search icon
என் மலர்tooltip icon

    எகிப்து

    • விபத்து நடந்த இடத்திற்கு சுமாா் 26 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் விவரிக்கவில்லை.

    தென்மேற்கு எகிப்தில் நியூ பள்ளத்தாக்கு மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் 45 பேரை ஏற்றிக் கொண்டு தலைநகர் கெய்ரோவுக்கு பயணிகள் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, மெதுவாக ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்த லாரி மீது இந்த பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் 17 பேர் உயிரிழந்தனர்.

    மேலும் இந்த விபத்தில் இருபத்தி ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களை மீட்பதற்காக விபத்து நடந்த இடத்திற்கு சுமாா் 26 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் விவரிக்கவில்லை.

    இங்கு விபத்துகள் பெரும்பாலும் வேகம், மோசமான சாலைகள் அல்லது போக்குவரத்து சட்டங்களை சரியாக செயல்படுத்தாததால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    • படுகாயமடைந்தவர்களை மீட்க சம்பவ இடத்திற்கு சுமார் 20 ஆம்புலன்ஸ்கள் விரைந்தன.
    • ரெயில் தடம் புரண்டதற்கான காரணத்தைக் கண்டறிய குழு அமைக்க உத்தரவு.

    எகிப்தின் கெய்ரோவில் நேற்று ரெயில் ஒன்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், 16 பேர் காயமடைந்துள்ளாதகவும் எகிப்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே படுகாயமடைந்தவர்களை மீட்க சம்பவ இடத்திற்கு சுமார் 20 ஆம்புலன்ஸ்கள் விரைந்தன. மேலும், ரெயில் தடம் புரண்டதற்கான காரணத்தைக் கண்டறியவும், இதற்கு பொறுப்பானவர்களைக் கண்டறியவும் ஒரு குழுவை அமைக்குமாறு எகிப்து போக்குவரத்து அமைச்சர் கமெல் எல்-வசீர் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக எகிப்து போக்குவரத்து அமைச்சகம், கலியுப்பில் உள்ள ரெயில் நிலைய நடைமேடை அருகே ரெயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தை அறிக்கையின் மூலம் உறுதி செய்துள்ளது.

    • இரு நாடுகளும் இந்த ஆண்டு தூதரக உறவுகளை நிறுவியதன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடுகின்றன.
    • மக்களிடையேயான உறவுகளின் அடிப்படையில் அன்பான மற்றும் நட்புறவை அனுபவிக்கின்றன.

    இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    எகிப்து அரபுக் குடியரசின் அதிபர் 2023ம் ஆண்டின் இந்திய குடியரசு தினத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி அல்-சிசிக்கு அனுப்பிய முறையான அழைப்பிதழை, கடந்த அக்டோபர் 16ம் தேதி அன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எகிப்திய அதிபரிடம் அளித்தார். இரு நாடுகளும் இந்த ஆண்டு தூதரக உறவுகளை நிறுவியதன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடுகின்றன.

    மேலும், இந்தியாவும் எகிப்தும் நாகரீக மற்றும் ஆழமான வேரூன்றிய மக்களிடையேயான உறவுகளின் அடிப்படையில் அன்பான மற்றும் நட்புறவை அனுபவிக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • வாடகைக்கு எடுத்து கூட்ட நெரிசல் இல்லாமல் நகரில் வலம் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • பொது போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வாகன பயன்பாட்டால் ஏற்படும் கார்பன் வெளிப்பாட்டை குறைக்க திட்டம்.

    எகிப்து நாடு சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக கெய்ரோ நகர முக்கிய சாலைகளில் சைக்கிள் ஓட்டிகளுக்கு தனிப்பாதை அமைத்து கொடுத்துள்ளது.

    விருப்பம் உள்ளவர்கள் செல்போன் செயலி மூலம் சைக்கிளை வாடகைக்கு எடுத்து கூட்ட நெரிசல் இல்லாமல் நகரில் வலம் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் சேவைகளை மேம்படுத்தி பொது போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வாகன பயன்பாட்டால் ஏற்படும் கார்பன் வெளிப்பாட்டை குறைக்க எகிப்து அரசு திட்டமிட்டுள்ளது.

    • எகிப்து நாட்டில் பேருந்து ஒன்று பயணிகளுடன் கவிழ்ந்து விழுந்தது.
    • இதில் 3 குழந்தைகள் உள்பட 21 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    கெய்ரோ:

    எகிப்து நாட்டின் தஹ்லியா மாகாணத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 3 குழந்தைகள் உள்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தகவலறிந்து சம்பவ இடம் சென்ற மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் எகிப்து நாட்டில் குவிந்து வருகின்றனர்.
    • 2 வாரம் நடைபெறும் இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    கெய்ரோ:

    ஆர்டிக், அண்டார்டிகா கண்டங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் உலக நாடுகள் இதுவரை கண்டிராத பெரும் அபாயத்தை எதிர்கொள்ள இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இதனால் பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக, ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1994-ம் ஆண்டில் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. இந்த பணித்திட்டத்தில் கையெழுத்திட்டுள்ள 198 நாடுகளும், 1995 முதல் ஆண்டுதோறும் பருவநிலை மாநாட்டை கூட்டி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருகின்றன.

