செய்திகள்
பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் தாலுகா பூட்டை பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனா(வயது 25) பட்டதாரி. இவர் நேற்று தனது காதல் கணவர் வசந்தகுமார்(30) என்பவருடன் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்கிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் பி.எஸ்சி, பி.எட். முடித்துள்ள நானும், எங்கள் ஊரை சேர்ந்த என்ஜினீயர் வசந்தகுமார்(30) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியும். தற்போது எனது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு என்னை அடித்து துன்புறுத்தி பல இடங்களில் தனிமைப்படுத்தினர். மேலும் எனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தநான் பெற்றோருக்கு தெரியாமல் எனது காதலனை திருமணம் செய்ய முடிவு செய்தேன். அதன்படி கடந்த 28-ந் தேதி சின்னசேலம் அருகில் உள்ள வாசுதேவநல்லூர் சிவன்கோவிலில் வைத்து நானும், வசந்தகுமாரும் திருமணம் செய்துகொண்டோம். இதை அறிந்த எனது தந்தை மற்றும் உறவினர்கள் தடி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வசந்தகுமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்களை மிரட்டி வருவதோடு, எனக்கும், எனது கணவருக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.