search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்டா மாவட்டம்"

    • பயிர்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை திறக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.
    • கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக மேட்டூர் அணையை திறக்க நீர்ப்பாசன துறை முன்வர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயை, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர்.பாண்டியன் சந்தித்து டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி கருகி வரும் சம்பா, தாளடி நெற்பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

    பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி சம்பா, தாளடி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. காவிரியில் தண்ணீர் திறப்பு குறித்து முடிவு எடுக்கிற அதிகாரம் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு தான் வழங்கப்பட்டிருந்தது. இது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் நடவடிக்கையாகும். நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட பிறகு 4 மாவட்ட கலெக்டரிகளின் பரிந்துரையை ஏற்று மேட்டூர் அணை திறப்பதையும், அடைப்பதையும் வாடிக்கையாக பின்பற்றப்படுகிறது.

    தற்போதைய தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நீர் பாசன துறையின் நிர்வாக அதிகாரத்திற்குள் தலையிடுவதும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்கிற நோக்கில் பயிர்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை திறக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.

    எனவே கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக மேட்டூர் அணையை திறக்க நீர்ப்பாசன துறை முன்வர வேண்டும் என வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வு கூட்டத்திலும் உதயநிதி கலந்து கொள்கிறார்.
    • மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி யிலும் அமைச்சர் உதயநிதி பங்கேற்கிறார்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இன்று மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் அவுரித் திடலில் நாகை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டமும், இரவு 7 மணிக்கு மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டமும் நடக்கிறது. இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு பட்டுக் கோட்டையில் பழஞ்சூர் செல்வம் இல்ல திருமண விழாவிலும், 11 மணிக்கு பரமேஸ்வரன் இல்ல திருமண விழாவிலும் 12 மணிக்கு மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி யிலும் அமைச்சர் உதயநிதி பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் 12.30 மணி அளவில் பட்டுக் கோட்டை கோமதி விலாசில் தஞ்சை தெற்கு மாவட்ட முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடக்கும் திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்திலும் உதயநிதி பங்கேற்று பேசுகிறார்.

    நாளை மறுநாள் (திங்கட் கிழமை) காலை 11 மணி அளவில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு துறைகளின், மாலை 4 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலவலக ஆய்வு கூட்டத்திலும் பங்கேற்கும் உதயநிதி அன்று இரவு அரியலூர், பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    வருகிற 29-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணிக்கு விருத்தாச்சலம் கழுதூரில் நடைபெறும் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி கலந்து கொள்கிறார். இதில் கடலூர் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். அன்று மாலை 4 மணி அளவில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெறும் பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வு கூட்டத்திலும் உதயநிதி கலந்து கொள்கிறார்.

    முன்னதாக இன்று காலையில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மண்டல ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார்.

    நேற்று தஞ்சை மற்றும் திருவாரூரில் நடந்த தி.மு.க. இளைஞர் அணிசெயல் வீரர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

    • நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
    • நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் 101 இடங்களில் நிலக்கரி மற்றும் அதன் துணைப்பொருட்கள் எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது.

    ஏற்கனவே மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களில் இருந்து மீண்டு வந்த டெல்டா மாவட்டத்திற்கு தற்போது எமனாக நிலக்கரி எடுக்கும் திட்டம் வந்துள்ளது.

    அப்பகுதிகளில் நிலக்கரியை தோண்டி எடுப்பதற்கு விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் டெண்டரும் விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29-ந்தேதி வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் தமிழ்நாட்டின் மூன்று இடங்களில் நிலக்கரி எடுக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

    அவை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா தா.பழூர் அருகே உள்ள மைக்கேல்பட்டி பழுப்பு நிலக்கரி திட்டம், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 2 பழுப்பு நிலக்கரி திட்டங்கள் ஆகும்.

    குறிப்பாக திருவாரூர் மாவட்டம் வடசேரி முதல் கடலூர் மாவட்டம் புவனகிரி வரை இந்த திட்டம் நிலுவையில் உள்ளது. ஜெயங்கொண்டத்தில் இருந்து புதுச்சேரி வரை விவசாய நிலங்கள் அதன் தன்மையை இழந்து மலட்டுத்தன்மைக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி, திருவாரூர் மாவட்டம் உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு கிழக்கு பகுதி ஆகிய இடங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு டெண்டர் வெளியிட்டது.

    இந்த அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சிடைந்தனர். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்கும் சூழ்நிலையில் எப்படி நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு டெண்டர் விடலாம் என விவசாயிகள் கொந்தளித்துள்ளனர்.

    இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உடையார்பாளையம் தாலுகா தா.பழூர் அருகே உள்ள மைக்கேல்பட்டி நிலக்கரி படுகையில் பருக்கல் ஊராட்சியை சேர்ந்த பருக்கல், அழிசுகுடி, வாத்திகுடிகாடு ஆகிய கிராமங்களில் முதல் கட்டமாக 14.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலக்கரி எடுப்பதற்கு திட்டமிடப்பட்டு தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் மற்றும் தா.பழூர் வட்டார பகுதிகள் டெல்டா பாசன பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இங்கு பிரதான விவசாயமாக நெல், கரும்பு, நிலக்கடலை, முருங்கை, மக்காச்சோளம், எள், உளுந்து, பருத்தி, பணப்பயிரான முந்திரி சாகுபடி ஆகியவை நடைபெற்று வருகின்றன.

    இவை தவிர மலர் சாகுபடி, காய்கறிகள் உற்பத்தி உள்ளிட்ட விவசாய மற்றும் தோட்டக்கலைத்துறை சாகுபடிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நிலக்கரி எடுக்கும் திட்டம் குறித்த தகவல் தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதனை எதிர்த்து போராடவும் விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். மேலும் இந்த நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து மைக்கேல் பட்டியை சேர்ந்த விவசாயி மத்தேயு கூறுகையில், அரியலூர் மாவட்டம் டெல்டா பாசன பகுதியாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. எனவே தீவிரமாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் எங்கள் பகுதியில் மத்திய அரசு எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்யக்கூடாது.

    ஒருவேளை அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தீவிரம் காட்டினால் நாங்கள் இப்பகுதி விவசாயிகளை ஒன்று திரட்டி தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.

    அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், மத்திய அரசு மின்சார தட்டுப்பாட்டை காரணம் காட்டி நிலக்கரி எடுக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த டெல்டாவை அழிக்கும் முயற்சியாகும்.

    வளம் கொழிக்கும் பூமியான டெல்டாவில் நிலக்கரி எடுத்தால் சுமார் 25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் அழிந்துவிடும். அதனை நம்பி வாழ்வாதாரமாக கொண்ட கோடிக்கணக்கான மக்கள் சொந்த ஊரிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்படுவார்கள். அதுமட்டுமின்றி நிலக்கரி எடுக்கும் பகுதிகளை சுற்றிலும் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு விளைநிலங்கள் அதன் தன்மையை இழந்துவிடும். இந்த நிலக்கரி திட்டத்தை எதிர்த்து கடுமையான போராட்டத்திற்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என்றார்.

    காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறுகையில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் எந்தெந்த பகுதியில் என்னென்ன தரத்தில் நிலக்கரி இருக்கிறது என ஆய்வு செய்வது என்பதே நிலக்கரி எடுப்பதற்கான முன்னேற்பாடுதான்.

    நிலக்கரி திட்டத்திற்கு அனுமதி கொடுத்தால் டெல்டா மாவட்டங்களில் முற்றிலும் விவசாயம் அழிந்து விடும். வேளாண் பூமியான டெல்டா பகுதி கனிமவள சுரங்கங்களின் பாதாள பூமியாக மாறிவிடும். எனவே டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி தொடர்பாக ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

    இருந்தாலும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒருபோதும் டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி கிடையாது என திட்டவட்டமாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

    • இன்று காலை முதல் நாகை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது.
    • மழையின் காரணமாக ஈரப்பதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கொள்முதல் தாமதப்படுமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் பெரும்பாலான நாட்கள் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. அதாவது பொதுவாக இந்த காலகட்டத்தில் மழை இன்றி வெயில் அடிக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்தது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இதே நிலை நீடித்து வருகிறது.

    இந்த சூழ்நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை இன்றி காணப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.

    இதேபோல் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், வல்லம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை இன்றி காணப்பட்டதால் குறுவை அறுவடை பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. பெரும்பாலான இடங்களில் கிட்டத்தட்ட குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. சில இடங்களில் இறுதி கட்டத்தை எட்டியது. தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் அறுவடை பாதிக்குமோ என விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    மேலும் இன்று காலை முதல் நாகை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது.

    இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்துள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், புங்கனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லில் ஏற்கனவே ஈரப்பதம் அதிகமாக இருந்தால் சில இடங்களில் கொள்முதல் செய்யப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஈரப்பதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கொள்முதல் தாமதப்படுமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதனால் அறுவடை செய்த நெல் மற்றும் வயலில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிர்களை எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் தவிக்கின்றனர்.

    தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் அறுவடை பணிகள் முற்றிலும் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே நேரடி கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் ஈரப்பதம் வரை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உரங்களை லிக்யூடாக வழங்க வேண்டும். பேட்டரி ஸ்பிரே வழங்க வேண்டும்
    • திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்ட வேளாண் அலுவலகத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சை காட்டுதோட்டத்தில் உள்ள மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் ஜஸ்டின் வரவேற்று பேசினார்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினர். அப்போது திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்ட வேளாண் அலுவலகத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். உரங்களை லிக்யூடாக வழங்க வேண்டும். பேட்டரி ஸ்பிரே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முன்னதாக குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை மீண்டும் அறிவித்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

    ×