என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோயம்பேடு மார்க்கெட்"

    • மொத்த விற்பனையில் ஒரு கிலோ தர்பூசணி ரகத்தை பொறுத்து ரூ.11 முதல் ரூ.16 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்து வரும் மாதங்களில் சுட்டெரிக்க உள்ள வெயிலை நினைத்து இப்போதே பலர் கவலை அடைந்து உள்ளனர்.

    போரூர்:

    தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் தொடங்கி வெயில் சுட்டெரிக்கும். ஆனால் இப்போதே பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து உள்ளது. மேலும் இப்போது வெயிலின் தாக்கம் கோடைகாலத்துக்கு முன்னதாகவே அதிகரித்து வருகிறது.

    காலையிலேயே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விடுவதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஆங்காங்கே சாலையோரம் உள்ள கடைகளில் இளநீர், கரும்பு சாறு, எலுமிச்சை, கிர்ணி உள்ளிட்ட பழ ஜூஸ் ஆகியவற்றை வாங்கி குடித்து உடல் சூட்டை தணித்து வருகின்றனர்.

    இதனால் முக்கிய சாலை சந்திப்புகளில் பழ ஜூஸ் கடைகள் அதிகளவில் முளைத்து இருப்பதையும் காணமுடிகிறது. மேலும் நீர்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, கிர்ணி பழ சீசன் தொடங்கி உள்ளதால் பல இடங்களில் தர்பூசணி பழங்களை அதிகளவில் வியாபாரிகள் குவித்து வைத்து விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து தற்போது தினசரி 250 டன் தர்பூசணி பழங்களும், 200டன் கரும் பச்சை நிறம் கொண்ட (கிரண் வகை) தர்பூசணி பழங்களும், 120டன் கிர்ணி பழங்களும் விற்பனைக்கு குவிந்து வருகிறது.

    மொத்த விற்பனையில் ஒரு கிலோ தர்பூசணி ரகத்தை பொறுத்து ரூ.11 முதல் ரூ.16 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கிரண் வகை தர்பூசணி கிலோ ரூ.30 வரையிலும், கிர்ணி பழம் கிலோ ரூ.30 வரையிலும் விற்பனை ஆகி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்து வரும் மாதங்களில் சுட்டெரிக்க உள்ள வெயிலை நினைத்து இப்போதே பலர் கவலை அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து தர்பூசணி வியாபாரி வடிவழகன் கூறும்போது, "கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளதால் தர்பூசணி மற்றும் கிர்ணி பழங்களின் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் முதல் கோயம்பேடு சந்தைக்கு வரும் தர்பூசணி பழங்களின் வரத்து 2 மடங்காக அதிகரிக்கும். சுமார் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கிர்ணி பழங்கள் பூச்சிக் கொல்லிகளால் வீணாகி போனது. இதன் காரணமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டு கிர்ணி பழங்களின் விலை அதிகரித்து உள்ளது" என்றார்.

    • வெளி மார்கெட்டில் உள்ள பூக்கடைகளில் அதன் விலை மேலும் அதிகரித்து விற்கப்படுகிறது.
    • அடுத்தடுத்து விஷேச நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மல்லிகை பூ வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் மல்லிகைபூ விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இன்று முகூர்த்த நாள் என்பதால் ஒரு கிலோ மல்லி ரூ.1500 முதல் ரூ.2ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்கெட்டில் உள்ள பூக்கடைகளில் அதன் விலை மேலும் அதிகரித்து விற்கப்படுகிறது. மேலும் நேற்று தைமாத கிருத்திகை, இன்று சுப முகூர்த்த நாள் என அடுத்தடுத்து விஷேச நாள் என்பதால் வழக்கத்தை விட தேவை அதிகரித்து உள்ளதால் மல்லி பூ விலை உச்சம் அடைந்து உள்ளது. மேலும் பிப்ரவரி 1-ந்தேதி மற்றும் 2-ந்தேதி தைப்பூசம் மற்றும் முகூர்த்த நாள் அடுத்தடுத்து விஷேச நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை விபரம் (கிலோவில்) வருமாறு :-

    சாமந்தி-ரூ.80 முதல் ரூ.120வரை,

    முல்லை-ரூ.500,

    கனகாம்பரம்-ரூ.800,

    ஜாதி-ரூ.400,

    பன்னீர் ரோஜா-ரூ.80,

    சாக்லேட் ரோஜா-ரூ.100,

    அரளி-ரூ.150,

    செவ்வரளி-ரூ.200,

    சம்பங்கி-ரூ.40.

