என் மலர்tooltip icon

    செய்திகள்

    தே.மு.தி.க.வின் 14-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பூரில் வருகிற செப்டம்பர் 16-ந்தேதி மாநில மாநாட்டை நடத்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். #vijayakanth #kamal #vijayakanth #dmdk

    கோவை:

    கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் இரும்புக் கோட்டை என்பது கடந்த சட்டமன்ற தேர்தலிலும் நிரூபணம் ஆனது.

    கோவை, நீலகிரி உள்பட 9 மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மண்டலத்தில் மொத்தம் உள்ள 61 சட்டசபை தொகுதிகளில் 47-ல் அ.தி.மு.க. வெற்றி பெற்று, கொங்கு மண்டலம் எப்போதும் தம்முடைய கோட்டை என நிரூபித்துக் காட்டியது.

    கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 9-ஐ கைப்பற்றியது. அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைவதற்கு கொங்கு மண்டலம் தான் கைகொடுத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

    எனவே கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்களுக்கு ஜெயலலிதா முன்னுரிமை வழங்கினார். அவரது நம்பிக்கைக்குரிய மாவட்டமாக திகழ்ந்ததால் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்து செயல்படுத்தினார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்பு கொங்கு மண்டலத்தை கைப்பற்றுவதில் அனைத்து கட்சியினரும் குறியாக உள்ளனர். குறிப்பாக புதிய கட்சி தொடங்கியுள்ள கமலஹாசன் இந்த மாதத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் சுற்று பயணம் செய்து பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். மேலும் கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்திருந்தார்.

    கொங்கு மண்டலத்தில் கால் பதிப்பதன் மூலம் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனையில் அவர் இருப்பதால் கோவை சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார்.


    இதேபோல் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி தனது முதல் சுற்றுப்பயணத்தை கோவையில் தொடங்குவதாக தகவல் வெளியானது. இதற்கு முன் ஏற்பாடாக பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது. அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய கொங்கு மண்டலத்தில் தாங்கள் முத்திரை பதிக்க ரஜினி, கமல்ஹாசன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் தே.மு.தி.க.வும் தற்போது களத்தில் குதித்துள்ளது.

    தே.மு.தி.க.வின் 14-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பூரில் வருகிற செப்டம்பர் 16-ந்தேதி மாநில மாநாட்டை நடத்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த சில நாட்களாக முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்ட விஜயகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு அரசியல் மாநாட்டை அறிவித்திருப்பது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி, கமலை தொடர்ந்து விஜயகாந்தும் கொங்கு மண்டலத்தை குறிவைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொங்கு மண்டலம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்குமா? அல்லது இவர்களுக்கு சாதகமாக அமையுமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். #vijayakanth #kamal #vijayakanth #dmdk

    பிரதமர் மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களின் ஆட்சியாக உள்ளது என்று வேதாரண்யத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேசினார். #Congress #Thirunavukkarasar #Modi
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் நாகை தெற்கு மாவட்ட காங். செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

    காவிரி மேலாண்மை வாரியத்தில் உறுப்பினர் நியமனம் செய்ய கர்நாடகாவை தமிழக அரசு தான் முனைப்போடு முன்னின்று செயல்பட வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களுக்கு தீர்வு காணாமல் பாசிச போக்கை கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது.

    தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. 35 லட்சம் உறுப்பினர் கொண்டதை 50 லட்சமாக உயர்த்த மாவட்ட, நகர, பேரூர் தலைவர்கள் பாடுபட வேண்டும். தமிழக காங்கிரசில் காலியாக உள்ள பொறுப்புகளுக்கு உரிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மாவட்ட, மாநில, நகர அளவில் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    சாதி, மத பேதங்களை கடந்த கட்சி காங்கிரஸ் கட்சியாகும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்த கட்சியில் சூழ்நிலை சரியில்லை. ஓ.பி.எஸ். இ.பி.எஸ். அணிகள் ஆட்சி இருக்கும் வரைதான். தற்போது மாமா, மாப்பிள்ளை (திவாகரன், தினகரன்) கட்சிகளும் புதிதாக கிளம்பியுள்ளது. அனைவரும் அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆரை மறந்து விட்டனர். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்ற ஒரு சிலரை தவிர சினிமாவில் இருந்து வந்த யாரும் முதல்வராக முடியாது.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பின்னர் நடந்த தேர்தலில் (1991) காங்கிரஸ் தனித்து நின்றிருந்தால் ஆட்சியை பிடித்திருக்கும். 50 ஆண்டுகளுக்கு பிறகும் காங்கிரஸ் கட்சி வலுவாகதான் உள்ளது. கட்சிக்கு குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். கட்சி தெம்பாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும் என்ற இலக்கோடு கட்சித் தலைவர்கள் பணியாற்ற வேண்டும். தூய்மையான ஆட்சி நடத்திய காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்பதில் தவறில்லை. தற்போதைய பிரதமர் மோடி பல்வேறு பொய்களை சொல்லி ஆட்சியை பிடித்துள்ளார். அவரது பொய்யை நம்பி மக்கள் ஓட்டு போட்டு ஏமாந்து விட்டனர். மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களின் ஆட்சியாக உள்ளது. வரும் தேர்தலில் மோடிக்கு பிறகு நிலையான ஆட்சியை தரக்கூடியவர் ராகுல் தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #Modi
    அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அரசிடம் மனம் இருக்கிறது, ஆனால் பணம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #Minister #Jayakumar
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் காசி விஸ்வநாதர் கோவில் விஸ்தரிப்பு பகுதியில் நேற்று முன்தினம் காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 60-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின.

    தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

    அப்போது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அலெக் சாண்டர், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    பின்னர் அமைச்சர் ஜெயக் குமார் நிருபர்களிடம் பேட்டியளித்தபோது கூறியதாவது:-

    இந்த தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தர அதிகாரிகள் மற்றும் ஊர் மக்களோடு கோட்டையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    இரட்டை இலை தள்ளாடுகிறது; தாமரை இல்லை என்றால் இலை இல்லை என்று கூறுபவர்கள் உலகை உணராதவர்கள். மக்களின் மனநிலை புரியாதவர்கள். கற்பனை உலகில் வாழ்பவர்கள்தான் இது போன்ற கருத்துகளை கூறுவார்கள்.

    27 வருடங்களாக அரியணையில் இருக்கும் கட்சி அ.தி.மு.க. தான். எனவே தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தாமரைக்கோ, மக்கள் நீதி மய்யத்திற்கோ, புதிதாக முளைத்திருக்கும் கட்சிகளுக்கோ இடம் இல்லை.

    ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே ரூ.14 ஆயிரம் கோடி சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    அரசின் நிதி நிலைமையை பொறுத்துத்தான் மேற்கொண்டு முடிவு செய்ய முடியும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அரசிடம் மனம் இருக்கிறது; ஆனால் பணம் இல்லை. ஊதியக்குழு முரண்பாடு, ஓய்வூதியம் போன்றவைகளுக்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Minister #Jayakumar
    எந்த தேர்தல் வந்தாலும் பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். #Thangatamilselvan #ADMK #BJP

    கோவை:

    கோவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திவாகரன் கட்சி ஆரம்பித்து இருப்பதால் எங்களுக்கு எந்த பிரச்சினையயும் இல்லை. மக்கள் தான் தீர்ப்பு சொல்வார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் யாரும் அதிருப்தி இல்லை. ஆட்சியை தக்க வைத்தால் போதும் என்ற நிலையில் தற்போதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு சொல் படி கேட்டு நடந்து வருகிறது. எந்த தேர்தல் வந்தாலும் பா.ஜனதா, அ.தி.மு.க .ஆகிய கட்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் என்பது தேவையில்லாதது. இதற்காக எதற்கு ரு. 10 ஆயிரம் கோடி செலவு செய்யப்படுகிறது.


    இந்த திட்டத்திற்கு பதிலாக சென்னை-கன்னியாகுமரி இடையே 8 வழி சாலை அமைக்க வேண்டியது தானே?.

