செய்திகள்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

மத்திய அரசுக்கு ஜால்ரா போடுவதால்தான் 11 மருத்துவ கல்லூரிகள் கிடைத்துள்ளது- அமைச்சர் பேச்சு

Published On 2020-02-26 05:32 GMT   |   Update On 2020-02-26 05:32 GMT
மு.க.ஸ்டாலின் கூறுவது போல் மத்திய அரசுக்கு ஜால்ரா போடுவதால் தான் தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகள் கிடைத்துள்ளது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.
வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டுவில் ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

நடைபெற்று முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து விரிவாக முதல்வரும் துணை முதல்வரும் பேசினார்கள். நிதிநிலை அறிக்கையினை பாமக தலைவர் ராமதாஸ், ஜி.கே. வாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வரவேற்றனர். பல்வேறு சங்கங்களும் பட்ஜெட்டை பாராட்டி உள்ளனர்.

பல்வேறு நாளிதழ்களும் பாராட்டி உள்ளன. ஆனால் ஸ்டாலினோ அதிக அளவில் கடன் சுமை உள்ளதாகவும் பற்றாக்குறை பட்ஜெட் எனவும் பேசுகிறார். ஏதோ கருணாநிதி ஆட்சி காலத்தில் சிறப்பான பட்ஜெட் போட்டது போல் பேசுகின்றார்.

சட்டசபையில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என முதல்வரும், துணை முதல்வரும் தெள்ளத்தெளிவாக தெரிவித்தனர். சிறுபான்மையின மக்களுக்காக பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வக்பு நிறுவனத்தில் பணியாற்றிய உலமாக்களுக்கு ரூபாய் 1500 லிருந்து மாதாந்திர ஓய்வு தொகை ரூபாய் 3000 ஆக உயர்த்தி அறிவித்துள்ளனர். ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் புனித யாத்திரையாக ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் சென்னையில் தங்கி செல்வதற்காக வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் தனி கட்டிடம் கட்ட ரூபாய் 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உலமாக்கள் 2,814 பேர்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க ரூபாய் 25,000 மானியமாக வழங்கப்பட உள்ளது. அ.தி.மு.க. மத்திய அரசுடன் கூட்டணி வைத்துள்ளதால் ஏதோ இஸ்லாமியர்களுக்கு எதிரானது போல் தி.மு.க. பேசி வருகிறது.



அ.தி.மு.க. அரசு மத்திய அரசுக்கு ஜால்ரா போடுவதாக ஸ்டாலின் பேசி வருகிறார். அவ்வாறு ஜால்ரா போடுவதால்தான் தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகள் கிடைத்துள்ளது.

தி.மு.க.வினர் போராடுவதற்கு வேறு காரணங்கள் இல்லாததால் இஸ்லாமியர்களை தூண்டி விடுகின்றனர். திமுகவினரின் நாடகத்தை இஸ்லாமியர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News