    • தோரணம் உள்ளிட்ட பொருட்கள் குடியாத்தம் பகுதியிலிருந்து வரும் விவசாயிகளால் விற்பனை செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
    • சிறப்புச் சந்தைக்கு தேவையான வசதிகளான தெருவிளக்கு, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமானது, அங்காடி நிர்வாகக் குழுவின் மூலமாக நடப்பாண்டிலும் பொங்கல் சிறப்பு சந்தையை இன்று முதல் 17-ந்தேதி (சனிக்கிழமை) வரை செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

    அதன்படி, சிறப்பு சந்தைக்கான கரும்பு விழுப்புரம், திண்டிவனம், கடலூர், மதுரை மற்றும் சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்து ஆகியவை ஈரோடு, சேலம் மற்றும் ஆந்திராவில் இருந்தும் வரவழைக்கப்படுகிறது. தோரணம் உள்ளிட்ட பொருட்கள் குடியாத்தம் பகுதியிலிருந்து வரும் விவசாயிகளால் விற்பனை செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

    இச்சிறப்புச் சந்தைக்கு தேவையான வசதிகளான தெருவிளக்கு, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலின்றி வியாபாரம் மேற்கொள்ளும் வகையில் போலீசார் மூலம் நடவடிக்கை எடுப்பதோடு, அங்காடி நிர்வாகக் குழு ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்களும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என அங்காடி நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

    • விவசாய தொழிலாளர்களும் விடுமுறை அறிவித்து உள்ளனர்.
    • மளிகை, பழம் மற்றும் பூ மார்க்கெட் வழக்கம் போல செயல்படும்.

    போரூர்:

    தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல உள்ளனர். இதேபோல் விவசாய தொழிலாளர்களும் விடுமுறை அறிவித்து உள்ளனர்.

    இதையடுத்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வருகிற 21-ந் தேதி விடுமுறை விடப்படுவதாக காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். 22-ந் தேதி அதிகாலை முதல் வழக்கம் போல் சந்தை செயல்படும். அதேநேரம் மளிகை, பழம் மற்றும் பூ மார்க்கெட் வழக்கம் போல செயல்படும் என்று அதன் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • மழையால் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.70 முதல் 80க்கு விற்பனையாகிறது.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பல மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கோயம்பேட்டிற்கு கொண்டு வரப்படும் காய்கறிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து சில்லரை விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில், இன்றும் கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தக்காளியின் விலை மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.60க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.70 முதல் 80க்கு விற்பனையாகிறது.

    ஊட்டி உள்ளிட்ட மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது.
    • தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடந்த மாதம் முதலே உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, 50 ரூபாய் வரை உயர்ந்தது.

    தக்காளி விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, "கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது. தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

    இந்நிலையில், வரத்து குறைவு காரணமாக சென்னையில் ஒரே நாளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.45-க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையாகிறது.

    மொத்த விற்பனை:

    ஒரு கிலோ தக்காளி விலை: ரூ. 45

    முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் உயர்வு: ரூ. 10

    சில்லறை விற்பனை:

    ஒரு கிலோ தக்காளி விலை: ரூ. 60

    விலை உயர்வுக்குக் காரணம்: தக்காளி வரத்து குறைவு

    தக்காளி விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • வணிகர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டு வருகிறது.
    • கோயம்பேடு பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட்டில் உள்ள ஒரு சில சங்கங்கள் வணிகர் தினத்தன்று விடுமுறை அளிக்கவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5-ந்தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அன்று வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு பல்வேறு இடங்களில் நடக்கும் வணிகர் தின மாநாடுகளில் பங்கேற்பது வழக்கம்.

    வணிகர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 5-ந்தேதி வணிகர் தினத்தையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள அனைத்து காய்கறி கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளதாக வணிகர் சங்கங்கள் அறிவித்து உள்ளன.

    இதுகுறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சங்கத்தினர் கூறுகையில், 'வணிகர் தினத்தையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சில்லறை வியாபாரிகளின் வரத்து அதிக அளவில் இருக்காது. எனவே வணிகர் தினத்தையொட்டி வருகிற 5-ந்தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள 2 ஆயிரம் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது' என்று தெரிவித்தனர்.