    18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பை நீதிமன்றம் உடனே வழங்க வேண்டும். தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மக்கள் மன்றத்தை நாட நாங்கள் தயாராக உள்ளோம்.

    காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரி டெல்டா முக்கியமா? அல்லது சென்னை - சேலம் 8 வழிச்சாலை முக்கியமா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thangatamilselvan #ADMK #BJP

    அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்பவர்களுடன் துணை போகக் கூடாது என்று சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
    சென்னை:

    சட்டப்பேரவையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டம் குறித்து பேசியதாவது:-

    2017-18ஆம் ஆண்டில், மாநில அரசு பெற்ற மொத்த வரி வருவாய் 93,795 கோடி ரூபாயாகும். இதில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பள செலவு மட்டும் 45,006 கோடி ரூபாயாகும். இது தவிர, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு வழங்கும் ஓய்வூதியத் தொகை 20,397 கோடி ரூபாய் என மொத்தம் 65,403 கோடி ரூபாய் நிர்வாகத்தை நடத்தும் அரசு ஊழியர்களுக்காக சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது. அதாவது, மொத்த வரி வருவாயில் சுமார் 70 சதவீதம் இவ்வாறு செலவு செய்யப்படுகிறது.

    பொது மக்களுக்கான நலத்திட்டங்களை, தொலை நோக்குத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தான் அரசு இருக்கிறது. அதை நிறைவேற்றத்தான் அரசு ஊழியர்கள் இருக்கின்றனர். அவ்வாறு இருக்கும்போது, அரசின் வருவாயில், நிர்வாகச் செலவு என்பது மிக அதிகமாக இருந்தால், திட்டங்களுக்கு நிதி ஒதுக்க இயலாது. இதை பொறுப்புணர்வுள்ள அரசு ஊழியர்களாகிய அனைவரும் நன்கு அறிவார்கள்.

    அரசு ஊழியர்கள் இந்த உணர்வுடன் செயல்பட்டால் தான் ஒரு நல்லாட்சியை வழங்கி பொது மக்களுக்கு நாம் அனைவரும் ஒன்று கூடி நன்மை செய்யமுடியும். ஊதிய உயர்வு வழங்கப்பட்ட பின்பு அதில் முரண்பாடுகள் ஏதேனும் இருப்பினும் அதையும் சரிசெய்ய அம்மாவின் அரசு ஒரு குழுவையும் அமைத்துள்ளது.

    இக்குழு பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களிடமிருந்து குறைகளைக் கேட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவும் விரைவில் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. இதை அனைத்து அரசு ஊழியர்களும், ஊழியர் சங்கங்களும் நன்கு அறிவர்.

    தமிழ்நாட்டில் உள்ள மொத்த அரசு ஊழியர்கள்-12 லட்சம் பேர். ஓய்வூதியம் பெறுவோர் 7.42 லட்சம் பேர். மொத்தமாக இந்த 19.42 லட்சம் குடும்பங்களுக்கு அரசின் வரி வருவாயில் செலவிடப்படும் தொகை 70 சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உட்பட மொத்தமாக உள்ள 2 கோடி குடும்பங்களுக்கும் சேர்த்து, மாநில அரசின் வரி வருவாயில் மக்கள் நல திட்டத்திற்கும், வளர்ச்சித் திட்டத்திற்கும் செலவிடப்படும் தொகை 6 சதவீதம் மட்டுமே என்பதை அரசு ஊழியர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள் என்றே கருதுகிறேன்.


    இந்த அளவு சம்பள உயர்வையும், பிற சலுகைகளையும் வழங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, மக்களின் நலன் கருதி அரசு ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு, பொறுப்புணர்வோடு கடமை ஆற்றுவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.

    சிறப்பான அரசு நிர்வாகத்தை வழங்க வேண்டியது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட நமது அனைவரின் கடமை என்பதை உணர்ந்து, மாநில அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, கோரிக்கைளை முன்நிறுத்தி அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்பவர்களுடன் துணை போகக் கூடாது என்று நான் வேண்டுகோளும் விடுக்கிறேன்.

