இந்தியா

மத்தியில் ஆட்சி அமைப்பது யார்? இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் 1-ந்தேதி ஆலோசனை

Published On 2024-05-27 06:53 GMT   |   Update On 2024-05-27 06:53 GMT
  • கூட்டத்தில் யார்-யார் பங்கேற்பார்கள் என்ற விவரம் இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்.
  • கூட்டத்தில் 7 கட்ட தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் எப்படி செயலாற்றி உள்ளன என்பது பற்றி ஆய்வு செய்ய உள்ளனர்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.

வருகிற 1-ந்தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இன்னும் 3 நாட்களில் அதற்கான பிரசாரம் ஓய உள்ளது.

அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி ஓட்டுக்கள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி 3-வது தடவையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது. 400-க்கும் மேற்பட்ட இடங்களை குறி வைத்து அந்த கட்சி பிரசாரம் செய்துள்ளது.

ஆனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் தாங்கள்தான் மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று கூறி வருகிறார்கள். தங்களுக்கு 350 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா கூட்டணி தலைவர்கள் நம்பிக்கையுடன் தினமும் தெரிவிக்கிறார்கள்.

இதன் காரணமாக மத்தியில் யார் ஆட்சி அமையும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ் வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா, ராஷ்டீரிய லோக் தளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன.

இந்த 28 கட்சி தலைவர்களுக்கும் டெல்லியில் 1-ந்தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிவுகள் 4-ந்தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதற்கு 3 நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்த இருப்பதால் அந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கூட்டத்தில் யார்-யார் பங்கேற்பார்கள் என்ற விவரம் இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும். தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வார் என்று தெரிகிறது. அவர் டெல்லி பயணம் மேற்கொள்ளாவிட்டால் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என்று தெரிய வந்துள்ளது.

கூட்டத்தில் 7 கட்ட தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் எப்படி செயலாற்றி உள்ளன என்பது பற்றி ஆய்வு செய்ய உள்ளனர். தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பது பற்றியும் விவாதிக்க இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகளை பொறுத்து அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியும் கூட்டத்தில் முடிவு செய்ய இருக்கிறார்கள்.

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக பிரதமர் தேர்வு பற்றியும் 1-ந்தேதி கூட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கெஜ்ரிவால் சிறைச்சாலைக்கு திரும்பும் நிலையில் அதற்கு முன்னதாக இந்த கூட்டத்தை நடத்த வேண்டும் என்று ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்வாரா? என்று தெரியவில்லை. என்றாலும் அவர் இந்தியா கூட்டணி எடுக்கும் முடிவுகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக உறுதி அளித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக 1-ந்தேதி நடைபெற உள்ள ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தை பா.ஜ.க. தலைவர்கள் உன்னிப்பாக கவனிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

Tags:    

Similar News