தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் தொடங்குகிறது
- 2-ந்தேதி தொடங்கும் பொதுத்தேர்வு 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- பிளஸ்-2 செய்முறை தேர்வு கடந்த 9-ந்தேதி தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெற்றது.
சென்னை:
சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் நடைபெற இருப்பதால் பொதுத்தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான அட்டவணையை தேர்வு துறை வெளியிட்டது.
ஏப்ரல் மாதம் 2-வது வாரத்திற்குள் அனைத்து தேர்வுகளையும் முடிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் 2-ந்தேதி தொடங்குகிறது.
2-ந்தேதி தொடங்கும் பொதுத்தேர்வு 26-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகிறார்கள். பள்ளி மாணவ-மாணவிகள் 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 பேரும் தனித்தேர்வர்கள் 27,783 பேரும் எழுதுகின்றனர். 7545 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 3412 தேர்வு மையங்களில் இத்தேர்வினை எழுத உள்ளனர்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்காக பல்வேறு வசதிகளை அரசு செய்து உள்ளது. தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாமல் இருப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மின்சார வாரியம் எடுத்துள்ளது. பிளஸ்-2 செய்முறை தேர்வு கடந்த 9-ந்தேதி தொடங்கி 14-ந் தேதி வரை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு தொடங்குவதால் அரசு தேர்வுத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது.
தேர்வு மையத்தில் ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. ஆள் மாறாட்டம், விடைத்தாள் மாற்றுதல், காப்பி அடித்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் தேர்வு எழுதுவதற்கு 3 ஆண்டு காலம் தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 11-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முடிகிறது. கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மார்ச் 3-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை பொதுத்தேர்வு நடக்கிறது.
பிளஸ்-2 பொதுத்தேர்வினை 4540 பறக்கும் படையினர் கண்காணிக்கிறார்கள். 44 ஆயிரத்து 624 பேர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.