search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "devotees"

    • கோயிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர்
    • காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டித்துள்ளார்

    காசி விஸ்வநாதர் கோவில் உலகப் புகழ் பெற்ற வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இப்போது காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் பணியமர்த்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு காவி மற்றும் சிவப்பு நிறத்திலான புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பூசாரிகளை போல காவி உடையிலான சீருடை அணிந்து காவலர்கள் பணியாற்றி ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பேசிய வாரணாசி காவல் ஆணையர் மோஹித் அகர்வால், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்கு அனைத்து நாளும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் கடவுளை சிக்கல் இன்றி தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதன் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சில நேரங்களில் காவலர்கள் தங்கள் வலுக்கட்டாயமாக தள்ளுவதாக சில புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் பூசாரிகள் பக்தர்களை தடுத்தால் அதை அவர்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்வார்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பக்தர்களிடம் கனிவாக எடுத்து சொல்லி கூட்டத்தை நகர செய்வார்கள். கோயிலின் மற்ற பகுதியில் காவலர்கள், சீருடை அணிந்தே பணியாற்றுகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை கண்டித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், "காவல் துறையின் வழக்கத்தின்படி இது சரியா? பூசாரிகளை போல காவலர்கள் உடை அணிந்து பணி செய்யலாமா? இந்த உத்தரவை பிறப்பித்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், 'இதை சமூக விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசின் பதில் என்னவாக இருக்கும்? இது கண்டனத்துக்குரியது" என்று கூறியுள்ளார்.

    • கோவில் கருவறை மற்றும் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்தில் ரூ.118 கோடி உண்டியல் வருவாய் கிடைத்தது. இதன் மூலம் கடந்த 25 மாதங்களாக தொடர்ந்து ரூ.100 கோடியை தாண்டி உண்டியல் வசூலாகி உள்ளது.

    வருகிற 9-ந் தேதி யுகாதி ஆஸ்தானத்தையொட்டி தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்பட உள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவில் நாளை காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் கருவறை மற்றும் வளாகம் முழுவதும் தூய்மை ப்படுத்தும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

    இதனால் நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக கொண்டுவரும் பரிந்துரை கடிதங்களை தேவஸ்தானம் ரத்து செய்தது.

    இதனால் ரேணிகுண்டா விமான நிலையம் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் அதிக அளவில் விற்பனையாகின்றன.

    அதன்படி கடந்த 15 நாட்களில் ரூ.22.75 கோடிக்கு ஸ்ரீவாணி டிக்கெட்டு விற்பனையாகி உள்ளது.

    திருப்பதியில் நேற்று 81, 224 பேர் தரிசனம் செய்தனர். 24,093 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.35 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
    • மலையடிவாரத்தில் உள்ள டாக்டர்கள் குழுவினர், பக்தர்களை பரிசோதித்து மலையேற அனுமதித்து வந்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பூண்டி அருகே வெள்ளியங்கிரி மலை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான இங்குள்ள 7 மலைகளை கடந்து மலை உச்சியில் இருக்கும் சுயம்புலிங்கத்தை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டு வருகிறார்கள்.

    இங்கு மலையேறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். மலையேற சிரமமாக இருக்கும் என்பதால் மலையேறுபவர்கள் கையில் கம்பை ஊன்றியபடியே செல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

    இவ்வாறு வெள்ளியங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு மாதத்தில் மட்டும் 5 பக்தர்கள் பலியானார்கள். ஏற்கனவே அவர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு இருந்து மலையேறும் போது உடல்நிலை ஒத்துக் கொள்ளாமல் அவர்கள் இறந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மலையேற அனுமதித்து வருகிறார்கள். இதயநோய், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயது முதிர்ந்தவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதற்காக மலையடிவாரத்தில் உள்ள டாக்டர்கள் குழுவினர், பக்தர்களை பரிசோதித்து மலையேற அனுமதித்து வந்தனர்.

    இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் மரணம் அடைந்தார். சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் ரகுராம் (வயது 50). தனியார் வேலைவாய்ப்பு மையம் நடத்தி வந்தார். தீவிர ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்.

