உள்ளூர் செய்திகள்

செங்குன்றம் அருகே குடிபோதை தகராறில் மெக்கானிக் வெட்டிக்கொலை- 2 பேர் கைது

Published On 2023-05-26 07:10 GMT   |   Update On 2023-05-26 07:10 GMT
  • மதுகுடித்த போது ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனை வெட்டி கொலை செய்து விட்டதாக தெரிவித்தனர்.
  • கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள கரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்குன்றம்:

செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சி, பெருமாள்நகர்,10-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது24). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். நேற்றுமாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே பலத்த வெட்டுக்காயத்துடன் வெங்கடேசன் இறந்து கிடந்தார். இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வெங்கடேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேசன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக கொலையுண்ட வெங்கடேசனின் நண்பர்களான, பெருமாள் நகரை சேர்ந்த நரேஷ் குமார், தினேஷ் ஆகிய2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது நண்பர்கள் அனைவரும் மதுகுடித்த போது ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனை வெட்டி கொலை செய்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும்இந்த கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள கரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News