    இதற்கிடையே, ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டத்தின் 27-வது மாநாடு எகிப்து நாட்டின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    50-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் வரும் 18-ம் தேதி வரை 2 வாரங்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்று பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான தங்களின் பரிந்துரைகளையும், முன்னெடுப்புகளையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள். நேற்று முதல் எகிப்தில் உலக தலைவர்கள் குவிந்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்றைய மாநாட்டில் பங்கேற்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேசுகையில், கால நிலை மாற்றம் குறித்து விரைவாக செயல்பட வேண்டிய நேரம் இது என தெரிவித்தார். மேலும், காலநிலை நிதியத்திற்கு நாட்டின் அர்ப்பணிப்பாக 11.6 பில்லியன் பவுண்டுகளை வழங்கினார்.

    • இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எகிப்துக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • அதிபர் அப்துலை சந்தித்த அவர் பிரதமர் மோடியின் தனிப்பட்ட செய்தியை அவரிடம் வழங்கினார்.

    கெய்ரோ:

    எகிப்து நாட்டுக்கு இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் கெய்ரோ சென்ற அவர் அல்-ஹொரேயா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், எகிப்தில் அதிபர் அப்துல் பத்தா எல்-சிசியை மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசினார்.

    இதுதொடர்பாக, மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், எகிப்து அதிபர் சிசியை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரிடம், பிரதமர் மோடியின் தனிப்பட்ட செய்தியையும் ஒப்படைத்துள்ளேன். இந்தியா மற்றும் எகிப்து ஆகிய சுதந்திர எண்ணம் கொண்ட இரு நாடுகளும், அரசியல், சர்வதேச உறவுகள் மற்றும் சமூக கொள்கைகளில் சர்வதேச பங்காற்றி வருகின்றன. அமைதி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கான முகாந்திரங்களை இரு நாடுகளும் ஊக்குவித்து வருகின்றன என பதிவிட்டுள்ளார்.

    • இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றார்.
    • கெய்ரோவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு வெளியுறவுத்துறை மந்திரி மரியாதை செலுத்தினார்.

    கெய்ரோ:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக எகிப்து நாட்டிற்குச் சென்றுள்ளார்.

    எகிப்து தலைநகர் கெய்ரோவிற்குச் சென்ற அவர் அல்-ஹொரேயா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    இதுதொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கெய்ரோவின், அல்-ஹொரேயா பூங்காவில் காந்திக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் இன்றைய நாள் தொடங்கி உள்ளது. இது சுதந்திரத்திற்கான காரணத்துடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையது. அனைவருக்குமான நீதி மற்றும் சமத்துவத்திற்காக பாடுபட அவரது செய்தி உலகை ஊக்குவிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

    இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 2019-ல் அல்-ஹொரேயா பூங்காவில் காந்திக்கு மார்பளவு சிலை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது இந்திய வீரர்.
    • பாரீசில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.

    எகிப்த் நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் கலந்து கொண்ட 18 வயதான இந்திய வீரர் ருத்ராங்கஷ் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில் இத்தாலி வீரர் டானிலோ டென்னிஸ் சொலாஸ்ஸோவை 17-13 என்ற கணக்கில் அவர் வீழ்த்தினார்.

    இதன் மூலம் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி துப்பாக்கிச் சூடும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் உறுதி செய்துள்ளார்.

    • கெய்ரோவில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

    கெய்ரோ:

    எகிப்து தலைநகர் கெய்ரோவின் வடமேற்கில் இம்பாபா மாவட்டத்தில் அபு சிபைன் என்ற கிறிஸ்தவ ஆலயம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், திடீரென இந்த ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.

    மின்சார கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 15 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அனைத்து நிர்வாக சேவைகளும் முடுக்கி விடப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என அதிபர் அப்துல் பதா அல்-சிசி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    • எகிப்து ஹெர்ஹெடா மாகாணத்தில் செங்கடல் பகுதி அமைந்துள்ளது.
    • சுற்றுலா பயணிகள் யாரும் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கெய்ரோ:

    எகிப்து ஹெர்ஹெடா மாகாணத்தில் செங்கடல் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஷஹெல் ஹெஷ்ரிப் கடற்கரை சிறந்த சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது.

    இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது உண்டு. நேற்று விடுமுறையை கழிக்க பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த கடற்கரையில் குவிந்தனர். அவர்கள் உற்சாகமாக கடலில் இறங்கி குளித்தனர். சிலர் படகில் சென்று இயற்கை அழகை ரசித்தனர்.

    அப்போது கடலில் குளித்துக்கொண்டு இருந்தவர்களை சுறா திடீரென தாக்கியது. இதில் 2 பெண்கள் கடலுக்குள்ளே இறந்தனர். இதனால் அந்த பகுதி கடல் தண்ணீர் ரத்தமாக காட்சிஅளித்தது. மேலும் சிலர் சுறா தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த மற்ற சுற்றுலா பயணிகள் பயத்தால் அலறினார்கள். அவர்கள் அவசர, அவசரமாக நீச்சல் அடித்து கரைக்கு வந்தனர்.

    காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிசிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியை சுற்றி உள்ள கடற்கரைகளை 3 நாட்கள் மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் யாரும் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ×