என் மலர்
நீங்கள் தேடியது "டெல்டா மாவட்டம்"
- சேமிப்பு கிடங்குகளில் நெல்மூட்டைகள் வைக்க இடவசதி உள்ளதா என்று கேட்டறிந்தார்.
- காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் காணொலி வாயிலாக ஆலோசனையில் இணைந்து இருந்தனர்.
சென்னை:
வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 20-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல்கொள்முதல் நிலையங்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக டெல்டா மாவட்டங்களில் உள்ள கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
நெல்கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக நெல்மூட்டைகள் வைக்கப்பட்டு உள்ளதா? என்று விசாரித்ததுடன் மேற்கொண்டு 'தார்பாய்' தேவைப்படுகிறதா? சேமிப்பு கிடங்குகளில் நெல்மூட்டைகள் வைக்க இடவசதி உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் கடைமடை பகுதி முழுவதும் சென்றடைந்துள்ளதால் குறுவை சாகுபடி விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, டி.ஆர்.பி.ராஜா மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் உள்ள கலெக்டர்கள் காணொலி வாயிலாக ஆலோசனையில் இணைந்து இருந்தனர்.
- விவசாயிகளின் வேதனைக் குரல் காதில் விழாத அளவிற்கு மமதையில் இந்த ஆட்சியாளர்கள் சுற்றித் திரிகிறார்கள்.
- தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட கடைமடை பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பகுதிகளில் உள்ள பாசனக் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டு, ஜூன் மாதம் 12-ம் தேதியன்று, மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் குறித்த காலத்தில் கடைமடை பகுதிகளைச் சென்றடையும்.
இந்த ஆண்டு காவிரி படுகைகளில் எந்தவித தூர்வாரும் பணிகளையும் செய்யாமல், வீண் ஜம்பத்திற்காகவும், வெற்று விளம்பரத்திற்காகவும் முதலமைச்சர் ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்தி ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து விட்டார். அந்தத் தண்ணீர் காவிரி படுகை முழுவதும் தடையின்றி பயணம் செய்து கடைமடை வரைச் செல்லும் நிலை உள்ளதா? என்பதை சிந்தித்துப் பார்க்காமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டது டெல்டா பாசன விவசாயிகளைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு 20 நாட்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் டெல்டா மாவட்ட கடைமடை பகுதிகளுக்குக் காவிரி தண்ணீர் சென்றடையாமல், கடைமடை விவசாயிகள் நடவுப் பணிகளை உரிய நேரத்தில் மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஒன்றியங்கள்; நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு, வேதாரண்யம் ஒன்றியங்கள்; தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் ஒன்றியங்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கு இன்னும் காவிரி தண்ணீர் சென்று சேரவில்லை.
விவசாயிகளின் வேதனைக் குரல் காதில் விழாத அளவிற்கு மமதையில் இந்த ஆட்சியாளர்கள் சுற்றித் திரிகிறார்கள். கடல் முகத்துவாரங்களில் வெங்காயத் தாமரை புதராக மண்டிக் கிடப்பதால் விவசாயிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர். பாசன மதகுகள் மற்றும் கதவணைகள் பழுதுபார்க்கப்படாததால் பாசன நீரைத் தேவைக்கேற்ப திறக்க முடியவில்லை.
ஆசிய வளர்ச்சி வங்கி, கடல் முகத்துவார சீரமைப்புக்காக வழங்கும் நிதியைப் பெற நிர்வாகத் திறனற்ற தி.மு.க. ஆட்சியாளர்கள் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்று விவசாய அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. நிர்வாகத் திறனற்று செயல்படும் தி.மு.க. ஸ்டாலின் மாடல் ஆட்சியில், டெல்டா பாசன விவசாயிகள் இந்த ஆண்டு முழு அளவில் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையை ஏற்படுத்திய நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் கடலில் கலக்கும் இச்சூழ்நிலையில், ஏன் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை. உரிய முறையில் தண்ணீரைக் கொண்டு சென்று விவசாயிகளிடம் சேர்ப்பதில் இந்த அரசுக்கு என்ன சிக்கல்? கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாததால், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட கடைமடை பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் உடனடியாக தடையில்லாமல் தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
- நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தஞ்சாவூர்:
நாடு முழுவதும் 101 இடங்களில் நிலக்கரி மற்றும் அதன் துணைப்பொருட்கள் எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது.