    இவரும், அவரது பகுதியில் வசிக்கும் 15 பேரும் சென்னையில் இருந்து ஒரு வேன் மூலம் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக நேற்று இரவு கோவை மாவட்டம் வந்தனர். பின்னர் அவர்கள் மலையேற தொடங்கினர். 4 மலைகளை கடந்து 5-வது மலைக்கு சென்ற நிலையில் ரகுராமுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.

    இதனால் அவருடன் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்குள்ள மலைவாழ் மக்களின் உதவியுடன் ரகுராமை மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். முகாமில் இருந்த மருத்துவர்கள், ரகுராமை சோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரகுராமின் உடல் பிரேத பரிசோதனை க்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே 5 பேர் இறந்தநிலையில் நேற்று ரகுராமும் மரணம் அடைந்ததால் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    • அறுபத்து மூவர் விழா இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது
    • உணவு பொருட்களை சாப்பிடும் பக்தர்கள் குப்பைகளை சாலையில் வீசாமல் இருப்பதற்காக சாலையோரம் 340 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 8 மணி அளவில் திருத்தேருக்கு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் எழுந்தருளினர்.

    காலை 9 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. 96 அடி உயரம், 300 டன் எடை கொண்ட தேரை, ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் 'சம்போ மகாதேவா' என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். 4 மாட வீதிகளில் வலம்வந்த தேர், பிற்பகல் 1.30 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அறுபத்து மூவர் விழா இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது. வெள்ளி விமானத்தில் 63 நாயன்மார்களோடு இறைவன் வலம் வரும் காட்சியை காண, சென்னை, புறநகர் பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிந்துள்ளனர். இன்று காலை முதலே மயிலாப்பூருக்கு பக்தர்கள் வரத் தொடங்கினார்கள். நேரம் செலச்செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்தது.

    மயிலாப்பூர் கோவிலில் இருந்து சில கிலோ மீட்டருக்கு பக்தர்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது. இதையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம், குளிர்பானம், பிஸ்கட், இனிப்பு வகைகள் உள்ளிட்டவை இன்று காலை முதலே வழங்கப்பட்டு வருகிறது. கோவிலை சுற்றியுள்ள தெற்கு மாடவீதி, வடக்கு மாட வீதி, கிழக்கு மாடவீதி, ராமகிருஷ்ண மடம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

     

    மயிலாப்பூர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்குமே ஒவ்வொரு பகுதியிலும் இந்த உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இதனால் மயிலாப்பூர் பகுதியே பக்தர்கள் வெள்ளமாக காணப்பட்டது.

    மேலும் உணவு பொருட்களை சாப்பிடும் பக்தர்கள் குப்பைகளை சாலையில் வீசாமல் இருப்பதற்காக சாலையோரம் 340 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 102 தொட்டிகள் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மிகப்பெ ரிய தொட்டிகள் ஆகும்.

    பக்தர்கள் தாங்கள் சாப்பிட்ட உணவுப்பொருட்களின் குப்பைகளை இந்த தொட்டிகளில் போட்டனர். குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக 10 பேட்டரி வாகனங்கள், 4 இலகு ரக மோட்டார் வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    மேலும் பக்தர்கள் குப்பை களை தொட்டிகளில் போடுமாறு 100-க்கும் மேற்பட்ட மாண வர்கள், தன்னார்வலர்கள் விழிப்புணர்வில் ஈடுபட்டனர். 3 ஷிப்டுகளாக 269 தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியிலும் ஈடுப டுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மயிலாப்பூரில் லட்சக்கணக்கான பகதர்கள் திரண்டதால் ஆயிரக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • மகாபாரத சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த உற்சவ பெருவிழா நடைபெற்றது .
    • துரியோதனன் வேடமணிந்து படுகள நிகழ்வை சிறப்பாக செய்து காண்பித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் அக்னி வசந்த உற்சவ பெருவிழா நடைபெற்றது .

    125 அடியில் அமைக்கப்பட்டிருந்த துரியோதனன் படுகளம் அருகே நாடக கலைஞர்கள் பீமன் மற்றும் துரியோதனன் வேடமணிந்து படுகள நிகழ்வை சிறப்பாக செய்து காண்பித்தனர்.

    24 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை காண கீழ்பாலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு துரியோதனன் படுகளத்தை கண்டுகளித்தது குறிப்பிடத்தக்கது.