    தற்போதுள்ள சூழ்நிலையில் எந்தெந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும், எவை நிறைவேற்ற முடியாது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். நிதி நிலைக்கு உட்பட்டு, நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கைகளை இந்த அரசு என்றும் தயக்கம் காட்டாமல் செயல்படுத்தும் என்பதையும் கடந்த ஓராண்டு காலமாக இந்த அரசு எடுத்த நல்ல பல நடவடிக்கைகள் மூலம் நீங்கள் அறிவீர்கள்.

    ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி, 1.1.2006 அன்று பெற்ற மாதாந்திர சராசரி ஊதியம் மற்றும் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை ஏற்றபின் 1.1.2016 அன்றைய மாதாந்திர சராசரி ஊதியம் மற்றும் ஆறாவது ஊதியக் குழு அமல்படுத்திய பின்னும், ஏழாவது ஊதியக் குழு அமல்படுத்திய பின்னும் ஏற்பட்டுள்ள சராசரி சம்பள உயர்வு எவ்வளவு என்பதை நான் குறிப்பாக சில பல உதாரணங்களை நான் சபைக்கு எடுத்துச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

    அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையிலும், 1.1.2016 முதல் புதிய ஊதியத்தை அமல்படுத்தி நிலுவைத் தொகை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சார்ந்த 1,176 பேர், 21.2.2018 அன்று, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் ஊர்வலமாக சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் தலைமைச் செயலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட போது, அவர்கள் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், அவ்வமைப்பினர் 24.2.2018 வரை அவர்களது மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

    பின்னர், இவ்வமைப்பினர் மீண்டும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 8.5.2018 அன்று அரசு விருந்தினர் மாளிகை அருகே ஒன்று கூடி தலைமைச் செயலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த முற்பட்டபோது, காவல் துறையினர் அவர்களை தடுத்து, கைது செய்தனர். மேலும், இப்போராட்டத்தில் பங்கு பெறுவதற்காக மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து சென்னைக்கு வந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 7,546 பேர் ஆங்காங்கே கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

    இருப்பினும் இவ்வமைப்பினர், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் 150 பேர், நேற்று (11.6.2018) எழிலகம் வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    தற்போது, ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் 108 பேர், எழிலகம் வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நான் இங்கே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி, தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறியுள்ளேன். எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்து, தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஆக்கபூர்வமாக செயல்பட்டு, மக்கள் நலனுக்காக சிறப்பான நிர்வாகத்தை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நான் அன்போடு அவர்களை கேட்டுக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார். #TNAssembly #OPanneerSelvam #JactoJio
    நீர் நிலைகளில் நீர் ஆவியாவதை தடுக்க ரூ.1,125 கோடியில் மிதக்கும் சூரிய மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #tnassembly #EdappadiPalaniswami

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பின்வரும் இடங்களில் 5 ஆயிரத்து 68 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 25 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

    திருநெல்வேலி மாவட்டம் ஆரல்வாய் மொழி பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளி கொணர்வதற்காக, சமூக ரெங்கபுரத்தில் ஒரு புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    கடலூர் மாவட்டம் நெய்வேலி, சிவகங்கை மாவட்டம், கோந்தகை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், பரலி ஆகிய இடங்களில் மொத்தம் மூன்று புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 1,669 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    உடன்குடி அலகு 1, 2x660 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றவும், 2x150 மெகாவாட் இந்த் (ஐ.என்.டி.) பாரத் அனல் மின் நிலையத்தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றவும் மற்றும் புதிய காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றவும், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1,039 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

