செய்திகள்
ராகுல் காந்தியிடம் கூட்டணி குறித்து பேசினேனா? கமல்ஹாசன் பதில்
காங்கிரஸ் தலைமையிலான அணியில் இணைவதற்கு தான் சிக்னல் கொடுத்துள்ளதாக திருநாவுக்கரசர் கூறியுள்ளதற்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். #Kamalhaasan #MakkalNeedhiMaiam #Congress
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரசுக்கு சாதகமான நிலையே நிலவுவதாகவும், காங்கிரஸ் தலைமையிலான அணியோடு இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், தினகரன் அணியினர் கருத்துக்களை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது எனவும் கூறியிருந்தார்.
மேலும், நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியை சந்தித்தது, அவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலம் காங்கிரஸ் அணியில் அவர் இணைவதற்கான சிக்னல் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருநாவுக்கரசர் பேட்டி குறித்து சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நான் சேர்வதாக திருநாவுக்கரசர் கூறினால் எப்படி சரியாக இருக்கும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. என்னிடம் இருந்து கூட்டணிக்கு சிக்னல் வந்ததாக திருநாவுக்கரசர் கூறுவது ஒரு செய்தி மட்டும்தான். நான் அதை கூறினால் தான் சிக்னல்’ என தெரிவித்தார்.