செய்திகள்
உன்னாவ் விவகாரம்: மக்களவையில் கடும் அமளி - காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
உன்னாவ் வழக்கு விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்றும் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
புதுடெல்லி:
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் மீது இளம்பெண் பாலியல் புகார் கூறியிருந்தார். இது தொடர்பான வழக்கில் எம்.எல்.ஏ. சிறையில் இருக்கிறார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. அந்த பெண்ணை கொல்ல நடந்த சதி என்று எதிர்க்கட்சிகள் உ.பி. பா.ஜ.க. அரசு மீது குற்றம்சாட்டின.
உன்னாவ் கார் விபத்து விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தின் மக்களவையில் பிரச்சனையை கிளப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த விவகாரத்தை எழுப்பினார். அப்போது, எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் உள்துறை மந்திரி அமித்ஷா இந்த பிரச்சனை குறித்து பதிலளிக்கவில்லை என தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உன்னாவ் விபத்தில் சிக்கிய இளம்பெண்ணுக்கு வந்த மிரட்டல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கோஷமிட்டவாறே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.