    சென்னை மாநகரத்தின் மின் கட்டமைப்பை மேம்படுத்த, சென்னை மாவட்டத்தில் கணேஷ் நகர் மற்றும் கே.கே.நகர், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மற்றும் எண்ணூர்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் மறைமலை நகர் மற்றும் பல்லாவரம்; ஆகிய ஆறு இடங்களில் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 932 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    மதுரை மாவட்டத்தில் கே.புதூர், திருநெல்வேலி மாவட்டத்தில் ராஜகோபாலபுரம், திருப்பூர் மாவட்டத்தில் கலிவேலம்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்தில் எடப்பாடி என மொத்தம் நான்கு இடத்தில் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 716 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் காரப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்தளுர்; நாகை மாவட்டத்தில் ஆச்சாள்புரம், வேலூர் மாவட்டத்தில் மேல்பாடி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், தருமபுரி மாவட்டத்தில் இலக்கியம்பட்டி, திருப்பூர் மாவட்டத்தில் பணப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சின்னதடாகம், மதுரை மாவட்டத்தில் தானியமங்கலம் மற்றும் மாணிக்கம்பட்டி ஆகிய 10 இடங்களில் 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 110 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு நீர்த் தேக்கங்களில் நீர் ஆவியாவதை தடுக்கவும் மற்றும் சூரிய சக்தி கட்டாய கொள்முதல் அளவை அதிகரிக்கவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும், இந்திய சூரியசக்தி கழகமும் இணைந்து முதன்முறையாக 250 மெகாவாட் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையங்களை 1,125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாத்தியக்கூறின் அடிப்படையில் அமைக்கப்படும்.

    65 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள மோயாறு புனல் மின் நிலையத்தின் ஆயுட் காலத்தை மேலும் 25 ஆண்டுகள் நீட்டிப்புச் செய்திடவும், நிறுவு திறனை 3x12 மெகாவாட்டிலிருந்து 3x14 மெகாவாட்டாக அதிகப்படுத்திடவும், 67 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    2023-ம் ஆண்டு சூரிய எரிசக்தியில் 8,884 மெகாவாட் திறனை அடைவதற்கு ஏதுவாக “சூரிய எரிசக்திக் கொள்கை 2012” மாற்றி அமைக்கப்படும். இதன் மூலம், தமிழ்நாடு சூரிய எரிசக்திக் கொள்கை 2012, அம்மா தமிழ்நாடு தொலை நோக்குப் பார்வை 2023 மற்றும் தேசிய சூரிய இயக்கம் ஆகியவற்றின் நோக்கங்கள் ஒருங்கிணைக்கப்படும்.

    தமிழ்நாட்டுக்கு வழங்கிய தொலைநோக்கு பார்வை 2023 ஆவணத்தின் படி, உயர்ந்த பொருளாதார மற்றும் சமூக குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், புதிய எரிசக்தி கொள்கை ஒன்று உருவாக்கப்படும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். #tnassembly #EdappadiPalaniswami

    தமிழக சட்டசபையில் சபாநாயகர் தனபாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். #TNAssembly #congress #Vijayadharani
    சென்னை:

    சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார்.

    அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விஜயதரணி சபாநாயகருடன் மோதலில் ஈடுபட்டதால் அவரை வெளியேற்ற சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து பெண் காவலர்கள் உள்ளே வந்து விஜயதரணியை கையைப் பிடித்து வெளியே அழைத்துச் செல்ல முயன்றனர்.

    அவர்களைப் பார்த்து விஜயதரணி, ‘‘என்னை தொடாதீர்கள்’’ என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆவேசமாக கூறினார். தொடர்ந்து அவர் வெளியேற மறுத்ததால் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.

    பின்னர் விஜயதரணி நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

    சட்டசபையில் கன்னியாகுமரி மாவட்ட பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டேன். நேற்றும் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். ஆனால் எனக்கு பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். தொடர்ந்து நான் வற்புறுத்தியதால் சபை காவலர்களை கொண்டு வெளியேற்றினார்.


    சபை காவலர்கள் என்னை அநாகரீகமான முறையில் காயப்படுத்தி வெளியேற்றினார்கள். சேலையைப் பிடித்தும், கையைப் பிடித்து இழுத்தும் வயிற்றை அமுக்கியும் வெளியேற்றினார்கள். சட்டசபையில் சபாநாயகரும் அநாகரீகமான முறையில் பேசினார்.

    இவ்வாறு விஜயதரணி கண்ணீர் மல்க கூறினார்.

