அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம் உயர்வு?- சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களால் பரபரப்பு
- மதுரை மண்டல போக்குவரத்து கழகம் விளக்கமளித்துள்ளது.
- சாதாரண பஸ்களில் மட்டும் ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட ராஜபாளையம் கிளையை சேர்ந்த பஸ் ஒன்றில் பயணியிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. அதாவது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் செல்ல வழக்கமான கட்டணம் ரூ.75-க்கு பதிலாக ரூ.100 வசூலிக்கப்பட்டுள்ளது. பெண்கள் வங்கிக்கணக்கில் ரூ.5 ஆயிரம் வரவு வைத்து விட்டு தமிழக அரசு பஸ் கட்டணத்தை திடீரென உயர்த்தியுள்ளது என்று அந்த பதிவில் குறிப்பிட்டு வலைத்தளங்களில் வலம் வரத்தொடங்கியுள்ளது.
இது போக்குவரத்துக்கழக வட்டாரத்தில் வைரலாகி உள்ளது. மேலும் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து மதுரை மண்டல போக்குவரத்து கழகம் விளக்கமளித்துள்ளது. அதாவது, ராஜபாளையத்தில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட பஸ்சில் (ரூட் எண்.940-ஏ) ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு பயணம் செய்த பயணி ஒருவர் தனது டிக்கெட்டை பதிவிட்டு ரூ.75-க்கு பதிலாக ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அந்த பஸ்சில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் (ரூ.100) மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. சாதாரண பஸ்களில் மட்டும் ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படும். கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. எனவே, சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளது.