உள்ளூர் செய்திகள்

பெரியகுளம் பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை- பா.ஜ.க நிர்வாகிகளும் சந்திப்பு

Published On 2022-06-27 03:48 GMT   |   Update On 2022-06-27 03:48 GMT
  • சென்னையில் அ.தி.மு.க நிர்வாகிகள் நடத்த உள்ள கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
  • இதனால் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தலாம் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பெரியகுளம்:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 நாள் பயணமாக டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் சென்னைக்கு திரும்பினார்.

அதன்பிறகு மதுரை வந்த அவர் அங்கிருந்து வேன் மூலமாக தனது சொந்த மாவட்டமான தேனிக்கு வந்தார். அவருக்கு வழிநெடுகிலும் அ.தி.மு.க தொண்டர்கள் மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைதொடர்ந்து ஆண்டிபட்டி வைகை அணை சாலை பிரிவில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு காளியம்மன் கோவிலிலும், தர்மசாஸ்தா கோவிலிலும் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பெரியகுளத்தில் உள்ள தனது மகன் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கு ஏராளமான அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைதொடர்ந்து தனது பண்ணை வீட்டில் அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்போது தேனி மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி மதுரை, விருதுநகர், நெல்லை போன்ற வெளிமாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் பா.ஜ.க நிர்வாகிகளும் கலந்து கொண்டு அவருக்கு சால்வை போர்த்தி வரவேற்பு தெரிவித்தனர். அப்போது ஒரு பா.ஜ.க நிர்வாகி ஓ.பன்னீர்செல்வத்திற்கு காவிதுண்டு அணிவித்ததால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. பா.ஜ.க மாநில ஊரகவளர்ச்சி பிரிவு துணைத்தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் தேனி மாவட்ட தலைவர் பாண்டியன் உள்பட ஏராளமான பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வரவேற்பு தெரிவித்தனர்.

இன்று 2-வது நாளாக பண்ணைவீட்டில் ஆலோசனை மேற்கொண்டுவரும் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சென்னை செல்ல முடிவு செய்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். சென்னையில் அ.தி.மு.க நிர்வாகிகள் நடத்த உள்ள கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தலாம் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News