    • மார்ச் 9ஆம் தேதி தொடங்கிய விழா வருகின்ற மார்ச் 22ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் சித்தேரி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் ரத உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது.

    மார்ச் 9ஆம் தேதி தொடங்கிய விழா வருகின்ற மார்ச் 22ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெறுகிறது இந்நிலையில் இன்று பங்குனி ஐந்தாம் நாள் ரத உற்சவ தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்நிகழ்வில் அலங்கரிக்கப்பட்ட பூங்காவனத்தம்மன் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இந்நிகழ்வை காண போளூர், கேளூர், துறிஞ்சிகுப்பம், சந்தவாசல், தேப்பனந்தல் அணைப்பேட்டை விளக்கனந்தல், கஸ்தம்பாடி, சமத்துவபுரம், கட்டிப்பூண்டி, ஆத்துவம்பாடி பால்வார்த்து வென்றான் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



    • விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வம்பா கீரப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மயான கொள்ளை உற்சவம் மிக சிறப்பாக நடைபெறும்.

    அதுபோல் இந்த ஆண்டு மயான கொள்ளை உற்சவம் கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் அங்குள்ள சன்னியாசி தோப்பு சுடுகாட்டில் மயான கொள்ளை முடிந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது சாமி சப்பரம் எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் உரசியது. இதனால் சாமியை தூக்கிவந்த இளைஞர்களை மின்சாரம் தாக்கியது.

    இதனால் சுதாரித்துக் கொண்ட இளைஞர்கள் சாமியை கீழே வைத்தனர். உடனடியாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    இந்த தகவல் பரவியதும் அங்கிருந்த பக்தர்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆன்லைன் மூலம் புக்கிங் செய்தாலும் கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் அவர்கள் வீடுகளுக்கே அனுப்பி வைத்து வருகின்றனர்.
    • கடந்த மாதம் கெட்டுப்போன பஞ்சாமிர்தங்கள் கள்ளிமந்தயத்தில் உள்ள கோசாலையில் கொட்டி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் பஞ்சாமிர்த பிரசாதம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் நவீன எந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு மலை மீது குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர ஆன்லைன் மூலம் புக்கிங் செய்தாலும் கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் அவர்கள் வீடுகளுக்கே அனுப்பி வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை கோயிலுக்கு சொந்தமான லாரியில் 30 க்கும் மேற்பட்ட கேன்களில் அடைத்து பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இதை அறிந்ததும் அடிவாரம் பகுதி மக்கள் லாரியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாமிர்தம் கெட்டுப்போன நிலையில் எடுத்துச் செல்லப்படுகிறதா? அல்லது முறைகேடாக வேறு இடத்திற்கு பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டதா என கேள்வி எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு அடிவாரம் போலீசார் விரைந்து வந்தனர்.

    மேலும் பஞ்சாமிர்தம் கொண்டு செல்லப்பட்ட லாரியை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். ஏற்கனவே தைப்பூச காலத்தில் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தங்கள் தேக்கம் அடைந்து கோயிலுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் மீண்டும் பஞ்சாமிர்தம் விற்பனையாகாமல் தேக்கமடைந்து அதனை அழிப்பதற்காக கோவில் ஊழியர்கள் எடுத்துச் சென்றபோது பொதுமக்கள் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் கெட்டுப்போன பஞ்சாமிர்தங்கள் கள்ளிமந்தயத்தில் உள்ள கோசாலையில் கொட்டி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பொதுவாகவே பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாது என்ற எண்ணம் பக்தர்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில் கெட்டுப்போன பஞ்சாமிர்தம் கொட்டி அழிக்கப்படுவதாக வரும் தகவல்களால் பக்தர்களும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான்கு ரத வீதிகளிலும் ஆடி, அசைந்து வந்த தேரை பக்தி பரவசத்துடன் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமி, அம்பாள் வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    திருவிழாவின் 8-வது நாள் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு காலை 9 மணிக்கு நடராஜர் கேடயத்தில் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரவு 9 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி தேரில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. மேலும் சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து, இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் எழுந்த ருளினர். கிழக்கு ராஜ கோபுரம் பகுதியில் இருந்து தேரோட்டம் நடந்தது. சிவ கோஷத்துடன் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் ஆடி, அசைந்து வந்த தேரை பக்தி பரவசத்துடன் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தை முன்னி ட்டு கோவில் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. நான்கு ரத வீதிகளிலும் இன்று காலை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவதை பக்தர்கள் ஆச்சரியம் கலந்த வியப்புடன் பார்த்தனர்.
    • உருண்டை இடிப்பதற்கு பெண்கள் நேர்த்தி கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி திருவிழா அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கடந்த 101 வருடங்களுக்கு மேலாக நடப்பதாக கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு சிவராத்தியை முன்னிட்டு அதே பகுதியை சேர்ந்த முத்தம்மாள் என்ற 92 வயது மூதாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் நேற்று இரவு கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பத்தை சுட்டனர். இதை காண்பதற்காக சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கோவிலில் திரண்டனர்.

    கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவதை பக்தர்கள் ஆச்சரியம் கலந்த வியப்புடன் பார்த்தனர். 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 7 கூடைகளில் அப்பம் சுட்டு பின்பு பக்தர்களுக்கு வழங்குவார்கள். முன்னதாக பாசிப் பயிறு, தட்டாம் பயிறு, கருப்பட்டி ஆகியவைகளை உரலில் போட்டு இடித்து அப்பத்திற்கு தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும். இந்த உருண்டை இடிப்பதற்கு பெண்கள் நேர்த்தி கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பர்.

    மகா சிவராத்தரி அன்று நடைபெறும் இந்த பூஜையில் விரதம் இருந்து கலந்து கொண்டு அப்பத்தை வாங்கி உண்டால் உடலில் இருக்கின்ற எல்லா நோய்களும் சரியாகிவிடும் என்றும், எவ்வித நோயும் வராது என்பதும், குழந்தை இல்லாத தம்பதியினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூதாட்டியிடம் ஆசி பெற்று அப்பம் வாங்கி உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    இதற்கான நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் அப்பத்தை பிரசாதமாக வாங்கி சென்றனர்.

    கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் மூதாட்டி முத்தம்மாள் கடந்த 61 வருடங்களாக சிவராத்தியன்று விரதம் இருந்து இதனை செய்து வருகிறார்.

    • பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதோடு கட்டிடக் கலையின் நுட்பங்களையும் பார்த்து பிரமிப்புடன் செல்கின்றனர்.
    • கருவறையை நோக்கி ருக்மணி, தேவசேனாபதி ஆகியோர் சிவபுராணம் பாடியப்படி வந்தனர்.

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதோடு கட்டிடக் கலையின் நுட்பங்களையும் பார்த்து பிரமிப்புடன் செல்கின்றனர்.

    இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சிறுமி ருக்மணி (வயது 12), அவரது 6 வயது சகோதரர் தேவசேனாபதி ஆகிய இருவரும் தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து பின்னர் பெரிய கோவிலுக்கு சென்றனர். அங்கு பெருவுடையாரை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்த நேரத்தில் கருவறையை நோக்கி ருக்மணி, தேவசேனாபதி ஆகியோர் சிவபுராணம் பாடியப்படி வந்தனர்.

    பின்னர் பக்தர்களை கடந்து கருவறை முன்பு நின்று கொண்டு மனம் உருகி நமச்சிவாய வாழ்க.. நாதந்தாழ் வாழ்க... என மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்தை வெண்கல குரலில் சரியான ஏற்ற இறக்கத்துடன் ஒரு சேர தூய தமிழில் பாடினர். இதனை பெருவுடையார் தரிசனத்துக்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சிறு வயதில் பக்தியுடன் இப்படி ஒரு பாடலா என மெய்மறந்து ரசித்ததோடு குழந்தைகள் இருவரையும் மனதார பாராட்டினர்.

    குழந்தைகளின் இந்த பக்தி செயல் ஆன்மீக அன்பர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது என்றால் அது மிகையல்ல. 