ஏற்கனவே மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களில் இருந்து மீண்டு வந்த டெல்டா மாவட்டத்திற்கு தற்போது எமனாக நிலக்கரி எடுக்கும் திட்டம் வந்துள்ளது.
அப்பகுதிகளில் நிலக்கரியை தோண்டி எடுப்பதற்கு விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் டெண்டரும் விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29-ந்தேதி வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் தமிழ்நாட்டின் மூன்று இடங்களில் நிலக்கரி எடுக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
அவை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா தா.பழூர் அருகே உள்ள மைக்கேல்பட்டி பழுப்பு நிலக்கரி திட்டம், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 2 பழுப்பு நிலக்கரி திட்டங்கள் ஆகும்.
குறிப்பாக திருவாரூர் மாவட்டம் வடசேரி முதல் கடலூர் மாவட்டம் புவனகிரி வரை இந்த திட்டம் நிலுவையில் உள்ளது. ஜெயங்கொண்டத்தில் இருந்து புதுச்சேரி வரை விவசாய நிலங்கள் அதன் தன்மையை இழந்து மலட்டுத்தன்மைக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி, திருவாரூர் மாவட்டம் உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு கிழக்கு பகுதி ஆகிய இடங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு டெண்டர் வெளியிட்டது.
இந்த அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சிடைந்தனர். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்கும் சூழ்நிலையில் எப்படி நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு டெண்டர் விடலாம் என விவசாயிகள் கொந்தளித்துள்ளனர்.
இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உடையார்பாளையம் தாலுகா தா.பழூர் அருகே உள்ள மைக்கேல்பட்டி நிலக்கரி படுகையில் பருக்கல் ஊராட்சியை சேர்ந்த பருக்கல், அழிசுகுடி, வாத்திகுடிகாடு ஆகிய கிராமங்களில் முதல் கட்டமாக 14.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலக்கரி எடுப்பதற்கு திட்டமிடப்பட்டு தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் மற்றும் தா.பழூர் வட்டார பகுதிகள் டெல்டா பாசன பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இங்கு பிரதான விவசாயமாக நெல், கரும்பு, நிலக்கடலை, முருங்கை, மக்காச்சோளம், எள், உளுந்து, பருத்தி, பணப்பயிரான முந்திரி சாகுபடி ஆகியவை நடைபெற்று வருகின்றன.
இவை தவிர மலர் சாகுபடி, காய்கறிகள் உற்பத்தி உள்ளிட்ட விவசாய மற்றும் தோட்டக்கலைத்துறை சாகுபடிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நிலக்கரி எடுக்கும் திட்டம் குறித்த தகவல் தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதனை எதிர்த்து போராடவும் விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். மேலும் இந்த நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மைக்கேல் பட்டியை சேர்ந்த விவசாயி மத்தேயு கூறுகையில், அரியலூர் மாவட்டம் டெல்டா பாசன பகுதியாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. எனவே தீவிரமாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் எங்கள் பகுதியில் மத்திய அரசு எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்யக்கூடாது.
ஒருவேளை அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தீவிரம் காட்டினால் நாங்கள் இப்பகுதி விவசாயிகளை ஒன்று திரட்டி தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.
அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், மத்திய அரசு மின்சார தட்டுப்பாட்டை காரணம் காட்டி நிலக்கரி எடுக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த டெல்டாவை அழிக்கும் முயற்சியாகும்.
வளம் கொழிக்கும் பூமியான டெல்டாவில் நிலக்கரி எடுத்தால் சுமார் 25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் அழிந்துவிடும். அதனை நம்பி வாழ்வாதாரமாக கொண்ட கோடிக்கணக்கான மக்கள் சொந்த ஊரிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்படுவார்கள். அதுமட்டுமின்றி நிலக்கரி எடுக்கும் பகுதிகளை சுற்றிலும் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு விளைநிலங்கள் அதன் தன்மையை இழந்துவிடும். இந்த நிலக்கரி திட்டத்தை எதிர்த்து கடுமையான போராட்டத்திற்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என்றார்.
காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறுகையில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் எந்தெந்த பகுதியில் என்னென்ன தரத்தில் நிலக்கரி இருக்கிறது என ஆய்வு செய்வது என்பதே நிலக்கரி எடுப்பதற்கான முன்னேற்பாடுதான்.
