தமிழ்நாடு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2000 கனஅடியாக சரிவு

Published On 2024-05-24 05:42 GMT   |   Update On 2024-05-24 05:42 GMT
  • ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்வதால் கோடை விடுமுறையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
  • சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்தும், மெயின் அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.

ஒகேனக்கல்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் காவிரி கரையோர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், நாட்றம்பாளையம், ஊட்டமலை ஆகிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி பகுதியிலும் மழை பெய்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சற்று சரிந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

குறைந்த அளவில் நீர்வரத்து இருந்தபோதிலும், ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்வதால் கோடை விடுமுறையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்தும், மெயின் அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் இருப்பதால், பிலிகுண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News