    விஜயதரணி வெளியேற்றப்பட்டதை கண்டித்து மற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். #TNAssembly #congress #Vijayadharani
    மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் 11,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஊரகப் பகுதிகளில், குடியிருப்பு பகுதிகளின் சமையலறை மற்றும் குளியலறைகளிலிருந்து வெளியேறும் திரவக் கழிவு நீர், சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க, தனிநபர் உறிஞ்சு குழிகளும், ஊரகப் பகுதிகளில், ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்ற குடிநீர் அமைப்புகளை சுற்றி கழிவு நீர் தேங்காமல் தடுத்திட சமுதாய உறிஞ்சு குழிகள் என மொத்தம் 2 லட்சத்து 500 உறிஞ்சு குழிகள் 168 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதனால் கழிவு நீர் வடிகட்டப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

    ஊரகப் பகுதிகளில் நடப்பாண்டில், 8 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1,000 அங்கன்வாடி மையங்கள், 87 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

    பழமையான மற்றும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்களுக்குப் பதிலாக, நடப்பாண்டில் தலா 17 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 500 புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், 88 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.

    பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம்-1ஐ தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தியதைத் தொடர்ந்து, பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் 11-னை செயல்படுத்த 201718ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    இத்திட்டத்தின்கீழ், நடப்பாண்டில், 192 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 287 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும். மேலும், 10 உயர்மட்டப் பாலங்கள் கட்டப்படும்.

    பல்வேறு வகையான சாலைகளை ஒரே திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 1,200 கோடி ரூபாய் செலவில் 5,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும்.

    ஊரகப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் ஆழ்துளை கிணறுகள் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. உப்பு அல்லது கடின தன்மை மற்றும் குடிநீரில் காணப்படும் இதர குறைகளை சீர் செய்து, பாதுகாக்கப்பட்ட குடிநீரினை மக்களுக்கு வழங்க நடப்பாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குக்கிராமங்களில், எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

    மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு அருகாமையில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கும், அடர்த்தியான மற்றும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய கிராம ஊராட்சிகளுக்கும், தெருவில் வைக்கும் 60,000 குப்பைத் தொட்டிகள் தலா 25,000 ரூபாய் மதிப்பில், 150 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

    ஊரகப் பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்துள்ளதால், இவ்வீடுகளை பராமரிப்பு செய்து தரக் கோரி மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் தொடர்ந்து வருவதை ஒட்டி, பழுதடைந்த நிலையில் உள்ள 45,594 வீடுகளை ஒரு வீட்டிற்கு 50,000 ரூபாய் வீதம் மொத்தம் 227 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்யப்படும். இதற்கான தொகை மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

    கடந்த 7 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 41,180 கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. 201718ஆம் ஆண்டில் விதி எண் 110ன் கீழ் 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, அதனை விஞ்சி 8,332 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கி, 119 சதவீதம் சாதனை எய்தப்பட்டது. அம்மா வழியில் செயல்படும் அம்மாவின் அரசால், மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் 11,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள 135 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (சென்னை தவிர) 35 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பாதாள சாக்கடைத் திட்டம் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும், 3 மாநகராட்சிகள், 25 நகராட்சிகளில் பாதாள சாக்கடை பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஒரு மாற்று ஏற்பாடாக, கசடுக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை செயல்படுத்த முடிவெடுத்து 51 நகராட்சிகள் மற்றும் 59 பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில் 49 நகரங்களில் கசடுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் 217 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

    மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டங்களில் குழாய்கள் பதித்தல் மற்றும் மழையினால் சேதமடைந்த சாலைகளை மறு சீரமைக்கும் பொருட்டு, நடப்பாண்டில் 1,350 கிலோ மீட்டர் நீளத்திற்கு 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    பேரூராட்சிப் பகுதிகளில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை மேம்பாட்டுப் பணிகள் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்பதை இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNAssembly #TNCM #EdappadiPalanisamy
    பலத்த மழை பெய்து வருவதால் காவிரி நீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #Ramadoss #CauveryManagementBoard

