செய்திகள்
மகாராஷ்டிரா வெள்ள நிவாரண நிதிக்கு முதல் மந்திரி, மந்திரிகள் ஒருமாத சம்பளம் நன்கொடை
முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மாநில மந்திரிகள் தங்களது ஒருமாத சம்பளத்தை மகாராஷ்டிரா வெள்ள நிவாரண நிதியாக வழங்க உள்ளனர் என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான நகரங்களில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அனைத்து துறை மந்திரிகளும் தங்களது ஒருமாத சம்பளத்தை மகாராஷ்டிரா மாநில வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர் என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், அவுரங்காபாத் மாவட்ட பால் பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் மகாராஷ்டிரா வெள்ள நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் இன்று வழங்கினர்.