தமிழ்நாடு

கடந்த 3 ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் எந்த சாதனையும் செய்யவில்லை- ராமதாஸ்

Published On 2024-05-23 11:13 GMT   |   Update On 2024-05-23 11:13 GMT
  • கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் கூறினாலும் நடைமுறைபடுத்தவில்லை.
  • முதல்வரின் காலை உணவு திட்டத்தை தவிர வேறு எந்த சாதனையும் செய்யவில்லை.

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தக்கூடாது. ஒருவர் பெயரில் தனித்தனி மின் இணைப்புகள் இருந்தால் அதனை ஒன்றாக்கும் முயற்சியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. இந்நடவடிக்கை கண்டிக்கதக்கது. இது அனைத்து மக்களையும் கடுமையாக பாதிக்கும். மின் இணைப்புடன் ஆதார்கார்டை இணைக்கும்போதே இந்த அச்சம் ஏற்பட்டது. பல மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

தி.மு.க.தேர்தல் அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தேர்தல் அறிக்கையில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. இது மக்களை ஏமாற்றும் செயல் என சொல்லலாம். 510 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவிக்கவேண்டும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் எவ்வித சாதனையும் செய்யவில்லை. மீதமுள்ள ஆண்டுகளில் சாதனை படைத்து முத்திரை பதிக்கவேண்டும்.

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் கூறினாலும் நடைமுறைபடுத்தவில்லை. பா.ம.க.விற்கு தமிழ்நாடு குறித்த பெருங்கனவு உள்ளது. எங்களுக்கு 6 மாதங்கள் ஆட்சியை கொடுத்தால் நாங்கள் நிறைவேற்றுவோம். அல்லது நேர்மையான 10 அதிகாரிகளை ஒப்படைத்தால்கூட இதனை சாத்தியமாக்கி காட்டுவோம்.

பாசனதிட்டங்களை நிறைவேற்றாத ஆட்சியாக தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சி உள்ளது.காமராஜர் காலத்தில் அணைகள் கட்டப்பட்டது. 57 ஆண்டுகளில் இக்கட்சிகளின் ஆட்சியில் அணைகள் கட்டப்படவில்லை. தி.மு.க. ஆட்சியில் 41 அணைகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இவைகள் அணைகள் என சொல்ல முடியாது. இந்த அணைகள் ஒரு டி. எம். சி. கொள்ளளவுகூட இல்லை.

நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ 700 ஊக்கத்தொகை கொடுக்கவேண்டும். தெலுங்கானாவில் சன்ன ரக நெல்லுக்கு ரூ.500 வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில் 10 லட்சம் டன் நெல் கொள்முதல் குறைந்துள்ளது. 24-25 -ம் ஆண்டில் 40 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டால் ரூ 2500 கோடி செலவாகும். இது சாத்தியமானதுதான். முல்லை பெரியாறு புதிய அணைக்கு அனுமதி தரக்கூடாது. வருகிற 28-ந் தேதி சுற்றுசூழல் குழு விவாதிக்க உள்ளது கண்டிக்கதக்கது. உச்சநீதி மன்றம் தன் தீர்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் கேரள அரசின் அணைகட்டும் முயற்சியை கைவிட மத்திய அரசு ஆணை பிறப்பிக்கவேண்டும்.

முல்லை பெரியாறு அணை குறித்து தேர்தல் முடிவுக்கு பின் பிரதமரை சந்தித்து வலியிறுத்துவேன். முதல்வரின் காலை உணவு திட்டத்தை தவிர வேறு எந்த சாதனையும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News