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் இயலாமையால், மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ள நிலையில், காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு அதிகரித்திருப்பதால் கர்நாடக அணைகளின் நீர்வரத்து இன்றைய நிலவரப்படி வினாடிக்கு 50,000 கன அடியை தாண்டியிருக்கக் கூடும். அணைகளின் நீர் இருப்பும் 25 டி.எம்.சியைத் தாண்டியிருக்கக் கூடும். இது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு போதுமானதாகும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சியும், ஜூலையில் 34 டி.எம்.சியும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான அறிவிக்கை கடந்த ஒன்றாம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அதற்கு அடுத்த நாளே ஆணையத்தில் தமிழகத்தின் பகுதி நேர உறுப்பினர் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்பின்னர் 10 நாட்களாகியும் கர்நாடக அரசின் சார்பில் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடைசியாக இன்றைக்குள் உறுப்பினரை அறிவிக்கும்படி கர்நாடக அரசுக்கு கெடு விதிக்கப்பட்டிருக்கிறது.


    ஆனால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை தாமதப்படுத்துவதற்காக இன்றும் காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர் பெயரை கர்நாடக அரசு அறிவிக்காமல் இருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு அறிவிக்கப்படாத சூழலில், அதைக் காரணம் காட்டி ஆணையத்தின் முதல் கூட்டம் தாமதப்படுத்தப்பட்டால் அது தமிழகத்திற்கு மேலும் பாதகத்தை ஏற்படுத்தும். அது குறுவை சாகுபடி செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை முற்றிலுமாக தகர்த்துவிடக் கூடும்.

    எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினர் பெயரை கர்நாடக அரசு இன்றைக்குள் அறிவிக்காவிட்டால், இது வரை நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களைக் கொண்டு காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் உடனடியாகக் கூட்ட வேண்டும்.

    அதில் தமிழகத்திற்கு முதல்கட்டமாக ஜூன்- ஜூலை மாதத்திற்கான 44 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையம் ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை ஆணையத்தின் அனுமதியின்றி உள்ளூர் பாசனத்திற்காக கர்நாடக அரசு திறக்கக்கூடாது என்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #CauveryManagementBoard

    தமிழகத்தில் தற்போது ஜெயலலிதாவின் பெயரை சொல்லி துரோகிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். #TTVDhinakaran #Jayalalitha

    திண்டுக்கல்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திண்டுக்கல்லில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    நாம் அனைவரும் மதங்களை கடந்து தமிழர்கள், இந்தியர்களாக இருக்கிறோம். நாங்கள் சிறுபான்மை மக்களுக்கு என்றுமே ஆதரவாக இருப்போம்.

    வாக்குவங்கியை மனதில் வைத்துக்கொண்டு இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதாக சிலர் அரசியல் பேசுகின்றனர். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முஸ்லிம் மக்களுக்கு தெரியும். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் வழியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம். மதவாத, சாதிய சக்திகளை அனுமதிக்கமாட்டோம்.


    இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதை நிரூபிப்பதற்காகவே இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன்.

    தமிழகத்தில் தற்போது ஜெயலலிதாவின் பெயரை சொல்லி துரோகிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்கு பின் தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி கவிழும். அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சியை பிடிக்கும்.

    மீத்தேன், ஸ்டெர்லைட், சேலம்- சென்னை 8 வழிச்சாலை போன்ற மக்கள் விரோத திட்டங்கள் இல்லாத ஆட்சியாகவும், சகோதரத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்தும் ஆட்சியாகவும் அமையும். மேலும் தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் ஆட்சியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran #Jayalalitha

    8 வழிச்சாலை பசுமை திட்டத்தில் விவசாயிகளை காவல் துறையினர் மூலம் அச்சுறுத்துவது ஜனநாயக மக்கள் விரோத போக்கு என்று திருநாவுக்கரசர் கூறினார். #congress #thirunavukkarasar
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆய்வு மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் ராஜபாளையத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    தமிழகத்தில் சேலம்- சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தில் ஆட்சியாளர்கள் காவல்துறையை பயன்படுத்தி விவசாயிகளை அச்சுறுத்தி, அவர்களின் நிலத்தை அபகரிக்க முயல்வது ஜனநாயக மக்கள் விரோத போக்காகும்.

