செய்திகள்

ராஜபாளையம் அருகே சொத்து தகராறில் விவசாயி கொலை

Published On 2018-04-18 06:03 GMT   |   Update On 2018-04-18 06:03 GMT
ராஜபாளையம் அருகே சொத்து தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதம்புத்தூரை அடுத்த மேலூர் துரைச்சாமி புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 40), விவசாயி.

இவருக்கும், அவரது அண்ணன் கருப்பசாமி (55) என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த முன் விரோதத்தில் அடிக்கடி மோதிக்கொண்டனர்.

நேற்று மாரியப்பனின் மகன் கருப்பையா அந்தப் பகுதியில் நின்ற போது கருப்பசாமியின் மகன் செல்வம் (30) வந்து தகராறு செய்தார்.

இது தெரியவந்ததும் மாரியப்பன் அண்ணன் வீட்டுக்குச் சென்று செல்வத்தை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் நேற்று இரவு 10 மணியளவில் சித்தப்பா மாரியப்பனின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டினார்.

கதவை திறந்து மாரியப்பன் வெளியே வந்ததும் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வம் சரமாரியாக வெட்டினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு மாரியப்பனின் மனைவி ராமலட்சுமி வெளியே வந்தார். அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

கணவன், மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் 108 ஆம்புலன்சு மூலம் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் வழியிலேயே மாரியப்பன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

பலத்த காயம் அடைந்த ராமலட்சுமி ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், செல்வத்தை கைது செய்தனர்.
Tags:    

Similar News