என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • நள்ளிரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறேன்.
    • நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சமாதானப்படுத்த அமைதியானார்.

    'பத்ரி', 'ரோஜாக்கூட்டம்', 'சில்லுனு ஒரு காதல்' போன்ற படங்களில் நடித்தவர் பூமிகா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

    தற்போது அக்கா, அண்ணி வேடங்களில் நடித்து வரும் பூமிகா 'யுபோரியா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஐதராபாத்தில் நடந்த இதன் பட விழாவில் பூமிகா பங்கேற்று பேசும்போது ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டார்.

    "இந்த படத்தில் நடிக்கத் தொடங்கியது முதல் என்னால் நிம்மதியாக தூங்கமுடியவில்லை. நள்ளிரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறேன்" என்று பேசிக்கொண்டே தேம்பி தேம்பி அழ தொடங்கிவிட்டார். இதையடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சமாதானப்படுத்த அமைதியானார். இது நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

     

    'யுபோரியா' படம் சிறுமிகள்- பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் சம்பந்தப்பட்ட உண்மை சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். குணசேகர் இயக்கியுள்ள இப்படத்தில் பூமிகா, சாரா அர்ஜூன், பிருத்வி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடத்துள்ளனர். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானதை அடுத்து படவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு.
    • விவசாயிகள், மீனவர்கள், தொழில்முனைவோர்களுக்கு புதிய வாய்ப்புகள் திறக்கும்.

    அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் உருவாகும் புதிய வாய்ப்புகளால் மேக் இன் இந்தியா வலுப்பெறுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து மேலும் பிரதமர் மோடி கூறியதாவது:-

    இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஒரு நல்ல செய்தி!

    நமது இரு பெரிய நாடுகளுக்கும் இடையே ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பில் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். நமது நாடுகளுக்கு இடையேயான வலுவான உறவுகளுக்கு ஜனாதிபதி டிரம்பின் தனிப்பட்ட அர்ப்பணிப்புக்கு நான் நன்றி கூறுகிறேன்.

    இந்த கட்டமைப்பு நமது கூட்டாண்மையின் வளர்ந்து வரும் ஆழம், நம்பிக்கை மற்றும் சுறுசுறுப்பை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் கடின உழைப்பாளி விவசாயிகள், தொழில்முனைவோர், MSMEகள், ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பாளர்கள், மீனவர்கள் மற்றும் பலருக்கு புதிய வாய்ப்புகளைத் திறப்பதன் மூலம் இது 'மேக் இன் இந்தியா'வை வலுப்படுத்துகிறது. இது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கும்.

    இந்தியாவும் அமெரிக்காவும் புதுமைகளை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டைப் பகிர்ந்து கொள்கின்றன. மேலும் இந்த கட்டமைப்பு நமக்கு இடையே முதலீடு மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகளை மேலும் ஆழப்படுத்தும்.

    இந்த கட்டமைப்பு நெகிழ்ச்சியான மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தும் மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கு பங்களிக்கும். ஒரு விக்ஸித் பாரத்தை உருவாக்குவதை நோக்கி இந்தியா முன்னேறும்போது, எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்ட, நமது மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கு பங்களிக்கும் உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தை மாதம் முடிய இன்னும் 9 நாட்கள் இருக்கிறது.
    • ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்குவாரா?.

    மீனம்பாக்கம்:

    தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களை பெறுவது என தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

    இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு செல்ல வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறும்போது, "தை மாதம் முடிய இன்னும் 9 நாட்கள் இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதம் இருக்கிறது" என்றார்.

    அப்போது நிருபர்கள், "ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்குவாரா?. தி.மு.க. அல்லது த.வெ.க.வில் இணைவாரா?" என கேட்டதற்கு அவர், "எந்த ஓ.பி.எஸ்.?" என கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றார்.

    • குண்டு வெடிப்பு தாக்கத்தால் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.
    • அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கதீஜா துல் குப்ரா மசூதியில் நேற்று மக்கள் அதிகம் கூடியிருந்த சமயம் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

    சந்தேக நபர் ஒருவர் மசூதி வாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டபோது தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.

    குண்டு வெடிப்பு தாக்கத்தால் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

    இதையடுத்து, இஸ்லாமாபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் மசூதியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும், 170-க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    • டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 411 ரன்கள் குவித்தது.
    • சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்தார்.

    புதுடெல்லி:

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 411 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் மிரட்டினார். அவர் 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் பால்கெனர் தனி ஆளாகப் போராடினார். அவர் 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் இங்கிலாந்து 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், 6வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், U19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், U 19 உலகக் கோப்பையை மீண்டும் தாயகத்திற்கு கொண்டு வந்துவிட்டனர். இந்தத் தொடர் முழுவதும் நமது வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்த வெற்றி எதிர்காலத்தில் பல இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும். தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக விளையாடி, திறமையை வெளிப்படுத்திய வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

    • விடுதி மற்றும் டைனிங் ஹால் முதல்கட்டமாக ஒப்படைக்கப்படும்.
    • அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் எடப்பாடி பழனிசாமியும், பிரதமரும் இணைந்து திறந்துவைப்பர்.

    திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வும், மதுரை மாவட்ட அதிமுக மூத்த தலைவருமான வி.வி.ராஜன் செல்லப்பா இன்று எய்ம்ஸ் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

    "கட்டிட பணிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 2500 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வளவு விரைவாகவும், வேகமாகவும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பணிகள் மார்ச் இறுதியில் முடிவடையும். விடுதி மற்றும் டைனிங் ஹால் முதல்கட்டமாக ஒப்படைக்கப்படும். விமர்சிப்பவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் பணிகள் வேகமாக நடைபெறுகிறது.



    மதுரைக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இந்த எய்ம்ஸ். 2028க்குள் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வாய்ப்பு உள்ளது. நிதிக்கு முதலில் தாமதம் ஆனது. முழுமையாகத் தயாராக உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமரும், அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து திறந்துவைப்பர். " என தெரிவித்தார். 

    மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கியது. 

    பிப்ரவரி 28, அன்று பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகை தந்து, எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டுமானப் பணிகளைத் திறந்து வைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் முதற்கட்ட பணிகள் மார்ச் இறுதியில் முடிவடையும் என ராஜன் செல்லப்பா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


    • வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான பாரளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், நீர் பீய்ச்சி அடித்தும் தடுத்தனர்.

    வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்டில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த நிலையில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.

    வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான பாரளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

    இதற்கிடையே யூனுஸ் தலைமையில் தற்போதைய இடைக்கால அரசாங்கத்தின் சில முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடந்த டிசம்பரில் மாணவர் அமைப்பு தலைவர் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள முகமது யூனுஸின் இல்லத்தை நோக்கி நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்றனர்.

    போராட்டக்காரர்கள் தடையை மீறி முன்னேற முயன்றபோது, அவர்களைக் கலைக்கப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், நீர் பீய்ச்சி அடித்தும் தடுத்தனர்.

    முகமது யூனுஸின் இல்லத்தைச் சுற்றியும், டாக்காவின் முக்கியப் பகுதிகளிலும் காவல்துறை மற்றும் ராணுவ பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.  

    • 40.2 ஓவர்கள் மட்டுமே இங்கிலாந்தால் தாக்குப்பிடித்தது.
    • பால்கனர் சதம் அடித்தாலும் 311 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நடைபெற்றது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. வைபவ் சூர்யவன்ஷியின் அபார சதத்தால் இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்தது. சூர்யவன்ஷி 80 பந்தில் 15 பவுண்டரி, 15 சிக்சருடன் இந்த ரன்களை குவித்தார். ஆயுஷ் மாத்ரே 51 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    வேதாந்த் திரிவேதி 36 பந்தில் 32 ரன்களும், விஹான் மல்கோத்ரா 36 பந்தில் 30 ரன்களும், அபிக்யான் கந்து 31 பந்தில் 40 ரன்களும் எடுத்தனர். கனிஷ்க் சவுகான் ஆட்டமிழக்கால் 20 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார்.

    பின்னர் 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் பென் டாவ்கின்ஸ் 56 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார். பென் மேய்ஸ் 28 பந்தில் 45 ரன்கள் விளாசினார். அதன்பின் சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்தாலும் கலெப் பால்கனர் அபாரமாக விளையாடி 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து 40.2 ஓவரிலேயே 311 ரன்கள் எடுத்து அல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்திய அணியில் அம்ப்ரிஸ் 3 விக்கெட்டும் தேவேந்திரன், கனிஷ்க் சவுகான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6-வது முறையாக இளையோர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    • தூங்கும் வசதி இல்லாமல் அமர்ந்து கொண்டே பயணிக்கும் பயணிகளுக்கு இது பெரும் அநீதி.
    • ஒரு முழு பெர்த்தை இரண்டு பயணிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரயில்வே கூடுதல் வருமானம் ஈட்டுகிறது

    ரெயில்களில் RAC முறையில் பயணிக்கும் பயணிகளிடம் முழு பயணக் கட்டணத்தையும் வசூலிக்கும் இந்திய ரெயில்வேயின் நடைமுறைக்கு பாராளுமன்ற நிலைக்குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    முழு கட்டணத்தைச் செலுத்தியும், தூங்கும் வசதி இல்லாமல் அமர்ந்து கொண்டே பயணிக்கும் பயணிகளுக்கு இது பெரும் அநீதி என்று குழு சுட்டிக்காட்டியுள்ளது.

    ஒரு முழு பெர்த்தை இரண்டு பயணிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரயில்வே கூடுதல் வருமானம் ஈட்டுகிறது, ஆனால் பயணிகளுக்கு உரிய வசதிகள் வழங்கப்படுவதில்லை. எனவே RAC பயணிகளிடம், முழு கட்டணத்தில் பாதியை திரும்ப வழங்க (Refund) வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.

    மேலும் RAC பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுக் கட்டணத்திலும் சலுகை வழங்கப்பட வேண்டும் அல்லது அவர்களுக்குக் கட்டண ரீதியாக ஏதேனும் ஒரு பலன் கிடைக்க வேண்டும் என்று குழு வலியுறுத்தியுள்ளது.

