செய்திகள்
கைது

மது குடிக்க பணம் கேட்டு தகராறு: வாலிபரை கொலை செய்த தந்தை கைது

Published On 2019-10-15 16:47 GMT   |   Update On 2019-10-15 16:47 GMT
தர்மபுரி அருகே மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததால் கடப்பாரையால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள தகடூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 65). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் சண்முகம் (27). இவருக்கு திருமணமாகி கீதா என்ற மனைவியும், 5 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளனர். சண்முகத்துக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் பெற்றோரிடம் மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சண்முகம் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது சண்முகம், தனது தந்தை கதிர்வேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அருகில் கிடந்த கடப்பாரையை எடுத்து சண்முகத்தின் வயிற்றில் குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சண்முகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளி கதிர்வேலை கைது செய்தனர். தந்தையே மகனை குத்திக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News