செய்திகள்

மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கியதில் தகராறு: மனைவியை கொன்று கணவர் தற்கொலை

Published On 2017-10-23 10:12 GMT   |   Update On 2017-10-23 10:12 GMT
மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கியதால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சிறுதோணியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமா (52). ஹோம் நர்ஸ். தாமோதரன் ஏற்கனவே திருமணமானவர். மனைவி மற்றும் குடும்பத்தை விட்டு பிரிந்து சுமாவுடன் வசித்து வந்தார். சுமாவும் கணவர், குழந்தைகளை விட்டு விட்டு தாமோதரனுடன் வந்து விட்டார். தாமோதரன்- சுமா ஆகியோர் திருமணம் செய்யாமலேயே கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மகளிர் சுய உதவிக்குழுவில் சுமா ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். இது குறித்து நேற்று கணவருக்கு தெரியவந்ததும் சுமாவிடம் ரூ.2 லட்சம் எதற்கு வாங்கினாய்? என்ன செலவு செய்தாய்? என்று கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் மதியம் பால் ஊற்றும் பெண் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கம் தாழ் போடப்பட்டிருந்தது. வெகுநேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் ஜன்னலை எட்டிப்பார்த்தார். அப்போது படுக்கை அறையில் சுமா இறந்து கிடந்தார்.

அதிர்ச்சியடைந்த அவர் சத்தம்போட்டு அக்கம் பக்கத்தினரிடம் இதுகுறித்து தெரிவித்தார். பொதுமக்கள் அங்கு திரண்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். மற்றொரு அறையில் தாமோதரன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து பொதுமக்கள் இடுக்கி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக தாமோதரனின் சட்டை பாக்கெட்டை சோதனை செய்தபோது அதில் அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவியை கொன்று தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று எழுதியிருந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News