    அதே நேரத்தில் கோயம்பேடு பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட்டில் உள்ள ஒரு சில சங்கங்கள் வணிகர் தினத்தன்று விடுமுறை அளிக்கவில்லை. இதனால் பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட்டில் சில கடைகள் திறந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில தினங்களாக எலுமிச்சை பழங்களின் வரத்தும் பாதியாகக் குறைந்துவிட்டது.
    • மழைக்காலம் தொடங்கும் வரை இந்த விலை உயா்வு மேலும் அதிகரிக்கும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.

    சென்னை:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் கூடூா், ராஜம்பேட்டை, கா்நாடகம் ஆகிய பகுதிகளிலிருந்து எலுமிச்சை பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதன்படி, தினசரி சுமாா் 100 டன் அளவுக்கு எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் எலுமிச்சை பழத்துக்கான தேவை அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில தினங்களாக எலுமிச்சை பழங்களின் வரத்தும் பாதியாகக் குறைந்துவிட்டது. (வியாழக்கிழமை)நிலவரப்படி 5 லாரிகளில் 40 டன் எலுமிச்சை பழங்கள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதன் காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ எலுமிச்சை பழத்தின் விலை திடீரென 2 மடங்காக அதிகரித்துள்ளது.

    இதன்படி, மொத்த விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.150-க்கும், சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ.170-க்கும் விற்பனை செய்யப்பட்டன. மழைக்காலம் தொடங்கும் வரை இந்த விலை உயா்வு மேலும் அதிகரிக்கும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.

    • கடந்த வாரம் வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வந்தது.
    • இன்று 300 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் காய்கறி விலை திடீரென அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கள் விற்பனைக்கு வருகிறது.

    விவசாய பணியில் ஈடுபட்டு வரும் தொழி லாளர்களில் பெரும்பா லானவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட 3 நாட்கள் வரை விடுமுறை எடுத்து சென்றுவிட்டனர். இதனால் காய்கறி உற்பத்தி மற்றும் அறுவடை செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்து கடந்த 2 நாட்களாகவே வெகுவாக குறைந்துவிட்டது.

    கடந்த வாரம் வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வந்தது. இந்த நிலையில் இன்று 300 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் காய்கறி விலை திடீரென அதிகரித்து உள்ளது.

    கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ரூ.40-க்கு விற்ற பீன்ஸ் தற்போது விலை அதிகரித்து ரூ.70-க்கும், ரூ.50-க்கு விற்ற ஊட்டி கேரட் ரூ90-க்கும், ரூ.70-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.90-க்கும், ஒரு கிலோ ரூ.10-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.25-க்கும் விற்கப்படுகிறது.

    அதேபோல் கத்தரிக்காய், முட்டை கோஸ், அவ ரைக்காய் உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்து உள்ளது.

    தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் சின்ன வெங்காயம் இன்று ஒரு கிலோ ரூ.110-க்கு விற்கப்பட்டு வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள மளிகை மற்றும் காய்கறி கடைகளில் ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.120 வரையிலும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.130 வரையும் விற்கப்படுகிறது.

    சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் பச்சை காய்கறிகள் விலை திடீரென அதிகரித்து உள்ளது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்):-

    தக்காளி-ரூ.23.

    நாசிக் வெங்காயம்-ரூ.36

    ஆந்திரா வெங்காயம்- ரூ.20

    சின்ன வெங்காயம்- ரூ.110

    உருளைக்கிழங்கு-ரூ.27

    ஹாசன் உருளைக்கிழங்கு- ரூ.42

    கத்திரிக்காய்- ரூ.20

    வரி கத்திரிக்காய்- ரூ.15

    அவரைக்காய்- ரூ.40

    வெண்டைக்காய்- ரூ.25

    பீன்ஸ்- ரூ.70

    ஊட்டி கேரட்-ரூ.90

    பீட்ரூட்- ரூ.25

    முள்ளங்கி- ரூ.22

    வெள்ளரிக்காய்- ரூ.12

    கோவக்காய்- ரூ.35

    பன்னீர் பாகற்காய்- ரூ.40

    முட்டை கோஸ்- ரூ.20

    காலி பிளவர் ஒன்று - ரூ.25

    முருங்கைக்காய்- ரூ.90

    சுரக்காய்- ரூ.15

    புடலங்காய்-ரூ.15

    பீர்க்கங்காய்-ரூ.35

    சவ்சவ்-ரூ.15

    இஞ்சி-ரூ.65.

