தமிழ்நாடு

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

Published On 2024-05-24 05:36 GMT   |   Update On 2024-05-24 05:36 GMT
  • சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு பொதுப்பணித்துறையினர் நேற்று தடை விதித்திருந்தனர்.
  • நுழைவு வாயில் பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. இந்த அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா பகுதியாகும். இங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வார்கள்.

ஈரோட்டில் குற்றாலம் என்று கொடிவேரி தடுப்பணை அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு விற்கப்படும் மீன் வறுவல்களை சுற்றுலா பயணிகள் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். தற்போது விடுமுறை நாள் என்பதால் நாளொன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கிறார்கள்.

இந்நிலையில் கோபி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால் கொடிவேரி அணையில் இருந்து வினாடிக்கு 700 கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேறியது.

இதனை தொடர்ந்து கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு பொதுப்பணித்துறையினர் நேற்று தடை விதித்திருந்தனர். இது தொடர்பாக நுழைவு வாயில் பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் கொடிவேரி தடுப்பணையில் மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக இன்று காலை கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

Tags:    

Similar News