    சமீப காலமாக சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகமாகி வருகிறது. இப்பிரச்சனை நிகழாமல் இருக்க மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப காவல்துறை எண்ணிக்கையை அதிகரித்து மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    தமிழகத்தில் 90 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். மோடி ஆட்சியில் மத்திய அரசின் சார்பிலோ அல்லது மாநில அரசின் சார்பிலோ எந்த தொழில் நுட்பமும் கடந்த நான்கு ஆண்டுகளில் தொடங்கப்படவில்லை. இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சியின்மை நாட்டில் ஏற்பட்டுள்ளது.

    குஜராத், பீகார் போல் தமிழகத்திலும் பூரண மது விலக்கு அமல்படுத்த காங்கிரஸ் பேரியக்கம் தமிழகம் முழுவதும் விரைவில் போராட்டம் நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தளவாய்பாண்டியன், ராஜ பாளையம் நகர கமிட்டி நிர்வாகி சங்கர்கணேஷ் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். #congress #thirunavukkarasar
    ஒரு கோடி வடமாநில இளைஞர்களை தமிழகத்தில் நுழைத்து வாக்குரிமை பெற்று தமிழகத்தில் ஜெயிக்க பா.ஜனதா சதிதிட்டம் தீட்டிவருவதாக ராதாரவி குற்றம்சாட்டியுள்ளார்.
    தரங்கம்பாடி:

    நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறை மூவலூர் தேரடி வீதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95 -வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நடிகர் ராதாரவி கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது.

    தி.மு.க. வை விட்டு விலகிச் சென்றவர்கள் அனைவரும் தற்போது வைகோ, வந்தது போல மீண்டும் தி.மு.க.விடமே வந்து சேர்வார்கள். அ.தி.மு.க. இரண்டு தலைமைகள் கொண்ட கட்சியாக மாறியுள்ளது. இது நிலைத்து இருக்க வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க. சிதறி சின்னா பின்னமாகிவிடும்.

    தி.மு.க. வில் 2-வது தலைவராக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.

    சினிமாவில் போராடி வெற்றி பெற வேண்டும் என்று பேசுகிற ரஜினி நிஜத்தில் தனது உரிமைகளுக்காக போராடுபவர்களை சமூக விரோதிகள் என்று சொல்லி மக்களை குழப்புகிறார்.

    தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை தமிழகத்திலேயே ஓடும் ரெயிலுக்கு ‘அந்த்யோதயா’ என்ற இந்தி பெயரை வைத்துள்ளனர். அந்த ரெயிலுக்கு தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பச்சைக் கொடியை காட்டி தொடங்கி வைக்கிறார்.

    தமிழகத்தில் தி.மு.க. இருக்கும் வரை இந்தியை திணிக்க முடியாது.

    தற்போது தமிழை மறக்கடிக்க வெளி மாநிலங்களில் இருந்து ஒரு கோடி வடமாநில இளைஞர்களை தமிழகத்தில் நுழைத்து வாக்குரிமை பெற்று தமிழகத்தில் ஜெயிக்க பா.ஜனதா சதிதிட்டம் தீட்டிவருகிறது. தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க இன்னும் 250 ஆண்டுகளாவது ஆகும். எதனையும் எதிர்க்க தயாராக தி.மு.க. தொண்டர்கள் இருக்க வேண்டும்.

    நீட் தேர்வை தமிழக மாணவர்கள் கேரளாவில் சென்று எழுதினால் என்ன தவறு? என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். வர இருக்கிற தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்திலும், தமிழிசை வெளிமாநிலத்திலும் நின்று ஜெயிக்க முடியுமா?

    இவ்வாறு ராதாரவி பேசினார். #DMK #RadhaRavi #ADMK #BJP
    ×