தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் சுட்டெரிக்க தொடங்கிய வெயில்- அதிகபட்சமாக ஈரோட்டில் 100 டிகிரி பதிவு

Published On 2026-02-24 14:00 IST   |   Update On 2026-02-24 14:00:00 IST
  • இரவில் அதிக அளவில் புழுக்கம் நிலவி வருவதால் மக்கள் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர்.
  • அடுத்த மாதம் 7-ந்தேதி வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

சென்னை:

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் இரவு நேரம் முதல் அதிகாலை வரை பனி அதிகமாக இருந்தது. இதனால் மின்சார தேவையும் குறைந்து இருந்தது.

இந்நிலையில் சென்னையில் மதிய நேரங்களில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. காலை 9 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடித்தது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது.

வாகன ஓட்டிகள் வெளியே செல்லும்போது வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்தனர். இதே போல் குழந்தைகள் முதியவர்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

கோடை வெயில் போன்று வெயில் கொளுத்த தொடங்கி உள்ளது. வீட்டில் மின்விசிறி ஓடினாலும் புழுக்கம் நிலவி வருகிறது.

இரவில் அதிக அளவில் புழுக்கம் நிலவி வருவதால் மக்கள் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர். காலை தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடித்து வருகிறது. நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் முதன் முதலாக நடப்பாண்டில் 100 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் அதிக அளவில் கரும்பு பால், மோர், குளிர் பானங்களை அதிக அளவில் பருகி வருகின்றனர். இரவு நேரங்களில் மின்விசிறி இயங்கினாலும் புழுக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

மதியம் வெளியே செல்லும் பெண்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முகத்தை துணியால் மூடி செல்கின்றனர். சிலர் குடைகளை பிடித்து செல்வதையும் காண முடிகிறது. கோடை வெயில் இன்னும் தொடங்காத நிலையில் இப்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவது மக்களை அச்சுறுத்தி வருகிறது.

கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் 7-ந் தேதி வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். கடலில் இருந்து வறண்ட காற்றும், வளிமண்டலத்தில் வறண்ட வானிலையும் நீடிப்பதனாலும், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News