'தி.மு.க.வை எதிர்க்கக்கூடிய ஒரேத் தலைவர் விஜய்தான் என அ.தி.மு.க. உணர்ந்தது... அதனால்தான்' - ஆதவ் அர்ஜுனா
- திமுகவும் இல்லை, அதிமுகவும் இல்லை, தற்போது களத்தில் தவெகதான் உள்ளது.
- வறுமையின் உச்சத்தில் இருக்கும் தொகுதியைத்தான் எங்கள் தலைவர் தேர்ந்தெடுப்பார்.
சென்னை வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா,
"வில்லிவாக்கத்தில் மருத்துவமனை, கல்லூரி, அரசுப்பள்ளி இல்லை. மழைநாட்களில் சாக்கடைநீர் வருகிறது. 5 வருடமாக எம்.எல்.ஏ. அலுவலகம் இல்லை. எம்.எல்.ஏவும் இல்லை. நாளை அவர் காணவில்லை என போஸ்டர் ஒட்டுவார்கள்போல. வில்லிவாக்கத்தில் தி.மு.க. என்ற கட்சியும் இல்லை. திமுகதான் இல்லை, அதிமுக எங்கு எனக்கேட்டேன். அது பேக்கேஜ் செய்யப்பட்டு டெல்லிக்கு சென்று வெகுநாட்கள் ஆகிவிட்டது எனக்கூறுகிறார்கள்.
இங்கு திமுகவும் இல்லை, அதிமுகவும் இல்லை, தற்போது களத்தில் தவெகதான் உள்ளது. இந்தத் தொகுதியை யாரும் கண்டுகொள்ளவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தேர்தலுக்காக நம் தலைவர் கட்சியை உருவாக்கவில்லை. 20 வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். எந்த மாற்றமும் வரவில்லை. வறுமையின் உச்சத்தில் இருக்கும் தொகுதியைத்தான் எங்கள் தலைவர் தேர்ந்தெடுப்பார். அந்த தொகுதியை மாற்றுவார். ஏழைக்கு ஒரு மருத்துவமனை, முதலமைச்சருக்கு ஒரு மருத்துவமனை என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் ஒரே மருத்துவமனை என்ற நிலையை உருவாக்குவார். இதற்காகத்தான் கட்சித் தொடங்கியுள்ளார்.
இன்று ரெட் ஜெயண்ட் ரஜினி, கமலை வைத்து ஒரு படம் எடுத்துள்ளது. எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது? எல்லாம் கொள்ளைப்பணம். நீங்கள் அரசை வைத்து வியாபாரம் செய்கிறீர்கள். எங்கள் தலைவர் தொழிலைவிட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். இதுதான் வித்தியாசம்.
இன்று புரட்சித்தலைவி பிறந்தநாள். அவர் லேடியா? மோடியா? என்று பாஜகவை எதிர்த்து நின்றார். அந்தக் கொள்கையை கடைசிவரை பிடித்து ஜெயித்தார். எல்லோரும் ஏன் நம் தலைவர் அதிமுகவை திட்டவில்லை எனக் கேட்கிறார்கள். ஒட்டுமொத்த அதிமுகவும் தவெக வந்து வெகுநாட்கள் ஆகிறது.
அங்கு இருப்பது 10 பேர்தான். அவர்களும் டெல்லி சென்றுவிட்டார்கள். உண்மையான அ.தி.மு.க. இங்கு உள்ளது. செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர், வி.எஸ்.பாபு, தனபால் மகன் ஆகியோர் இங்கு உள்ளனர். திமுகவின் தீயசக்தியை எதிர்ப்பதற்கு ஒரு வலிமையான தலைவர், நம் தலைவர் என அதிமுக உணர்ந்ததனால்தான் இங்கு மாறியுள்ளனர். அப்போது புரட்சித்தலைவி அம்மாவையும், அவர் தொண்டர்களையும் நாங்கள் ஏன் எதிர்க்கவேண்டும்?" எனப் பேசினார்.