    • சமரசம் ஏற்பட்டால் கச்சத்தீவு செல்லலாம் என்ற அடிப்படையில் வெளியூர்களில் இருந்து ராமேசுவரம் துறைமுகத்தில் ஏராளமான பக்தர்கள் இன்று காலை குவிந்தனர்.
    • காத்திருந்த பக்தர்கள் படகுகள் எதுவும் கச்சத்தீவுக்கு இயக்கப்படாததால் ஏமாற்றத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

    மண்டபம்:

    இந்திய, இலங்கை கடல் நடுவில் அழகிய குட்டித்தீவாக அமைந்துள்ளது கச்சத்தீவு. இந்தியாவின் எல்லையில் இருந்த இந்த தீவு கடந்த 1974-ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது அதிபர் பண்டாரநாயகாவுடன் போடப்பட்ட ஒப்பந்தப்படி இலங்கைக்கு வழங்கப்பட்டது.

    இருப்பினும் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவில் திருவிழாவினை இருநாட்டை சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டாடி கொள்ளலாம், தமிழக மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்தி கொள்ளலாம் என்ற ஷரத்துகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

    அதன்பேரில் ஆண்டுதோறும் கச்சத்தீவில் இருநாட்டு மீனவர்களும், பக்தர்களும் கொண்டாடி வந்தனர். இலங்கையில் கடந்த 1983-ல் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, தமிழக மீனவர்கள் கச்சத்தீவு செல்வதற்கு அனுமதி வழங்க இலங்கை அரசு மறுத்தது. அதனால் இந்த திருவிழாவிற்கு முறையான அனுமதியின்றி ஒருசிலர் மட்டுமே சென்று அந்தோணியாரை வழிபட்டு வந்தனர்.

    தொடர்ந்து உள்நாட்டு போர் தீவிரமடைந்ததும் கச்சத்தீவு திருவிழா நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் 2002-ல் நிலைமை கட்டுக்குள் வந்ததும் கச்சத்தீவில் மீண்டும் திருவிழா தொடங்கியது. இருந்தபோதும் இந்திய மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில் இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததும், 27 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2010-ம் ஆண்டு தமிழக மக்கள் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல இலங்கை அரசு அனுமதி அளித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்கள் கச்சத்தீவு சென்று திருவிழா கொண்டாடி வருகின்றனர்.

    பாஸ்போர்ட், விசா போன்றவை இல்லாமல் இந்த விழாவில் இருநாட்டினரும் கலந்து கொள்ளலாம் என்பதால் இந்தாண்டு ராமேசுவரம், மதுரை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், பாண்டிச்சேரி உள்ளிட்ட தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 500 பக்தர்கள் செல்ல பதிவு செய்திருந்தனர். இலங்கை தரப்பிலிருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்ததை கண்டித்து, ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினா் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்தனர். இதை உறுதிப்படுத்தி கச்சத்தீவு திருவிழா திருப்பயண குழு ஒருங்கிணைப்பாளர் ராமேசுவரம் பாதிரியார் சந்தியாகு கலெக்டர் விஷ்ணு சந்திரனுக்கு கடிதம் அனுப்பினார்.

    கச்சத்தீவு செல்ல விசைப்படகு மீனவர்கள் புறக்கணித்த நிலையில் 17 நாட்டுப்படகுகளில் 302 மீனவர்கள் இன்று காலை 6 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து செல்ல அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் விசைபடகு மீனவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கச்சத்தீவு திருவிழா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசும் தமிழகத்தில் இருந்து பக்தர்கள் செல்ல தடை விதித்தது. இந்த தடையை மீறி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் ராமேசுவரம் துறைமுகத்தில் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஒரு வேளை சமரசம் ஏற்பட்டால் கச்சத்தீவு செல்லலாம் என்ற அடிப்படையில் வெளியூர்களில் இருந்து ராமேசுவரம் துறைமுகத்தில் ஏராளமான பக்தர்கள் இன்று காலை குவிந்தனர். அவர்களுக்கு போலீசார் படகில் செல்ல அனுமதி அளிக்கவில்லை. அதனால் ராமேசுவரம் துறைமுகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலை 8 மணி வரை காத்திருந்த பக்தர்கள் படகுகள் எதுவும் கச்சத்தீவுக்கு இயக்கப்படாததால் ஏமாற்றத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

    மீனவர்கள் பிரச்சனையால் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழா புறக்கணிக்கப்பட்டது தமிழக பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×