நிலக்கரி திட்டத்திற்கு அனுமதி கொடுத்தால் டெல்டா மாவட்டங்களில் முற்றிலும் விவசாயம் அழிந்து விடும். வேளாண் பூமியான டெல்டா பகுதி கனிமவள சுரங்கங்களின் பாதாள பூமியாக மாறிவிடும். எனவே டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி தொடர்பாக ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
இருந்தாலும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒருபோதும் டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி கிடையாது என திட்டவட்டமாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.
- கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வு கூட்டத்திலும் உதயநிதி கலந்து கொள்கிறார்.
- மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி யிலும் அமைச்சர் உதயநிதி பங்கேற்கிறார்.
சென்னை:
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்று மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் அவுரித் திடலில் நாகை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டமும், இரவு 7 மணிக்கு மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டமும் நடக்கிறது. இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு பட்டுக் கோட்டையில் பழஞ்சூர் செல்வம் இல்ல திருமண விழாவிலும், 11 மணிக்கு பரமேஸ்வரன் இல்ல திருமண விழாவிலும் 12 மணிக்கு மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி யிலும் அமைச்சர் உதயநிதி பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் 12.30 மணி அளவில் பட்டுக் கோட்டை கோமதி விலாசில் தஞ்சை தெற்கு மாவட்ட முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடக்கும் திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்திலும் உதயநிதி பங்கேற்று பேசுகிறார்.
நாளை மறுநாள் (திங்கட் கிழமை) காலை 11 மணி அளவில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு துறைகளின், மாலை 4 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலவலக ஆய்வு கூட்டத்திலும் பங்கேற்கும் உதயநிதி அன்று இரவு அரியலூர், பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
வருகிற 29-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணிக்கு விருத்தாச்சலம் கழுதூரில் நடைபெறும் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி கலந்து கொள்கிறார். இதில் கடலூர் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். அன்று மாலை 4 மணி அளவில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெறும் பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வு கூட்டத்திலும் உதயநிதி கலந்து கொள்கிறார்.
முன்னதாக இன்று காலையில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மண்டல ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார்.
நேற்று தஞ்சை மற்றும் திருவாரூரில் நடந்த தி.மு.க. இளைஞர் அணிசெயல் வீரர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
- பயிர்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை திறக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.
- கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக மேட்டூர் அணையை திறக்க நீர்ப்பாசன துறை முன்வர வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயை, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர்.பாண்டியன் சந்தித்து டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி கருகி வரும் சம்பா, தாளடி நெற்பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி சம்பா, தாளடி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. காவிரியில் தண்ணீர் திறப்பு குறித்து முடிவு எடுக்கிற அதிகாரம் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு தான் வழங்கப்பட்டிருந்தது. இது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் நடவடிக்கையாகும். நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட பிறகு 4 மாவட்ட கலெக்டரிகளின் பரிந்துரையை ஏற்று மேட்டூர் அணை திறப்பதையும், அடைப்பதையும் வாடிக்கையாக பின்பற்றப்படுகிறது.
தற்போதைய தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நீர் பாசன துறையின் நிர்வாக அதிகாரத்திற்குள் தலையிடுவதும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்கிற நோக்கில் பயிர்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை திறக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.
எனவே கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக மேட்டூர் அணையை திறக்க நீர்ப்பாசன துறை முன்வர வேண்டும் என வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தஞ்சை மாவட்டத்தில் நேற்று பகல், இரவு என நாள் முழுவதும் மழை பெய்தது.
- பல வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.
தஞ்சாவூர்:
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்றுள்ளதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 11-ந் தேதி மழை பெய்ய தொடங்கியது. அன்றில் இருந்து தற்போது வரை இடைவிடாமல் அடைமழை கொட்டி வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று பகல், இரவு என நாள் முழுவதும் மழை பெய்தது. தொடர்ந்து விடிய விடிய பெய்த கனமழை இன்றும் நீடித்தது. தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் அதி கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. அடைமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைந்தது. மேலும் மாவட்டத்தில் பல வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.
