செய்திகள்

தேர்தலை நிறுத்துவதற்காக அ.தி.மு.க.வினர் பட்டப்பகலில் பணம் கொடுத்தார்கள்: தங்க தமிழ்செல்வன்

Published On 2017-12-17 06:29 GMT   |   Update On 2017-12-17 06:29 GMT
அ.தி.மு.க.வுக்கு 3-வது இடம் கிடைக்கும் என்பதால், தேர்தலை நிறுத்துவதற்காகவே பட்டப்பகலில் அ.தி.மு.க.வினர் பணம் கொடுத்துள்ளதாக தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 2 நாட்களாக வாகன சோதனை நடத்தாமல் விட்டுவிட்டனர். இதனால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கார்களிலும் போலீஸ் வாகனத்திலும் தொகுதிக்குள் பணத்தை கொண்டு வந்துவிட்டனர்.

வெளிமாவட்டத்தில் இருந்து வந்திருந்த 50 ஆயிரம் பேர் உதவியுடன் ஒரு தெருவுக்கு 50 பேர் நின்று கொண்டு பட்டப்பகலிலேயே பணம் கொடுத்துள்ளனர். நாங்கள் 15 இடங்களில் பணம் கொடுத்தவர்களை பிடித்து கொடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.

போலீஸ் அதிகாரிகளுக்கும், தேர்தல் பார்வையாளர்களுக்கும் போன் செய்தாலும் அவர்கள் போனை எடுக்கவில்லை. சில அதிகாரிகளின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பணம் வினியோகம் முடிந்த பிறகு கண்துடைப்புக்காக இரவில் வாகன சோதனை நடத்துகின்றனர்.

இந்த தேர்தலில் டி.டி.வி. தினகரன் முதல் இடத்திலும், அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் 3-வது இடத்திலும் இருப்பதும் அனைவருக்கும் தெரியும்.

இதனால் தான் பட்டப்பகலில் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க. பணம் கொடுத்து தேர்தலை நிறுத்த முடிவு செய்துள்ளது. தேர்தலை நிறுத்த முடியாவிட்டால் பணம் கொடுத்ததற்கு வாக்காளர்கள் ஓட்டு போடுவார்கள் ஜெயித்து விடலாம் என்று அ.தி.மு.க. கருதுகிறது.

எங்களுக்கு தெரிந்த வரை ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் 2 லட்சம் ஓட்டுக்கு பணம் கொடுத்துள்ளனர். தேர்தல் கமி‌ஷன் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News