உள்ளூர் செய்திகள்

தாக்குதலில் காயமடைந்த வடமாநில வாலிபர்

கடலூர் அருகே வடமாநில இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்

Published On 2024-05-23 11:20 GMT   |   Update On 2024-05-23 11:20 GMT
  • பலத்த காயமடைந்த 2 வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உள்பட 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
  • ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி இருந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரெட்டிசாவடி அடுத்த உடலப்பட்டு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நேற்று நள்ளிரவு வட மாநிலத்தை சேர்ந்த 2பேர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என 3 பேர் மேம்பாலம் எடை தரம் தொடர்பாக பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அந்த பகுதியில் உள்ள இரும்பு பொருட்களை திருடுவதற்காக வந்தனர். இதனை பார்த்த வடமாநில இளைஞர்கள் உட்பட 3 பேர் இரும்பு பொருட்களை திருட வந்த கும்பலை தடுத்து நிறுத்தினர்.

அப்போது திடீரென்று அந்த கும்பல் 3 பேரை சரமாரியாக ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினார்கள். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை தொடர்ந்து பலத்த காயமடைந்த 2 வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உள்பட 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இத்தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆசீஸ் சுக்கிலா (வயது 26), உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிஷ்ணோசிங் (வயது 21) விழுப்புரத்தை சேர்ந்த முருகன் (வயது 26) ஆகியோர் என தெரியவந்தது. சாலை அமைக்கும் பணிகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் தங்கி வேலை செய்து வரும் நிலையில் அந்த பகுதியில் ஒரு சில கும்பலால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News