செய்திகள்
புழுதி பறந்து தூசு மண்டலத்தில் சிக்கிக்கொண்ட பக்தர்கள்

சபரிமலை சன்னிதானத்தில் பறக்கும் தூசியால் முகத்தை மூடிச்செல்லும் பக்தர்கள்

Published On 2017-11-25 05:02 GMT   |   Update On 2017-11-25 05:02 GMT
சபரிமலையில் பரவியுள்ள சிமெண்ட் கலவை புழுதியால் நடை பந்தல் மற்றும் சன்னிதானத்திற்கு நடந்து செல்லும் பக்தர்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

மண்டல பூஜையில் பங்கேற்க வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வருகிறார்கள். நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. கட்டுமானப்பணிகளும் நடக்கிறது. இதற்காக சன்னிதானம், வலியநடை, நடை பந்தல், பெருவழி பாதைகளில் கட்டுமானப் பொருட்கள், சிமெண்ட் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் பெய்த மழையால் இந்த பகுதியில் இருந்த கட்டுமானப் பொருட்கள் மழை நீரில் இழுத்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.

மேலும் சிமெண்ட் கரைசலும் வழியெங்கும் பரவி உள்ளது. இப்போது மழை நின்று வெயில் அடிப்பதால் அவையாவும் காய்ந்து தூசாக மாறி உள்ளது.

சபரிமலை நடை பந்தல் மற்றும் சன்னிதானத்திற்கு நடந்து செல்லும் பக்தர்கள் அங்குள்ள புழுதியால் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

வழக்கமாக சபரிமலையில் மண்டல பூஜை விழா தொடங்கும் முன்பு பக்தர்கள் பயன்படுத்தும் பாதை, நடை பந்தல், பெருவழிபாதை போன்றவை சுத்தப்படுத்தும் பணி நடக்கும். ஆனால் இம்முறை அந்த பணிகள் எதுவும் முழுமையாக நடக்கவில்லையென்று பக்தர்கள் குற்றம் சாட்டினர். முகத்தில் கவசம் அணிந்து சென்றால் மட்டுமே தூசியில் இருந்து தப்பிக்க முடியும் என்ற நிலை சபரிமலையில் காணப்படுகிறது.

இதனை சீர்ப்படுத்தி, சன்னிதானம் மற்றும் பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டுமென்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Tags:    

Similar News