செய்திகள்

கனடா ‘பாப்’ பாடகர் ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சிக்கு சீனா தடை

Published On 2017-07-22 07:32 GMT   |   Update On 2017-07-22 07:32 GMT
கனடாவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சிக்கு சீனா தடை விதித்துள்ளது.
பெய்ஜிங்:

கனடாவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் (23). இவர் மிக இளம் வயதிலேயே மிகவும் ‘பாப்புலர்’ ஆனவர். இவர் உலகம் முழுவதும் பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

கடந்த 2013-ம் ஆண்டு சீனாவில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிலையில் இந்த ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்த சீன அரசிடம் அனுமதி கோரினார். ஆனால் இவர் இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்காமல் தடை விதிக்கப்பட்டது.

இது குறித்து பெய்ஜிங் நகராட்சி கலாசார மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஜஸ்டின் பீபர் நம்பிக்கைக்குரியவராக இல்லை’. கடந்த முறை சீனாவில் இசை நிகழ்ச்சி நடத்திய போது அவரது நடவடிக்கைகள் கெட்ட நடத்தையுடன் இருந்தன.

எனவே அவர் மக்கள் விரும்பும் வகையில் பாடல் வரிகளை உருவாக்கி தன்னை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவரது இசை நிகழ்ச்சியில் தங்களது இதயம் இயற்கைக்கு மாறாக வேகமாக துடித்ததாகவும், மீண்டும் சீனாவில் இசை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டாம் என அரசு இணையதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் யாசுகுனி கோவிலில் ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சி நடத்தினார். 2-ம் உலகப் போரில் பலியான லட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதில் சீன ரசிகர்களுக்காக மன்னிப்பு கேட்டு அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தார். அது குறித்து குறிப்பிடாமல் அவரது ‘நடவடிக்கைகள் சரியில்லை’ என சீன அரசு மறைமுகமாக குறிப்பிட்டுள்ளது.
Tags:    

Similar News