தமிழ்நாடு செய்திகள்

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு- கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த தர்பூசணி, கிர்ணி பழங்கள்

Published On 2026-02-24 14:18 IST   |   Update On 2026-02-24 14:18:00 IST
  • மொத்த விற்பனையில் ஒரு கிலோ தர்பூசணி ரகத்தை பொறுத்து ரூ.11 முதல் ரூ.16 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்து வரும் மாதங்களில் சுட்டெரிக்க உள்ள வெயிலை நினைத்து இப்போதே பலர் கவலை அடைந்து உள்ளனர்.

போரூர்:

தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் தொடங்கி வெயில் சுட்டெரிக்கும். ஆனால் இப்போதே பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து உள்ளது. மேலும் இப்போது வெயிலின் தாக்கம் கோடைகாலத்துக்கு முன்னதாகவே அதிகரித்து வருகிறது.

காலையிலேயே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விடுவதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஆங்காங்கே சாலையோரம் உள்ள கடைகளில் இளநீர், கரும்பு சாறு, எலுமிச்சை, கிர்ணி உள்ளிட்ட பழ ஜூஸ் ஆகியவற்றை வாங்கி குடித்து உடல் சூட்டை தணித்து வருகின்றனர்.

இதனால் முக்கிய சாலை சந்திப்புகளில் பழ ஜூஸ் கடைகள் அதிகளவில் முளைத்து இருப்பதையும் காணமுடிகிறது. மேலும் நீர்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, கிர்ணி பழ சீசன் தொடங்கி உள்ளதால் பல இடங்களில் தர்பூசணி பழங்களை அதிகளவில் வியாபாரிகள் குவித்து வைத்து விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து தற்போது தினசரி 250 டன் தர்பூசணி பழங்களும், 200டன் கரும் பச்சை நிறம் கொண்ட (கிரண் வகை) தர்பூசணி பழங்களும், 120டன் கிர்ணி பழங்களும் விற்பனைக்கு குவிந்து வருகிறது.

மொத்த விற்பனையில் ஒரு கிலோ தர்பூசணி ரகத்தை பொறுத்து ரூ.11 முதல் ரூ.16 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கிரண் வகை தர்பூசணி கிலோ ரூ.30 வரையிலும், கிர்ணி பழம் கிலோ ரூ.30 வரையிலும் விற்பனை ஆகி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்து வரும் மாதங்களில் சுட்டெரிக்க உள்ள வெயிலை நினைத்து இப்போதே பலர் கவலை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து தர்பூசணி வியாபாரி வடிவழகன் கூறும்போது, "கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளதால் தர்பூசணி மற்றும் கிர்ணி பழங்களின் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் முதல் கோயம்பேடு சந்தைக்கு வரும் தர்பூசணி பழங்களின் வரத்து 2 மடங்காக அதிகரிக்கும். சுமார் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கிர்ணி பழங்கள் பூச்சிக் கொல்லிகளால் வீணாகி போனது. இதன் காரணமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டு கிர்ணி பழங்களின் விலை அதிகரித்து உள்ளது" என்றார்.

Tags:    

Similar News