ன், சாக்லேட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- இன்று இது இரண்டையும் வைத்து ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாப்கார்ன் சோளம் - ஒரு கப்,
குக்கீஸ் சாக்லேட் - 50 கிராம்,
வெண்ணெய் (அ) நெய் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - சிறிதளவு,
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சாக்லேட்டை பொடித்துப் போடவும். வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது சாக்லேட் உள்ள
பாத்திரத்தை அதன் மேல் வைத்து சாக்லேட்டை ஆவியில் உருக வைக்கவும். உருக ஆரம்பித்ததும் இறக்கி நெய் (அ) வெண்ணெய் சேர்ந்து கட்டியில்லாமல் கிளறவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு, பாப் கார்னைப் போட்டு, உப்பு சேர்த்து மூடியால் மூடி விடவும். பொரிந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டவும்.
பிறகு, தயாரித்த சாக்லேட் சிரப்பை வடிகட்டி மூலம் பாப்கார்ன் மேல் விடவும்.
நன்கு குலுக்கி சீராக பரவ விடவும்.
சூப்பரான சாக்லேட் பாப்கார்ன் ரெடி.
இதனை ஒரு பிளாஸ்டிக் டப்பாவின் போட்டு வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.
- தினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும், மேலும் ஆண்மை குறைபாட்டை நீக்கும்.
- பச்சைப் பயறில் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது, புரதச்சத்து நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்
தினை மாவு - 1 கப்,
பச்சைப் பயறு - அரை கப்,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
கருப்பட்டி - 100 கிராம்,
நெய், உப்பு - சிறிது.
செய்முறை
தினை மாவை நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு தட்டில் வறுத்த தினை மாவை சிறிது வெந்நீர் விட்டு, கொஞ்சம் உப்பு கலந்து பிசிறிக் கொள்ளவும்.
பச்சைப்பயறு, தினை மாவு, தேங்காய்த்துருவல் இவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக புட்டு குழாயில் வைத்து நீராவில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
சத்தான சுவையான தினை பச்சைப் பயறு புட்டு ரெடி.