பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: வைகோ-காங்கிரசார் நாளை கருப்பு கொடி போராட்டம்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மத்திய அரசு திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி அரசு விழாக்களில் பங்கேற்க தமிழகம் வந்தால் அவருக்கு கருப்பு கொடி காட்டுவோம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கன்னியாகுமரிக்கு நாளை பிரதமர் மோடி வருகிறார். அரசு விழாவிலும் பங்கேற்க உள்ளார்.
இது பற்றி குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வெற்றிவேல் கூறியதாவது:-
கன்னியாகுமரிக்கு நாளை பிரதமர் மோடி வர இருக்கிறார். அரசு விழாவிலும் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ம.தி.மு.க. சார்பில் கருப்பு கொடி காட்டப்படும்.
ஆரல்வாய்மொழி சந்திப்பில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்பு கொடி போராட்டம் நடைபெறும். இதில் ஏராளமான ம.தி.மு.க. வினர் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினரும் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
நாகர்கோவில் வேப்ப மூட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக குமரிகிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
போலீசார் அனுமதி மறுத்தாலும் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என்று காங்கிரசார் கூறியுள்ளனர். #modi #vaiko #congress