செய்திகள்
தமிழகத்தின் உரிமைகளை டெல்லியில் தாரை வார்த்துக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்
தமிழகத்தின் உரிமைகளை டெல்லியில் தாரை வார்த்துக் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை:
டெல்லியில் நடைபெற்ற 5-வது நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றார். அதில் பங்கேற்றுவிட்டு இன்று காலை சென்னை திரும்பினார்.
இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதலமைச்சர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்கள், சட்டமன்றத்தின் உணர்வுகளை முறைப்படியும், முனைப்புடனும் முதலமைச்சர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை. தமிழகத்தின் உரிமைகளை டெல்லியில் தாரை வார்த்துக் கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் கொடுத்த மனுவில் இடம்பெற்றுள்ள 29 கோரிக்கைகள் "புதிய மொந்தையில் பழைய கள்" அடைக்கப்பட்டுள்ளதைத்தான் நினைவூட்டுகிறது.
நீட் தேர்வு, மேகதாது அணை, மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ள மாநில நிதி அத்தனைக்கும் தீர்வு காண வாய்ப்பு கிடைத்தும் கோட்டை விட்டுள்ளார்.
தமிழகத்திற்கான ரூ.17,350 கோடி நிதியை தராமல் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. நீட் விலக்கிற்கான மசோதாக்களுக்கு ஜனாதிபதி அனுமதி பெற்றுத் தாருங்கள் என்ற வரி இல்லாதது வேதனையை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.