    • தக்காளி 47 லாரிகள், வெங்காயம் 40 லாரிகள் உட்பட 370 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.
    • பலத்த மழை பெய்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறிகள் கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்தது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

    இன்று தக்காளி 47 லாரிகள், வெங்காயம் 40 லாரிகள் உட்பட 370 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன. ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறிகள் கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்தது.

    நள்ளிரவு மந்தமாக தொடங்கிய காய்கறி விற்பனை படிப்படியாக வியாபாரிகளின் வரத்து குறைய தொடங்கியதால் அதிகாலையில் மார்க்கெட் வளாகம் முழுவதும் வெறிச்சோடியது.

    இதனால் மூட்டை மூட்டையாக காய்கறிகள் விற்பனை ஆகாமல் தேங்கின. இதனால் காய்கறி விலை குறைந்து விற்கப்பட்டது.

    கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்ற ஊட்டி கேரட் விலை குறைந்து ரூ.50-க்கும், ரூ.70-க்கு விற்ற பீன்ஸ் ரூ.40-க்கும், ரூ.23-க்கு விற்ற தக்காளி ரூ.19-க்கும் விற்கப்படுகிறது.

    தக்காளி, கத்தரிக்காய், புடலங்காய், முள்ளங்கி, நூக்கல், முட்டைகோஸ், சவ்சவ், வெள்ளரிக்காய், காலி பிளவர் உள்ளிட்ட பச்சை காய்கறிகள் ஏராளமான மூட்டைகளில் தேக்கமடைந்து இருப்பதால் மொத்த வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர்.

    • வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கோவை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.

    தினசரி 8 முதல் 10 வாகனங்களில் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு மாதமாக இதன் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. தற்போது தினசரி ஒன்று முதல் 2 வாகனங்களில் மட்டுமே சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.

    இதன் காரணமாகவே சின்ன வெங்காயம் விலை திடீரென அதிகரித்தது. இந்த நிலையில் இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90-க்கு விற்கப்படுகிறது.

    அதேபோல் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து வெங்காய மொத்த வியாபாரி தண்டபாணி கூறியதாவது:-

    கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30-க்கு மட்டுமே விற்கப்பட்டது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் உற்பத்தி செய்வதற்கு ரூ.20 வரை செலவு ஆகிறது.

    ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்வதை திடீரென நிறுத்திவிட்டனர். இதன் காரணமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டு சின்ன வெங்காயம் விலை அதிகரித்து உள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில நாட்களாக 3 முதல் 4 மினி வேன்களில் மட்டுமே மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது.
    • மல்லி பூ விலை 3 மடங்காக அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது.

    வழக்கமாக தினமும் 28 மினி வேன்கள் மூலம் மல்லிகை பூ விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதில் ஏறத்தாழ 20 மினி வேன்கள் அளவிலான மல்லிகை பூக்களை வாசனை திரவியம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இங்கிருந்து வாங்கி செல்வது வழக்கம். பனி சீசன் நேரத்தில் பொதுவாகவே மல்லி பூ விளைச்சல் இருக்காது.

    கடந்த 10நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை மற்றும் அதனை தொடர்ந்து கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு பூ சந்தைக்கு வரும் மல்லிகை பூக்களின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

    கடந்த சில நாட்களாக 3 முதல் 4 மினி வேன்களில் மட்டுமே மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக மல்லி பூ விலை 3 மடங்காக அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை ரூ.300-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதன் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.800-க்கு விற்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் இருந்து தினசரி விற்பனைக்கு வரும் ஐஸ் மல்லிகை கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்ற நிலையில் இன்று விலை அதிகரித்து கிலோ ரூ.500-க்கு விற்கப்படுகிறது. மல்லிகை பூவை தொடர்ந்து ஐஸ் மல்லிகை விலையும் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பூ மொத்த வியாபாரி மூக்கையா கூறுகையில், கடும் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் மல்லிகை பூ வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் அதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

    ×