மாவட்டத்தில் ஒரே நாளில் 1731.40 மி.மீ.அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக அதிகபட்சமாக திருவிடைமருதூரில் 196.40 மி.மீ. மழை கொட்டியுள்ளது. மஞ்சளாறில் 191 மி.மீ., கும்பகோணத்தில் 179 மி.மீ, கீாணை-168 மி.மீ, பாபநாசம்-124.20 மி.மீ, அய்யம்பேட்டை-124 மி.மீ, பூதலூர்-115, திருக்காட்டுபள்ளி-85.20, திருவையாறில் 78 மி.மீ, தஞ்சாவூரில்-35 மி.மீ. மழையும் பதிவானது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழையின் அளவு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்மழையால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளது. வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மூழ்கிய பயிர்கள் பாதிப்படையும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே ஃபெஞ்ஜல் புயலால் பயிர்கள் பாதிக்கப்பட்ட சூழலில் தற்போது இடைவிடாது பெய்யும் மழையால் மீண்டும் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்மழையால் இன்றும் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய இடைவிடாமல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக திருவாரூர், நன்னிலம், நீடாமங்கலம், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி கூத்தாநல்லூர் பின்னத்தூர், மாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் நன்னிலத்தில் 11.5 சென்டிமீட்டர் திருவாரூரில் 8.3 செ.மீ வலங்கைமானில் 8.8 சென்டிமீட்டர் குடவாசலில் 7.3 செ.மீ நீடாமங்கலத்தில் 7.2 செ.மீ மழையளவு பதிவாகியுள்ளது
இந்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மழை நீரில் சாய்ந்து வருகிறது. உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைப்போல் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, பனங்குடி, ஏனங்குடி, ஆனைமங்கலம், குறுக்கத்தி, கிள்ளுக்குடி, சீராவட்டம், திருப்பூண்டி, பூவை தேடி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகையில் 8.2செமீ மழை பதிவாகியுள்ளது.
நாகையில் 8.2செமீ, திருப்பூண்டி 0.9, வேளாங்கண்ணி 1.9, திருக்குவளை 1.1, தலைஞாயிறு 1.2, வேதாரண்யம் 1.4 கோடியக்கரை 2.8 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. மாணவர்களின் நலன் கருதி நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதைப்போல் மயிலாடுதுறை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகளை துறைமுகம், கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனை, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் மலர் தூவி நீரை திறந்து வைத்தனர்.
கடந்த 24ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.. அரசு நிலங்களை அபகரிக்க உதவும் புதிய உத்தரவை திரும்ப பெற வேண்டும்- சீமான்
அவர் தஞ்சை அருகே உள்ள கொக்கேரி கிராமத்தில் பீமனோடை வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, இன்று 4 மாவட்டங்களில் 7 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
2 நாள் ஆய்வு பணி முடிவடைந்ததை அடுத்து, டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வு குறித்து திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டியளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அனைத்து நீர்வழித் தடங்களிலும் தூர்வாரும் பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது.
தூர்வாரும் பணிகளால் வடகிழக்கு பருவமழையின்போது சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்காமல் காக்கப்படும்.
மகசூ, பெருக்கம், மகிழும் விவசாயி என்ற வாக்குறுதி செயல்படுத்தப்படுகிறது.
காவிரி நீரை முறையாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும்.
நடப்பாண்டில் 1.56 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை நீர் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் தற்போது அமைதிப் பூங்காவாக இருக்கிறது. கலவரம், சாத, மத மோதல், துப்பாக்கிச்சூடு தற்போது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. காபோன் பிரதமருடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்திப்பு
- இன்று காலை முதல் நாகை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது.
- மழையின் காரணமாக ஈரப்பதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கொள்முதல் தாமதப்படுமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் பெரும்பாலான நாட்கள் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. அதாவது பொதுவாக இந்த காலகட்டத்தில் மழை இன்றி வெயில் அடிக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்தது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இதே நிலை நீடித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை இன்றி காணப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
இதேபோல் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், வல்லம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை இன்றி காணப்பட்டதால் குறுவை அறுவடை பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. பெரும்பாலான இடங்களில் கிட்டத்தட்ட குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. சில இடங்களில் இறுதி கட்டத்தை எட்டியது. தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் அறுவடை பாதிக்குமோ என விவசாயிகள் கவலை அடைந்தனர்.
மேலும் இன்று காலை முதல் நாகை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது.
இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், புங்கனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லில் ஏற்கனவே ஈரப்பதம் அதிகமாக இருந்தால் சில இடங்களில் கொள்முதல் செய்யப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஈரப்பதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கொள்முதல் தாமதப்படுமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனால் அறுவடை செய்த நெல் மற்றும் வயலில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிர்களை எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் தவிக்கின்றனர்.
தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் அறுவடை பணிகள் முற்றிலும் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே நேரடி கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் ஈரப்பதம் வரை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உரங்களை லிக்யூடாக வழங்க வேண்டும். பேட்டரி ஸ்பிரே வழங்க வேண்டும்
- திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்ட வேளாண் அலுவலகத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
தஞ்சாவூர்:
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சை காட்டுதோட்டத்தில் உள்ள மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் ஜஸ்டின் வரவேற்று பேசினார்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினர். அப்போது திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்ட வேளாண் அலுவலகத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். உரங்களை லிக்யூடாக வழங்க வேண்டும். பேட்டரி ஸ்பிரே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முன்னதாக குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை மீண்டும் அறிவித்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று நடந்த ஒரு திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் கடுமையாக எதிர்ப்போம்.
கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி இதுவரை வந்து பார்வையிடவில்லை. மேலும் ஆறுதலுக்காக ஒரு அறிக்கை கூட விடவில்லை.
தமிழக மக்களை பிரதமர் மோடி வஞ்சித்து வருகிறார். தமிழ் மக்கள் நலனை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை.
மதுரைக்கு 27-ந்தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். அவருக்கு ம.தி.மு.க. சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும். இதற்கு விவசாயிகளும், பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும்.

கஜா புயலால் பாதித்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் சேதமான நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டினால் தமிழகத்தில் பல மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். சுப்ரீம் கோர்ட்டை மதிக்காமல் கர்நாடக அரசு புதிய அணை கட்டும் என்பது எனது வியூகம்.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். டெல்டா விவசாயிகளின் உரிமைகளுக்கு ம.தி.மு.க. என்றென்றும் துணை நின்று போராட்டம் நடத்தும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
இவ்வாறுஅவர் கூறினார். #pmmodi #vaiko #gajacyclone
தஞ்சாவூர்:
கஜா புயல் கடந்த 16-ந் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இதனால் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பலத்த சேதம் அடைந்தன.
இதில் தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், மல்லி பட்டினம், பட்டுக்கோட்டை, சேது பாவாசத்திரம், பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் மின்கம்பங்கள் மரங்கள் சாய்ந்து மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வந்தனர். கஜா புயல் பாதிப்பால் தென்னை, வாழை, நெல், கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்களான மக்காச்சோளம், வெற்றிலை ஆகியவையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கண்டியூர், திருப்பூந்துருத்தி, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மூலிகை பயிரான வெற்றிலை சாகுபடி ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. வெற்றிலை கொடி பயிர் செய்ய 1 ஏக்கருக்கு திராட்சை சாகுபடிக்கு செலவு செய்வது போல் வெற்றிலைக்கும் 5 லட்சம் செலவு ஏற்படுகிறது. அரசு சார்பில் எந்தவிதமான கடன், மற்றும் பயிர் பாதுகாப்பு ஆகியவை இந்த வெற்றிலை சாகுபடிக்கு செய்யப்படுவது இல்லை. அரசு சார்பில் தோட்டக்கலை பயிர்களுக்கு வழங்கும் நிவாரண தொகை போதுமானதாகவும் இல்லை என்று கூறுகின்றனர். இதற்கு குறைந்த பட்சம் ஏக்கருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து திருப்பூந் துருத்தியை சேர்ந்த வெற்றிலை விவசாயி சுகுமார் கூறியதாவது:-
திருப்பூந்துருத்தி பகுதியில் 2 ஏக்கருக்கு மேல் வெற்றிலை தோட்டம் வைத்திருந்தேன். கஜா புயல் தாக்கியதில் என்னுடைய தோட்டம் முற்றிலும் அழிந்து விட்டது.
வெற்றிலை கொடி வளர்க்க திராட்சை கொடிக்கு செலவு செய்வது போல செலவாகும். இந்த வருடத்தித்தில் 1 ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வீதம் 10 லட்சம் செலவு செய்துள்ளேன். தற்போது என்னுடைய வெற்றிலை தோட்டம் சாய்ந்து விட்டதால் வாழ்வாதாரம் முற்றிலும் இழந்து தவித்து வருகிறேன். இதேபோல் எங்கள் பகுதியில் பல வெற்றிலை சாகுபடி விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அரசு வெற்றிலை பாதிப்புக்கு 1 ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #gajacyclone #beteldamage






