டெல்டா மாவட்டங்களில் புயல் சேதம் அதிகமாகவே உள்ளது- மத்தியக்குழு தலைவர் பேட்டி
நாகப்பட்டினம்:
டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கஜா புயல் சேத பாதிப்புகளை மத்திய குழு தலைவர் டேனியல் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். நேற்று தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது தென்னை விவசாயிகள், வீடுகளை இழந்த மக்கள் மத்திய குழுவினரிடம் கண்ணீர் மல்க வேதனையை தெரிவித்தனர்.
இன்று 3-வது நாளாக நாகை மாவட்டத்தில் மத்திய குழுவினர் சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நாகை, வேட்டைகாரனிருப்பு, கோடியக்கரை, புஷ்பவனம், கோவில்பத்து ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது புஷ்பவனம் கிராமத்தில் கடல்நீர் உட்புகுந்தால் அந்த கிராமமே சேறும் சகதியுமாக இருப்பதை பார்த்து மத்திய குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமாரிடம், சேறும் சகதியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து மத்திய குழுத்தலைவர் டேனியல் ரிச்சர்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் மிக அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏராளமான தென்னை மரங்கள் விழுந்துள்ளன. விவசாயிகள் வேதனையை கேட்டு அறிந்து கொண்டோம். ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
கஜா புயல் சேத பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்து உள்ளோம். இதை மத்திய அரசிடம் சமர்ப்பித்து கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #CentralCommittee #gajacyclone #stormdamage