    RAC நடைமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சகத்திற்கு நிலைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

    ரெயில்வே அமைச்சகம் இது குறித்து இறுதி முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற நிலைக்குழு என்பது ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை சிலரை உள்ளடக்கிய குழுவாகும். இது அரசின் கொள்கைகளை ஆராய்ந்து, தொடர்ந்து கண்காணிக்கும் பணியை செய்கிறது.   

    • கார் ரேசிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
    • அஜித் குமார் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் உச்ச நடிகர் அஜித் குமார். நடிப்பு மட்டுமின்றி கார் ரேசிங்கிலும் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார். கடந்த சில மாதங்களாக மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் தொடர்ச்சியாக கார் ரேசிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    கார் ரேசிங்கில் ஈடுபட்டுள்ள போதிலும், கிடைக்கும் நேரத்தில் ரசிகர்களை சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கார் ரேசிங்கை மட்டுமின்றி நடிகர் அஜித் குமாரை காண ரசிகர்கள் அதிகளவில் கூடுகின்றனர். இந்த நிலையில், செய்தியாளருக்கு சமீபத்தில் பேட்டியளித்த அஜித் குமார் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    ரசிகர்கள் ஆதரவு குறித்த கேள்விக்கு பதலளித்த அஜித் குமார், "இது எனக்கு மிகவும் முக்கியமானது. அதாவது, பெரும்பாலான நேரங்களில் ஒருவர் தனது சவுகரியத்தை விட்டு வெளியே வரும்போது, அவர் அப்படிச் செய்யலாமா, கூடாதா என்பது போன்ற பல விமர்சனங்களும் விவாதங்களும் எழுகின்றன. ஆம், நானும் அதை எதிர்கொள்கிறேன்."

    "மலேசியா, துபாய் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவுக்கு நன்றி. சர்கியூட் ஆஃப் ஸ்பா-வில் என்னை ஆதரிக்க சுமார் 9000 ரசிகர்களும், நர்பர்கிங்கில் 6000 ரசிகர்களும் வந்திருந்தனர். நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை இது எனக்கு உறுதிப்படுத்துகிறது."

    "உண்மையாகச் சொல்லப்போனால், நான் இதை எனக்காகச் செய்யவில்லை. எனக்கு இந்த விளையாட்டு மீது அளவு கடந்த காதல் உண்டு. என்னால் முடிந்தவரை நீண்ட காலத்திற்கு ஒரு பந்தய ஓட்டுநராக இருக்க நான் நிச்சயமாக விரும்புகிறேன்," என்றார்.

    • இன்னும் 10 தேர்தலில் நிற்பேன். அதுவும் ராயபுரம் தொகுதியில் தான் நிற்பேன்.
    • எனக்கு சொந்த ஊர் என்றால் ராயபுரம் தான்.

    சென்னை ராயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    2001-ம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற வைத்த நீங்கள் 2021-ம் ஆண்டு தேர்தலில் கைவிட்டுடீங்களே? இப்படி. நான் என்ன தப்பு செய்தேன். ஊரை அடித்து உலையில் போட்டேனா?, கட்ட பஞ்சாயத்து பண்ணேனா? கள்ளச்சாராயம் காய்ச்சினேனா, ரவுடி மாமூல் கேட்டேனே, இல்லை அடாவடித்தனம் பண்ணி பொறுக்கித்தனம் பண்ணி ரவுடித்தனம் பண்ணேனே? சொல்லுங்க பார்க்கலாம் யாராவது. அப்படி இருந்தா அரசியலை விட்டு போய்விடுகிறேன்.

    அந்த மாதிரி என்றைக்கும் அ.தி.மு.க. கிடையாது. ஜெயக்குமாரும் கிடையாது. உங்களையே சுத்தி சுத்தி வந்தனேன். இன்னும் 10 தேர்தலில் நிற்பேன். அதுவும் ராயபுரம் தொகுதியில் தான் நிற்பேன். நான் பொதுச்செயலாளர் கிட்ட கேட்டேன் என்றால் கும்மிடிப்பூண்டி, மயிலாப்பூர் இல்லன்னா சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போய் நிற்பேன். ஆனால் எனக்கு ஒரே ஒரு சொந்த ஊர் என்றால் ராயபுரம் தான் என்றார். 

    • இப்படம் பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ளது.
    • இப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிர்களின் கவனத்தை பெற்றது.

    'அசுரன்', 'விடுதலை 2' படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் தற்போது இயக்குநராக அறிமுகமாகும் படம் 'யூத்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், 'யூத்' படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 'முட்ட கலக்கி' என தொடங்கும் இப்பாடலை கென் கருணாஸ் எழுதி பாடியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட மேக்கிங் வீடியோடிவில், கென் தான் எழுதிய பாடலை ஜி.வி.பிரகாஷை பாட கூறுகிறார். ' முட்ட கலக்கி ' என்ற முதல் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

    'யூத்' படத்தை பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்துள்ளார். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிர்களின் கவனத்தை பெற்றது. 



    ×