தமிழ்நாடு

முல்லைப்பெரியாறில் புதிய அணை: மத்திய அரசு தடுத்து நிறுத்த தமிழக அரசு வலியுறுத்தல்

Published On 2024-05-24 05:45 GMT   |   Update On 2024-05-24 05:46 GMT
  • இரு மாநிலங்களும் மத்திய குழுவுடன் ஒன்றிணைந்து அணை பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் செயல்பட வேண்டும்.
  • முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் கேரளாவின் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

சென்னை:

தமிழகம் மற்றும் கேரளா இடையே உள்ள முல்லைப் பெரியாறு அணையின் தரம் காலாவதியாகி விட்டது என்றும் இயற்கை சீற்றங்களால் அணை உடைந்தால் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்றும் கேரள அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

மேலும் உடனடியாக முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதில் அணை குறித்து ஏற்கனவே வல்லுனர்களை கொண்டு ஆய்வு நடத்தி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித் திருந்த உத்தரவில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களுக்கும் தனித்தனியாக புதிய சிறப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

இதில் இரு மாநிலங்களும் மத்திய குழுவுடன் ஒன்றிணைந்து அணை பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் செயல்பட வேண்டும். மத்திய அரசு அமைக்கும் குழுவில் இரு மாநிலத்தை சேர்ந்த பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும்.

இயற்கை பேரிடர் காலத்தில் பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக முன் எச்சரிக்கை நடவடிக்கை களை இந்த சிறப்பு குழு துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இதில் அணை முழு பாதுகாப்போடு இருப்பதால் புதிய அணை கட்ட வேண்டியது அவசியம் இல்லை என்று தெளிவாக தெரிவித்து இருந்தது.

மத்திய அரசு, கேரளா அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த 2019 ஜனவரி 4-ந்தேதி தொடர்ந்த நீதி மன்ற அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இது போன்ற சூழலில் முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரளா அரசு தரப்பில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் கொடுத்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 28-ந்தேதி நடக்க இருக்கும் மத்திய சுற்றுச் சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளதாக, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மேற்பார்வை குழுவின் முடிவே இறுதியானது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருந்தது. அதே போன்று தமிழ்நாடு அரசு சம்மதம் இருந்தால் மட்டுமே முல்லைப் பெரியாறின் கீழே புதிய அணை கட்ட முடியும் என்றும், இல்லையேல் சாத்தியமே கிடையாது எனவும் மத்திய அரசு மாநிலங்களவையில் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இவை அனைத்தையும் மீறும் விதமாக முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக வரும் 28-ந்தேதி மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இது சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவுகள் அனைத்தையும் மீறும் செயல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சிக்கு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஆரம்பத்திலேயே கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் கேரளாவின் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மத்திய சுற்றுச் சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவில் கேரள அரசின் பரிந்துரையை ஏற்க கூடாது என்று வலியுறுத்தி மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்திடம் தமிழக அரசு முறையிடுகிறது.

இதற்காக தமிழக அரசு சார்பில் விரிவான ஆட்சேபனை கடிதம் தயார் செய்யப்பட்டு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.


தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நீர் வளத்துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் உயர் அதிகாரிகள் இன்று மாலை 5 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்த கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பும் கடிதத்தில் வேறு என்னென்ன விவசயங்களை குறிப்பிடுவது என்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து நீர் வளத்துறை உயர் அதிகாரி கூறியதாவது:-

மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீர்த் தேவையை பூர்த்தி செய்து வரும் முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதை தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும்.

இதே போன்ற முயற்சியை கேரள அரசு இதற்கு முன்பு மேற்கொண்ட போது சுப்ரீம் கோர்ட்டு 2014-ல் அளித்த உத்தரவில் புதிய அணை கட்டுவது குறித்து இரு மாநிலங்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி உள்ளது.

தமிழக அரசு சம்மதம் இன்றி முல்லைப் பெரியாறில் எந்த அணையும் கட்ட முடியாது. ஆனால் அதையும் மீறி 2015-ம் ஆண்டில் இதே போன்ற ஒரு முயற்சியை கேரள அரசு மேற் கொண்டது.

அப்போது தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை சுட்டிக்காட்டி கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தியது. அது மட்டுமின்றி இதே போல் 2-வது முறையும் முயற்சி மேற்கொண்டனர். அப்போது 2019-ம் ஆண்டில் இதே போல் பிரச்சனை வந்த போது தமிழக அரசு கேரள அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தது. அதன் பிறகே கேரள அரசு பணிந்தது.

இப்போது மீண்டும் கேரள அரசு இந்த முயற்சியை தேவையில்லாமல் தொடங்குகிறது. இதையும் தடுத்து நிறுத்துவோம். அதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News